சமீப மேற்தகவுகள் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • பொன்.சுதா 7:17 pm on December 1, 2009 நிரந்தர பந்தம் | பதில்  

    வடக்கிருத்தல் 

    இரவுப் படுக்கை தயாராய் இருந்தது. தூக்கம் சுழலும் விழிகளோடு அன்புமதி வடப்புறம் தலையணையைப் போட்டு படுக்கப் போனாள்.

    அன்புமதி என் மகள். வயது 7.

    வழக்கமாக தெற்கில் தான் தலை வைத்துப் படுப்பது வழக்கம்.


    “அப்பிடியே தூங்கிறப் போற அன்பு. இந்தப் பக்கம் வைச்சுப் படுத்துகோ” என்றேன். தூக்கம் மறந்து கேள்விகள் முளைத்துக் கொண்டது அன்புமதிக்கு..

    ” ஏம்பா அந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது?”

    என்னிடம் தான் பதிலிருந்ததே.. எங்கோ கேட்டுப் பதிந்து கிடந்த ஒன்று அல்லது படித்து கிடைத்தது. ‘ வடக்குப் பக்கத்தில காந்த சக்தி இருக்குதாம் அது மூளையை பாதிக்குமாம்’ மகளுக்கு ஒன்றை கற்பித்த செருக்குடன் சொன்னேன்.

    நொடி நேரத்தில் அடுத்த கேள்வி வந்தது “காலை வடக்குப் பக்கம் நீட்டுனா காலுக்கு ஒன்னும் ஆகாதாப்பா?”

    முக்கியமான கேள்வி தான் எனக்கே நான் சொன்ன விசயத்தில் குழப்பம் வந்தது “கால்ல மூளை இல்லையே பாப்பா..” என்றேன்.

    ஓ அப்படியா என்பது போல் பார்த்துவிட்டு தூங்கத் தயாராள் அன்புமதி. எனக்குத் தான் தூங்க நேரமானது.

    இதை என்னிடம் யார் முதன் முதலில் சொன்னது. நண்பனுக்காக பிசிராந்தையார் வடக்கிருந்து உயிர் நீத்தார் என்று பள்ளியில் படித்தது.
    வடக்கிருத்தல் என்றால் என்ன என்றோ? வழி முறைகள் பற்றியோ வேறெங்காவது பதிவுகள், தரவுகள், கிடைக்கின்றனவா?

    அதுவும் படுக்கும் போது மட்டும் ஏன் பார்த்துப் படுக்க வேண்டும். நடக்கும் போது, உட்காரும் போது திசையெல்லாம் பார்த்துவிட்டா செய்கிறோம். நாம் எப்படி நடந்தாலும், அமர்ந்தாலும் உடலின் ஒரு பகுதி, தலையின் ஒரு பகுதி எப்போதும் வடக்கை நோக்கி இருந்து கொண்டு தானே இருக்கிறது.

    பொத்தம் பொதுவாய் அறிவியல் சொல்கிறது என்று எங்கேயே கேட்ட ஞாபகம். அது எப்போது கண்டுபிடிக்கப்பட்டது. என்ன சோதனைகள் மேற் கொண்டார்கள். விளைவுகள் என்ன. அப்படி பாதிக்கப்பட்டது யார்? அப்படி ஒரு விசயம் இருக்குமானால் ஏன் பாடப் புத்தகங்களில் அதைச் சொல்லிக் கொடுக்கவில்லை?

    இடது புறமாகவே நட, தலைகவசம் முக்கியம், இப்படி எண்ணற்ற விதிகள், அறிவிப்புகள் போடுகிறார்களே. இடதுபுறம் தலை வைத்து தூங்காதீர்கள் என்று எங்கேயும் இல்லையே. இல்லை எந்த நாட்டிலாவது அப்படியும் அறிவிப்புகள் இருக்கிறதா? குழப்பமாக இருந்தது.

    எப்போதாவது அதற்கான விடை தெரிய வரும் என்றாலும், நமக்கே சரியாய் தெரியாத, புரியாத விசயங்களை குழந்தைகளுக்குச் சொல்கிறோமே என்ற குற்ற உணர்வு சரியாய் தூங்கவிடவில்லை அன்று. இப்படி கேள்விகள் இன்றி எத்தனை எத்தனை செயல்களை, கருத்துக்களை பரம்பரை பரம்பரையாக மானிட இனம் சுமந்தலைந்து கொண்டிருக்கிறது!

    - பொன்.சுதா

     
    • meens 9:30 மு.பகல் on டிசம்பர் 2, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      விநாயகரின் தலையை சிவபெருமான் வெட்டிய பிறகு, அவருக்கு தலை தேடும் போது யார் வடக்கே தலை வைத்து உறங்குகிறாரோ… அவர் தலையை விநாயகருக்கு பொருத்த தேடும் போது யானைதான் அவ்வாறு படுத்திருந்ததால் அதன் தலையை வெட்டி அவருக்கு பொருத்தியதாக வரலாறு. அதனால் வடக்கே தலை வைக்கக் கூடாது என்பது நான் சிறுவனாய் இருந்தபோது சொன்ன கதை.

  • சோபா சதீஷ் 4:24 pm on November 22, 2009 நிரந்தர பந்தம் | பதில்  

    போதைக்கு அடிமையாகும் தாவரங்கள் 

    மனிதன் தாவரங்களையும் விட்டு வைக்கவில்லை.

    திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் விவசாயிகள் பூச்சி மருந்துடன் பிராந்தி கலந்து அடிக்கிறார்களாம். பூச்சிக் கொல்லியைவிட வேகமாய் பூச்சிகளை அழிப்பதுடன், பயிர்கள் ஆரோக்யமாய் வளர்கின்றன என்றும் சொல்கிறார்கள்.

    அரசு மார்க்கெட் செய்யும் டாஸ்மாக் விற்பனை அதிகரிக்க மற்றும் ஒரு விஷயம் கிடைச்சாச்சு.

    ஆக……பயிர்களுக்கு இப்போது ரெண்டு ‘தண்ணி’ தேவைப்படுகிறது.

    முதல் அடிப்படைத் தண்ணீரைத் தரவே பக்கத்திலிருக்கும் மூன்று மாநிலங்களும் தகராறு செய்துவரும் நிலையில் இப்போது அடுத்த தேவை வந்துவிட்டது. தண்ணீர்தான் எவ்வளவு பிரச்னை?

    என்றோ, எங்கிருந்தோ வந்த பென்னி குக் என்னும் ஆங்கிலேயன்.. இங்குள்ள மக்கள் தேவையறிந்து முல்லைப்பெரியாறு அணை கட்டிக்கொடுத்தான். இங்குள்ள தோழனோ தண்ணீர் தர வீம்பு செய்கிறான். பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திரம் தயாராகிறது.

    காவிரி ஆற்றில் முதன்முதல் அணை கட்டிய கரிகாலனே இன்று பிறந்து வந்தாலும்கூட, அவனும் காவேரி மினரல் வாட்டர்தான் வாங்கிக் குடிக்க வேண்டி இருக்கும்.

    யோசித்துப் பாருங்கள்…..

    ஊரெல்லாம் தண்ணீர்ப் பஞ்சம் வந்தாலும் இந்த மினரல் வாட்டர்க்காரனுக்கு பஞ்சமே வரமாட்டேன்கிறது.

    அதேபோல், தண்ணீரை பாட்டிலில் அடைத்து கர்நாடகாவிலிருந்தோ கேரளாவிலிருந்தோ அனுப்பினால் எவனும் தடுப்பதில்லை.

    ஏன்… தடுத்தால் அந்த கம்பெனி, ”சரி… தண்ணீரைத் தமிழகம் கொண்டு செல்லவில்லை. நீயே வைத்துக்கொள். ஆனால் பாட்டிலுக்கு ரூபாய் பதினைந்து கொடு…” என்று சொல்லும்.

    ஆக… தண்ணீர் பிரச்னையில்லை. அது இலவசமாய் இருப்பதுதான் பிரச்னை. அதனால்தான் அங்கே அரசியல் விளையாடுகிறது. விஷயம் உணர்வுப்பூர்வமாய் மாறிவிடுகிறது.

    அதையே நீ உபயோகப்படுத்தும் தண்ணீருக்கு லிட்டருக்கு 5பைசா என்று சொல்லிப் பாருங்கள்….”அய்யா, எனக்கு இந்த வருடம் இவ்வளவு தண்ணீர் போதும்; மீதியை எங்கு வேண்டுமானாலும் அனுப்பிக் கொள்ளுங்கள்” என்பான்.

    இப்போது உணர்வுப் பூர்வமாய் இருக்கும் தண்ணீர், பிறகு மேனேஜ்மெண்ட்டாய் மாறிவிடும். பிரச்னை சுலபமாய் தீர்ந்துவிடும்.

    நமக்கு தெரிந்தது… மேலே இருப்பவர்களுக்கு தெரியாமலா இருக்கும்..?

    அடடே… நாம ஆரம்பிச்ச விசயத்துலருந்து எங்கேயோ வந்துட்டோம் போல இருக்கே…

    சமீபத்தில் ஒரு இன்ஷ்யூரன்ஸ் பாலிஸி எடுக்கப் போயிருந்த இடத்தில் சந்தித்த நண்பரிடம் ஆர்வமாய் இந்த விஷயத்தை சொன்னதும், “வயித்துல இருக்கற தேவையில்லாத புழுக்களைக் கொல்ல பிராந்தியே போதும்… வேற மருந்துகள் தேவையில்லை…. இல்லியா….” என்றார்.

    அவர் ஒரு ‘குடிமகன்’ என்பது அப்புறம்தான் ஞாபகம் வந்து தொலைத்தது.

    - சோபா சதீஷ்

     
  • மீனாட்சி சுந்தரம் 10:08 am on November 10, 2009 நிரந்தர பந்தம் | பதில்  

    பூச்சாண்டி நண்பன் 

    poochandiஎனக்குப் பெண் பார்க்க ஆரம்பித்த காலம். “கல்யாணத்துக்கு இப்ப என்னம்மா அவசரம்? இன்னும் ஒரு வாரம் போகட்டும்…” என்ற என் காமெடி சென்ஸ் தாங்காமல் அம்மா ஒரு மாசம் என்னுடன் பேசுவதையே நிறுத்திவிட்டாள்.

    வாரம், மாதம், வருடம் என காலம்தான் எவ்வளவு மாறிவிட்டது?

    ஆல் இன்டியா ரேடியோ மட்டும் கேட்டுக் கொண்டிருந்த ஊரில் ஆயிரத்தெட்டு FM ஸ்டேஷன்கள்.

    தூர்தர்ஷன் பார்க்க பொது டிவி போன வீடுகளில் ரிமோட் அழுத்தி அழுத்தி வலது பெருவிரல் வலிக்கிறது.

    போஸ்டல் கொரியராகிவிட்டது. போன் செல்லாகிவிட்டது.

    LP  ரெக்கார்டுகளில் கேட்ட பாடல்கள் ரீமிக்ஸாய் ஐபாட்களில் அலறுகிறது.

    பையனாய் இருந்த நான் ஆள் ஆகி எனக்கு 2 வயதில் பையன் இருக்கிறான்.

    டிவிகளின் ஸிக்னேச்சர் மியூஸிக், சீரியல்களின் டைட்டில் பாடல்களுக்கு தலையாட்டிக் கொண்டிருந்த என் பையன், இப்போது டிவிடியிலோ, சிஸ்டத்திலோ, “வர்றான் வர்றான் பூச்சாண்டி ரயிலு வண்டியில…” பாட்டைத்தான் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறான். இந்தப் பாடல் வந்த  பின்பு சாப்பிட அடம்பிடிக்கும் என் மகனுக்கு சோறூட்டுவது எளிதாகிவிட்டது இப்போது.

    முன்பெல்லாம் இருட்டைக் காட்டி ‘பூச்சாண்டி வந்துருவான்’ என்று சோறூட்டினாள் அம்மா. இப்போதோ கரண்டு இல்லாத இருட்டுகளில் பூச்சாண்டி வராததால் மகனுக்கு சோறூட்ட முடியாமல் திணறுகிறாள் என் மனைவி.

    காலம் மாறித்தான் போச்சு. எனக்கு பூதமாய் இருந்த பூச்சாண்டி என் மகனுக்கு ஃப்ரண்டாகிவிட்டான்.

    -மீனாட்சி சுந்தரம்

    கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.

     
    • சரசுராம் 9:52 மு.பகல் on நவம்பர் 12, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      அளவாய் இருந்தாலும் அழகான பதிவு. மீன்ஸ்.. உன் எழுத்தை மீண்டும் படிப்பதில் இன்னும் சந்தோசம். தொடர்ந்து எழுது. உன்னிடம் நல்ல சிறுகதைகளையும் எதிர் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

    • Karthik 5:56 மு.பகல் on நவம்பர் 15, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      உங்கள் மகனின் பதிவிற்க்கு, பதில் எழுதும் காலம் தூரத்தில் இல்லை….

      காலம் Proportional-ஆக மாறுகிறது, டெக்னாலஜி Exponential-ஆக வளறுகிறது !!!

c
புதிய பதிவு எழுதுக
j
அடுத்த பதிவு / அடுத்த மறுமொழி
k
previous post/previous comment
r
பதில்
e
திருத்து
o
மறுமொழிகளை காண்பி / மறை
t
மேலே செல்க
l
புகுபதிகைக்கு செல்ல
h
உதவி காட்டு/மறை
esc
வேண்டாம்