அண்மைய மாற்றங்கள் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • சத்யராஜ்குமார் 6:00 pm on October 31, 2011 நிரந்தர பந்தம் | பதில்  

    பலூன் 


    வம்சி சிறுகதைப் போட்டிக்காக!


    நாற்றம் குடலைப் புரட்டியது. விரல் நரம்புகள் அறுந்து விழும் போல வலி. இந்த கண்றாவியின் பெயர் ட்யூனா என்றார்கள். ஆழக்கடலில் அகப்படும் ஏதோ ஒரு மீனின் வகை. பதினொரு மணிக்குள் இதை மாவு மாதிரி பிசைந்து வைக்க வேண்டும்.

    “சுமிதா, முடிஞ்சதா?” – சப்வே துரித உணவகத்தின் மேனேஜர் மேத்யூஸ் ஆங்கிலத்தில் கத்தினான்.

    தாங்க முடியாத நாற்றம் குமட்டியதில் அவனுக்கு பதில் சொல்லக் கூட முடியவில்லை. எதுவோ ஒன்று வயிற்றினடியிலிருந்து கிளம்பி, தொண்டைக்குழி அருகே வந்து அடைத்துக் கொண்டு மொத்தமாய் வெளியே வர எத்தனித்தது.

    பிசையும் ட்யூனாவை அப்படியே போட்டு விட்டு, பாத்ரூமுக்குள் ஓடினேன். உவ்வேஏஏய் என்று வாஷ்பேசின் பூராவும் வெள்ளையும், மஞ்சளுமான திரவமாய் தெறித்தேன். கண்களிரண்டிலும் குட்டை மாதிரி நீர் நிரம்பியது. வயிற்றைப் புரட்டிப் போட்டதால் மட்டுமல்ல, அழுகை பீறிட்டெழுந்ததாலும்தான்.

    வாயைக் கொப்பளித்து, முகத்தைக் கழுவின பின் – பாத்ரூமை விட்டு வெளியே வந்த போது, மேத்யூஸ் முறைத்துக் கொண்டு நின்றிருந்தான். படபடப்போடு கத்தினான். “இன்னும் அரை மணி நேரத்தில் லஞ்ச் கூட்டம் அலை மோதும். தயாரா இருக்க வேண்டாமா? என்ன பண்ணிட்டிருக்கே நீ?”

    அவன் முன்னால் அழுது விடுவேன் போலிருந்தேன். “என்னால முடியலை மேத்யூஸ். இந்த ட்யூனா பிசையற வேலையை மட்டும் தயவு செஞ்சு எனக்குத் தராதே.”

    ஒரு பெரிய மூச்சிறைப்போடு கோபமாய் ஏதோ சொல்ல வந்தவன், விவாதித்துக் கொண்டிருந்தால் இப்போதைக்கு வேலையாகாது என்று முடிவெடுத்தவன் போல மிஷேலைக் கூப்பிட்டான்.

    மிஷேல் கறுப்பி. ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண். அலட்சியமாய் பிசைய ஆரம்பித்தாள். எனக்கு குடலைப் புரட்டும் நாற்றம் அவளுக்கு நறுமணம் போல தெரிகிறது. பிசைந்து முடித்து கையைக் கழுவப் போகையில், கையில் ஒட்டியிருக்கும் மீன் மாவை ஆசையாய் நக்கவும் செய்வாள்.

    மிஷேல் செய்து கொண்டிருந்த வேலையை இப்போது நான் செய்ய வேண்டும். பெரிய பெரிய ட்ரேக்களில் அடுக்கி வைக்கப் பட்ட ரொட்டித் துண்டுகளை இயந்திர அடுப்பின் ரேக்குகளில் சொருகி சொருகி பதமாய் வெளியே எடுக்க வேண்டும்.

    ட்யூனா பிசைவது குடலைப் புரட்டும் கஷ்டம் என்றால் இது வேறு மாதிரி உயிரை வாங்குகிறது. அரிசி சாப்பிட்டு வளர்ந்த உடம்பில் அவ்வளவு வலு இல்லை. ட்ரேயை உயரமாய் தூக்கித் தூக்கி சீக்கிரத்திலேயே தோள்களிரண்டிலும் வலியெடுக்க ஆரம்பித்தது.

    ரொட்டித் துண்டுகளை அடுக்குகிற போது ஒரு துண்டு தவறி தரையில் விழுந்ததற்கு முந்தா நாள் மேத்யூஸ் அப்படித் திட்டித் தீர்த்தான். ஆங்கிலம் கூட சரியாகப் பேசத் தெரியாத இந்த மெக்சிகனிடம் சில டாலர்களுக்காக என்னவெல்லாம் பேச்சுக் கேட்க வேண்டியிருக்கிறது.

    துரித உணவக வேலை என்பது ஸாண்ட்விச் சாப்பிடுகிற மாதிரி சுலபமாக இருக்கும் என்று நினைத்தது எவ்வளவு மடத்தனம். வெங்காயம் நறுக்கிப் போடுவதைத் தவிர வேறெதுவும் என்னால் முடியவில்லை.

    சேகரை கல்யாணம் பண்ணிக் கொண்டு வருகையில் பிரமித்துப் பார்த்த அமெரிக்கா வண்ணங்கள் நிரம்பிய மிகப் பெரிய பலூன் என்பது இப்போது புரிகிறது. ஆறே மாதத்தில் அது உடைந்து கிழிந்து அதன் உட்புற அசிங்கங்களை பார்க்க நேரிடும் என்று கற்பனை கூட செய்யவில்லை.

    முதன் முதலாக ஏர்போர்ட்டிலிருந்து வருகையில் – பெரிய பெரிய கட்டிடங்களையும், அகன்ற நெடுஞ்சாலைகளையும், அதில் தலை விளக்குகள் எரிய வரிசை கட்டி ஓடும் கார்களையும் குழந்தை மாதிரி பார்த்து பிரமித்துக் குதூகலித்தது இன்னும் மறக்கவில்லை.

    வீட்டு வாசலில் ஜம்மென்று ராஜாத்தி மாதிரி நின்றிருந்தது பி.எம்.டபுள்யூ கார். சமீபத்தில்தான் சினிமா நடிகை ஶ்ரீஷா வாங்கினார் என்று ஒரு வார இதழில் படித்தது ஞாபகம் வந்தது.

    கோட்டை மாதிரி வீடு. ஏழு படுக்கையறை. நாலு பாத்ரூம். இது சொந்த வீடு. இந்த வீட்டுக்கு நான்தான் மகாராணி. சந்தோஷத்தில் திக்குமுக்காடி ஹால் நடுவில் சேகரை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்தது அடிக்கடி கனவில் வரும்.

    அப்புறம் வாடைக் காற்றுக்கு இதமாய் சேகரை உரசிக் கொண்டே நயாகரா, நியூயார்க், க்ரேண்ட் கேன்யான் என்று சுற்றி வந்த ஹனிமூன். அவனுடைய வெகேஷன் முடிந்ததும், தேனிலவு பொசுக்கென்று முடிந்து விட்டது.

    ஆபிசுக்கு இறக்கை கட்டிக் கொண்டு பறந்தான். ராத்திரி ஆசையாய் அவனை கட்டியணைக்கும் போதுதான் ப்ளாக் பெர்ரி ஃபோனில் அலுவலக அழைப்பு வரும். லேப்டாப்பைத் திறந்து வி.பி.என் குகைக்குள் புகுந்தானென்றால் எப்போது மீண்டு வந்து படுக்கிறான் என்பதே தெரியாது. ப்ரொடக்’ஷன் சப்போர்ட்டாம்.

    “சுமிதா, கல்யாணம் முடிவானதும் ரெண்டு சம்பளம் வரும்ங்கிற நம்பிக்கையில்தான் வீடு வாங்கினேன். நீயும் வேலைக்குப் போனால்தான் வீட்டுக் கடன், கார் கடன் எல்லாம் கட்ட முடியும்.”

    வேலை பார்க்க அனுமதி அட்டை கிடைப்பதற்குள் சாஃப்ட்வேர் டெஸ்ட்டிங் க்ராஷ் கோர்ஸ் அனுப்பி வைத்தான். மென்பொருள் துறையில்தான் கொஞ்சம் காசு பார்க்க முடியும். என்னதான் டெஸ்ட்டிங் சுலபம் என்று எல்லோரும் சொன்னாலும், எம். ஏ வரலாறு படித்த மண்டையில் இதெல்லாம் ஏறுவேனா என்றது. படிக்கக் கட்டிய பணம் போனதுதான் மிச்சம். நாலு இண்ட்டர்வியூவில் உளறிக் கொட்டிய பின், “எனக்கு சாப்ஃட்வேர் வராது சேகர்.” என்று அழுதேன்.

    சப்வே கடை எடுத்து நடத்தும் வட இந்திய நண்பர் மூலமாக இந்த வேலையை பிடித்துக் கொடுத்தான். இந்த வேலையின் கஷ்ட நஷ்டம் பற்றி கண்ணீல் நீர் முட்ட சேகரிடம் சொல்ல முயன்றால், “தயவு செஞ்சு வேலையை விட்டுடறேன்னு சொல்லிடாதே சுமிதா. ஏற்கெனவே ராத்திரி பகல், சனி, ஞாயிறுன்னு பார்க்காம வேலை பார்த்துட்டிருக்கேன். வீட்டுக் கடன் முடியற வரைக்கும் ரெண்டு பேருமே கஷ்டப்பட்டுத்தான் ஆகணும்.”

    வேலை நாளில் சப்வேயில் உழன்றால், லீவு நாளில் அந்த நாலடுக்கு, ஏழு படுக்கையறை மாளிகைக்கு வேக்வம் போட்டு தாவு தீர்கிறது. ஆபிஸ் வேலை என்று சேகர் நழுவி விடுகிறான். முதலில் பார்த்து பிரமித்த அதே விஸ்தாரமான வீடு இப்போது எரிச்சலூட்டுகிறது.

    போதாக் குறைக்கு வீட்டைச் சுற்றி இருக்கும் லான் தரையில் வாரா வாரம் புல் வெட்ட வேண்டும். புல் கொஞ்சம் தாறு மாறாய் வளர்ந்து விட்டால், கம்யூனிட்டி அழகு கெடுவதாக இருநூறு டாலர் அபராதம் விதித்து சிவப்பு நோட்டீஸ் அனுப்புகிறார்கள்.

    போன மாசம் லான் சமன்படுத்தும் போது, அடிவயிற்றில் சளீரென்று ஒரு மின்னல் தெறித்து, முதல் முதலாய் உருவான கரு கலைந்ததைப் பற்றி ஊருக்கு ஃபோன் பேசிய போது அம்மாவிடம் சொல்லவே இல்லை. சொன்னால் அம்மா அதிர்ச்சியில் ஆடிப் போவாள்.

    அவ்வப்போது ஒரு சில வாரக் கடைசிகளில் சேகருடைய நண்பர்களுடன் பாட்லக் என்ற பெயரில் கூட்டாஞ்சோறு! வெளியே ஒப்புக்கு சிரித்து கொண்டாடுகிற மாதிரி நடித்தாலும், இதற்கு வேறு தனியாய் சமைக்கணுமா என்று அயர்ச்சியாய் இருக்கும்.

    லஞ்ச் நேரம் முழுவதும் கால் கடுக்க நின்று ஸாண்ட்விச் கட்டிக் கொடுக்கும் வேலை இயந்திரத்தனமாய் நடந்தது. நாலு மணிக்குத்தான் அப்பாடா என்று மூச்சு வாங்க முடிந்தது.

    மேத்யூஸ் கூப்பிட்டு டாலர்களைக் கவரில் போட்டுக் கொடுத்தான். இன்றைக்கு சம்பள நாளா என்ன?

    “சுமிதா, ஐயாம் ஸாரி. உன்னை விட கொஞ்சம் வலுவான, துடிப்பான ஆள் வேணும். சம்பளக் கணக்கை செட்டில் பண்ணியிருக்கேன்.”

    என் கண்கள் மனசுக்குக் கட்டுப்படாமல் சட்டெனத் தளும்பியது. அதை அவனிடம் காட்டிக் கொள்ள விருப்பமின்றி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு கடையை விட்டு அகன்றேன்.

    வீட்டில் சேகர் கடுப்போடு உட்கார்ந்திருந்தான். ராத்திரி பூராவும் என்னிடம் பேசவே இல்லை. இந்நேரம் இருபது முப்பது பேரிடம் எனக்கு அடுத்த வேலை கிடைப்பதற்காக போன் பேசியிருப்பான். காலையிலும் ஒரு வார்த்தை கூட சொல்லிக் கொள்ளாமல் அலுவலகம் கிளம்பிப் போய் விட்டான்.

    பனிரெண்டு மணி நேரமாய் யாரிடமும் வாயைத் திறந்து பேச முடியாமல் மவுனமாய் இருப்பதே பைத்தியம் பிடிக்க வைத்து விடும் போலிருக்கிறது.

    கார்ட்லெஸ் போன் எடுத்து இந்தியாவுக்கு எண்களை அழுத்தினேன். மறுபக்கம் அப்பாவின் குரல் கேட்டது. “சுமிதா, எப்படி இருக்கேம்மா?”

    “நல்லாருக்கேம்பா” என்ற சம்பிரதாயமான பொய்யைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்.

    “நீ அனுப்பின ஃபோட்டோ, விடியோ எல்லாம் தங்கராசு இப்பதான் டிவிடில போட்டுக் காட்டினாம்மா. ரொம்ப நல்லா இருந்துச்சு. எம்மாம் பெரிய வீடுன்னு பக்கத்து வீட்டு மணியகாரர் வாயைப் பிளந்தாரு. அக்கா பிஎம்டபுள்யூவா வெச்சிருக்கான்னு காலேஜுல படிக்கிற சபரீசுப் பையன் ஆச்சரியமாக் கேட்டான். எப்படியோ நாங்க ஆசைப்பட்டபடி காரு பங்களாவோட அமெரிக்காவுல ஒரு சொகுசான வாழ்க்கை உனக்கு ஆத்தா புண்ணியத்தில் அமைஞ்சிருச்சு. நேர்த்திக் கடன் மட்டும் இன்னும் பாக்கி இருக்கம்மா. ஒரு வருசம் நல்லபடியாப் போகட்டும்ன்னுதான் காத்திருந்தேன். அம்மனுக்கு நேர்ந்து விட்ட நம்ம லட்சுமி ஆட்டை அடுத்த வாரம் கோயில்ல பலி குடுக்கலாம்ன்னு இருக்கோம்.”

    “விட்ருங்கப்பா. ஒரு தடவை பலி குடுத்தது போதும்.” என்றேன். ■

    - சத்யராஜ்குமார்

     
    • Sethu 6:24 பிற்பகல் on அக்டோபர் 31, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      nice one :)

    • Karthick 6:41 பிற்பகல் on அக்டோபர் 31, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      அருமையான சவுக்கடி! எங்கயோ கேட்டது போல உள்ளது.

    • REKHA RAGHAVAN 7:44 பிற்பகல் on அக்டோபர் 31, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      அருமை. நிச்சயம் பரிசு பெறும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

    • பினாத்தல் சுரேஷ் 8:38 பிற்பகல் on அக்டோபர் 31, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      ஒய்யாரக்கொண்டையாம் பிஎம்டபிள்யூவாம், உள்ளே இருக்கிறது ட்யூனா மாவாம்!

    • P.Gopalakrishnan 5:01 மு.பகல் on நவம்பர் 1, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      Dear Sri Sathyaraj Kumar,
      The last line of the story brought tears to my eyes. I am now worried about my near and dear who are abroad with own big bungalows and BMW. Thank you very much

      • சத்யராஜ்குமார் 6:51 மு.பகல் on நவம்பர் 1, 2011 நிரந்தர பந்தம் | பதில்

        உங்களைக் கவலைக்குள்ளாக்கியதற்கு வருந்துகிறேன். சில நிதர்சனங்களை கதையின் வாயிலாக சொல்ல நேர்கிறது. மற்றபடி உங்கள் அன்புக்குரியவர்கள் உட்பட நாங்கள் இங்கே மகிழ்ச்சியாகவே இருப்போம். உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    • பத்மா 8:01 மு.பகல் on நவம்பர் 1, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      அலங்கரிப்பது பரவாயில்லை, மிகைப்படுத்தி இருப்பதாக நினைக்கிறேன். வாழ்க்கை இத்தனை மோசமாக இல்லை:)

      • சத்யராஜ்குமார் 8:20 மு.பகல் on நவம்பர் 1, 2011 நிரந்தர பந்தம் | பதில்

        பத்மா, சொகுசுக்குப் பின்னாலிருக்கும் சிரமங்களை சொல்வதே நோக்கம். தவிர, இது முழுவதும் கற்பனையல்ல. என்னிடம் பகிரப்பட்ட அனுபவங்களே.

    • N Ulaganathaan 8:27 மு.பகல் on நவம்பர் 1, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      சத்யராஜ்குமார் சார், ஏன் எங்களை எல்லாம் பரிசு வாங்கவே விட மாட்டீங்களா? சிறு கதை போட்டின்னா ஓடி வந்து ஒரு நல்ல கதையை எழுதீடறீங்க. சூப்பர் சார். அருமையா இருக்கு.

      • சத்யராஜ்குமார் 8:37 மு.பகல் on நவம்பர் 1, 2011 நிரந்தர பந்தம் | பதில்

        உலகநாதன், பாராட்டுக்கு நன்றி. சிறுகதை எழுதுவது என்னை மகிழ்விப்பதால் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தால் உற்சாகமாய் பங்கு கொள்கிறேன்.

    • பத்மா 8:28 மு.பகல் on நவம்பர் 1, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      It depends on people, She could have taken it with interest and moved on to a different job and learnt new skills ( husband’s support) or made compromise to less comforts. happiness is state of mind, some how the last sentence seem too dramatic for me, perhaps thats needed for story .

      எதுவுமே இலவசம் இல்லை கொடுக்கவேண்டிய விலையையும் வாங்கவேந்டிய பொருளையும் அவரவரே தீர்மானிக்கிறார்கள்.

    • ஜெய் 9:59 மு.பகல் on நவம்பர் 1, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      எதார்த்தமான கதை.நிச்சயம் பரிசு பெறும்.
      வாழ்த்துக்கள்.

    • Sentil 5:38 மு.பகல் on நவம்பர் 2, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      Dear SRK,

      Excellent short story.

      Best Regards.

    • Peter 6:17 மு.பகல் on நவம்பர் 2, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      “விட்ருங்கப்பா. ஒரு தடவை பலி குடுத்தது போதும்.” என்றேன்.// really superb.

    • bandhu 3:23 பிற்பகல் on நவம்பர் 2, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      //“விட்ருங்கப்பா. ஒரு தடவை பலி குடுத்தது போதும்.” என்றேன்//
      what a nice touch!

    • arun 7:58 மு.பகல் on நவம்பர் 3, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      hello mr.sathiyaraj sir,
      உங்ககிட்ட கத்துக்க வேண்டியது ரொம்ப அதிகம் இருககு….. சார் நாங்க பார்க்காத, பார்க்கவும் விரும்பாத ஒரு அமெரிக்காவை சொல்கிறீர்கள்……. மகி நன்றி……….
      // “விட்ருங்கப்பா. ஒரு தடவை பலி குடுத்தது போதும்.” என்றேன். // மகி உருக்கமான வரிகள்…………………

    • sundaravadivelu.v 1:16 பிற்பகல் on நவம்பர் 3, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      colorful balloon… but with colorful pains

    • subhashree 1:51 பிற்பகல் on நவம்பர் 3, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      having 100% satisfaction of reading a good short story….most of the NRIs ..are leading the same life as sumitha’s…very sad…to some extent i will support Padma’s views.”.எதுவுமே இலவசம் இல்லை கொடுக்கவேண்டிய விலையையும் வாங்கவேந்டிய பொருளையும் அவரவரே தீர்மானிக்கிறார்கள்.’”….

      for sure u will win…jsk:))

      • சத்யராஜ்குமார் 6:42 பிற்பகல் on நவம்பர் 3, 2011 நிரந்தர பந்தம் | பதில்

        சுபாஶ்ரீ, நன்றி. பத்மாவின் கருத்துகளை நானும் ஆமோதிக்கிறேன். அவ்வளவு புரிதல்களோடு எல்லோரும் இருந்து விட்டால் இது போன்ற கதைகள் பிறக்காமல் போகும். :)

    • விஜய் 11:08 மு.பகல் on நவம்பர் 8, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      //“விட்ருங்கப்பா. ஒரு தடவை பலி குடுத்தது போதும்.” என்றேன்.//

      அருமை!

      நிறைய பேர் (தேசிகள்) ஸ்டாப் லாஸ் பண்ண தெரியாமல் வீண் பெருமைக்காக அப்படி செய்வதை பார்த்துள்ளேன். என்ன இருந்தாலும் அமேரிக்கா வாசம் அருமை தான், அங்கு வாழ தெரிந்திருந்தால். கைக்கு மேலே அளவிற்கு மேலே முழம் போடக்கூடாது!

    • chollukireen 11:49 பிற்பகல் on நவம்பர் 10, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      அங்கும், சிக்கனமாக, சமயத்தில் அவசியமென்றால், கிடைக்கும் பணிப்பெண்களிடம் பணம் கொடுத்து வேலை வாங்கிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.. தன் காலில் தான் நிற்பதற்கு எல்லாவிதத்திலும் பயிற்சி ஏற்பட்டு விடுகிறது. ஆரம்பத்தில் கஷ்டப்படுகிறவர்கள் கூட பழக்கமாகிவிட்டால் நம்நாட்டையே குறை சொல்லத் துவங்கி
      விடுகிறார்கள். விருப்பப்பட்டு, வேண்டுதல் செய்யும் காணிக்கைதான் இது.

    • Mo 10:35 மு.பகல் on December 4, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      சத்யா ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் வாழ்க்கைப் போராட்டத்தை கொஞ்சம் மிகைப்படுத்தி எழுதி இருக்கிறார். அதற்காக இப்படிதான் எல்லா இந்தியர்களும் மேலை நாடுகளில் வாழ்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது. சென்னையில் ஒரு சேரியில் வாழும் ஒரு குடும்பத்தின் கதையை படித்து விட்டு இப்படிதான் எல்லாரும் சென்னையில் வாழ்கிறார்கள் என்று எப்படி நாம் நினைக்க முடியாதோ அதே போல் தான் இதுவும். வாழ்க்கை ஒரு போராட்டம் தான், எங்கே இருந்தாலும்.

      • சத்யராஜ்குமார் 7:54 மு.பகல் on December 5, 2011 நிரந்தர பந்தம் | பதில்

        உங்கள் கருத்தைப் பகிர்ந்ததற்கு நன்றி. எல்லா அனுபவங்களும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அதனாலேயே எழுத்துக்கும், வாசிப்புக்குமான தேவை எழுகிறது.

  • காஞ்சி ரகுராம் 6:37 am on October 18, 2011 நிரந்தர பந்தம் | பதில்
    குறிச்சொற்கள்: அமேசான், அறிவியல், கண்டுபிடிப்பு, , காற்று, காற்றுபை, செல்ஃபோன், ஜெஃப் பெஜோஸ், மொபைல் ஃபோன், ஸ்மார்ட் ஃபோன்   

    காற்றடைத்த பையடா! 

    பேசும் வசதியுடன் மட்டும் பிறந்த செல்போன், இன்று பல வசதிகளைக் கொண்டு ஸ்மார்ட் ஃபோனாக வளர்ந்திருக்கிறது. ஆயிரங்கள் கொடுத்து வாங்கிய ஸ்மார்ட் போன் கீழே விழுந்து உடைந்தால் நம் மனதும் சுக்கு நூறாகாதா?

    கொஞ்சம் பழைய செய்திதான். என்றாலும் சொல்கிறேன். நம் ஸ்மார்ட் போனைப் பாதுகாக்க, அதில் காற்றுப் பைகளைப் பொருத்தலாம் என ஓர் அசாத்தியமான அல்லது அபத்தமான(!) யோசனையை மொழிந்து அதற்குக் காப்புரிமையையும் பெற்று விட்டார் அமேசான் நிறுவனத்தின் CEO ஜெஃப் பெஜோஸ்.

    இந்தப் பைகள் காரில் பொருத்தப்படும் ஸேஃப்டி ஏர் பேக் பொன்றவைதான். ஆனால் அவை நம்மைக் காக்கவே அன்றி காரைக் காக்க அல்ல. இவர் என்ன இதை உல்டா பண்ணியிருக்கிறார் என்று அந்தக் காப்புரிமையைப் படித்தால் மண்டை கிறுகிறுக்கிறது.

    கார் எதனுடனாவது மோதும் போது பைகளில் காற்றை நிரப்பி விடலாம். ஆனால் இங்கே போன் தரையில் மோதுவதற்கு முன்பே காற்றை நிரப்ப வேண்டும். அதற்கான வழிகளைப்  பட்டியலிடுகிறார்.

    கைரோஸ் கோப் (இதன் உதவியால்தான், iPhone போன்றவற்றை நாம் பக்கவாட்டில் திருப்பும் போது படங்களும் திரும்புகின்றன), கேமரா, புற ஊதா கதிர்கள், ராடார்… இவற்றில் ஓரிரண்டு அல்லது அனைத்தையும் பயன்படுத்தி, போனின் நகர்ச்சி, கோணம், பிற பொருள்களிடமிருந்து அதன் தூரம்… அனைத்தையும் கணக்கிட்டு “ஐயோ, நான் இப்போது விழுந்து கொண்டிருக்கிறேன்” என்று போனை உணரச் செய்ய வேண்டுமாம். (இப்பவே கண்ணைக் கட்டுதா?!)

    உடையப் போகும் போனைக் காக்க மூன்று வழிகளைக் குறிப்பிடுகிறார்.

    1. அழுத்தப்பட்ட காற்று அல்லது கார்பன் டையாக்சைடு மூலம் காற்றுப் பைகளை நிரப்பி மோதலைத் தவிர்க்கலாம்.

    2. ஸ்பிரிங்குகள் வெளிப்பட்டு போனுக்கு அடிபடாமல் காக்கலாம்.

    3. காஸ் ப்ரொபல்ஷன் மூலம் போனை மெதுவாக பத்திரமாக தரையிறங்க வைக்கலாம்.

    சில CEO-க்கள் பொழுது போகாமல் இது மாதிரி எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் HP-யின் CEO பர்சனல் கம்ப்யூட்டர் (PC)-களின் சகாப்தம் முடிந்து விட்டதாகவும் அதனால் தன் கம்பெனியில் அதன் தயாரிப்பை நிறுத்தப் போவதாகவும் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

    உலகெங்கும் தேவைக்கு அதிகமான PC-க்கள் ஏற்கனவே வாங்கப்பட்டு விட்ட நிலையில், மடிக் கணினிகளும் கணிசமாக சந்தையை ஆக்கிரமித்துவிட்ட நிலையில், இவர் கடையில் PC-க்களின் விற்பனை படுத்து விட்டது. அதனால் சகாப்தம் முடிந்து விட்டதாகக் கூறி, Tablet கம்ப்யூட்டர்களின் விற்பனையை முடுக்கி விடப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

    நாளை இந்த Tablet-களையும் காற்றுப் பைகள் கட்டிக் கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    இவையெல்லாம் நம் கையிருப்பைக் கரைத்து, அவர்களின் கஜானாக்களை பத்மநாப ஸ்வாமி அறைகளாக்கும் தந்திரங்களின்றி வேறென்ன?

     
  • சத்யராஜ்குமார் 8:55 pm on August 28, 2011 நிரந்தர பந்தம் | பதில்
    குறிச்சொற்கள்: கிரந்தம்   

    கிரந்தம் தவிர்! 

    சமீபத்தில் கிரந்தம் தவிர்த்து எழுதுவது குறித்த விவாதத்தை ட்விட்டரில் படிக்க நேர்ந்தது. ஒரு புனைவு எழுத்தாளனாக எழுத்தில் முற்றிலுமாக கிரந்தம் தவிர்ப்பது இயலாது என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதற்கு கிரந்த வார்த்தைகள் சொற்கள் முதலில் சமூகத்திலிருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும். இது ஒரு பிடி இருபத்தியிரண்டு நிலைமை.

    ஆனால், நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முந்தைய செய்தித்தாளில் சுருட்டித் தரப்பட்ட சுண்டலோ, பஜ்ஜியோ சாப்பிட நேர்ந்தால் – அப்போதிருந்த எத்தனையோ கிரந்தச் சொற்கள் இப்போது வழக்கொழிந்து போயிருப்பதை உணரலாம். எப்படி இது நிகழ்ந்தது? இது குறித்த ப்ரக்ஞை சிந்தனை மிகுந்தவர்கள் பேசும்போதும், எழுதும்போதும் வடிகட்டிய தமிழ் வார்த்தைகளை சொற்களை தொடர்ந்து உபயோகித்து பயன்படுத்தி வந்திருக்க வேண்டும்.

    ஆக முடிந்த வரை கிரந்தம் தவிர்ப்பதன் மூலம் ஓரளவு தமிழ் சுத்திகரிக்க்ப்படும் வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. ஆனால் கிரந்தம் தவிர்ப்பதில் உள்ள பிரதான தலையாய சிக்கல், தகுந்த மாற்றுச் சொற்களைப் பிரயோகித்து பயன்படுத்தி எழுதும் அளவு மொழி வளம் எல்லோருக்கும் இல்லை என்பதே ஆகும். அதற்குக் காரணம் மொழி அருவியாய்க் கொட்டும் சங்க இலக்கிய தமிழ் பொக்கிஷங்களை கருவூலங்களை ஆற அமர படித்து ரசிக்க தற்கால சந்ததியினர்க்கு பொறுமையில்லை அல்லது நேரமில்லை.

    இது தமிழ் படிக்க மட்டுமில்லை; எல்லா துறைகளுக்கும் பொருந்தும். அதனால்தான் இணையத்தில் இன்று எல்லாமே கூட்டு முயற்சியில் நடைபெறுகின்றன. எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன். உனக்குத் தெரிந்ததை நீ சொல்லு. இணைந்து அறிவு பெறுவோம். இணைந்து செயல்படுவோம்.

    அப்படித்தான் @kryes கிரந்தம் தவிர்க்க ட்விட்டரில் தினம் ஒரு சொல்லை இட ஆரம்பித்தார். படிக்க சுவாரஸ்யமாக ஆர்வமூட்டுவதாக இருந்தது. ஆனாலும் அவை ட்விட்டரின் நேரச் சுழலில் புதைந்து மறைந்து விடுவதைப் பார்த்து மெலிதான கவலை பிறந்தது.

    நினைத்த போது ஒரு கிரந்தச் சொல்லை உள்ளிட்டு அதற்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறியும் வசதி வேண்டும் என எண்ணினேன். அப்படி ஒன்று ஏற்கெனவே இருக்கிறதா என்று தேடிப்பார்த்துக் கிடைக்காததால், நாள்தோறும் அலுவலகத்துக்கு பஸ்ஸில் பேருந்தில் செல்லும் நேரத்தில் இந்த எளிய கருவியை உருவாக்கி – புல்வெளி.காம் தளத்தில் வெளியிட்டுள்ளேன்.

    @kryes இக்கருவி குறித்து பல யோசனைகளை சிந்தனைகளை வழங்கியுள்ளார். தினம் ஒரு சொல்லை இதில் இணைக்க தான் உதவ முடியுமென நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். @raghuji தளத்துக்கான தோற்றம், வடிவமைப்பில் தனது உதவிக்கரம் நீட்டினார்.

    தளத்தில் இதுகாறும் இல்லாத சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் உங்களுக்குத் தெரியுமெனில் அதை நீங்களே இணைக்கவும் வழியுண்டு. அடுத்த முறை நீங்கள் ஒரு பதிவு எழுதும்போது கிரந்த வார்த்தை உங்கள் எழுத்தில் வந்து விழுந்தால் அதற்கு மாற்று உண்டா என இங்கே ஒரு எட்டு வந்து பார்க்கலாம்.

     
    • TPKD / TBCD (@TPKD_) 10:03 பிற்பகல் on ஆகஸ்ட் 28, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      அருமையான முயற்சி..பாராட்டுகள்…வாழ்த்துகள்.

      இது கிரந்தம் இல்லாத வடமொழிச்சொற்களுக்கும் நீட்டித்தால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன் :-) )

    • amas32 10:43 பிற்பகல் on ஆகஸ்ட் 28, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்!
      amas32

    • PADMANABAN 11:37 பிற்பகல் on ஆகஸ்ட் 28, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      நல்ல பதிவு சத்யா…பெயர்ச் சொல் தவிர மற்ற இடங்களில் கிரந்தம் தவிர்க்கலாம் …. முயற்சி திரு வினையாக்கும்… கிரந்தம் தாண்டி விடலாம் அடுத்து ஆங்கில கலப்புக்கு என்ன செய்வது…..

    • Ravi 12:03 மு.பகல் on ஆகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      நல்ல முயற்சி. நானும் சில சொற்களைச் சேர்க்கத் தொடங்கி இருக்கிறேன்.

    • Balaraman 1:20 மு.பகல் on ஆகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      மிகவும் நல்ல முயற்சி! :)

      இந்தப் பதிவில் கீழ்க்கண்ட சொற்களையும் ‘அடித்து’ நொறுக்கவும்:

      ரசிக்க – விரும்ப
      யோசனைகளை – சிந்தனைகளை

      அப்புறம் ‘பஜ்ஜியோ’ என்பதை ‘பஃச்சியோ’ என்று எழுத ஊக்குவிக்கலாமா?!

      நானும் ‘புல்வெளி’யில் என்னால் முடிந்ததைச் செய்கிறேன், நன்றி!

    • சத்யராஜ்குமார் 6:08 மு.பகல் on ஆகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      @TPKD_ , amas32, PADMANABAN, Ravi, Balaraman உங்கள் ஆலோசனைகளுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    • Kannabiran Ravi Shankar (KRS) 8:46 மு.பகல் on ஆகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      //ஒரு புனைவு எழுத்தாளனாக எழுத்தில் முற்றிலுமாக கிரந்தம் தவிர்ப்பது இயலாது என்பது எனது தனிப்பட்ட கருத்து//
      :)
      ஓரளவு உண்மையே!
      முற்றிலும் தவிர்ப்பதற்குப் பதிலாக, இயன்ற வரை தவிர்க்க முனைவோம்! இதனால் நல்ல தமிழ்ச் சொற்கள் வழக்கொழியாமல் நிலைக்கும்!

      @ksrk & @raghuji – இந்தப் பணிக்கு என் மிகுந்த நன்றி!

      @TPKD_ , amas32, PADMANABAN, Ravi, Balaraman – உங்களால் இயன்ற அளவு சொற்களைச் சேருங்கள்! நண்பர்களிடையேயும் அறிமுகம் செய்யுங்கள்!

    • elavasam 9:27 மு.பகல் on ஆகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      சிந்தனை என்பதை யோசனை என்ற சொல்லின் மாற்றாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. சிந்தனை = thought, யோசனை = suggestion / idea இல்லையா?

      • சத்யராஜ்குமார் 10:07 மு.பகல் on ஆகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | பதில்

        பலராமனின் பின்னூட்டத்துக்குப் பின் மாற்றினேன். யோசனைக்கு உரிய மாற்றுச் சொல் யாரேனும் வழங்க வேண்டும்.

      • Kannabiran Ravi Shankar (KRS) 10:55 மு.பகல் on ஆகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | பதில்

        @elavasam
        யோசனை என்பதே தமிழ்ச் சொல் தான்! – ‘வழாமை ஓடி யோசனை நீண்டு மாலை வேய்ந்து’ என்பது மணிமேகலை!

        யோசிக்கிறேன் = thought! யோசனை சொல்=suggestion! works both ways!
        சிந்தனை= always, thought

    • ila 9:46 மு.பகல் on ஆகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      அருமையான முயற்சிங்க. சில வார்த்தைகளை சொற்களை இணைத்துள்ளேன். அதே மாதிரி அதை நிர்வகிக்கவும் ஒரு குழு அமைச்சிருங்க. டேமிளர்ஸ் ஆர் சோ கன்னிங் பெல்லோஸ் யூ நோ..

    • seenu 11:02 மு.பகல் on ஆகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.நன்றியுடன்
      சீனு

    • இரா. செல்வராசு 6:57 பிற்பகல் on ஆகஸ்ட் 29, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      நல்ல முயற்சி. தள வடிவமைப்பும் மிகவும் அழகாகவும் எளிமையாகவும் இருக்கிறது.

    • REKHA RAGHAVAN 5:07 மு.பகல் on ஆகஸ்ட் 30, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

    • Bar-Code 11:55 மு.பகல் on ஆகஸ்ட் 31, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சத்யா

    • blog.indian 1:25 பிற்பகல் on December 4, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      திரு. இராம.கி அவர்களின் வளவு பதிவில் உள்ள சொல்லாக்கங்களின் தொகுப்பு.

      http://thamizhchol.blogspot.com/

      • Kannabiran Ravi Shankar (KRS) 8:36 பிற்பகல் on December 9, 2011 நிரந்தர பந்தம் | பதில்

        மிக்க நன்றி; இராம.கி ஐயாவின் செஞ்சொல்லாக்கங்களின் நனி மகிழ்நன் நான்! அவரை அறிந்தவனும் ஆதலால்…இத்தளம் கண்டு பெரிதும் மகிழ்ந்தேன்!

    • blog.indian 1:29 பிற்பகல் on December 4, 2011 நிரந்தர பந்தம் | பதில்

      ஹஸ்தம் = கைத்த(ல)ம் 

      சுவாரஸ்யம் = சுவையாரம் 

      புஸ்தகம் = பொத்தகம்

      ஜோடி = சோடி

c
compose new post
j
அடுத்த இடுகை/அடுத்த மறுமொழி
k
previous post/previous comment
r
reply
e
திருத்து
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel
Follow

Get every new post delivered to your Inbox.