அண்மைய மாற்றங்கள் Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

  • சத்யராஜ்குமார் 9:21 am on September 9, 2012 நிரந்தர பந்தம் | மறுமொழி
    குறிச்சொற்கள்: life, usa   

    சிறை 

    முந்தா நாள் நண்பர் வீட்டில் ஒன்று கூடல். ஜூன் முதல் அக்டோபர் வரை இந்த மாதிரி இடங்களில் நிச்சயம் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் அம்மா-அப்பாக்களைப் பார்க்கலாம். அன்றும் மூன்று தந்தைமார்களைப் பார்த்தேன்.

    “மூணு மாசம் இருக்கச் சொல்றாங்க. என்னால பத்து நாள் கூட இருக்க முடியுமா தெரியலை.”

    டீக்கடை இல்லை. பெட்டிக்கடை இல்லை. தானாக எங்கும் வெளியே செல்ல முடியவில்லை. நிறைய மனிதர்களை கண்ணில் காண முடியவில்லை. அருகிலேயே தெரிந்தவர் வீடு இருந்தாலும் சட்டென்று அங்கே சென்று கதவைத் தட்டி பேசி விட்டு வர முடிவதில்லை. முன் கூட்டியே செல்லில் பேசி, சந்திப்பைத் திட்டமிட்டு… எல்லாம் ரொம்ப செயற்கை. இப்படியே குற்றச்சாட்டுகள் நீள்கின்றன. தாங்கள் முள் மேல் இருப்பது போல ஒரு வித பதட்டத்துடனே பேசுகிறார்கள். இது வாழ்நாளில் தங்களுக்குக் கிடைத்து விட்ட மிகப் பெரிய தண்டனை போல் கருதுகிறார்கள்.

    அமெரிக்கா வந்து விட்டு இங்கே இந்தியாவைக் காண முயலும் லாஜிக் புரியவில்லை. இவ்வளவுக்கும் இவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள், நல்ல பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். இது வேறு உலகம். இந்த உலகத்தின் தன்னியல்புகளை புரிந்து கொள்ள முயன்றால் அதற்கு மூன்று மாதமில்லை, ஆறு மாதம் கூட போதாது என்பது புரியும்.

    வெகு சிலரே அந்தக் கலையில் தேர்ந்துள்ளார்கள். இங்கே வந்ததும் தங்களை முற்றிலுமாக மாற்றிக் கொள்கிறார்கள். காலை பத்து மணிக்கு மேல் மகனும் – மருமகளுமோ, மருமகனும்-மகளுமோ அலுவலகம் சென்று விட்டதும் கிடைக்கும் தொந்தரவுகளற்ற தனிமையையும், அமைதியையும் ரசிக்கிறார்கள். இண்ட்டர்னெட்டில் தினமலரோ, ஹிந்துவோ வாசிக்கக் கற்றுக் கொண்டு படித்து மகிழ்கிறார்கள். அருகாமை நூலகத்தைக் கண்டு பிடித்து பொழுதைக் கழிக்க தெரிந்து கொள்கிறார்கள்.

    இந்தப் புதிய உலகை ரசிக்க ஆரம்பிக்கும் இவர்களுக்கு ஆறு மாதங்கள் ஆறு நொடிகள் போல கடக்கின்றன.

    தங்களுக்கான அன்றாட வாழ்க்கை சொந்த ஊரில் இருக்கவே இருக்கிறது என்பதை ஒரு பெரும் கூட்டத்தின் விதிவிலக்குகளாக இருக்கும் இவர்கள் புரிந்து கொண்டிருப்பதே இதன் சூட்சுமம்.

     
    • REKHA RAGHAVAN 10:17 முப on செப்ரெம்பர் 9, 2012 நிரந்தர பந்தம் | மறுமொழி

      உண்மைதான்.வாழ்க்கையை அதன் போக்கில் ரசிக்கத் தெரிந்தவனுக்கு நான்கு சுவர்களுக்குள்ளும் சொர்கமுண்டு! கடைசி பாரா எனக்கு அழகாக பொருந்துகிறது.

      ரேகா ராகவன்.

    • கவிதா 11:37 முப on செப்ரெம்பர் 9, 2012 நிரந்தர பந்தம் | மறுமொழி

      அமெரிக்கா வந்து விட்டு இங்கே இந்தியாவைக் காண முயலும் லாஜிக் புரியவில்லை. இவ்வளவுக்கும் இவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள்//

      இந்தியாவில் பலவருடம் இருந்துவிட்டு, அமெரிக்கா வந்துவிட்டதற்காக ஒரிரு நாட்களில்/மாதங்களில் மாற்றிக்கொள்ள சொல்லுவதும், மாற்றிக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதும் எந்த விதத்தில் நியாயம்.

      அவர்கள் இந்தியாவைக் காண முயலவில்லை. இந்தியாவுடன் ஒப்பிட்டுப்பார்க்கிறார்கள் அவ்வளவே. !

    • சித்ரன் ரகுநாத் 1:27 பிப on செப்ரெம்பர் 9, 2012 நிரந்தர பந்தம் | மறுமொழி

      //மருமகளுமோ, மருமகனும்-மகளுமோ அலுவலகம் சென்று விட்டதும் கிடைக்கும் தொந்தரவுகளற்ற தனிமையையும், அமைதியையும் //

      சில பெற்றோர்களுக்கு மகனோ, மகளோ, மருமகளோ யாருடனாவது இருப்பது ஆறுதலாக இருக்கலாம். தனிமை, அமைதி இவற்றைவிட இனிமையான தொந்தரவுகள் பிடித்து இருக்கலாம். இண்டெர்நெட்டில் தினமலரும், ஹிந்துவும் படிப்பது ஒரு வகை காம்ப்ரமைஸ்தானே? மேலும் இந்தியாவின் ஏதாவது டவுனிலிருந்தோ, கிராமத்திலிருந்தோ வந்த பெற்றோர்கள் எனில் அருகாமை லைப்ரரிக்குத் தனியாக செல்ல பயமோ கூச்சமோ தடுக்கலாம்.

      நீங்கள் சொன்னமாதிரி விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் எல்லோரிடமும் “சூழ்நிலைக்குத் தகுந்தமாதிரி” தன்னை மாற்றிக்கொள்ளும் திறனோ, விருப்பமோ இருக்குமா என்பது சந்தேகமே. என்ன சொல்லுகிறீர்கள்?

    • krish 6:16 முப on செப்ரெம்பர் 10, 2012 நிரந்தர பந்தம் | மறுமொழி

      சரியாத்தான் சொல்லியுள்ளீர்கள்.நன்றி.

    • சத்யராஜ்குமார் 7:38 பிப on செப்ரெம்பர் 11, 2012 நிரந்தர பந்தம் | மறுமொழி

      ரேகா ராகவன், கவிதா, சித்ரன், க்ரிஷ், உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

      //இந்தியாவுடன் ஒப்பிட்டுப்பார்க்கிறார்கள் அவ்வளவே//

      ஒப்பிடுவதோடு நில்லாமல் அவை இல்லாததால் இங்கே தங்களுக்கு எந்த மகிழ்ச்சியுமில்லை என ஒட்ட மறுக்கிறார்கள்.

      //ஆனால் எல்லோரிடமும் “சூழ்நிலைக்குத் தகுந்தமாதிரி” தன்னை மாற்றிக்கொள்ளும் திறனோ, விருப்பமோ இருக்குமா என்பது சந்தேகமே. என்ன சொல்லுகிறீர்கள்?//

      //மாற்றிக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதும் எந்த விதத்தில் நியாயம்.//

      எனக்கு எந்த எதிர்பார்ப்புமில்லை. மாறுவதும் மாறாததும் தனி நபர்கள் சம்பந்தப்பட்டதே. ஆனால் சூழ்நிலையைப் புரிந்து கொள்வதும், அதனுடன் தன்னைப் பொருத்திக் கொள்வதுமே வாழ்க்கைத் தத்துவம் என நமக்கு மட்டுமல்ல, பூச்சி பொட்டு என எல்லாவற்றுக்குமே இயற்கை விதித்திருக்கிறது. ஒரு சாரார் புலம்பி வருந்தி துயருறுவதையும், மறு சாரார் மகிழ்ச்சியுடன் புது சூழலை அனுபவிப்பதையும் ஒருங்கே கவனித்ததால் பதிவு செய்தேன்.

  • சித்ரன் ரகுநாத் 11:49 am on August 28, 2012 நிரந்தர பந்தம் | மறுமொழி
    குறிச்சொற்கள்: , சித்ரன் ரகுநாத், சோதனை, டாக்டர், , kubrick's cold caloric test   

    க்யூப்ரிக்ஸ் கோல்ட் கலோரிக் டெஸ்ட் 

    இன்று நண்பர் ஒருவரின் புலம்பலைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் எந்தப் பிரச்சனைக்காக எப்போது எந்த டாக்டரிடம் போனாலும் தவறாமல் இரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், MRI ஸ்கேன் என்று எதையாவது ஒன்றை மேற்கொள்ளச் சொல்லி எழுதித் தருகிறார்கள். எல்லா டாக்டர்களுக்கும் இம்மாதிரியான லேப் மற்றும் ஸ்கேன் சென்டர்களுடன் ஒப்பந்தம் உள்ளது என்பதே அவர் அங்கலாய்ப்பின் மையக் கரு. டெஸ்ட் ரிசல்ட்டைப் பார்த்துவிட்டு எல்லாம் சரியாகவே வேலை செய்கிறது. கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் கடைசியில் சொல்லிவிடுகிறார்களாம். அதுதான் நமக்கே தெரியுமே. இப்படிப் போய் அப்படி வருவதற்குள் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயாவது பழுத்துவிடுகிறது என்றார். உண்மையான கவலைதான்.

    இந்தப் புலம்பலைக் கேட்டபோது ஏழெட்டு வருடங்களுக்கு முன் எனக்கொரு பிரச்சனை ஏற்பட்டு இதுமாதிரி ஒரு சில சோதனைகளைக் கடந்த ஞாபகம் தலை தூக்கியது. அப்போது எனக்கு அடிக்கடி முன் அறிவிப்பில்லாமல் தலை சுற்றல் நிகழும். அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருப்பேன். திடீரென்று அறை சுழல்வது போல் தோன்றும். நான் மட்டும் நிலையாய் உட்கார்ந்திருக்க அறையில் இருக்கிற பொருட்களும், மேசை நாற்காலிகளும் ஏதோ ஒரு திசையில் நகர ஆரம்பிப்பதுபோல பிரமை ஏற்படும்.  பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதை நான் மட்டும் உணர்வதுபோல் இருக்கும். இந்த சுற்றலின் விளைவாக உடலில் – குறிப்பாக உடலுக்குள் இருக்கும் வயிற்றில் – ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டு, ஒரு குமட்டல் மேல் நோக்கிப் புறப்படும். பிறகு செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படியே போட்டுவிட்டு தள்ளாடியபடி வாஷ்பேசினை நோக்கி உடனடியாக விரையவேண்டியிருக்கும். வயிற்றுக்குள் இருக்கும் பகுதிகள் வெளியே வந்து விழுவதுபோல தொடர்ந்து தீவிர வாந்தியவாதியாக கொஞ்ச நேரம் இருக்க நேரிடும். சிறிது நேரத்தில் எல்லாம் சரியாகிவிடும்.

    இது போல மாதத்திற்கு ஒரு முறை ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு தடவை சலூனில் முடி திருத்தம் செய்துகொண்டிருந்தபோது இப்படி நேர்ந்து பாதியிலேயே எழுந்து வெளியே வந்து ஆட்டோ பிடித்து நான்கு பில்டிங் தள்ளியிருக்கிற என் வீட்டில் இறங்கி பாக்கெட்டில் அகப்பட்டதை ட்ரைவரின் கையில் திணித்து வாஷ்பேசினை நோக்கி ஓடினேன்.

    இதை இப்படியே விட்டுவிட்டால் சரியாகாது என்று வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு கேஸ்ட்ரோஎண்ட்ராலஜிஸ்ட் டாக்டரை அணுகினேன். பிரச்சனையைக் கேட்டுவிட்டு ஒரு சில பரிசோதனைகளைச் செய்யவேண்டுமென்றார். நான் என் உடம்புக்குள்ளிருந்து ரத்தம் முதலான திரவப் பொருட்களை சாம்பிள் கொடுத்துவிட்டு அடுத்த நாள் அவரைப் பார்க்கப் போனேன். எல்லாம் சரியாகவே இருப்பதாக அறிவித்தார். பிறகு கொஞ்சம் கூட யோசிக்காமல் பக்கத்திலேயே ஒரு காது மூக்கு தொண்டை நிபுணர் இருப்பதாகவும் அவர் எனக்கு “க்யூப்ரிக் கோல்டு கலோரிக் டெஸ்ட்- என்று ஒன்றைச் செய்வார் என்றும் அறிவித்தார். கேட்பதற்கே கவர்ச்சிகரமாக இருக்கும் இந்தப் பரிசோதனை எதற்கு என்று கேட்டபோது அவர் சொன்னது: நாம் நிற்கும் போதும் நடக்கும்போதும் உடம்பை பேலன்ஸ் செய்வது நம் காதுகள்தாம். காதுக்குள் இன்ஃபெக்ஷன் ஆகி பேலன்ஸ் தவறினால் இது போல தலைசுற்றலோ, நடக்கும்போது தள்ளாடலோ ஏற்படும் என்றார்.

    இந்த க்ளினிக்-லிருந்து இரண்டு வீடுகள் தள்ளி  அந்த இளம் கா.மூ.தொ நிபுணரின் க்ளினிக் இருந்தது. அவரிடம் அப்பாயின்ட்மெண்ட் வாங்கிக்கொண்டு ரிஷப்ஷனில் உட்கார்ந்து சுவரில் “For Sale” என்று எழுதி மாட்டியிருந்த அவர் மனைவியின் தஞ்சாவூர் பெயிண்டிங்குகளை பார்த்தவாறே டாக்டர் செய்யப்போவது எந்த மாதிரியான டெஸ்ட் என்பதை யோசித்துக்கொண்டிருந்தேன். எவ்வளவு யோசித்தும் கிஞ்சித்தும் பிடிபடவில்லை. பிறகு நான் அந்த டாக்டரை சந்தித்தபோது என்னை அடுத்தநாள் காலை எட்டுமணிக்கு வயிற்றைக் காலியாக வைத்துக்கொண்டு  வரச்சொன்னார்.

    போனேன். இளம் நர்ஸ்கள் சகிதம் வந்த டாக்டர் என்னை அறை நடுவாந்திரம் இருந்த ஒரு படுக்கையில் ஒரு பக்கமாக ஒருக்களித்துப் படுக்கச் சொன்னார்.  பிறகு ஒரு பெரிய சிரிஞ்சை எடுத்தார். நர்ஸ்கள் ஒரு மினி குளிர்சாதனப் பெட்டியிலிருந்து சில ஐஸ்கட்டிகளை எடுத்து ஒரு ட்ரேயில் வைத்தார்கள். பனிக்கட்டி உருகி உருவாகிய நீரை சிரிஞ்சால் உறிஞ்சினார். பின்னர் கொஞ்சம் பொறுத்துக்கங்க என்று சொல்லிவிட்டு எனது வலது காதுக்குள் சிரிஞ்சை வைத்து பீய்ச்சினார். சிலீர் என்ற பனி நீர் காது ஜவ்வை முத்தமிட உடம்பு முழுக்க ஓடியது ஒரு மின்சாரச் சிலிர்ப்பு. உடலின் ஒவ்வொரு அணுவும் ஜில்லென்று கூச, அந்த உணர்வை எப்படிச் சொல்வது? “உச்ச மகிழ்வுக்கும் உச்ச வலிக்கும் அனுபவிப்பவனிடம் அடைமொழி இல்லை. மேலும் எம் வலி ஆகாது உம் வலி” என்று கல்யாண்ஜியின் கவிதை வரிகளை இந்த உணர்வுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

    இப்போது லேசான தலை சுற்றல் ஏற்பட்டு அறை மெதுவாகச் சுழல ஆரம்பிக்கும். டாக்டர் தன் கைக்கடிகாரத்தை பார்ப்பார். தலை சுற்றுகிறதா? எந்தத் திசையில் சுற்றுகிறது என்று கேட்பார். சரியாக இரண்டு நிமிடம் கழித்து தலை சுற்றுவது நிற்கும்.  டாக்டர் ஒரு தாளில் எதையோ குறித்துக் கொள்வார். பிறகு ஐந்து நிமிடம் எனக்கும் அவருக்கும், செவிலிகளுக்கும் ஓய்வு. பின்னர் எதிர் திசையில் ஒருக்களித்துப் படுக்கச் சொல்லிவிட்டு மீண்டும் சிரிஞ்ச், குளிர் நீர் உறிஞ்சல், இடது காதுக்குள் பீய்ச்சல். இப்போதும் தலை சுற்றல் ஏற்படும். ஆனால் முன்னர் ஏற்பட்டதற்கு எதிர் திசையில். சரியாக இரண்டு நிமிடம். பின்னர் நின்றுவிடும்.

    இரண்டு வெவ்வேறு திசைகளிலான, செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட தலைசுற்றல்களினால் தள்ளாடி இருக்கையில் அமர்ந்த என்னிடம் “பேலன்ஸ் சரியாத்தான் இருக்கு. எதுவும் ப்ராப்ளம் இல்லை” என்றார் டாக்டர். நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். இதுதான் க்யூப்ரிக்ஸ் கோல்ட் கலோரிக் டெஸ்ட்.

    கேஸ்ட்ரோ எண்டராலஜிஸ்ட் டாக்டரின் பிள்ளைதான் இந்த இளம் காது மூக்கு தொண்டை டாக்டர் என்று பின்னர் தெரிந்தது. அதன்பிறகு எனக்கும் அந்த பிரச்சனை சட்டென்று நின்றுவிட்டது.

     
  • சத்யராஜ்குமார் 6:00 pm on October 31, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    பலூன் 


    வம்சி சிறுகதைப் போட்டிக்காக!


    நாற்றம் குடலைப் புரட்டியது. விரல் நரம்புகள் அறுந்து விழும் போல வலி. இந்த கண்றாவியின் பெயர் ட்யூனா என்றார்கள். ஆழக்கடலில் அகப்படும் ஏதோ ஒரு மீனின் வகை. பதினொரு மணிக்குள் இதை மாவு மாதிரி பிசைந்து வைக்க வேண்டும்.

    “சுமிதா, முடிஞ்சதா?” – சப்வே துரித உணவகத்தின் மேனேஜர் மேத்யூஸ் ஆங்கிலத்தில் கத்தினான்.

    தாங்க முடியாத நாற்றம் குமட்டியதில் அவனுக்கு பதில் சொல்லக் கூட முடியவில்லை. எதுவோ ஒன்று வயிற்றினடியிலிருந்து கிளம்பி, தொண்டைக்குழி அருகே வந்து அடைத்துக் கொண்டு மொத்தமாய் வெளியே வர எத்தனித்தது.

    பிசையும் ட்யூனாவை அப்படியே போட்டு விட்டு, பாத்ரூமுக்குள் ஓடினேன். உவ்வேஏஏய் என்று வாஷ்பேசின் பூராவும் வெள்ளையும், மஞ்சளுமான திரவமாய் தெறித்தேன். கண்களிரண்டிலும் குட்டை மாதிரி நீர் நிரம்பியது. வயிற்றைப் புரட்டிப் போட்டதால் மட்டுமல்ல, அழுகை பீறிட்டெழுந்ததாலும்தான்.

    வாயைக் கொப்பளித்து, முகத்தைக் கழுவின பின் – பாத்ரூமை விட்டு வெளியே வந்த போது, மேத்யூஸ் முறைத்துக் கொண்டு நின்றிருந்தான். படபடப்போடு கத்தினான். “இன்னும் அரை மணி நேரத்தில் லஞ்ச் கூட்டம் அலை மோதும். தயாரா இருக்க வேண்டாமா? என்ன பண்ணிட்டிருக்கே நீ?”

    அவன் முன்னால் அழுது விடுவேன் போலிருந்தேன். “என்னால முடியலை மேத்யூஸ். இந்த ட்யூனா பிசையற வேலையை மட்டும் தயவு செஞ்சு எனக்குத் தராதே.”

    ஒரு பெரிய மூச்சிறைப்போடு கோபமாய் ஏதோ சொல்ல வந்தவன், விவாதித்துக் கொண்டிருந்தால் இப்போதைக்கு வேலையாகாது என்று முடிவெடுத்தவன் போல மிஷேலைக் கூப்பிட்டான்.

    மிஷேல் கறுப்பி. ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண். அலட்சியமாய் பிசைய ஆரம்பித்தாள். எனக்கு குடலைப் புரட்டும் நாற்றம் அவளுக்கு நறுமணம் போல தெரிகிறது. பிசைந்து முடித்து கையைக் கழுவப் போகையில், கையில் ஒட்டியிருக்கும் மீன் மாவை ஆசையாய் நக்கவும் செய்வாள்.

    மிஷேல் செய்து கொண்டிருந்த வேலையை இப்போது நான் செய்ய வேண்டும். பெரிய பெரிய ட்ரேக்களில் அடுக்கி வைக்கப் பட்ட ரொட்டித் துண்டுகளை இயந்திர அடுப்பின் ரேக்குகளில் சொருகி சொருகி பதமாய் வெளியே எடுக்க வேண்டும்.

    ட்யூனா பிசைவது குடலைப் புரட்டும் கஷ்டம் என்றால் இது வேறு மாதிரி உயிரை வாங்குகிறது. அரிசி சாப்பிட்டு வளர்ந்த உடம்பில் அவ்வளவு வலு இல்லை. ட்ரேயை உயரமாய் தூக்கித் தூக்கி சீக்கிரத்திலேயே தோள்களிரண்டிலும் வலியெடுக்க ஆரம்பித்தது.

    ரொட்டித் துண்டுகளை அடுக்குகிற போது ஒரு துண்டு தவறி தரையில் விழுந்ததற்கு முந்தா நாள் மேத்யூஸ் அப்படித் திட்டித் தீர்த்தான். ஆங்கிலம் கூட சரியாகப் பேசத் தெரியாத இந்த மெக்சிகனிடம் சில டாலர்களுக்காக என்னவெல்லாம் பேச்சுக் கேட்க வேண்டியிருக்கிறது.

    துரித உணவக வேலை என்பது ஸாண்ட்விச் சாப்பிடுகிற மாதிரி சுலபமாக இருக்கும் என்று நினைத்தது எவ்வளவு மடத்தனம். வெங்காயம் நறுக்கிப் போடுவதைத் தவிர வேறெதுவும் என்னால் முடியவில்லை.

    சேகரை கல்யாணம் பண்ணிக் கொண்டு வருகையில் பிரமித்துப் பார்த்த அமெரிக்கா வண்ணங்கள் நிரம்பிய மிகப் பெரிய பலூன் என்பது இப்போது புரிகிறது. ஆறே மாதத்தில் அது உடைந்து கிழிந்து அதன் உட்புற அசிங்கங்களை பார்க்க நேரிடும் என்று கற்பனை கூட செய்யவில்லை.

    முதன் முதலாக ஏர்போர்ட்டிலிருந்து வருகையில் – பெரிய பெரிய கட்டிடங்களையும், அகன்ற நெடுஞ்சாலைகளையும், அதில் தலை விளக்குகள் எரிய வரிசை கட்டி ஓடும் கார்களையும் குழந்தை மாதிரி பார்த்து பிரமித்துக் குதூகலித்தது இன்னும் மறக்கவில்லை.

    வீட்டு வாசலில் ஜம்மென்று ராஜாத்தி மாதிரி நின்றிருந்தது பி.எம்.டபுள்யூ கார். சமீபத்தில்தான் சினிமா நடிகை ஶ்ரீஷா வாங்கினார் என்று ஒரு வார இதழில் படித்தது ஞாபகம் வந்தது.

    கோட்டை மாதிரி வீடு. ஏழு படுக்கையறை. நாலு பாத்ரூம். இது சொந்த வீடு. இந்த வீட்டுக்கு நான்தான் மகாராணி. சந்தோஷத்தில் திக்குமுக்காடி ஹால் நடுவில் சேகரை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்தது அடிக்கடி கனவில் வரும்.

    அப்புறம் வாடைக் காற்றுக்கு இதமாய் சேகரை உரசிக் கொண்டே நயாகரா, நியூயார்க், க்ரேண்ட் கேன்யான் என்று சுற்றி வந்த ஹனிமூன். அவனுடைய வெகேஷன் முடிந்ததும், தேனிலவு பொசுக்கென்று முடிந்து விட்டது.

    ஆபிசுக்கு இறக்கை கட்டிக் கொண்டு பறந்தான். ராத்திரி ஆசையாய் அவனை கட்டியணைக்கும் போதுதான் ப்ளாக் பெர்ரி ஃபோனில் அலுவலக அழைப்பு வரும். லேப்டாப்பைத் திறந்து வி.பி.என் குகைக்குள் புகுந்தானென்றால் எப்போது மீண்டு வந்து படுக்கிறான் என்பதே தெரியாது. ப்ரொடக்’ஷன் சப்போர்ட்டாம்.

    “சுமிதா, கல்யாணம் முடிவானதும் ரெண்டு சம்பளம் வரும்ங்கிற நம்பிக்கையில்தான் வீடு வாங்கினேன். நீயும் வேலைக்குப் போனால்தான் வீட்டுக் கடன், கார் கடன் எல்லாம் கட்ட முடியும்.”

    வேலை பார்க்க அனுமதி அட்டை கிடைப்பதற்குள் சாஃப்ட்வேர் டெஸ்ட்டிங் க்ராஷ் கோர்ஸ் அனுப்பி வைத்தான். மென்பொருள் துறையில்தான் கொஞ்சம் காசு பார்க்க முடியும். என்னதான் டெஸ்ட்டிங் சுலபம் என்று எல்லோரும் சொன்னாலும், எம். ஏ வரலாறு படித்த மண்டையில் இதெல்லாம் ஏறுவேனா என்றது. படிக்கக் கட்டிய பணம் போனதுதான் மிச்சம். நாலு இண்ட்டர்வியூவில் உளறிக் கொட்டிய பின், “எனக்கு சாப்ஃட்வேர் வராது சேகர்.” என்று அழுதேன்.

    சப்வே கடை எடுத்து நடத்தும் வட இந்திய நண்பர் மூலமாக இந்த வேலையை பிடித்துக் கொடுத்தான். இந்த வேலையின் கஷ்ட நஷ்டம் பற்றி கண்ணீல் நீர் முட்ட சேகரிடம் சொல்ல முயன்றால், “தயவு செஞ்சு வேலையை விட்டுடறேன்னு சொல்லிடாதே சுமிதா. ஏற்கெனவே ராத்திரி பகல், சனி, ஞாயிறுன்னு பார்க்காம வேலை பார்த்துட்டிருக்கேன். வீட்டுக் கடன் முடியற வரைக்கும் ரெண்டு பேருமே கஷ்டப்பட்டுத்தான் ஆகணும்.”

    வேலை நாளில் சப்வேயில் உழன்றால், லீவு நாளில் அந்த நாலடுக்கு, ஏழு படுக்கையறை மாளிகைக்கு வேக்வம் போட்டு தாவு தீர்கிறது. ஆபிஸ் வேலை என்று சேகர் நழுவி விடுகிறான். முதலில் பார்த்து பிரமித்த அதே விஸ்தாரமான வீடு இப்போது எரிச்சலூட்டுகிறது.

    போதாக் குறைக்கு வீட்டைச் சுற்றி இருக்கும் லான் தரையில் வாரா வாரம் புல் வெட்ட வேண்டும். புல் கொஞ்சம் தாறு மாறாய் வளர்ந்து விட்டால், கம்யூனிட்டி அழகு கெடுவதாக இருநூறு டாலர் அபராதம் விதித்து சிவப்பு நோட்டீஸ் அனுப்புகிறார்கள்.

    போன மாசம் லான் சமன்படுத்தும் போது, அடிவயிற்றில் சளீரென்று ஒரு மின்னல் தெறித்து, முதல் முதலாய் உருவான கரு கலைந்ததைப் பற்றி ஊருக்கு ஃபோன் பேசிய போது அம்மாவிடம் சொல்லவே இல்லை. சொன்னால் அம்மா அதிர்ச்சியில் ஆடிப் போவாள்.

    அவ்வப்போது ஒரு சில வாரக் கடைசிகளில் சேகருடைய நண்பர்களுடன் பாட்லக் என்ற பெயரில் கூட்டாஞ்சோறு! வெளியே ஒப்புக்கு சிரித்து கொண்டாடுகிற மாதிரி நடித்தாலும், இதற்கு வேறு தனியாய் சமைக்கணுமா என்று அயர்ச்சியாய் இருக்கும்.

    லஞ்ச் நேரம் முழுவதும் கால் கடுக்க நின்று ஸாண்ட்விச் கட்டிக் கொடுக்கும் வேலை இயந்திரத்தனமாய் நடந்தது. நாலு மணிக்குத்தான் அப்பாடா என்று மூச்சு வாங்க முடிந்தது.

    மேத்யூஸ் கூப்பிட்டு டாலர்களைக் கவரில் போட்டுக் கொடுத்தான். இன்றைக்கு சம்பள நாளா என்ன?

    “சுமிதா, ஐயாம் ஸாரி. உன்னை விட கொஞ்சம் வலுவான, துடிப்பான ஆள் வேணும். சம்பளக் கணக்கை செட்டில் பண்ணியிருக்கேன்.”

    என் கண்கள் மனசுக்குக் கட்டுப்படாமல் சட்டெனத் தளும்பியது. அதை அவனிடம் காட்டிக் கொள்ள விருப்பமின்றி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு கடையை விட்டு அகன்றேன்.

    வீட்டில் சேகர் கடுப்போடு உட்கார்ந்திருந்தான். ராத்திரி பூராவும் என்னிடம் பேசவே இல்லை. இந்நேரம் இருபது முப்பது பேரிடம் எனக்கு அடுத்த வேலை கிடைப்பதற்காக போன் பேசியிருப்பான். காலையிலும் ஒரு வார்த்தை கூட சொல்லிக் கொள்ளாமல் அலுவலகம் கிளம்பிப் போய் விட்டான்.

    பனிரெண்டு மணி நேரமாய் யாரிடமும் வாயைத் திறந்து பேச முடியாமல் மவுனமாய் இருப்பதே பைத்தியம் பிடிக்க வைத்து விடும் போலிருக்கிறது.

    கார்ட்லெஸ் போன் எடுத்து இந்தியாவுக்கு எண்களை அழுத்தினேன். மறுபக்கம் அப்பாவின் குரல் கேட்டது. “சுமிதா, எப்படி இருக்கேம்மா?”

    “நல்லாருக்கேம்பா” என்ற சம்பிரதாயமான பொய்யைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்.

    “நீ அனுப்பின ஃபோட்டோ, விடியோ எல்லாம் தங்கராசு இப்பதான் டிவிடில போட்டுக் காட்டினாம்மா. ரொம்ப நல்லா இருந்துச்சு. எம்மாம் பெரிய வீடுன்னு பக்கத்து வீட்டு மணியகாரர் வாயைப் பிளந்தாரு. அக்கா பிஎம்டபுள்யூவா வெச்சிருக்கான்னு காலேஜுல படிக்கிற சபரீசுப் பையன் ஆச்சரியமாக் கேட்டான். எப்படியோ நாங்க ஆசைப்பட்டபடி காரு பங்களாவோட அமெரிக்காவுல ஒரு சொகுசான வாழ்க்கை உனக்கு ஆத்தா புண்ணியத்தில் அமைஞ்சிருச்சு. நேர்த்திக் கடன் மட்டும் இன்னும் பாக்கி இருக்கம்மா. ஒரு வருசம் நல்லபடியாப் போகட்டும்ன்னுதான் காத்திருந்தேன். அம்மனுக்கு நேர்ந்து விட்ட நம்ம லட்சுமி ஆட்டை அடுத்த வாரம் கோயில்ல பலி குடுக்கலாம்ன்னு இருக்கோம்.”

    “விட்ருங்கப்பா. ஒரு தடவை பலி குடுத்தது போதும்.” என்றேன். ■

    - சத்யராஜ்குமார்

     
c
compose new post
j
அடுத்த இடுகை/அடுத்த மறுமொழி
k
previous post/previous comment
r
reply
e
திருத்து
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel
Follow

Get every new post delivered to your Inbox.

Join 25 other followers