ஆரம்பம் தொட்டே கதை எழுதும் ஆர்வத்தை விட, அதில் தொழில்நுட்பத்தை நுழைக்கும் போக்கு என்னிடம் அதிகமாயிருந்தது.

பேப்பரில் எழுதிக் கொண்டிருந்தவன் சட்டென ஒரு தட்டச்சு இயந்திரத்தை (ஹால்டா) வாங்கி தட்ட ஆரம்பித்தது அப்படித்தான். முறைப்படி டைப்பிங் பழகவில்லை. ஆனால் மனதின் வேகத்துக்கு தடதடவென தட்டி நொறுக்க சில நாட்களிலேயே பழகி விட்டேன். அப்புறம் கணினிக்கு தாவினேன். பாரதி போன்ற ஷெல் சார்ந்த மென்பொருட்களும், டாட்மேட்ரிக்ஸ் ப்ரிண்ட்டரும் என் கதை எழுதும் ஆர்வத்தை குறையாமல் பார்த்துக் கொண்டன.

அந்த காலகட்டத்தில் சுஜாதா தவிர வேறு யாரெல்லாம் கம்ப்யூட்டரில் கதை தட்டிக் கொண்டிருந்தார்கள் என்று அவ்வளவாய் தெரியாது. (இரா. முருகன்?) கல்கியில் அப்போது என்னைப் பற்றி வெளியான சிறுகுறிப்பில் நான் கம்ப்யூட்டரில் கதை எழுதி வருவது குறித்து பிரசுரமாகி இருந்ததால், ஒரு விழாவில் சந்தித்த ஆர்னிகா நாசர், “கட்டுபடியாகுமா?” என்றார்.

விண்டோஸ் 3.1 வந்த பின் தமிழைப் போல பாவ்லா காட்டும் ட்ரூ டைப் எழுத்துருக்கள் புழக்கத்துக்கு வந்தன. என்னிடமிருந்த கோரல் ட்ரா என்ற மென்பொருளில் கொஞ்சம் மெனக்கெட்டால் அப்படிப்பட்ட எழுத்துருக்களை உருவாக்கும் வசதி இருந்தது. மெனக்கெட்டேன். ஒரு எழுத்துரு உருவாக்கி அதற்கு ஸரஸ்வதி என பெயரிட்டேன். சமீபத்தில் யுனிகோட் பரவலாகும் வரை எனக்கும் என் நெருங்கிய கணினி நண்பர்களுக்கும் (சித்ரன்) ஸரஸ்வதிதான் ஆஸ்தான எழுத்துரு. 2003-ல் என்றுதான் நினைக்கிறேன், முப்பது முப்பத்திரண்டு தமிழ் வலைப்பதிவாளர்களில் ஒருவனாய் நானும் மாறிய போது, சித்ரன் மூலமாக என்னை யாஹூ அரட்டையில் பிடித்த எழுத்தாளர் பாரா நானும், சித்ரனும் தமிழில் உரையாட ஸரஸ்வதியை உபயோகிக்கிறோம் என்றதும், “என்னது சிம்ரனா?” என்று கிண்டலடித்தார். எனக்கு ஏன் ஸ்ரீதேவி, கவுதமி என்று கவர்ச்சியாய் நடிகை பெயர் வைக்கத் தோணவில்லை என்று நொந்து கொண்டேன்.

டயரி போன்ற வலைப்பதிவு தொழில்நுட்பத்தை கதை எழுதி கெடுத்த முன்னோடி வில்லன் நான். அதற்கு முக்கிய காரணம், சுவாரஸ்யமான சமாசாரங்களை பதிய எனக்குத் தெரிந்த ஒரே சவுகரியமான வடிவம் சிறுகதை. அமெரிக்காவில் இந்தியர்களின் சின்ன சின்ன அனுபவங்களை சுவாரஸ்யம் கலந்த கதையாக்கி துகள்கள் என்னும் தலைப்பில் வெளியிட, நல்ல வரவேற்பு. அப்போது ப்ளாகரில் இருந்ததால், அது தந்த சுதந்திரத்தை பயன்படுத்தி கதைகளில் கொஞ்சம் DHTML மேஜிக் செய்தேன். அதாவது ஒரு கதை முடிந்த இடத்தில் லின்க் கொடுத்து மவுசை மேலே வைத்தால், கதையின் இன்னொரு முடிவு பிரசன்னமாகும். இது போல பல கதைகளுக்கு இரண்டு முடிவுகள் வைத்திருந்ததையும், DHTML தொழில்நுட்பத்தை அதற்கு பயன்படுத்தியதையும் பாரா அப்போது இமெயிலில் மனசார கீழ்கண்டவாறு பாராட்டினார்.

அன்புள்ள சத்யராஜ்குமார்

உங்களது பிளாக்ஸ்பாட் வலைப்பதிவையும் பைட்ஸ் ஆனையும் இன்றுதான் முழுக்கப்
படித்து முடித்தேன். என் முதல் பாராட்டு, உங்களது தொழில்நுட்ப
வேலைகளுக்கு.
மிக அழகாகப் பல விஷயங்களைச் செய்திருக்கிறீர்கள். ஒரு
கதைக்கு இரண்டு முடிவு கொடுக்கிறபோது சட்டென்று இன்னொரு பேரா
உதயமாகிறதும் உங்களைப் பற்றிய சிறு குறிப்பு தனி பக்கமாக மேலே
விழுவதுவும் அழகாக உள்ளன. நேர்த்தியான வடிவமைப்பில் கவர்கிறீர்கள்.

விஷயத்துக்கு வருகிறேன்.

மொழியின் அத்தனை சாத்தியங்களும் உங்களுக்கு வசப்படுகின்றன. ‘குமார்’ரக
எழுத்தாளர்கள் யாருமே மொழி விஷயத்தில் இந்த உயரங்களைத் தொட்டதில்லை;-)
நிச்சயமாக நீங்கள் மசாலா எழுத்தாளர் இல்லை என்று எல்லா கதைகளும்
சொல்லிவிட்டன.

அன்புடன், வாழ்த்துகளுடன்
பாரா

இதன் பின் Purist வலைப்பதிவர்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் எனக் கருதி கதைகளை தொகுத்து இணையதளமாக்கி விட்டு, “இன்று – Today” என்னும் இந்த வலைப்பக்கத்தை வலைப்பதிவுகளின் ஒரிஜினல் நோக்கத்துக்கானதாக ஆரம்பித்தேன். சமீபத்தில் போட்டியின் பொருட்டு இரண்டொரு கதைகள் இங்கே இட வேண்டியதாயிற்று.

நான் வலைப்பதிவில் தலை காட்டிய சில நாட்களிலேயே தமிழோவியம் கணேஷ் சட்டென்று பழக்கமாகி விட்டார். “ஏதாவது பண்ணுங்க.” என்று அடிக்கடி அன்புக்கட்டளை இடுவார். தட்டையான கதைகள் அச்சு ஊடகத்துக்கு சரி. ஹைப்பர் லின்க் போன்ற அற்புத சாத்தியங்கள் கொண்ட இணைய ஊடகத்துக்கும் அதையே ஏன் கட்டிக் கொண்டு அழ வேண்டுமென எண்ணியவன், ஹைப்பர் லின்க் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒரே கதை ஆறு தடங்களில் பிரிந்து ஆறும் ஆறு வெவ்வேறு கதைகள் போல தனித் தனியே படிக்க முடியும்படி கறுப்பு வெள்ளை கனவுகள் எழுதிக் கொடுத்தேன். இதற்கும் இணைய அன்பர்களிடமிருந்து பலத்த வரவேற்பு. 3D கதைகள் என்று கணேஷ் அதற்குப் பெயர் வைத்தார்.

இப்போது ட்விட்டர் வந்ததும் அதையும் விட்டு வைக்காமல் அங்கும் என் கதை முயற்சி தொடர்ந்ததை என் சமீபத்திய பதிவொன்றின் மூலம் அறிந்திருப்பீர்கள். அதை ட்விட்டரில் எழுதிக் கொண்டிருந்த போது – என்னிடம் பழகும் ஒரு சிலர் இது கொஞ்சம் ஓவரா இல்லையா என்றார்கள். சோதித்துப் பார்ப்பதில் என்ன தவறு? உண்மையில் அந்த ட்விட்டர் முயற்சி சில காலம் கழித்து நான் செய்ய உத்தேசித்திருந்த இன்னொரு புதிய முயற்சியின் வெள்ளோட்டம் என்பது அவர்களுக்குத் தெரியாது.

தெனாலி இணைய பத்திரிகை ஆசிரியர் குழு கொஞ்ச நாள் முன்பு என்னிடம் தொடர்பு கொண்டு, SMS மீடியாவில் ஒரு தொடர்கதை எழுத முடியுமா என கேட்டிருந்தார்கள். அதற்கான வடிவம் பிடிபட ட்விட்டர் அழகான பயிற்சிக் களம். போன்சாய் மாதிரி ஒரு தொடர் அமைத்து தருவது எனக்கு சவாலாகவும், சுவாரஸ்யமாகவும் தோன்றவே சம்மதித்தேன்.

இதோ அந்த தொடர்கதை ஆரம்பமாகி விட்டது. முதலில் ஒரு க்ரைம் கதை. வரவேற்பை பொறுத்து பல வகை கதைகளையும் தர எண்ணம். தமிழில் இந்த புது ஊடக முயற்சியை நீங்களும் ருசித்துப் பாருங்கள்.

தப்பு

ஜூன் 11, 2009

இன்று வாகன காப்பீட்டுப் பிரீமியம் செலுத்துவதற்காகப் போனபோது அந்த அலுவலகத்தில் ஒரு மானேஜர் உட்பட 4 பெண் ஊழியர்கள். நிசப்தம் பூசிய குளிர்சாதன அறை. ஆளுக்கொரு கம்ப்யூட்டர். இன்னும் காலாவதியாகாத டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டர்கள். மூலையில் தேமே என்று ஒரு ஆண் ஊழியர். குப்பைத்தொட்டி. அதில் நிரம்பி வழிந்த காகிதக் குப்பைகள். இந்தக் கம்ப்யூட்டர் காலத்திலும் இத்தனை காகிதங்கள் உபயோகப்பட்டு விரயமாகின்றதே என்ற ஆச்சரியத்துடன் ஒரு மேசையை அணுகினேன்.
trash
விவரங்கள் கேட்டுவிட்டு என்னை உட்காரச் சொல்லிவிட்டு மேற்படி கம்ப்யூட்டரில் என் காப்பீட்டுக் கணக்கு வழக்கை மேய ஆரம்பித்தார் ஒரு அம்மணி. அந்த அறைக்குள் ஒரு வாடிக்கையாளார் எதிரில் அமர்ந்திருக்கிறாரே என்கிற பாவனை எதுவுமற்று பிறகு சத்தமாய் உரையாடத் தொடங்கினார்கள். எல்லாமே ஆங்கிலத்தில்தான்.

நடுவாந்திர மேசையில் கண்ணாடியணிந்த நடுத்தர வயது குண்டு பெண்மணி, தான் நேற்று “balanced diet” ப்ரோக்ராம் ஒன்றில் பங்கு கொண்டதை சத்தமாக அறிவித்தார். “பட்.. யு நோ.. அயம் அல்ரெடி ஃபால்லோயிங் தட் யா” என்றார்.

“உண்மையாகவா? இன்னும் மார்னிங் ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு ஓட்ஸ்தான் எடுத்துக் கொள்கிறாயா?” கம்யூட்டரில் என் விவரங்களைத் தட்டியபடி இந்தப் பெண்மணி.

“பின்னே? என்னைப் பற்றி என்னவென்று நினைத்தாய்?” என்று கண்ணாடிக்குள்ளிருந்து விழி உருட்டிப் பார்த்தார் கு.பெண்மணி.

கம்ப்யூட்டர் பெண்மணி திரையிலிருந்து பார்வையை விலக்கி மூன்று பேரைத்தாண்டி “ஸார்.. தி த்ரீ மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப் படித்திருக்கிறீர்களா?” என்றார் மூலையைப் பார்த்து.

“சேத்தன் பகத்-தானே. படித்திருக்கிறேன்” என்று குரல் வந்தது.

“ஓ நீங்கள் அப்டுடேட் ஸார்”.

இன்னும் சில பல அரட்டைகள்.

டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டரில், சர் சர் என்று காப்பீட்டுக் காகிதங்களை அச்சிட்டுக் கிழித்து, ரெவன்யூ ஸ்டாம்ப் ஒட்டி, ”Balanced diet” பெண்மணியிடம் கையெழுத்து வாங்கி, சீல் வைத்து என்னிடம் பணம் பெற்று ரசீது கொடுத்து…

எல்லாம் ஒழுங்காகத்தான் நடந்தது. காகிதங்களை வாங்கி சரி பார்த்துவிட்டு சொன்னேன். “மேடம்… பேப்பர்ஸ்-ல வண்டி நம்பர் தப்பா என்ட்ரி பண்ணிருக்கீங்க..”

கம்ப்யூட்டர் பெண்மணி லேசாய் அசடு வழிந்தது. விரயம்: மூன்று காகிதங்கள் + கார்பன் + டாட் மேட்ரிக்ஸ் ரிப்பன் + என்னுடைய மற்றும் அவரின் மேலும் பத்து நிமிடங்கள்.

தப்பான காகிதங்களை டர்ரென்று கிழித்து அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் போட்டார். இந்தக் கம்ப்யூட்டர் காலத்திலும் எப்படி இத்தனை காகிதங்கள் உபயோகப்பட்டு விரயமாகின்றது என்கிற என் ஆச்சரியத்துக்கு பதில் கிடைத்துவிட்டது.

கம்யூட்டரைக் கண்டு பிடித்தது மிகப் பெரிய தப்பு என்று நினைக்கிறேன்.

மைய விலக்கு

ஜூன் 8, 2009


‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.

~ சத்யராஜ்குமார் ~


செல்போனை உடைக்கலாம் போல ஆத்திரம்.

 எதிர்முனையில் பேசியது நிஷா. கோபம் அவள் மேல் இல்லை. அந்த வயசான ஜன்மத்தின் மேலே. அதாவது அவன் அப்பா. இன்னும் கொஞ்சம் மரியாதையாய் குறிப்பிடலாம். ஆனால் கோபத்தில் மரியாதை எப்போதும் நேரெதிர் விகிதம்.

“நிஷா, நீ இப்ப வீட்டில் கத்தி ரணகளம் பண்ணாதே. எதுவா இருந்தாலும் நான் வந்து பேசிக்கறேன்.”

“அவர் பண்றது கொஞ்சம் கூட சரியில்லை சிவா. குழந்தைங்களையும் சேர்த்து கெடுக்க ஆரம்பிச்சிருக்கார். ஐ கான்ட் டாலரேட் திஸ் நான்சென்ஸ் எனி மோர்.”

“நான் மீட்டிங்கிலிருக்கேன். சாயந்தரம் அவர் கிட்டே பேசிக்கறேன். போனை வெக்கறியா?”

நிஷா வைக்கப் போவதில்லை. போனில் இன்னும் பேச்சுக் குரல். இணைப்பைத் துண்டித்து, ஸ்விட்சையும் அழுத்தியதில் மொத்தமாய் அடங்கியது போன். எதிரே இருந்த வெள்ளைக்காரர்கள் சிவந்து போன அவன் முகம் பார்த்து, “எனிதிங் ராங் ஷீவா?” என்றார்கள்.

பாட்டில் தண்ணீரை மடக் மடக்கென்று குடித்து ஆசுவாசப்படுத்தியபடி தலையாட்டினான். “நோ, நோ. லெட்ஸ் கோ அஹெட்.” அடுத்த அரை மணி நேரத்துக்கு மீட்டிங் அறையில் அந்த அமெரிக்கர்கள் பேசியது மண்டைக்குள் ஏறவில்லை. அப்பாவின் முகம் கிட்டத்தில், தூரத்தில் என்று கண் முன்னே ஆடியது.

‘அமெரிக்கா வேண்டாம்டா சிவா. எல்லாருமே மெட்ராஸ் போயிரலாம்.’

எட்டாவது மாடியிலிருந்து சரசரவென கீழிறங்கியது கார். ஸ்டாப் பலகையை மதிக்காமல் போய் வெள்ளைக்காரியிடம் ஹாரனில் திட்டு வாங்கிய பின், நெடுஞ்சாலை. ரியர் வ்யூ கண்ணாடி எதிலும் கண்ணுக்கெட்டிய வரை போலிஸ் தெரியாததால் சரக்கென்று எண்பது மைல். ரேடியோ அலைவரிசையில் அவன் காரை உணர்ந்து மேலேறியது கராஜ் கதவு.

யுத்தம் முடிந்த பூமி போல் வீட்டுக்குள் பயங்கர நிசப்தம். விடியோ கேம் இசை, கார்ட்டூன் அலறல் என்று எப்போதும் களேபரமாய் இருக்கும் குழந்தைகளின் அறை கூட மவுனப்படம் போலிருந்தது. ஆளுக்கொரு புத்தகத்தை வைத்துக் கொண்டு பரிதாபமாய் உட்கார்ந்திருந்தார்கள்.

“அம்மா எங்கடா?”

பெரியவனைக் கேட்டதும், சின்னப் பெண்ணிடமிருந்து பதில் வந்தது. “மேலே மாஸ்டர் பெட்ரூமில் படுத்திருக்கா.”

“கோபமாயிருக்கா.” – என்றான் பெரியவன் பிற்சேர்க்கையாய்.

“தாத்தா?”

“பூஜை ரூம்ல.”

மவுஸை அசைத்து ஸ்க்ரீன் ஸேவர் ஓடிக் கொண்டிருந்த கம்ப்யூட்டரை தட்டியெழுப்பினான். இன்பாக்சில் நிஷா அனுப்பிய மின்னஞ்சல். ரொம்பவும் கோபமாகி விட்டால் நிஷா இமெயிலில்தான் பேசுவாள். பத்து கிலோ பைட்களுக்கு திரையில் தெரிந்தது அவள் கோபம்.

பூஜை அறை கதவைத் தள்ளி, “அப்பா. நீங்க சாமி கும்பிட்டது போதும். கொஞ்சம் என் கூட வாங்க.”

பார்க்கில் கறுப்பு, பழுப்பு, சிவப்பு என்று கலர் கலராய் குழந்தைகள். நாய்க்குட்டியோடு வாக்கிங் போகும் வெள்ளைக்கார பெண்கள். ஒரு மர பெஞ்ச்சை தேர்ந்தெடுத்து உட்கார்ந்தான் சிவா. கிரிதரன் அமைதியாக அவன் பக்கத்தில் அமர்ந்ததும், “மறுபடி ஆரம்பிச்சிட்டிங்களாப்பா? இந்தியாவில் கார்ல ஸீட் பெல்ட் கூட போட வேண்டியதில்லை. சாயந்தரம் ஸ்கூல் முடிஞ்சு வந்தா வீட்டுக்குள் அடைஞ்சிருக்கத் தேவையில்லை. தெருவில் விளையாடலாம். இது மாதிரி இன்னும் என்னென்னமோ சொல்லி குழந்தைகளை தூண்டி விட்டிங்களா?”

“நிஜத்தைத்தாண்டா சொன்னேன்.”

“அப்பா, நீங்க அவங்களை டிமாரலைஸ் பண்றிங்க. இங்க குழந்தைங்க அவங்களா மனசு வெச்சுப் படிச்சாத்தான் உண்டு. நானும் நிஷாவும் ரொம்ப பாடுபட்டு அவங்களை போக்கஸ்டா கொண்டு போய்ட்டிருக்கோம். இப்படி வேண்டாததை நீங்க பேசினா வீட்ல பிரச்சனை ஜாஸ்தியாகும்.”

“நீயும், நிஷாவும் அங்க படிச்சித்தானே இங்க வந்திருக்கிங்க? ப்ரீ ஸ்கூல்ல கொண்டு போய் விட்டா ஒரு டாக்டர் அல்லது என்ஜினியராக்கி வெளியே தள்ளிடுவாங்க. நீயும், நிஷாவும் ஏன் இப்படி கஷ்டப்படணும்? பார்த்துக்க ஆயிரம் பேர் இருக்காங்க. இங்கே நிறைய சொகுசு இருக்கு. ஆனா லைஃப் இல்லை. நாலு சுவத்துக்குள்ள நாம நாலு பேருமே முகத்தைப் பார்த்துக்கிட்டு… மெட்ராசுக்குப் போயிரலாம்டா.”

“எனக்குக் கோபம் வரதுக்குள்ள இந்த பல்லவியை விட்டுருங்க. எங்களுக்கு இங்கதான் வேலை. இங்கதான் இருந்தாகணும்.”

“என்ன பெரிய வேலை. இந்த வெள்ளைக்காரன் கம்பெனியைப் பத்தி எனக்குத் தெரியாதா? எந்த நிமிஷம் வேணா சீட்டைக் கிழிச்சு ஃபயர் பண்ணுவான். கடைசி வீட்டு சர்தார்ஜி இல்லே… அவனுக்கு வேலை போயிருச்சு. கடனில் வாங்கின வீட்டுக்கு மஞ்சக் கடுதாசி குடுத்துட்டு மொத்தமா ஊருக்குத் திரும்பிப் போறான்.”

சிவாவுக்கு எரிச்சலாயிருந்தது. அடக்கிக் கொண்டு பொறுமையாய் சொன்னான். “எங்க வேலையைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? அம்மாவும் போயாச்சு. சும்மா முரண்டு பிடிக்காம ரிட்டயர்ட் வாழ்க்கையை நிம்மதியா இங்க பார்க், லைப்ரரின்னு கழிங்க. மெட்ராஸ் வீட்டை விக்கறதுக்கு ஏற்பாடு பண்ணலாம்.”

“முடியாது.”

“முடியாதுன்னா இப்படி வீடு போர்க்களமா இருப்பது எனக்கும் பிடிக்காது. நீங்க மட்டும் ஊருக்குப் போக வேண்டியதுதான். கடைசி காலத்தில் பையன் கவனிக்கலைன்னு கம்ப்ளைண்ட் பண்ணாதிங்க.”

“டேய் சிவா…” கிரிதரன் கலங்கின கண்களோடு அவனைப் பார்த்தார். உடைந்து போன குரலில் மெல்லமாய் சொன்னார். “சரி எனக்கு டிக்கட் போட்டுருடா. இந்த லைஃப் ஸ்டைல் ஒத்து வராது. தினமும் காலைல நடேசன் பார்க் போய் ஃப்ரெண்சோட அரசியல் பேசணும். ரோட்டோர கடையில் டீ குடிக்கணும். திண்ணையில் உக்காந்து ஹிண்டு பேப்பர் படிக்கணும். கல்யாணம், காதுகுத்துக்குப் போகணும். நிறைய மனுஷங்க வேணும். நாப்பது அம்பது வருஷமா வாழ்ந்து பழகின வாழ்க்கையை சட்னு என்னால விட முடியாது..”

“போயிடுங்க. பசங்க எதிர்காலத்தைப் பத்தி உங்களுக்கு அக்கறையில்லை. கல்யாணமும், காதுகுத்தும்தான் முக்கியம். அங்கயே போயிடுங்க.”

சிவாவுடைய மனதின் ஆழத்தில் இருந்த மிக மெல்லிசான குற்ற உணர்ச்சி கூட நிஷாவுக்கு இருக்கவில்லை. “அவரால நமக்கு தொல்லைதான் அதிகம். பிள்ளைங்க கெட்டுப் போயிருவாங்க. டிராவல் ஏஜன்ட்கிட்ட இன்னிக்கே பேசிடறேன்.” என்றாள்.

அந்த வாரக் கடைசியில் ஏர்போர்ட். பேரக் குழந்தைகளை வாஞ்சையாய் அணைத்து தலையில் முத்தமிட்டார். இது கடைசி முத்தமா, இன்னும் பாக்கி இருக்கிறதா?

மெட்ராஸ் வெய்யிலும், இரைச்சலும், வியர்வை நாற்றமும் அவருக்கு உற்சாகமாய் இருந்தது. ஜெட் லேக் சரியானதும், தகர உடம்பு லொட லொடவென நடுங்க, மண் புழுதி கிளப்பிக் கொண்டு செல்லும் தனியார் பஸ்சில் கொங்கலபட்டி போனார் கிரிதரன். வயல்வெளிக்கு நடுவே தாழ்வான ஓட்டு வீடு.

சுருக்கங்களே முகமாய்ப் போன எண்பது வயதுக் கிழவி, இடுங்கிய கண்களால் அவரை உற்றுப் பார்த்து, “கிரிதரா…” என்றது.

பிளாஸ்டிக் மாலையுடன் சுவரில் மாட்டியிருந்த கறுப்பு வெள்ளை படத்துக்கு முன்னே போய் நின்றார். கண்ணில் கரகரவென்று கண்ணீர். “அப்பா, உங்க மனசைப் புரிஞ்சிக்க எனக்கு முப்பத்தஞ்சு வருஷமாச்சு.”

oo00oo