விகடனில் பரிசு பெற்ற கதை இது. 18 ஜனவரி 1998-ல் வெளியானது. இந்த மாதிரி குட்டிக் கதை வடிவத்தை குமுதம்தான் பிரபலமாக்கியது. Cheap Twist- உடன் பலரும் எழுதி வெளி வர ஆரம்பித்ததால் இவ்வடிவத்துக்கான மரியாதை குறைந்தது. இருந்தாலும் அவ்வப்போது பிரபல எழுத்தாளர்களை இந்த சைசில் எழுத வைத்து வெளியிடுவார்கள். இந்த சைசிலும் தரம் காட்ட முடியும் என்று அவர்களில் சிலர் நிரூபிப்பார்கள்.

இக்கதை பற்றி சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் கரு. தமிழ் வார இதழ்கள் நடத்தும் கதைப் போட்டிகளுக்கான டிபிகல் கரு இது. இயல்பான Day-to-Day சம்பவங்களில் ஒரு சமூகப் பிரச்சனையை தொட வேண்டும் என்பதே இக்கதைகள் சமைப்பதற்கான எளிய சமையல் குறிப்பு.

இனி கதை…


கறை

பரிசு பெற்ற குட்டிக்கதை - விகடன் - 18 ஜனவரி 1998

அம்சா எரிமலைக் குழம்பின் உஷ்ணத்தோடு அவனைப் பார்த்தாள். இன்னமும் அவன் அந்த வழியலான சிரிப்பை உதட்டில் தக்க வைத்திருந்தான்.

” என்ன அம்சா, முறைக்கறே ? “

” செருப்பைக் கழட்டி அடிக்காம இருக்கேனேன்னு சந்தோஷப்படு. கடைக்கு வந்தமா… சாமானை வாங்கினமான்னு போய்ட்டே இரு. உம் மூஞ்சி அழகா இருக்கு… கண்ணு அழகா இருக்குன்னு அநாவசியக் குழையலெல்லாம் வெச்சுக்கிட்டின்னா பல்லைப் பேர்த்துருவேன். ஜாக்கிரதை. “

அவள் சீறியதும் அழுக்கு லுங்கியை மடித்துக் கொண்டு வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தபடி அங்கிருந்து அகன்றான்.

அம்சா பெட்டிக்கடைதான் வைத்திருக்கிறாள். ஆனால், அந்தச் சின்னக் கிராமத்துக்குள் அவளுக்கென்று தனிப்பட்ட மரியாதை இருக்கிறது. கணவன் ஒரு விபத்தில் இரு கால்களையும் பறி கொடுத்து படுத்த படுக்கையாய்க் கிடப்பவன். ஆனாலும் அவன்தான் அவள் உயிர். புருஷனுக்கான அத்தனை பணிவிடைகளையும் முகம் கோணாமல் செய்வாள் அம்சா. அவளுடைய லட்சுமிகரமான மென்புன்னகைக்கு நிறைய வாடிக்கையாளர்கள் உண்டு. ஆனால் யாராவது சற்றே வழுக்கலாகப் பேச நினைத்தால் தீத்துண்டங்கள் தெறிக்கும்.

அவளைப் பற்றி நன்றாகவே தெரிந்திருந்தும் அய்யாக்கண்ணு எந்த தைரியத்தில் இன்றைக்குத் தப்பாகப் பேச முயன்றான் ? அம்சாவுக்குள் கேள்விப் பறவைகள் வட்டமடித்தன.

சற்று நேரத்தில் அங்கே வந்த கிருஷ்ணன் இரண்டு வில்ஸ் ஃபில்டர் வாங்கினான். பாக்கி சில்லறையை வாங்கும்போது அநாவசியமாக  அவள் கைகளை உரசினான். பிறகு கிசுகிசுப்பாகக் கேட்டான். ” கடை சாத்தினதுக்கப்புறம் ராத்திரி வீட்டுக்கு வர்றியா அம்சா ? “

அவன் பேசி முடிக்கும் முன் ‘பளீர்’ என்று அறைந்தாள். அவன் கன்னத்தை தடவிக் கொண்டே வேகமாக அங்கிருந்து அகன்றான்.

என்ன ஆயிற்று எல்லோருக்கும் ?

குழப்பமாக அம்சா உட்கார்ந்திருக்க, வாத்தியார் பரமசிவம் வந்தார். சாக்பீஸ் பெட்டி ஒன்றை வாங்கினார். கண்ணியமான மனிதர். இவரிடம் தன் குழப்பத்தை சொல்லிப் பார்க்கலாமா ?

பரமசிவம் அம்சாவின் ப்ரச்சனையைக் கேட்டு விட்டு, சில விநாடிகள் யோசித்தார். சட்டென தெளிவானார்.

” நேத்திக்கு வரைக்கும் உன் கிட்டே ஒரு பயபக்தியோட இருந்த அவங்க திடீர்ன்னு இன்னிக்கு மட்டும் ஏன் அப்படிப் பேசினாங்கன்னு எனக்கு இப்பப் புரிஞ்சு போச்சு. ” என்றார்.

அம்சா அவரையே பார்க்க, அவர் தொடர்ந்தார்.

” இந்தப் புத்தகத்தை நீ கடையில் தொங்க விட்டா அவனுக அப்படித்தான் பேசுவாங்க. எழுதப் படிக்கத் தெரியாத நீ வழக்கமா விக்கிற வாரப் பத்திரிகைகளோட இந்த ஆபாசப் புத்தகத்தையும் சாதாரண புத்தகமா நினைச்சு பப்ளிக்கா கடையில் தொங்க விட்டதால, ‘இத்தனை நாள் நெருப்பா இருந்த அம்சா பனிக்கட்டியா மாறிட்டா போலிருக்கு’ன்னு அந்தப் பசங்க இதை ஒரு பச்சை சமிக்ஞையா எடுத்துக்கிட்டாங்க. “

அவமானத்தில் குறுகிப் போன அம்சா அந்தப் புத்தகத்தை சுக்கல் சுக்கலாகக் கிழித்துப் போட்டு விட்டு, தான் படிப்பறிவில்லாத தற்குறியாக இருந்து விட்டதை எண்ணி அழ ஆரம்பித்தாள்.

Singaporeசிங்கப்பூரின் சுற்றுலா மையங்களான ஜூராங் பறவைகள் பூங்கா, விலங்கியல் பூங்கா, Esplanade இன்னபிற இடங்களை லேசாய் ஒதுக்கிவிட்டு சென்டோஸா பற்றி சொல்லிவிடுகிறேன். சென்டோஸா, சிங்கப்பூரை ஒட்டியுள்ள ஒரு தம்மாத்துண்டு தீவு. பசுமைப் போர்வையொன்றை போர்த்திக்கொண்டு மிக அமைதியாய் கிடக்கும் சென்டோஸாவுக்கு சிங்கப்பூர் மெளண்ட் பேபரிலிருந்து கேபிள் காரில் போகலாம். அல்லது ஹார்பர் ஃப்ரண்ட்-லிருந்து விவோசிடி ஸ்டேஷன் மோனோரயில் மூலம் பயணிக்கலாம். வேறு சில பயண மார்க்கங்களும் உண்டு. மழை பெய்கிற அன்று சென்டோஸா செல்வது உசிதமல்ல என்று சொன்னார்கள். சென்டோஸா போனபிறகு மழை பெய்தால் என்ன செய்வது? அதுதான் நடந்தது. ஆனால் மழையில் நனைந்த சென்டோஸா-வின் அழகு நிச்சயம் மற்ற நாட்களில் பார்க்கக் கிடைக்காது. சென்டோஸாவை சுற்றிப்பார்க்க ஒரு நாள் முழுவதும் வேண்டும்.

தீவுக்குள்ளேயே இருக்கும் மூன்று பேருந்து சேவைகள் (சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் லைன்ஸ்) விரும்புகிற இடத்துக்கு கொண்டுபோய் விட்டுவிடுகிறது. எங்களுக்குக் கிடைத்த நேரத்தில் Under Water world மற்றும் Dolphin Lagoon மட்டுமே பார்க்க முடிந்தது. வாட்டர் வேர்ல்ட்டில் ஒரு இருபதடி தரைக்கு கீழே படி இறங்கினால் தலைக்கு மேலே ஒரு மெகா சைஸ் பரந்த கண்ணாடி தொட்டிக்குள் சிறியதும் பெரியதுமாய் நிறைய மீனினங்களும் நீந்துகின்றன. அது தவிர ஒரு பொதுவான அக்வேரியத்தில் கலர் கலராய் கடல் ஜீவராசிகள். வாட்டர் வேர்ல்டு ரொம்ப எதிர்பார்த்த அளவு இருந்ததா என்று கேட்டால் சொல்லத்தெரியவில்லை. ஆனால் சென்டோஸா-வின் ஒரு கவர்ச்சிகரமான அம்சம் என்று நிச்சயம் சொல்லலாம். அ.வா.வே-க்கு வெளியே 6 டாலர் கொடுத்தால் இரண்டு மலைப் பாம்புகளை கழுத்தில் போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். அப்புறம் டால்பின் லகூன் சென்று ரொம்ப நேரம் காத்திருந்து, டால்பின்கள் ஒரு சின்னப்பெண் சொல்வதையெல்லாம் கேள்வி கேட்காமல் செய்வதைப் பார்த்தோம். ஸிலோஸா என்ற இரண்டு கிலோமீட்டர் நீள கடற்கரை இன்னொரு அழகான இடம்.

சென்டோஸா-வில் Songs of the sea, Merlion என்று இன்னும் நிறைய விஷயங்களை பார்க்காமல் திரும்பியது வருத்தம்தான். அடுத்த முறை அதிர்ஷ்டம் இருக்கிறதா பார்ப்போம். இங்கேயிருக்கிற மற்ற டூரிஸ்ட் அட்ராக்ஷன்களைப் பற்றி விவரமாகத் தெரிந்து கொள்ள இங்கே கிளிக்கலாம்.

லிட்டில் இந்தியா-வுக்குள் நுழைந்ததும் சிங்கப்பூரின் முகம் சரேலென்று மாறிவிடுகிறது. தென்னிந்திய உடைகள். கடைகள். தமிழில் பெயர் பலகைகள். சென்னையின் ஒரு பகுதிக்குள் நுழைந்ததுபோல் ஒரு nativity உணர்வு வந்துவிடுகிறது. வார நாட்களில் சோம்பலாய்க் காணப்படும் தெருக்கள், வார இறுதியில் திருவிழா மாதிரி ஆகிவிடுகிறது. சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள், அவர்களது Singaporeஉறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்க்க கூடுகிற கூட்டம்தான்.  Money Transfer அலுவலகங்களில் ஊருக்குப் பணம் அனுப்ப வரிசை நீளமாய்க் காத்திருக்கிறது. அர்ஜூனரு வில்லு அரிச்சந்த்ரன் சொல்லு.. என்று ஒலி பெருக்கியில் பாடல் முழங்குகிறது. சி. ஒ. சி. வி -2-ல் குறிப்பிட்டபடி நிறைய இந்திய உணவு விடுதிகள். அது தவிர துணிக்கடைகள், கலைப்பொருள்கள், அரிசி, பருப்பு, வெங்காயம், தக்காளி, கரம் மசாலா என்று எங்கும் இந்திய மயம். இந்திய மணம்.

லிட்டில் இந்தியாவின் மிக முக்கிய அட்ராக்ஷன் செராங்கூன் ரோட்டிலுள்ள முஸ்தபா ப்ளாஸா. இது ஒரு 24 மணி நேர ஷாப்பிங் காம்ப்ளக்ஸ். எளிதில் புரிய வைக்க இதை சிங்கப்பூரின் சரவணா ஸ்டோர்ஸ் என்று சொன்னால் முதலாளி கோபித்துக்கொள்வாரா என்று தெரியவில்லை. ஆனால் அதைவிட 10 மடங்கு இருக்கிற இந்த மெகா ஸ்டோரில் சிங்கப்பூர் விசா தவிர மற்றவை எல்லாம் கிடைக்கும் என்று யாரோ சொன்னார்கள். இது தவிர முஸ்தபாவிலிருந்து பொடி நடை தூரத்தில் நரஞ்சன் ஸ்டோர் (எல்லோரும் ஏன் இதை நிரஞ்சன் என்று அழைக்கிறார்கள் என்று புரியவில்லை) என்று ஒரு சீக்கியரின் கடையில் கொஞ்சம் சல்லிசாக மொபைல் ஃபோன்கள், டிஜிட்டல் கேமராக்கள் இத்யாதிகளின் விற்பனை தூள் பறக்கிறது.

ஆக லிட்டில் இந்தியா சிங்கப்பூரின் இந்திய இதயம்.