ஆலங்கட்டி மழை

செப்டம்பர் 28, 2007

Hailstorm in chennai

நேற்று மதியம் தடதடவென இரைச்சலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. ரொம்ப நாட்களுக்குப் பிறகு காணக் கிடைக்கிற காட்சி. அலுவலகத்தில் எல்லோரும் அவரவர் வேலையை விட்டுவிட்டு பால்கனிக்கு ஓடி வானத்திலிருந்து கொட்டுகிற ஐஸ் கட்டியைப் பள்ளிக் குழந்தைகளின் உற்சாகத்துடன் பொறுக்க ஆரம்பித்து விட்டார்கள். அடுத்தவரின் சட்டைக்குள் ஐஸ் கட்டிகளைப் போட்டு நெளிய வைத்து சிறிது நேரம் விளையாட்டு தொடர்ந்தது. சில்லென்று உற்சாகம் பிறந்துவிட்டது எல்லோருக்கும். பால்கனித் தாவரங்கள் மழையில் நனைந்து குளிர்ந்து சிலிர்த்தன. தெருவெங்கும் வெள்ளை முத்துக்கள் சிதறிப் பரவின. ஆலங்கட்டி மழையோடு அனைவரின் சந்தோஷக் குரல்களும் கலந்து கரைந்தன.

சாரலில் நனைந்த சட்டையுடன் இருக்கைக்குத் திரும்பினபோது மனது குளிர்ந்திருந்தது.

பி.கு: An official in the climatology section said that Chennai had never recorded a hailstorm - என்று ஹிண்டுவில் போட்டிருக்கிறார்கள்.

குழு

செப்டம்பர் 16, 2007

ஆபிஸில் விநாயக சதுர்த்தி கொண்டாட முடிவு செய்யப்பட்டு சுறுசுறுப்பாக வேலை நடந்தது. நகைகள், கிரீடம், ஆயுதங்கள் மட்டும் தங்கநிற முலாம் பூசப்பட்ட அழகான ஒன்றரை அடி உயர விநாயகர் மண் சிலை எருக்கு மாலை சகிதம் கொணரப்பட்டது. ஒரு சின்ன மேடை அமைக்கப்பட்டு தலைக்குமேல் கலர் பேப்பர் பரிவட்டக் குடையுடன் விநாயகர் அமர்ந்தார். Ganesh Caturthi at Officeவாழைக்கன்றுகள் வந்தன. தாமரை, ரோஜா, சாமந்தி, வாடாமல்லி என வெரைட்டியாய் பூக்கள் கொண்டு அமர்களமாய் போடப்பட்ட ரங்கோலியைச் சுற்றிலும் அகல் விளக்குகள் ஒளிர்ந்தன. இருபுறமும் குத்துவிளக்குகளின் சுடரொளி.

வாசலில் மாவிலை தோரணம் கட்டப்பட்டது. கலர் ரிப்பன்கள் சுவரில் நெளிந்தன. வாழையிலைப் படையலில் வீட்டில் அம்மாக்களை தொந்தரவு செய்து கொண்டுவந்த இனிப்புக் கொழுக்கட்டை, கொண்டைக்கடலை சுண்டல், கேசரி. அப்புறம் பொரி, பொட்டுக்கடலை, தேங்காய், பழம், ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய், கரும்பு, மக்காச்சோளம், வெற்றிலை, பாக்கு, குங்குமம், சந்தனம், திருநீறு. தேங்காய் உடைத்து, கற்பூர ஜ்வாலையில் கேமரா மொபைல்களும், டிஜிடல் கேமராக்களும் கிளிக்க, சதுர்த்தி இனிதே நிறைவேறியது.

Team building exercise என்ற வகையில் அலுவலகத்தில் ஒவ்வொரு குழுவையும் ஜோஹரி விண்டோ (Johari Window), டக்மேன் மாடல் (Tuckman Model) என்று மீட்டிங் போட்டு விளக்கிப் பேசி வரட்டிப் புரட்டி எடுத்ததற்கு ஏதாவது பிரயோஜனம் வேண்டாமா?

மூலாதாரக் கடவுள் பெயரில் ஒரு அருமையான டீம் ஒர்க்.

தினம் அலுவலகத்துக்கு வந்தோம். வேலை செய்தோம். வீட்டுக்குப் போனோம் என்றில்லாமல் வார இறுதியில் சக ஊழியர்களுக்கு ஒரு திரைப்படம் காட்டினேன். ஒரு சின்ன ஏ.ஸி அறையில் சாதாரண CRT மானிட்டர், External DVD writer, டெஸ்க் டாப் ஸ்பீக்கர்கள் உபயத்தில் படம் திரையிடப்பட்டு வெள்ளிக் கிழமையின் மாலை உற்சாகமாய் இருந்தது.

காண்பிக்கப்பட்ட படம் 1971-ல் வெளிவந்த ஸ்பீல்பெர்க்கின் “Duel“. அமெரிக்காவின் ஏதோ ஒரு மலைப்பாதையில் தனியாக காரில் பயணிக்கும் ஒரு நடுத்தர வயது ஆசாமியை ஒரு ஹைவே சைக்கோ என்ன பாடு படுத்தினான் என்பதுதான் இருக்கை நுனியில் அமரவைக்கும் கதைக் கரு. இதை 17 பேர் ஆர்வமாய் அங்கே இங்கே நகராமல் பார்த்தார்கள்.

“பிலிம் காட்டுபவன்” என்கிற பெயர் அலுவலகத்தில் எனக்கு கிடைத்திருக்கிறது இப்போது.