Updates from செப்டம்பர், 2009 Hide threads | Keyboard Shortcuts

  • உன்னைப் போல் ஒருவன்: விமர்சனம் அல்ல 

    சத்யராஜ்குமார் 6:06 pm on September 25, 2009 நிரந்தர பந்தம் | பதில்
    குறிச்சொற்கள்: உன்னைப் போல் ஒருவன், கமல், கமல்ஹாசன், kamal, kamalhasan

    சென்ற வெள்ளிக்கிழமை. திரையிட்ட இரண்டாம் நாள். இரவு 9.45-க்கு ஷோ. ‘ரஜினி படம்ன்னா வரேன். கமல் படம் DVD வந்த பிறகு பார்த்துக்கறேன்.’ என்று சொல்லி விட்ட common woman மனைவி. ஆகவே எனக்கும், அகிலுக்கும் மட்டும் movietickets.com-ல் முன்பதிவு செய்தேன். 3-11 வயது வரை அரை டிக்கட் வாங்கினால் போதும் என்று அந்த தளத்தில் போட்டிருந்ததால் அகிலுக்கு பாதி விலையில் டிக்கட்.

    உன்னைப் போல் ஒருவன்

    உன்னைப் போல் ஒருவன்


    “ஏன் ஒன்பது மணிக்கே கிளம்பணும்?” என்று கேட்ட அகிலுக்கு தமிழ் படம்ன்னா கூட்டம் அலை மோதும். லேட்டாய் போனால் நீ ஒரு இடத்திலும் நான் ஒரு இடத்திலும் உட்கார வேண்டி வரும் என்று பதில் சொன்னேன். சிவாஜி, சந்திரமுகி அனுபவம். அவன் அதிருப்தியாய் தலையாட்டினான். Fairfax-ன் கிழகோடியில் தியேட்டர். இந்த திரையரங்கையும், இன்னும் சில திரையரங்குகளையும் ரிலையன்ஸ் குத்தகைக்கு எடுத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். வாரம் ஒரு தெலுங்கு அல்லது ஹிந்தி படம் வெளியாகிக் கொண்டிருக்கிறதாம்.

    தமிழ்ப்பட ரசிகர்கள் இணையம் தாண்டி வர மறுப்பதால் மணிரத்னம், கமல், ரஜினி படங்கள் வந்தாலொழிய தியேட்டரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்காது. பத்து நிமிஷ டிரைவில் தியேட்டரை அடைந்தபோது அகில் நான் சொன்னதை நம்பினான். அங்கே பெருந்திரளாய் கூட்டம். திருவிழா உணர்வு ஏற்பட்டது. மச்சி, மச்சான் என்று செந்தமிழ் குரல்கள் கேட்டன.

    கவுண்ட்டரில் போய் இணையத்தில் முன்பதிவு செய்த கடன் அட்டையை கொடுக்க, இ-டிக்கெட் கிடைத்தது. அங்கே 3-5 வயது வரை அரை டிக்கட் என்று ஒரு அறிவிப்பு பெரிதாய் எழுதி ஒட்டியிருந்தது பார்த்து திடுக்கிட்டாலும், இணையத்தில் வாங்கினால் எதுவுமே சகாய விலையில் கிடைக்கும் என்று சமாதானமாகிக் கொண்டேன்.

    பூட்டியிருந்த கண்ணாடிக் கதவின் முன்னால் டைனோசரின் வால் மாதிரி பெரிய க்யூ. அதில் நானும், அகிலும் போய் இணைந்து கொண்டோம். இப்படி ஒரு கூட்டம் ஆங்கிலப் படங்களுக்கு அரிதிலும் அரிது என்பதால் அந்த காம்ப்ளக்ஸின் இதர கடைகளுக்கு வந்த வெள்ளைக்காரர்கள் வினோதமாய் பார்த்து ரசித்துச் சென்றார்கள்.

    இதற்குள் எனக்கு அறிமுகமான சிலர், ‘ஹாய்’ சொன்னார்கள். க்யூவில் முன்னால் நின்றிருந்த இரு இளைஞர்கள் அங்கே ரகம் ரகமான கார்களில் வந்திறங்கும் நம்மவர்களையும் அவர்கள் கார்களையும் ஒருவர் பாக்கியில்லாமல் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள். ”எந்த ஒரு தேசிப்பயலாவது இப்படி ஒரு கார் (க்ரைஸ்லர் PT Cruiser) வாங்குவானா? இது காலேஜ் பொண்ணுங்க வாங்கி ஓட்டற கார்!”

    படம் பார்க்கும் ஆவலில் சாப்பிடாமல் கிளம்பி வந்து விட்ட ஒரு குடும்பத்தின் பொறுப்பான மனைவி பிளாஸ்டிக் பேகில் வைத்திருந்த கட்டுச் சோற்றை தியேட்டர்காரன் உள்ளே விடுவானா என கவலையோடு கேட்டுக் கொண்டிருந்தார்.

    தனது வெள்ளைக்கார காதலியுடன் க்யூவில் நின்றிருந்தார் ஒரு பச்சைத் தமிழர். சிரிக்க சிரிக்க பேசிக் கொண்டிருந்த அந்த அழகான அமெரிக்கப் பெண்தான் சென்டர் ஆப் அட்ராக்’ஷன். பல இளைஞர்களின் காதில் புகை. அந்தப் பெண்ணுக்காகத்தான் முக்கியமான வசனங்களைக் கூட கமல் ஆங்கிலத்தில் பேசுகிறார் என்று பின்னர் புரிந்தது.

    காரை விட்டிறங்கிய ஒரு அமெரிக்க தாத்தா நேராக என்னை நோக்கி தள்ளாடித் தள்ளாடி வந்து, “எக்ஸ்க்யூஸ்மீ.” என்றார். உலக நாயகனுக்கு இவ்வளவு மவுசா என்று நான் வியந்து கொண்டே, “வரிசை தொலைவில் ஆரம்பிக்கிறது. இன்னும் பின்னால் போங்க.” என்று சொல்ல வாயெடுத்தேன். அதற்குள் எனக்கு முன்னால் நின்றிருந்த ஆள் வழி விடவே, அவர் அந்த வராண்டாவில் இருந்த தபால் பெட்டியில் கடிதத்தை போஸ்ட் பண்ணி விட்டு, வழி விடாத எனக்கும் சேர்த்து நன்றி சொல்லி விட்டு மறைந்தார்.

    மணி பத்தான பின்னும் கதவு திறக்காததால் அகில், “என்னப்பா ஒன்பதே முக்கால் ஷோன்னு சொன்னீங்க?” என்றான். அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசிப்பதற்குள் நல்ல வேளை சொர்க்க வாசல் திறந்தது.

    இருட்டான கொட்டகைக்குள் நுழையும்போது ஹிந்தி பட ட்ரெயிலர் திரையில் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாரும் இருக்கை பிடித்து அமர்ந்த பின்தான் இதெல்லாம் ஒரு கூட்டமே இல்லை என்று புரிந்தது. பாதி தியேட்டர் கூட நிரம்பவில்லை.

    சாவகாசமாய் படம் துவங்கி டைட்டில் கார்டு போட ஆரம்பிக்க, கமலுக்கும், ஸ்ருதிக்கும் மட்டும் சப்பையாய் கை தட்டினார்கள். அதற்கப்புறம் ஒரு குழந்தை அழுத சப்தம் தவிர பெரிதாய் ரியாக்’ஷன் இல்லை.

    இடைவேளையில் மெக்சிகோ நாட்டுக்காரியின் கையால் சமோசா வியாபாரம் அமோகமாய் நடந்தது. மீடியம் கோக்… நாலரை டாலர். இரவு பனிரெண்டே கால் மணி போல படம் முடிந்தது.

    Netflix ஸ்ட்ரீமிங் மீடியாவில் A Wednesday நாலைந்து முறை பார்த்து விட்டதால் இந்தப் படம் புதிதாய் பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. தமிழுக்கு இப்படி ஒரு படம் அவசியம்தான் என்று மட்டும் மனசில் பட்டது.

    ரொம்ப நாள் கழித்து பல நண்பர்களை அங்கே குடும்பத்தோடு சந்தித்தேன். படம் முடிந்து வெளியே வந்த பிறகு நாங்கள் எல்லோரும் தியேட்டர் வாசலிலேயே உட்கார்ந்து அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ஏழெட்டு குடும்பங்கள்! குழந்தைகள் அந்த அர்த்த ராத்திரியில் ஜாலியாய் ஓடிப் பிடித்து விளையாடின.

    நன்றி கமல் ஸார்.

    - சத்யராஜ்குமார்

     
    • என். சொக்கன் 10:29 பிற்பகல் on செப்டம்பர் 25, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      //அந்தப் பெண்ணுக்காகத்தான் முக்கியமான வசனங்களைக் கூட கமல் ஆங்கிலத்தில் பேசுகிறார் என்று பின்னர் புரிந்தது//

      :) )))

      ஒரு சின்ன யோசனை –> Comments link topலமட்டும் இருக்கிறது டெம்ப்ளேட் பிரச்னைன்னு புரியுது, ஆனா பலர் அதைக் கவனிக்காம போயிட வாய்ப்பு உண்டு. பேசாம ஒவ்வொரு போஸ்ட்லயும் கீழ ஒரு வரி நீங்களே காபி – பேஸ்ட் செஞ்சுடலாமே – இன்னும் அதிகப் பேர் கருத்துச் சொல்வார்கள், அந்தப் புண்ணியத்தால் உங்களுக்கு அடுத்த கமல் படத்தில் ஒரு சின்ன வேஷம்கூட கிடைக்கலாம்!

      • சத்யராஜ்குமார் 11:11 பிற்பகல் on செப்டம்பர் 25, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        சொக்கன், நீங்கள் சொல்வது சரி. இந்த டெம்ப்ளேட் மாற்றிய பிறகு கருத்து சொல்வது குறைந்துள்ளது. குழுவாக பதிவு செய்ய இந்த வார்ப்புருதான் (ஹையா தமிழ்!) சரியாக இருக்கிறது. உங்கள் அருமையான யோசனையை செயல்படுத்த முயன்றேன். வேலை செய்யவில்லை. ஜாவாஸ்க்ரிப்டினால் காண்பிக்கப்படும் கருத்துப் பெட்டிக்காக அந்த லின்க்கில் dyanamic-ஆக ஒரு எண் சொருகப்படுகிறது. வேறு வழி இருக்கிறதா என்று பார்க்கிறேன்! கமல் படத்தில் சான்ஸ் கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை போலிருக்கு. :-)

    • அறிவிலி 10:59 பிற்பகல் on செப்டம்பர் 25, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      போச்சுரா… இன்னோரு உ.போ.ஒ விமர்சன்மா என்று வநதேன். நல்ல வேளை, படத்தை பத்தி நெறைய எழுதாம, உங்க அனுபவத்த எழுதிருக்கீங்க. :-)

    • subhashree 12:46 பிற்பகல் on செப்டம்பர் 26, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      oh..nothing about mr.mohanlal…so sad..anyway nice description…i enjoyed especially ..kamal is talking in english for that beautiful girl..ha..ha..ah…good…u remind me too much of mr.sujatha….

      • சத்யராஜ்குமார் 10:08 பிற்பகல் on செப்டம்பர் 26, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        சுபஸ்ரீ, மோகன்லாலும் சரி, அந்த இளம் அதிகாரிகளும் சரி அருமையாக நடித்திருந்தார்கள். சலங்கை ஒலியில் கமலை குதிக்க வைத்து தாறுமாறாக போட்டோ எடுத்து விட்டு, ”அய்யே காலு! இது தலை!” என்று வழியும் குண்டு பையன்தான் படத்தின் இயக்குனராமே!

    • ila 1:52 பிற்பகல் on செப்டம்பர் 26, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நாங்க ஏழு பேர் தான் இருந்தோம்,. முதல் நாள்

      • சத்யராஜ்குமார் 10:10 பிற்பகல் on செப்டம்பர் 26, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        இளா, வியாழக்கிழமை ராத்திரி படம் பார்க்க கூட்டம் கூடுவது கொஞ்சம் சிரமம்தான். :-( பொதுவாக கமல், ரஜினி படங்களை கூட்டமில்லாத தியேட்டரில் பார்ப்பது அத்தனை சுவாரஸ்யமாக இருக்காது, இல்லையா?

    • REKHA RAGHAVAN 8:01 மு.பகல் on செப்டம்பர் 27, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      //பொறுப்பான மனைவி பிளாஸ்டிக் பேகில் வைத்திருந்த கட்டுச் சோற்றை தியேட்டர்காரன் உள்ளே விடுவானா என கவலையோடு கேட்டுக் கொண்டிருந்தார்.//

      இந்த வரிகளை ரசித்தேன். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. அவர் செய்கிற அங்க சேஷ்டைகளுக்காகவே விரும்பி போவதால் கதை இல்லாவிட்டாலும் பரவாயில்லை எனக்கு.

      ரேகா ராகவன்.

      • சத்யராஜ்குமார் 10:27 மு.பகல் on செப்டம்பர் 27, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        ரேகா ராகவன், ஷங்கர் படத்துக்கு நிகரான சுவாரஸ்யமான கதையும், எக்ஸ்ட்ரா பிட்டிங் இல்லாத திரைக்கதையும் படத்தில் உண்டு.

    • டைனோ 9:13 மு.பகல் on செப்டம்பர் 29, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      >>>பொறுப்பான மனைவி பிளாஸ்டிக் பேகில் வைத்திருந்த கட்டுச் சோற்றை தியேட்டர்காரன் உள்ளே விடுவானா<<>>அந்தப் பெண்ணுக்காகத்தான் முக்கியமான வசனங்களைக் கூட கமல் ஆங்கிலத்தில் பேசுகிறார்<<>>போஸ்ட் பண்ணி விட்டு, வழி விடாத எனக்கும் சேர்த்து நன்றி <<>>நல்ல வேளை சொர்க்க வாசல் திறந்தது. <<>>ஒரு குழந்தை அழுத சப்தம் தவிர பெரிதாய் ரியாக்’ஷன் இல்லை<<<

      பஞ்ச் இல்லாம முடிச்சது!

      உங்க க்ராப்டை சிலாகிக்காம படிக்க முடியல… நல்ல எழுத்துங்க உங்களுக்கு!

    • RaviSuga 10:18 மு.பகல் on செப்டம்பர் 29, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நகைச்சுவையாக எழுதியுள்ளிர்கள், அருமை.

    • Sentil 1:32 பிற்பகல் on செப்டம்பர் 30, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      “காரை விட்டிறங்கிய ஒரு அமெரிக்க தாத்தா நேராக என்னை நோக்கி தள்ளாடித் தள்ளாடி வந்து, “எக்ஸ்க்யூஸ்மீ.” என்றார். உலக நாயகனுக்கு இவ்வளவு மவுசா என்று நான் வியந்து கொண்டே, “வரிசை தொலைவில் ஆரம்பிக்கிறது. இன்னும் பின்னால் போங்க.” என்று சொல்ல வாயெடுத்தேன். அதற்குள் எனக்கு முன்னால் நின்றிருந்த ஆள் வழி விடவே, அவர் அந்த வராண்டாவில் இருந்த தபால் பெட்டியில் கடிதத்தை போஸ்ட் பண்ணி விட்டு, வழி விடாத எனக்கும் சேர்த்து நன்றி சொல்லி விட்டு மறைந்தார்.”

      Dear Satya, As I read the title, am very sure you would have captured many special incidents happened around you during the movie other than the movie itself. As expected you have sincerely done it. Very hilarious.

      • சத்யராஜ்குமார் 6:25 பிற்பகல் on செப்டம்பர் 30, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        செந்தில், ஒரு திரைப்படத்தை வீட்டில் DVD-யில் பார்ப்பதற்கும், தியேட்டரில் பார்ப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசம் சுற்றி நடக்கும் சுவாரஸ்யங்கள்தான். அவசர வாழ்க்கை, பொருளாதாரம் போன்றவற்றால் இழக்கும் பலவற்றில் அதுவும் ஒன்று. உங்கள் கருத்துக்கு நன்றி!

  • சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 2 

    சத்யராஜ்குமார் 8:31 pm on September 14, 2009 நிரந்தர பந்தம் | பதில்

    சாவி, இதயம் போன்ற பத்திரிகைகளில் என் சிறுகதைகள் வெளிவர ஆரம்பித்த சமயம். நான் கோவையில் சேரன் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கிருந்த என் உறவினர் ஒருவர் நான் கதைகள் எழுதுவதை அறிந்து, ‘உங்களுக்கு பூங்கோதை தெரியுமா?’ என்று கேட்டார். பத்திரிகையாளர். சிறுகதைகள், புத்தகங்களும் எழுதியிருக்கிறார். பிற்காலத்தில் தொலைக்காட்சிகளில் தோன்றி குடும்ப நல ஆலோசனைகள் வழங்குவதைப் பார்த்ததுண்டு.

    ‘தெரியும்.’

    ‘அவரை சந்திச்சுப் பேச இஷ்டமிருந்தா சொல்லுங்க.’ என்றார்.

    ஒரு மாலை நேரம் ஆபிஸ் முடிந்ததும் சாயிபாபா காலனியிலிருந்த பூங்கோதையின் வீட்டுக்கு அழைத்துப் போனார். அவரை முன்னமே ஓரிரு சந்தர்ப்பங்களில் பிற இடங்களில் பார்த்திருந்தாலும், அந்த பத்தொன்பது வயதில் ஒரு எழுத்தாளனாக, எனக்கென்ற ஒரு தனி அடையாளத்தோடு போய் சந்திப்பது கொஞ்சம் பெருமிதமாய் இருந்தது.

    கம்பீரமான குரலில் பேசுவார். பேச்சில் தன்னம்பிக்கை இருக்கும். இன்ட்டெலக்ச்சுவல் தோற்றம்.

    அந்த சமயத்தில் எப்போதும் என் கையில் ஒரு புதிய சிறுகதை இருக்கும். படித்து அபிப்ராயம் சொல்வதற்காக அவரிடம் கொடுத்தேன். சிறுகதையை வாசித்து முடித்தவர், ”சிறுகதையின் வெற்றி படிச்சு முடிச்சவுடன் அது தரும் இம்ப்பாக்ட்டில் இருக்கு. இந்தக் கதையின் samsமுடிவில் இன்னும் கொஞ்சம் இம்பாக்ட் இருந்தா நல்லா இருந்திருக்கும்.” என்றார். இதைத் தவிர சிறுகதையின் முக்கிய திருப்பமாக ஒரு கதாபாத்திரம் இறந்து போவதற்கு வலுவான காரணங்களை கதையின் முன் பகுதியில் நான் குறிப்பிடாததையும் சுட்டிக் காட்டினார். அதுகாறும் பிரசுரமாகியிருந்த நாலைந்து சிறுகதைகளை எழுதிய போது அது தரும் தாக்கத்தைப் பற்றியோ, சம்பவங்கள் குறித்த தர்க்கத்தைப் பற்றியோ நான் யோசித்ததில்லை.

    அன்றைக்கு வீட்டுக்குப் போனதும் பிரசுரமான கதைகளையும், பிரசுரமாகாமல் திரும்பி வந்த கதைகளையும் படித்துப் பார்த்தேன். பிரசுரமான கதைகளில் இயல்பாகவே லாஜிக் சரியாக இருந்தது. கதையில் நல்ல இம்பாக்ட் இருந்தது. பிரசுரிக்க இயலாத கதைகளில் இயல்புத்தன்மை இல்லை. அல்லது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கரு இல்லை.

    பூங்கோதையின் ஆலோசனைகளுக்கேற்ப கதையை மாற்றி எழுதிய பின், திரு வலம்புரிஜான் ஆசிரியராக இருந்த தாய் வார இதழில் அக்கதை பிரசுரமானது. அதற்கப்புறம் பல வருஷங்களுக்குப் பின் குமுதம் நடத்திய மாவட்ட சிறுகதைப் போட்டி வளாகத்தில் எழுதுபவர் மத்தியில் ஓரளவு அறியப்பட்ட எழுத்தாளனாக அவரை மீண்டும் சந்தித்தேன். போட்டியில் பங்கு பெற வந்திருந்த லேகா ரத்னகுமார் உள்ளிட்ட அவர் தோழிகள் சிலருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

    இந்த சந்திப்புகளில் என்ன சர்ப்ரைஸ்? அது இனிமேல்தான் வருகிறது. இங்கே அமெரிக்காவில் சுமார் நான்கு வருஷங்களுக்கு முன்பு ஸாம்ஸ் க்ளப் என்னும் மொத்த அங்காடியில் உணவுப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது என் எதிரே ஒரு ஷாப்பிங் கார்ட்டை தள்ளிக் கொண்டு வந்தார் பூங்கோதை.

    அவருக்கு என்னை அடையாளம் தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. நானே அவர் முன்னால் போய் நின்று, ”நீங்க பூங்கோதைதானே?” என்றேன். கடைத் தெருவில் தெரிந்தவர்களை எதேச்சையாய்ப் பார்ப்பது நம் ஊரில் அதிசயமில்லை. ஆனால் பத்தாயிரம் மைல்களுக்கப்பால் அமெரிக்காவில் ஒரு சிறு நகரத்தில் இந்த மாதிரி சந்திப்பது ஒரு மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சி!

    அதற்கப்புறம் பேமிலி கெட்-டு-கெதர்களில் அவ்வப்போது சந்தித்துக் கொள்கிறோம். பத்திரிகைகளுடனான தொடர்புகள் தற்சமயம் முற்றிலுமாக இல்லை என்றார். என்னைப் போலவே!

    - சத்யராஜ்குமார்


    சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 1


     
    • REKHA RAGHAVAN 1:30 மு.பகல் on செப்டம்பர் 15, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      //பத்தாயிரம் மைல்களுக்கப்பால் அமெரிக்காவில் ஒரு சிறு நகரத்தில் இந்த மாதிரி சந்திப்பது ஒரு மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சி!//
      உண்மைதான். அடிக்கடி சந்திப்பதை விட சிறிது இடைவெளியில் நண்பர்களை சந்திப்பதில் உள்ள கிக் இருக்கிறதே அதை வார்த்தைகளில் வடித்துவிட முடியாது. அருமையான பதிவு.

      ரேகா ராகவன்.

  • டூ லேட் 

    சத்யராஜ்குமார் 9:50 pm on September 5, 2009 நிரந்தர பந்தம் | பதில்
    குறிச்சொற்கள்: சந்திப்பு

    சமீபத்தில்தான் என் கதைகளைப் படிக்க ஆரம்பித்த செந்தில் என்னை நேரில் சந்திக்க வேண்டும் என்று விரும்பினார். எழுத்தாளர் சித்ரனுடன் பல வருஷங்களுக்கு முன் வேலை பார்த்தவர். தற்சமயம் நியூஜெர்சியில் இருக்கிறார்.

    வயலினிஸ்ட். பரத நாட்டிய கலைஞர். பல முறை அரங்கேறியிருக்கிறார். எனக்கும் அவரை சந்தித்துப் பேசும் ஆர்வமிருந்தது. அவருடைய கலை அனுபவங்கள் குறித்து விரிவாக பேசலாம் என்று எண்ணியிருந்தேன்.

    சம்பவ இடத்தில் எடுத்த படம்

    சம்பவ இடத்தில் எடுத்த படம்


    சென்ற சனிக்கிழமை காலையில் பத்து மணிக்கு என் வீட்டில் சந்திக்கலாம் என்று முடிவாகியிருந்தது. ஆறு மணிக்கு நியூஜெர்சியில் கிளம்பினார். புறப்பட்ட போது நன்றாக இருந்த வானிலை பத்தே நிமிஷத்தில் தலை கீழாக மாறி விட்டது. பயங்கர மழை.

    வழியில் ஒரு ப்ரிட்ஜுக்கடியில் தேங்கியிருந்த தண்ணீரில் மாட்டிக்கொண்டார். 911 அவசர கால சேவையை அழைத்தும் புண்ணியமில்லை. சில மணி நேர அவஸ்தைக்குப் பின் செல்போன், பர்ஸ் போன்ற முக்கிய பொருட்களை பிளாஸ்டிக் பையில் அள்ளிக் கொண்டு ஜன்னல் கண்ணாடியை இறக்கி தண்ணீருக்குள் பாய்ந்தார். நீந்திக் கரை சேர்ந்திருக்கிறார்.

    அதன்பின் ஒரு வாடகைக் கார் பிடித்து இரண்டு மணிக்கு என்னை வந்து சந்தித்தவர், இத்தனை களேபரத்தையும் விவரித்த போது ஒரு த்ரில்லர் படிக்கிற மாதிரி இருந்தது. அவசரகால சேவையை அழைத்தால் போதும், சூப்பர்மேன் போல உடனே யாரும் பறந்து வந்து நம்மைக் காப்பாற்றி விட மாட்டார்கள் என்ற உண்மை விளங்கியது. கொஞ்சமேனும் கொஞ்சம் நீச்சல் தெரிந்து வைத்திருப்பது எவ்வளவு முக்கியமென்றும் புரிந்தது.

    வழக்கம் போல இந்தச் சம்பவத்தை சுற்றி ஒரு கற்பனை கோட்டிங் அடித்து ‘டூ லேட்’ என்று ஒரு சிறுகதை எழுதி விட்டேன். இந்த சிறுகதை ஏனோ எனக்கே கொஞ்சம் பிடித்திருந்தது. உங்களுக்கு எப்படியோ!


    டூ லேட்

    சிறுகதை

    ~ சத்யராஜ்குமார் ~


    அவர் என்னை நம்பினாரா என்று தெரியவில்லை. இருந்தாலும் நடந்த உண்மைகளை சொல்லித்தானே ஆக வேண்டும்.

    வெட்கமாயிருந்தது. அமெரிக்கா வந்த பின்னும் இண்டியன் பங்ச்சுவாலிட்டி. ஹெட்மாஸ்டர் தங்கதுரையின் அறுக்கும் பார்வையை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    யார்க், பென்சில்வேனியாவில் காலை பத்து மணி்க்கு அவரை சந்திப்பதாக இருந்தது. இப்போது மணி மத்தியானம் இரண்டு.

    ”இன்னும் திருந்தலையா நீ?”

    ….

    தொடர்ந்து படிக்க…


     
    • பினாத்தல் சுரேஷ் 10:03 பிற்பகல் on செப்டம்பர் 5, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      சம்பவத்தை இங்கே சொல்லிவிட்டீர்கள், கதை அதையே ரிப்பீட் செய்வது போரடித்தது, கடைசி வரி வரை!

    • இலவசக்கொத்தனார் 10:34 பிற்பகல் on செப்டம்பர் 5, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      தலைவர் பெனாத்தல் சொன்னதுக்கு ரிப்பீட்டே!!

      பதில் என்னும் சுட்டி மேல இருக்கு. படிச்ச பின் சொடுக்க வசதியா கீழ இருக்க வேண்டாமோ.

      • சத்யராஜ்குமார் 10:43 பிற்பகல் on செப்டம்பர் 5, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        பெனாத்தல் சொன்னது குட் பாயிண்ட். அதற்கப்புறம் ஏகதேச வரிகளை பதிவிலிருந்து நீக்கி விட்டேன். :-)

        /பதில் என்னும் சுட்டி மேல இருக்கு./
        சரசுராம், சித்ரன் என்று எல்லோரும் இங்கே எழுதுவதால் எந்தப் பதிவை யார் எழுதினார்கள் என தெளிவாய்க் காட்டும் இந்த டெம்ப்ளேட் வசதியாக இருக்கிறது.

        • சித்ரன் 11:22 மு.பகல் on செப்டம்பர் 6, 2009 நிரந்தர பந்தம்

          இனிமேல், ஒரு குறிப்பிட்ட நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறுகதையின் முன்னுரையாக/அறிமுகமாக அந்த நிகழ்வு என்ன என்று சொல்லாமல் ஒரு சஸ்பென்ஸோடு லிங்க் கொடுத்தால் சரியாக வருமா என்று பாருங்களேன். அப்புறமாய் கதையைப் படிக்கும்போது புதிதாக ஒரு சுவாரஸ்யம் வரும்.

          கதையின் முடிவு எதிர்ப்பார்க்க முடியாமல் வழக்கமான உங்கள் டச்.

          சித்ரன்
          http://chithran.com

        • சத்யராஜ்குமார் 2:53 பிற்பகல் on செப்டம்பர் 8, 2009 நிரந்தர பந்தம்

          சித்ரன் , அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் சில சமயம் எதிர்மறையான உண்மை சம்பவங்களை கதையாக எழுதும்போது நிகழ்வில் சம்பந்தப்பட்டவர் மனம் வருந்தாதிருக்க சில விளக்கங்கள் அளிக்க முயல்கையில் சறுக்கி விடுகிறது. ‘பாண்டேஜ்’ சிறுகதை எழுதும்போதும் இது நேர்ந்தது. தவிர்க்க முயல்கிறேன்.

    • REKHA RAGHAVAN 3:15 மு.பகல் on செப்டம்பர் 6, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நிகழ்வை கேட்டு அதை வேறு களத்தில் கொண்டு சென்று உங்கள் பாணியில் நச்சுன்னு முடிச்சிருப்பது மிகவும் அருமை.

      ரேகா ராகவன்.

    • என். சொக்கன் 1:16 மு.பகல் on செப்டம்பர் 7, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      ரொம்ப நாளைக்குப்பிறகு ஒரு ‘நச்’ கடைசி வரித் திருப்பம் – அசத்திட்டீங்க சத்யராஜ்குமார்!

      ‘டூ லேட்’ங்கற தலைப்புக்கு இப்போ வேறொரு அர்த்தம் தோணுது – ரொம்ப நன்றாக எழுதப்பட்ட கதை, பாராட்டுகள் :)

      - என். சொக்கன்,
      பெங்களூர்.

      • K.B.Janarthanan 4:51 மு.பகல் on செப்டம்பர் 7, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        ‘கொஞ்சம் நிஜம்’ உண்மையிலேயே கொஞ்சம் அதிர்ச்சி தான். ‘கொஞ்சம் கதை’ அதைத் தூக்கிச் சாப்பிடுவதாக இருந்தது. பிசகாத வினாடி பிரம்பு வாத்தியாரிடம் வசமாக மாட்டிக் கொள்வதாக ‘பின்னி’ட்டீங்க சார்! Too good! – கே. பி. ஜனார்த்தனன்

        • சத்யராஜ்குமார் 6:01 மு.பகல் on செப்டம்பர் 7, 2009 நிரந்தர பந்தம்

          தங்கள் மின்னஞ்சலுக்கும் டூ லேட் கதை பற்றிய கருத்துக்கும் நன்றி. உங்கள் வார்த்தை பிரயோகங்களை ரசித்தேன். :-)

      • சத்யராஜ்குமார் 6:02 மு.பகல் on செப்டம்பர் 7, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        சொக்கன், நன்றி. சித்ரனும் தலைப்புக்கு வேறு அர்த்தங்கள் கண்டு பிடித்துச் சொன்னார் :-)

    • Sentil 11:03 மு.பகல் on செப்டம்பர் 8, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      Thanks for another good story. Your title and story ending reminded me, the kovai traffic campaign during 90’s.
      “Better to be Mr. Late than being Late Mr.”

    • தகடூர் கோபி 7:55 மு.பகல் on செப்டம்பர் 10, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      கலக்கீட்டிங்க! கதை சூப்பர்…

      உங்க கிட்ட இருந்து த்ரில்லர் கதை எனக்கு ரொம்ப புதுசு…

      வினையூக்கி எழுதிய பேய் கதைகள் அருமையா இருக்கும். நேரமிருந்தா படிச்சுப் பாருங்க.

      • சத்யராஜ்குமார் 6:35 மு.பகல் on செப்டம்பர் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        நன்றி கோபி. நான் ஸ்பெஷலைஸ் (?!) பண்ணிட்டிருந்ததே த்ரில்லர்ஸ் மற்றும் க்ரைம் கதைகள்தான் :-) அவை தீண்டத்தகாத வடிவங்களாய் பார்க்கப்படுவதால் அவ்வளவாக வலையேற்றவில்லை. இப்போது தெனாலியில் எழுதிவரும் SMS க்ரைம் தொடரை நேரமிருந்தால் பாருங்கள்.

        • தகடூர் கோபி 6:45 மு.பகல் on செப்டம்பர் 14, 2009 நிரந்தர பந்தம்

          ஓ..! நான் உங்க அமெரிக்க வாழ்வு சார் கதைகளை மட்டுமே வலையில் படித்ததால் உங்க ஸ்பெஷலைசேஷன் என்னன்னு தெரியாம போச்சி…

          எனக்கு த்ரில்லர்னா பயம் என்பதால் அதிகமாய் த்ரில்லர்/க்ரைம் கதைகள் படிக்கறதில்லை. திரைப்படங்கள் கூட Happy Ending ன்னா மட்டும் தான் பார்ப்பேன். :-)

          உங்கள் தெனாலி SMS தொடர் சுட்டியை கூகிளாண்டவர் துணையுடன் தேடிப் பிடித்தேன்: http://www.thenaali.com/thenaali.aspx?A=984 இது வரைக்குமே 27 பகுதிகளாயிடுச்சா! கொஞ்சம் கொஞ்சமா படிச்சி முடிச்சிடுறேன்.

          SMS மூலம் எழுதுவது என்பது புதிய முயற்சிதான்.

          தப்பா நினைக்கலைன்னா ஒரு கேள்வி.. செல்பேசி மூலம் பதிவிடுவது சாத்தியம் எனத் தெரியும். ஆனால் தமிழிலேயே எழுதி SMS அனுப்பிடுவீங்களா? இல்லை ஆங்கிலத்தில் நீங்க அனுப்புவதை தமிழில் மாற்றி பதிவிடுகிறார்களா?

        • சத்யராஜ்குமார் 5:36 மு.பகல் on செப்டம்பர் 15, 2009 நிரந்தர பந்தம்

          இல்லை கோபி, செல்போனில் அக்கதையை வெளியிடுவதாக சொல்லப்பட்டது.

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
திருத்து
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
வேண்டாம்