Updates from ஓகஸ்ட், 2009 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

  • சத்யராஜ்குமார் 11:19 am on August 30, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    திண்ணை 

    சில அறிமுகங்கள் நம் வாழ்க்கையை வெகுவாக மாற்றி விடும்.

    நியூஜெர்ஸி சிந்தனை வட்டம் பொறுப்பாளர் ஆனந்த் முருகானந்தம் எனக்கு அப்படித்தான். நினைவு தெரிந்த நாள் முதல் அவர் அமெரிக்காவில் இருக்கிறார். முப்பது வருஷங்களுக்கு முன்பு ஒரு இந்திய விஜயத்தின் போது ராத்திரி பனிரெண்டு மணிக்கு எங்கள் வீட்டுக் கதவைத் தட்டியதும், அப்போது புதிதாய் வாங்கியிருந்த வெட் கிரைண்டரை பார்த்து, “பரவாயில்லையே… இந்திய சமையலறைகளும் இயந்திர மயமாகி வருதே.” என்று வியப்பை தெரிவித்து விட்டுப் போனது சின்ன வயசு ஞாபகங்களில் ஒன்றாக இன்னும் மனதில் இருக்கிறது.

    அவர் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும், “போய் பார்த்து பேசிட்டு வா” என்று சொல்லி பக்கத்து ஊரிலிருக்கும் அவர் வீட்டுக்கு அம்மா என்னை அனுப்பி வைப்பாள். எனக்கு சில சமயம் கொஞ்சம் எரிச்சலாக கூட இருக்கும். பத்து பதினைந்து நாள் விடுமுறையில் வந்திருக்கும் அவரைப் பார்க்க பல பேர் வருவார்கள், போவார்கள். அங்கே என்னைப் போல பொடியனுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கப் போகிறது. இதெல்லாம் அந்த விவரம் தெரியாத வயதில் நமக்குள் தோன்றும் எண்ணங்களே தவிர பக்கத்தில் உட்கார்ந்து பத்து நிமிஷமாவது அவர் பேசாமல் இருக்க மாட்டார். விடை பெறும்போது மறக்காமல் கொஞ்சம் சாக்லேட்டுகளும், சின்ன பரிசுப் பொருளும் தந்தனுப்புவார்.

    தெரிந்தோ தெரியாமலோ அந்த சந்திப்புகள் ஏற்படுத்திய பாதிப்பு ஏதோ ஒரு வெளிநாட்டில் என்றாவது வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசையை மனதின் ஆழத்தில் ஒரு நீரோட்டம் போல ஓட விட்டிருக்கிறது. அடி மனதின் ஆசைகள்தான் கிடைக்கிற சந்தர்ப்பங்களை முழு வேகத்தில் பயன்படுத்திக் கொள்ளும் உத்வேகத்தை அளிக்கின்றன.

    ஆறேழு வருஷங்களுக்கு முன்பு நியூஜெர்ஸியில் அவர் வீட்டுக்குப் பக்கத்திலேயே வந்து சேர்ந்தது அதிசயம்தான். அப்போது என்னிடம் கார் இல்லை என்பதால் அவரே வந்து வீட்டுக்கு அழைத்துப் போனார். அன்றுதான் திண்ணை என்ற மின்னிதழை எனக்கு அறிமுகப்படுத்தினார். “என் நண்பர் ராஜாராம்தான் இதை நடத்தறார். இதிலே கதை எழுதறியா?”

    திண்ணையின் ஓரிரு இதழ்களை படித்துப் பார்த்தவன் அதிலிருந்த கட்டுரைகளையும், எழுதியவர்களின் பெயர்களையும் பார்த்து மிரண்டு போனேன். சிற்றிதழ்வாதிகளுக்கு இருப்பது போலவே வெகுஜன இதழ்களில் எழுதி வருபவர்களுக்கும் ஒருவகை சிற்றிதழ் அலர்ஜி உண்டு. அதற்கு நானும் விதிவிலக்கல்ல. குமுதம், விகடன், கல்கி போன்ற வாரப் பத்திரிகைகள் தவிர வேறெதிலும் நான் அதுவரை கதைகள் எழுதியதில்லை. ச. மஞ்சுளாதேவி நடத்தி வந்த ‘வேறு திசைகள்’ என்ற பத்திரிகை மட்டும் ஒரே ஒரு விதிவிலக்கு.

    ஆனந்த் அவர்களிடம் அப்போது நான் எதுவும் சொல்லவில்லை. அதற்கப்புறம் சில வருஷங்களுக்குப் பிறகு ஒரு முறை சிந்தனை வட்டம் விழாவுக்குப் போன போது, ஆனந்த் வீட்டில் தங்க நேர்ந்தது. திரு ராஜாராம் அவர்களும் அன்று அங்கே தங்கியிருந்தார். நான் எழுதுவேன் என்று தெரிந்து, “திண்ணைக்கு அனுப்புங்க.” என்று அவரும் சொன்னார்.

    “இல்லைங்க நான் குமுதத்தில் எல்லாம் எழுதிட்டிருந்தவன். ரொம்ப இலக்கியத்தரமா எழுத வராது.” என்றேன்.

    ”அப்படி எல்லாம் இல்லை. நீங்க அனுப்புங்க.” என்றார்.

    துரதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் நான் எழுதுவது மிகவும் குறைந்து போயிருந்ததால் அப்போது திண்ணைக்கு அனுப்ப முடியவில்லை. வேறொரு சமயம் மறுபடியும் திரு. ராஜாராம் அவர்களை ஆனந்த் அவர்களின் வீட்டில் சந்திக்க நேர்ந்தது. கதைகளைப் பற்றி பேச்சு வந்த போது, “நான் கேட்டேன். நீங்கதான் அனுப்பவே இல்லை.” என்றார்.

    அப்போதிருந்தே எனக்கு உறுத்திக் கொண்டே இருந்ததால், பத்து நாளுக்கு முன்னால் மிச்சம் என்ற சிறுகதையை அனுப்பி வைத்தேன். திண்ணையில் இந்த வாரம் (28 ஆகஸ்ட் 2009) வெளிவந்துள்ளது.


    மிச்சம்
    சிறுகதை
    ~ சத்யராஜ்குமார் ~


    சுருக்கென்று ஒரு முள் குத்தியதைப் போல கேள்வி. சிரித்துக் கொண்டேதான் கேட்டான். இவனைப் போன்ற அமெரிக்கனுக்கு அது கை வந்த கலை.

    ”ஏன் இப்படி இருக்கிங்க?”

    வாஷிங்டன் டல்லஸ் ஏர்போர்ட்டில் செக்யூரிட்டி சோதனைக்காக நீண்ட வரிசையில் நின்றிருந்தேன். மூன்று வருஷங்கள் கழித்து இந்தியா போகிற குறுகுறுப்பு மனசுக்குள் ஜில்லென்று பரவியிருந்தது.

    ”எப்படி இருக்கோம்?”

    ….

    மேலும் படிக்க…


     
    • என். சொக்கன் 12:00 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      :))))))))))) அந்தக் கடைசி வரி சுய எள்ளலைவிட, அமெரிக்கனின் விமர்சனங்கள் ரொம்பப் பிடிச்சிருந்தது – இந்த ‘தனி’க் குணம் அமெரிக்காவில்மட்டுமில்லை, பெங்களூரிலும் உண்டு 🙂 என்ன, இந்தியனுக்குபதில் இங்கே தமிழன், அவ்ளோதான்!

      சுஜாதாவின் ‘மீண்டும் மத்யமர் கதைகள்’ படிச்சிருக்கீங்களா? அந்த வரிசையில முதல் கதை – வருஷாவருஷம் அமெரிக்காவிலிருந்து செம அவஸ்தைப்பட்டு இங்கே சீஸனுக்கு வந்து போகும் ஒரு பாடகரைப்பற்றியது, அந்தக் கதையின் கடைசி வரியும் இப்படிதான் ‘நச்’சுன்னு முடியும் 🙂

      அழகான கதை, நன்றி சத்யராஜ்குமார்!

      – என். சொக்கன்,
      பெங்களூர்.

    • REKHA RAGHAVAN 12:17 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நீங்கள் போனில் சொன்ன உடனே தேடித் பிடித்து படித்துவிட்டேன். நிகழ்வை நேரில் பார்ப்பது போல வாசகனை கொண்டு வருகிறீர்கள் பாருங்கள் அதுதான் SRK!

      ரேகா ராகவன்

    • சித்ரன் 8:20 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      கதையின் முற்பாதியில் டேவிட்டினுடன் நடக்கும் உரையாடல்களில் நீங்கள் சொல்லிவருகிற விஷயங்கள். இந்தியர்கள் எங்கு சென்றாலும் எப்போதும் போல கூட்டமாக ஆனால் அதே சமயம் ஒருவருக்கொருவர் நெருக்கமாகவும் அக்கறை கொள்பவர்களாகவும் உருவகப்படுத்தியதும், அதைப் பார்த்து டேவிட் புலம்புவது கூட அவனுக்கிருக்கும் பொறாமையால்தான் என்பதை பிரதான கதாபாத்திரம் வழியாகச் சொல்வதும் ஆக இந்தப் பகுதி நன்றாக வந்திருக்கிறது.

      //ஒவ்வொரு இந்தியனும் ஒரு இந்தியாவை இரும்பு வளையமா சுத்திகிட்டு அலையறிங்க//

      இந்த வரிகள் அருமை.

      • சத்யராஜ்குமார் 11:17 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

        நன்றி சித்ரன். கதையை படித்து விட்டு ஒரு வாசகர் இந்தியர்களை (குறிப்பாக இந்து மதத்தவர்களை) தாழ்த்தி எழுதியிருப்பதாக மின்னஞ்சலில் சிறிது காரத்துடன் குறிப்பிட்டிருந்தார். அது தவறான புரிதலாகும். சொக்கன் குறிப்பிட்டதைப் போல கதையில் எந்த race வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். இன்னொரு விஷயம் நம்மைப் பற்றி நமக்குள் நாம் எவ்வளவு உயர்வாக பேசிக் கொண்டாலும் மற்றவர்கள் பார்வையையும், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற நிஜத்தையும் மாற்ற முடியாது. அதற்கடுத்தபடியாக என்னைச் சுற்றி நடப்பதையும், நான் கேட்பதையும், பார்ப்பதையும் எழுதும்போது அது என்/நம் அடையாளத்தோடு இருப்பதை தவிர்க்க இயலாது. அது யார் மனதையும் புண்படுத்துமானால் மன்னிக்க வேண்டுகிறேன்!

    • சுபமூகா 9:59 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      சூப்பர்!

      வழக்கமான அசத்துகிற நடை 🙂

      பாராட்டுகள்.

      அன்புடன்,
      சுபமூகா

    • Ravishankar 10:04 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      கதை நல்லா இருக்கு சத்யா.

    • சுதாகர் 10:13 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      தங்க செயின், பெல்ட் போன்றவற்றை கழற்றி ஸ்கேன் செய்யவேண்டும்னு எல்லா செக் பாய்ண்ட்-லயும் போட்டிருப்பாங்க. இந்த மறதி எல்லோருக்கும் வரும்.

      நானும் அரைஞாண் கயிறு, மெட்டல் தாயத்து எல்லாம் போட்டிருக்கேன். முக்கியமான நாடுகளுக்கும் (இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய்) பல தடவ போயிட்டு வந்திருக்கேன். எங்கயுமே எனக்கு அலாரம் அடிச்சது இல்ல…

      உங்க லாஜிக் படி, அந்த மெயின் கதாபாத்திரம் அமெரிக்கா வந்தப்பவும், அவனுக்கு அலாரம் அடிச்சிருக்கணுமே?

      • சத்யராஜ்குமார் 10:39 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

        சுதாகர், நியாயமான கேள்விகள்! கதை எழுதும்போது இதைப் பற்றி யோசித்தேன். இரண்டு காரணங்கள் அதை ஜஸ்டிபை செய்வதாகப் பட்டது.

        1) முன்னமே அலாரம் அடித்திருக்கிறதா என்று சொல்ல வேண்டிய தேவை இல்லை. ஏனெனில் அவஸ்தைகளை பொருட்படுத்தாமல் பாரம்பரிய மிச்சங்களை சுமப்பது பற்றி அந்த பாத்திரத்துக்கு கவலையில்லை.

        2) ஸ்கேனர்கள் டெக்னாலஜி நாளுக்கு நாள் முன்னேறுபவை, அல்லது சந்தர்ப்பத்துக்கேற்ப முடுக்கி விடப்படுபவை. அவன் முன்னர் பயணித்த போதிருந்த அலர்ட் லெவல் வேறாக இருக்கலாம்.

    • சுதாகர் 10:15 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      உங்க கதயோட நோக்கம், உள்ளர்த்தம் புரியுது.. ஆனாலும், இந்த லாஜிக் எனக்கு இடிக்குது… அதான் கேட்டேன்! 🙂

      • சத்யராஜ்குமார் 10:39 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

        நன்றி. கண்டிப்பாக இதெல்லாம் கேட்க வேண்டும். 🙂

        • SnapJudge 9:56 பிப on செப்ரெம்பர் 3, 2009 நிரந்தர பந்தம்

          கதை என்றளவில் ரசித்துவிட்டு செல் என்றால், பகிர்விற்கு நன்றிகளும் வணக்கங்களும். 🙂
          ————
          முன்பின் தெரியாத அமெரிக்கர் இரண்டைக் குறித்துதான் பிறரோடு நெடு நேரம் அளவளாவுவார். 1. தட்பவெட்பம்; 2. விளையாட்டு போட்டி

          அதை மீறி யதார்த்தமின்றி இந்தக் கதை விரிகிறது. தன்னுடனேயே பேசிக் கொள்கிறவகை என்றாலோ, நெடுங்காலம் அறிமுகமான கீழ்வீட்டுக்காரர்களோடு சொல்லாடுவது என்றாலோ இந்த மாதிரி வரிகளை நெருடாமல் வாசிக்கலாம்:

          —”உங்களுக்கே தெரியாத உங்க கலாசாரத்தை உங்க குழந்தைகளுக்கு வீட்டுக்குள்ளே சொல்லித்தர முடியாம வெளியே அனுப்பி கத்து தர முயற்சிப்பதுதான் உறுத்துது.” —

          இதெல்லாம் ரொம்ப அதீதம். திண்ணை அத்தைகளும் தாத்தாக்களும் மட்டுமே இவ்வகை உரிமையோடு தீர்ப்பெழுதித் தருவார்கள்.

          Again, இந்த மாதிரி நிகழ்வு நிஜத்தில் நடந்திருக்கலாம். ஆனால் இயல்பாகவோ மனதில் சென்று சிம்மாசனம் அமைக்கும் விதமாகவோ நீண்ட காலம் அசை போடக் கூடிய வினாக்களை தீர்க்கமாக எழுப்பும் விதமாகவோ இல்லை.

        • சத்யராஜ்குமார் 10:06 பிப on செப்ரெம்பர் 3, 2009 நிரந்தர பந்தம்

          //கதை என்றளவில் ரசித்துவிட்டு செல் என்றால்,//
          அப்படிச் சொல்ல முடியாது. 🙂 கொஞ்சம் அலசி ஆராயவோ சுட்டிக் காட்டவுமோதானே இந்த இடம் இருக்கிறது.

          கதையில் நீங்கள் குறிப்பிட்ட யதார்த்தம் மிஸ் ஆகிறதை ஒப்புக் கொள்கிறேன். இதில் வரும் அமெரிக்கனின் உரையாடல்கள் பெரும்பாலும் நெருக்கமான அமெரிக்கர்களிடமிருந்து வெளிப்பட்டவை. கதையை வேறு பாத்திரங்களுடன் அமைத்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. அல்லது மனங்களின் உரையாடலாகவும் வைத்திருக்கலாம்.

          விமர்சனத்துக்கு நன்றி.

    • செந்தில் (Bangalore) 6:51 முப on ஜூலை 19, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      உங்கள் கதைகள் அனைத்தும் அருமை. அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் பிளாஸ்டிக் பூ வாழ்க்கையை படம் பிடித்து காட்டி அமெரிக்க மோகம் கொண்டவர்களுக்கு பாடம் கற்பிக்கிறது. தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்.

    • Senthil kumar 1:14 முப on செப்ரெம்பர் 2, 2015 நிரந்தர பந்தம் | மறுமொழி

      Mozhinadai Thoivillamal kondu sendra vitham Arumai…

  • சத்யராஜ்குமார் 9:23 pm on August 27, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 1 

    முன் கூட்டியே திட்டமிட்டு நடக்கும் சந்திப்புகளைக் காட்டிலும் எதிர்பாராமல் நிகழ்பவை சுவாரஸ்யமானவை.

    அப்போதெல்லாம் நீலகிரி எக்ஸ்ப்ரஸ்ஸில் முன்பதிவு செய்து அவ்வப்போது கோவை – சென்னை சென்று வருவது வழக்கம். ரயில் எட்டு முப்பத்தைந்துக்கு கோவையில் கிளம்பி – ஆறேகால், ஆறரை மணி போல் சென்னை சென்று சேரும்.

    கார்த்திகா ராஜ்குமாரின் படம் கிடைக்காததால் அவர் ஊர் ஊட்டி!

    கார்த்திகா ராஜ்குமாரின் படம் கிடைக்காததால் அவர் ஊர் ஊட்டி!


    பலரும் அந்த ஒரு ராத்திரி அசௌகரியம் கூட தாங்க முடியாதவர்களாய் கச்சிதமான முன்னேற்பாடுகளோடு வந்திருப்பார்கள். ரயில் கிளம்பியதும், ரயிலின் ஆட்டத்தில் தள்ளாடிக் கொண்டே லுங்கிக்கு மாறி, ”எக்ஸ்க்யூஸ் மீ” சொல்லி சீட்டில் உட்கார்ந்திருப்பவர்களை எழுப்பி, பர்த்தை விரித்து செயின் போடுவார்கள். மெத் மெத்தென்று இரண்டு லேயருக்கு படுக்கை விரிப்பை விரித்து, சுருட்டி வைத்த தலையணையை ஊதிப் பெருக்குவார்கள். நடுத்தரங்கள் மறக்காமல் தலையில் மப்ளர் கட்டிக் கொள்வார்கள்.

    நான் பொதுவாக போட்டுக் கொண்ட பேண்ட் சர்ட்டோடு ப்ரீப்கேசில் தலை வைத்து பர்த்தில் படுத்து விடுவேன். பயணங்களில் தூக்கம் வராது. புக் ஸ்டாலில் வாங்கிய புத்தகம் கொஞ்ச நேரம் படிப்பேன். அதன் பின் மனதில் தங்கிய கதைகளை அசை போடுவதில் மிச்ச நேரம் கழியும்.

    அன்றைக்கு புத்தகத்தை விரித்து உட்கார்ந்திருந்த போது – எதிர் சீட்டுக்கு வந்தமர்ந்த ப்ரெஞ்ச் தாடி இளைஞர் என்னுடைய இருக்கை எண்ணை சரி பார்த்து விட்டு, ”நீங்க சத்யராஜ்குமாரா?” என்றார்.

    ”ஆமா. எப்படித் தெரியும்?”

    ”ரிசர்வேஷன் சார்ட்டில் பேர் பார்த்தேன். நான் கார்த்திகா ராஜ்குமார்.”

    குப்பென்று ஒரு பரவசம் மனசுக்குள் ஓடியது. அந்த காலகட்டத்தில் இவ்வளவு சிறுகதை எழுத்தாளர்கள் இல்லை. மிகவும் பிரபலமான எழுத்தாளர்களை தவிர ஒரு முப்பது நாற்பது பேர்தான் எல்லா பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பார்கள். எனக்கு வரும் வாசகர் கடிதங்களில் பலரும் இவர் கதைகளைப் பற்றி மறக்காமல் குறிப்பிடுவார்கள். இருவர் பெயரும் ராஜ்குமாரில் முடிவதால் என்று நினைக்கிறேன். மற்றபடி அவர் என்னை விட மூத்த எழுத்தாளர். அந்த சமயத்தில் நான் எழுதி வந்த கதைகளில் பல குப்பை என்பதை தைரியமாக ஒப்புக் கொள்ளுவேன். அவரோ தரமான, முதிர்ச்சியான கதைகள் எழுதி வந்தவர்.

    ”நீங்க சீக்கிரம் தூங்கிருவீங்களா? அப்படி இல்லேன்னா நாம பன்னண்டு மணி வரைக்கும் பேசிட்டிருக்கலாமே?” என்றார்.

    ”ஓ எஸ். பேசலாம்.” என்று தலையாட்டினேன்.

    மேல் பர்த்துக்கு தாவி உட்கார்ந்தோம். என் கையில் இருந்த கணையாழியைப் பார்த்துக் கொண்டே, ”சமீபத்தில் நீங்க எழுதின கதை ஒண்ணு படிச்சேன். ட்ரான்சிஷன் பீரியட்ல இருக்கிங்கன்னு நினைக்கிறேன்.” – என்றார் கார்த்திகா ராஜ்குமார்.

    அன்றைக்குத்தான் வாழ்க்கையில் முதல் முறையாய் கணையாழியை வாங்கினேன் என்று ஏனோ அப்போது அவரிடம் சொல்லவில்லை. பெரிசாய் இலக்கியங்கள் படைத்துக் கொண்டிருக்கவில்லையென்றாலும் அவர் சொன்ன மாதிரி என்னுடைய எழுத்தில் சில மெல்லிய மாறுதல்கள் ஏற்பட ஆரம்பித்திருந்த பருவம்தான் அது. அந்த மாற்றங்களுக்கு முக்கிய காரணம் அப்போது படிக்கத் துவங்கியிருந்த சா.கந்தசாமி, கு.ப.ராஜகோபாலன் ஆகியோருடைய சிறுகதை தொகுப்புகள்.

    திரு.மாலன், பட்டுகோட்டை பிரபாகர் ஆகியோருடனான திசைகள் பத்திரிகை அனுபவங்களை பற்றி எல்லாம் அவர் நிறைய பேசிக் கொண்டு வந்தது மங்கலாக ஞாபகம் இருக்கிறது.

    படுக்கப் போவதற்கு முன், ”ராஜ்குமார் உங்க பேர். கார்த்திகா உங்க மனைவியா?” என்று கேட்டேன்.

    சிரித்துக் கொண்டே மறுத்தார். ”கார்த்திகா என் கல்லூரி சீனியர். என்னை எழுதச் சொல்லி ஊக்குவித்தவர். அவர் நினைவா அந்தப் பெயரை புனை பெயரா வெச்சிகிட்டேன்.” என்றார்.

    காலையில் குட் பை சொல்லிக் கொண்டோம். மறுபடி எங்கேயும் அவரை சந்திக்கவில்லை. பக்கா ரயில் ஸ்நேகம்.

     
    • இலவசக்கொத்தனார் 9:34 பிப on ஓகஸ்ட் 27, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      இப்படித்தாங்க நான் ஒரு எழுத்தாளரை அவர் வீட்டுக்கே போய் பார்த்தேன். அடுத்த வாரமே அவரு வீட்டைக் காலி பண்ணிக்கிட்டுப் போயிட்டாரு! 🙂

    • SnapJudge 9:54 பிப on ஓகஸ்ட் 27, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      கலக்கல் விவரிப்பு.

      கொத்ஸ்… அவர் யாரு?!.

    • என். சொக்கன் 12:00 முப on ஓகஸ்ட் 28, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      //பலரும் அந்த ஒரு ராத்திரி அசௌகரியம் கூட தாங்க முடியாதவர்களாய் கச்சிதமான முன்னேற்பாடுகளோடு வந்திருப்பார்கள்//

      //நான் பொதுவாக போட்டுக் கொண்ட பேண்ட் சர்ட்டோடு ப்ரீப்கேசில் தலை வைத்து பர்த்தில் படுத்து விடுவேன்//

      நான் ஒவ்வொரு பயணத்திலும் நினைக்கிறதை நீங்க அப்படியே எழுதிட்டமாதிரி இருக்கு 🙂

      என் மனைவி, ஒவ்வொரு ரயில் பயணத்துக்கும் ஒரு பை நிறைய போர்வைகளை அள்ளிச் செல்வார், ‘ஒரு ராத்திரிக்கு இத்தனை சௌகர்யம் தேவையா?’ என்றால், ‘அதெப்படி?’ என்று பதில் வரும் – நான் இன்றுவரை எந்த ரயில் பயணத்திலும் போர்வை கொண்டுபோனதில்லை, தூக்கம் கலைந்ததும் இல்லை 🙂

      கார்த்திகா ராஜ்குமார் எழுத்துகள் படித்திருக்கிறேன், இப்போது அவ்வளவாக நினைவில் இல்லை, அவருடைய தொகுப்பு ஏதும் வைத்திருக்கிறேனா என்றுகூடத் தெரியவில்லை, தேடிப் பார்க்கவேண்டும்.

      – என். சொக்கன்,
      பெங்களூர்.

      • சத்யராஜ்குமார் 3:01 பிப on ஓகஸ்ட் 28, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

        இந்த பாரா எழுதும்போது அட இது சொக்கன் மேட்டராச்சேன்னு நினைச்சிகிட்டேதான் எழுதினேன். அந்த அளவுக்கு பிராண்ட் பண்ணிட்டிங்க. 🙂

        • என். சொக்கன் 12:00 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம்

          என் முதல் மகள் பிறந்தபோது, ஒவ்வொரு வார இறுதியிலும் பெங்களூரிலிருந்து கோவைக்கு ரயிலில் பயணம் சென்றேன் – அப்போது ’ரயிலடிக் குறிப்புகள்’ன்னு டைரியில தொடர்ந்து எழுதிகிட்டிருந்தேன், இந்தப் பதிவு அதையெல்லாம் ஞாபகப்படுத்தியது 🙂

          – என். சொக்கன்,
          பெங்களூர்.

    • vijayashankar 1:14 முப on ஓகஸ்ட் 28, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      //பக்கா ரயில் ஸ்நேகம்//

      🙂 True

      பி.எஸ்.ஜியில் படிக்கும் பொது மூன்று மாதத்திற்கு ரூ 75க்கு ட்ரெயின் பாஸ் கிடைக்கும். சில சமயம் பீளமேடு ஸ்டேசன். லேட்டானால் பெரும்பாலும், நண்பர்களோடு மொபட்டில் / பைக்கில் சென்று கோவை ரயில்வே ஸ்டேசனில் இறங்கிக்கொள்வேன்.
      கோவையிலிருந்து திருப்பூருக்கு ட்ரெயின் எடுத்தால் ( இரவு ப்ளூவில் அவர் கதை டி.டி.ஆர். மூலம். ஜி.அசோகனுக்கு பயணிக்கும் ) சில சமயம் சந்திப்பது ராஜேஷ்குமார். ரோஜா பாக்கு மென்றுக்கொண்டு பேசுவார். வித்தியாசமான தலைப்பு நாவலுக்கு வைப்பதில் கில்லாடி. ஒரு முறை சந்தித்த பொது சும்மா ஒரு தலைப்பு சொல்லுங்க என்றார். திருமரண அழைப்பிதழ் என்றேன். பாக்கெட் நாவலில் அந்த தலைப்பில் ஒரு 84 பக்க கதை வந்தது. ( ஜெப்ரி ஆர்ச்சரின் ட்வெல்வ் ரெட் ஹெர்ரிங்க்ஸ் கதை போல இருக்கும் ).

      இமெயில் மூலம் நான் நிறைய விவாதம் செய்தது எழுத்தாளர் சுஜாதாவுடன்.

      இப்போது மிக பிரபலம் அடைந்த எழுத்தாளர்கள் பலரோடு போன், ப்ளாக் கமண்ட்ஸ் என்று நின்று விடுகிறது!

      • சத்யராஜ்குமார் 3:06 பிப on ஓகஸ்ட் 28, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

        //சில சமயம் சந்திப்பது ராஜேஷ்குமார்//

        ஆமாம். ராஜேஷ்குமார் ப்ளூவில்தான் சென்னை செல்வார். பிஸ்கட் கலர் ப்ரீப்கேசின் மேல் முழு நீள தாளை வைத்து ஓடும் ரயிலில் கூட எழுத ஆரம்பித்து விடுவார்.

        //எழுத்தாளர்கள் பலரோடு போன், ப்ளாக் கமண்ட்ஸ் என்று நின்று விடுகிறது!//

        எழுத்தாளர்கள் என்றில்லை. முகம் தெரியாத ஆனால் அறிமுகமான பல பேரை நேரில் ஒரு முறை பார்த்து விட்டால் புஸ்சென்று போய் விடும்.

    • REKHA RAGHAVAN 2:31 முப on ஓகஸ்ட் 28, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      //எதிர்பாராமல் நிகழ்பவை சுவாரஸ்யமானவை //

      எல்லாவற்றுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். நல்ல சந்திப்பு. மொத்தத்தில் எங்களுக்கு ஒரு விறுவிறுப்பான பயண அனுபவத்தை படித்த திருப்தி.

      ரேகா ராகவன்.

    • பினாத்தல் சுரேஷ் 2:56 முப on ஓகஸ்ட் 28, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      வீட்டின் சௌகர்யங்கள் கொஞ்சம் கூட ரயில் பயணத்தில் குறைந்துவிடாமல் மூன்று மணிநேரப் பயணத்துக்கு முதல் அரை மணிநேரம் கொண்டுவந்ததைப் பிரிக்க, கடைசி அரை மணிநேரம் அடைக்க என்று தன் கெட்டது போதாதென்று அடுத்தவனையும் டார்ச்சர் செய்யும் பிரகிருதிகளை பசித்த புலி தின்னட்டும் 🙂 நாம் நாமுண்டு, இரண்டு செட் துணியடங்கிய பைத்தலையணை உண்டென்றிருப்போம் 🙂

      ரயில் சினேகங்கள் அதிக நேரம் தாங்குவதில்லை – ஆனால் மிகச்சில அதிகநாள் கழித்தும் தாக்கும் – உங்கள் அனுபவம்போல 🙂

      • சத்யராஜ்குமார் 3:14 பிப on ஓகஸ்ட் 28, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

        //ரயில் சினேகங்கள் அதிக நேரம் தாங்குவதில்லை//

        சிநேகங்கள்தான் தாங்காதே ஒழிய நினைவுகள் அப்படியல்ல. இரவு பயணம் த்ரில்லர் + ரொமான்ஸ் என்றால் பகல் பயணங்கள் டி.வி சீரியல். இந்த மெகா தொடரை கல கலக்க வைக்கும் தனித்திறமையோடு பெட்டிக்கு ஒருவர் ரிசர்வேஷன் செய்து வந்து விடுவார். போகுமிடம் சேரும் வரை பேசப் பிறந்த அவர் காட்டில் மழைதான்.

    • சித்ரன் 4:09 முப on ஓகஸ்ட் 28, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      கார்த்திகா ராஜ்குமார் ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளர். நானும் நிறைய படித்திருக்கிறேன். ஆனால் சொக்கன் சொன்னது மாதிரி எதுவும் நினைவிலில்லை. கிடைத்தால் மறுபடி படிக்க ஆசை.

      ரயில் பயண அனுபவங்களை சலிக்க சலிக்க எழுதலாம். அத்தனை இருக்கிறது.

      சித்ரன்
      http://chithran.com

    • சித்ரன் 4:16 முப on ஓகஸ்ட் 28, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      கார்த்திகா ராஜ்குமார் கதைகளை நிறைய படித்திருக்கிறேன். அவரின் எழுத்துக்கள் இப்போதெல்லாம் கண்ணில் தென்படுவதில்லை. கிடைத்தால் மறுபடி படிக்க ஆசை.

      ரயில் பயண அனுபவங்களைப் பற்றி ஒரு ரயில் அளவுக்கு நீளமாய் எழுதிக்கொண்டே போகலாம்.

      ரயில் பற்றி நான் முன்பொருமுறை எழுதின கவிதையை அப்படியே இங்கே விளம்பரம் செய்து விடுகிறேன். http://chithran.wordpress.com/2007/08/26/reservation/

      சித்ரன்
      http://chithran.com

    • சுதாகர் 9:40 முப on ஓகஸ்ட் 28, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      //பலரும் அந்த ஒரு ராத்திரி அசௌகரியம் கூட தாங்க முடியாதவர்களாய் கச்சிதமான முன்னேற்பாடுகளோடு வந்திருப்பார்கள். ரயில் கிளம்பியதும், ரயிலின் ஆட்டத்தில் தள்ளாடிக் கொண்டே லுங்கிக்கு மாறி, ”எக்ஸ்க்யூஸ் மீ” சொல்லி சீட்டில் உட்கார்ந்திருப்பவர்களை எழுப்பி, பர்த்தை விரித்து செயின் போடுவார்கள். மெத் மெத்தென்று இரண்டு லேயருக்கு படுக்கை விரிப்பை விரித்து, சுருட்டி வைத்த தலையணையை ஊதிப் பெருக்குவார்கள். நடுத்தரங்கள் மறக்காமல் தலையில் மப்ளர் கட்டிக் கொள்வார்கள்//

      வாரா வாரம் நீங்க இரயில்ல போனா உங்களுக்கும் தெரியும். ஒவ்வொரு திங்கள் கிழமையும் ஆபிஸில் தூங்கி வழிய வேண்டி வரும். அதற்கு இந்த மாதிரி தூங்கிக் கொண்டு போவது நல்லது. இந்த மாதிரி வாரா வாரம் ஊருக்கு வரவங்க, வாரக் கடைசியல தான் எல்லா வேலயயும் செய்ய வேண்டியிருக்கும். படிக்கிற பசங்கள பாக்குறது, சொந்தங்களை பாக்குறது, விழாக்களுக்கு போறது-ன்னு. அதுனால அவங்களுக்கு இரயில்ல தான் ஓய்வு எடுக்க முடியும். எனக்கென்னமோ இது தப்பா தோனல…

      • சத்யராஜ்குமார் 1:28 பிப on ஓகஸ்ட் 28, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

        சுதாகர் உங்கள் கருத்தை வரவேற்கிறேன். பலத்த ஏற்பாடுகளோடு செல்வதை சரி என்றோ, தவறு என்றோ சொல்லவில்லை. அது ஒரு அப்சர்வேஷன். அவ்வளவே. பொதுவாக குறைந்த லக்கேஜ் மகிழ்ச்சியான பயணம் என்பது என் பாலிசி. பயணங்களின் போது சிலவற்றை அசவுகரியமாக கருத வேண்டாமே என்பதும் அதில் அடக்கம்.
        இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். பொதுவாகவே ஓடும் ரயிலிலோ பஸ்ஸிலோ நான் அதிகம் தூங்க மாட்டேன். ஆனால் போர்வை தலையணை இன்றியே நன்றாக தூங்கி விடுவேன் என்று முந்தைய பின்னூட்டத்தில் சொக்கன் சொல்கிறார்.

        //வாரா வாரம் நீங்க இரயில்ல போனா உங்களுக்கும் தெரியும்.//
        சுமார் ஒரு வருடம் நான் வாரா வாரம் சென்னைக்கு ரயிலில் சென்று வந்து கொண்டிருந்தேன். பல சமயம் முன் பதிவு கிடைக்காமல் போய் அன்ரிசர்வ்ட் பெட்டியில் ஒற்றைக் காலில் நின்று கொண்டும் கூட! 🙂

    • Eswar 12:39 பிப on ஓகஸ்ட் 30, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      இன்னொரு அசௌகர்யம் , சாப்பாடு முன்னேற்பாடுகள் முக்கியமா மீன் பிரியர்கள். கோச்சுகள் தாண்டி லெமன் ரைசும் , மசால் வடை உள்ளே தள்ளி கொண்டு , நித்திர தேவியை தேடும் வாரந்தர பயணிகளின் நாசியில் வந்து விழும் குழம்பு வாசனை. உண்ட மயக்கம் போதாதென்று சொந்த (களுடன்) கதை பேசுவது.

    • சித்ரன் 12:53 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      ஒரு இரவில் ரயிலில் பச்சிளம் குழந்தையை எப்படித் தூங்கவைப்பது என்று முழித்துக் கொண்டிருந்த இளம் தம்பதியினரிடம் நானும் என் மனைவியும் ஒரு புடவை வாங்கி இரண்டு பெர்த்துக்கும் நடுவில் அழகாக ஒரு தூளிகட்டி படுக்கவைக்க, ரயிலின் ஆட்டத்தில் சுகமாகத் தூங்கிக் கொண்டு வந்தது குழந்தை. தம்பதிகள் ஆச்சரியப்பார்வையுடன் ’சூப்பர் ஐடியாங்க’ என்றார்கள். நாங்கள் கைக்குழந்தையுடன் இரவு ரயிலில் பயணம் செய்யும்போதும் இப்படித்தான் செய்துகொண்டிருந்தோம் என்றோம். (கைக்குழந்தை இப்போது வளர்ந்து அவனுக்கு‘அரை டிக்கட்’ வாங்க வேண்டியிருக்கிறது)

      • சத்யராஜ்குமார் 5:29 பிப on செப்ரெம்பர் 2, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

        வட இந்திய பயணத்தின் போது அப்படிப்பட்ட தொட்டில்களை பார்த்திருக்கிறேன். இங்கே தென்றல் பிறந்த போது பெரியதாய் crib வாங்க நேர்ந்த போது அந்த ரயில் தொட்டில்கள் எனக்கு ஞாபகம் வந்தது.

    • பத்மா 5:46 பிப on செப்ரெம்பர் 2, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      சொக்கன்
      பெண்கள் போர்வை கொண்டு போவது சவுகரியத்துக்காக இல்லை, சில அசவுகரியங்களை தவிர்க்க. நானெல்லாம் சென்னையில் இருந்து தில்லிக்கு /ஜனதாவகுப்பில் பயணம் செய்த காலங்களில் தூங்கியதே இல்லை. ஒருவித கலக்கம் இருந்து கொண்டே இருக்கும். சில கசப்பான (மோசமானது இல்லை என்றாலும்) அனுபவங்களும் உண்டு.

      • சத்யராஜ்குமார் 6:02 பிப on செப்ரெம்பர் 2, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

        கோவை – டில்லி இரண்டு நாள் பயணம் செமத்தியான அனுபவமாய் இருந்தது. அப்புறம் பல ரயில் கதைகள் எழுதினேன்.

      • என். சொக்கன் 12:01 முப on செப்ரெம்பர் 3, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

        பத்மா,

        இந்தக் கோணத்தில் நான் யோசிக்கவில்லை. சுட்டிக்காட்டியதற்கு நன்றி!

        – என். சொக்கன்,
        பெங்களூர்.

  • சத்யராஜ்குமார் 6:51 am on August 26, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: காசி, கேள்வி-பதில், தமிழ்மணம்   

    காசி கேட்ட கேள்விகள் 

    காசி கேட்டுக் கொண்டபடி அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பிய பதில்களை இங்கே வெளியிடுகிறேன். அவர் தொகுத்திருந்தால், நீக்க வேண்டியதை நீக்கி உங்களையும் என்னையும் காப்பாற்றியிருப்பார். இப்போது வேறு வழியில்லை. நீங்கள் படித்துதான் ஆக வேண்டும்.

    1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று
    எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும்
    இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம்
    செய்யவேண்டும்?

    வலைப்பூக்கள் துளிர் விடத் துவங்கியபோது இருந்ததை விட இப்போது பல்மடங்கு அதிகமாய் உள்ளடக்கங்கள் பெருகியுள்ளன. பத்திரிகைகள், பதிப்பகங்கள் போன்ற தொழில்முறை ஊடகங்களோடு ஒப்பிட்டால் எழுத்து நயம் குறைவாகவே இருந்தாலும் (என் தளத்தையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) கருத்தளவில் விரும்பத்தக்க உள்ளடக்கங்கள் நிறைய வாசிக்க கிடைக்கின்றன. தேவையான அளவுக்கு உள்ளதா என்றால் இன்னும் இல்லை என்றே சொல்ல வேண்டும். படிப்பவர்களும், படைப்பவர்களும் எழுத்து நயத்தை பொருட்படுத்தாமல் பொருளடக்கத்துக்கு முதலிடம் கொடுத்தால் இந்த நிலை மாறும். அவரவர்க்கு தெரிந்த விஷயங்களை அவரவர் பாணியில் அளித்தாலே போதுமானது. கவர வேண்டும் என்ற நோக்கத்தை விட, பகர வேண்டும் என்ற நோக்கம் அதிகரித்தல் ஆரோக்கியமானது.

    கேள்வியின் இரண்டாம் பாகத்துக்கான பதில் இணையத்துக்கு வெளியே துவங்குவதாக நினைக்கிறேன். இணையம் மற்றும் கணினியில் நிகழ்வன பெரும்பாலும் நிஜ வாழ்க்கையின் நகல் செயல்பாடுகளாகும். வெளியே தமிழ் புழக்கம் அதிகரித்தால் இணையம், கணினிகளிலும் வேறு வழியே இல்லாமல் அவை நிகழும்.

    2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம்
    அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை
    போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல்
    போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம்
    தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு,
    குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

    இலக்கியம், இதழ்கள் அளவில் தமிழர் சமூகத்தின் ஒரு குறைந்த சதவீதம் மட்டுமே அனுபவிக்கிறது. மின்னஞ்சல், மின்னரட்டை போன்றவற்றிற்கும் இது பொருந்தும். மின் வணிகம், அரசாளுமை பற்றி எனக்குத் தெரியவில்லை. என்னுடைய அறிவுக்கு எட்டிய வரை இவைகள் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறதென்று நினைக்கிறேன்.

    தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம்
    அனுபவிக்கிறதா என்பதை விட தகவல்-நுட்பப் புரட்சியின் பயனை முழு தமிழர் சமூகமும்
    அனுபவிக்கிறதா என்ற கேள்வியே முக்கியமானது.

    3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின்
    பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த
    அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும்
    முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?

    இன்றைக்கு இணையத்திலும், கணினியிலும் தமிழின் பயன்பாடு அதிகரிக்க தொண்ணூறு சதவீதம் உதவியுள்ளது தன்னார்வலர்களின் பங்களிப்பும், அளவிடற்கரிய அவர்களின் உழைப்பும்தான். அதில் கொஞ்சமேனும் தமிழை வைத்துப் பிழைக்கும் அரசியலமைப்புகள் செய்திருந்தால் இன்னும் பல தூரம் போயிருப்போம். அவர்களுக்கு அதற்கு நேரமோ, அக்கறையோ இல்லை.

    மேலேடுத்துச் செல்ல முக்கியமானதாக நான் கருதுவது செல்பேசி வழி தமிழ் மென்பொருள்கள். நுறு சதவித மின் தமிழ் ஆட்சி அதன் மூலமே சாத்தியப்படும். ஒலிப் பதிவுகளும், ஒளிப் பதிவுகளும் சாத்தியமாகி விட்ட இத்தருணத்தில் எழுத படிக்க தெரியாதவர்களின் கையிலும் இருக்கும் கைப்பேசிகளே தமிழுக்கான மின் தூதுவர்கள்.

    4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச்
    சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான
    செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

    கேள்வி #3-ல் குறிப்பிட்ட படி கைப்பேசி சார்ந்த தமிழ் மென்பொருள் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்துவேன். அதிலே இணைய இணைப்பு சுலபமாக, நியாயமான செலவில் பெற வழி வகை செய்வேன்.

    5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக
    வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

    தமிழ் வலைப்பதிவுகள் தக்க பரிமாண வளர்ச்சியை அடைந்து வருகிறது. ‘மொக்கை’ என்று அழைக்கப்பட்ட கலாசாரம் விரைவிலேயே அதன் ஆதரவை இழந்து விட்டது போல் தெரிகிறது. உருப்படியான பதிவுகள் போட வேண்டும் என்ற எண்ணம் நிறைய பேரின் வலைப்பதிவுகளில் எதிரொலிக்கிறது. அதை ஊக்குவிக்கும் வண்ணம் பல தளங்கள் போட்டிகள் வைத்து முன்னெடுத்துச் செல்கின்றன.

    புதியவர்களுக்கான யோசனை? நான் வலைப் பதிய ஆரம்பித்த நாளிலிருந்தே ஒரு கருத்தைத்தான் திரும்ப திரும்ப சொல்கிறேன். எழுத்து நயம் பற்றி கவலைப்பட வேண்டாம். அது காலப் போக்கில் அகப்படும். ஒவ்வொருவரின் பார்வையும் அவரவர் பெருவிரல் ரேகை போன்றது. அதை பதிவு செய்ய முயன்றாலே போதும்.

    6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை
    நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய
    உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

    தமிழில் திரட்டிகளின் முன்னோடியாக விளங்கிய தமிழ்மணத்தின் ஐந்து ஆண்டு சேவை அபாரம். பல வகையிலும் அது தன்னை மேம்படுத்திக் கொண்டு வந்ததை கண்கூடாகப் பார்த்தோம். வரும் ஆண்டுகளில் அது செய்ய வேண்டியது கைப் பேசி தளத்திலும் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதே ஆகும்.

     
    • சித்ரன் 10:53 முப on ஓகஸ்ட் 26, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      தமிழில் வலைப்பதிவுகள் பிரபலமாகத் தொடங்கிய காலத்திலிருந்தே தமிழ்மணம் என்ற ஒன்றும் பிரபலமாகத் தொடங்கியிருந்தது. அந்த வகையில் தமிழில் வலைப்பதிவு எழுதுபவர்கள் தங்களை “ப்ரமோட்” செய்து கொள்ள மிகப் பெரியதொரு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தவர் திரு.காசி. அவருக்கு என் பாராட்டுகளும், ஐந்தாண்டு முடிவடைந்ததற்காக வாழ்த்துக்களும்.

    • Sentil 9:12 பிப on ஓகஸ்ட் 26, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

      ” கவர வேண்டும் என்ற நோக்கத்தை விட, பகர வேண்டும் என்ற நோக்கம் அதிகரித்தல் ஆரோக்கியமானது.”

      This is a real boost. Thank you for encouraging mokkais like us 🙂

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி