RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • சித்ரன் 10:53 am on August 14, 2009 நிரந்தர பந்தம் | பதில்
    குறிச்சொற்கள்: ஆரோக்கியம், , பன்றிக் காய்ச்சல், மருத்துவம், swine flu   

    ஆறாங்கிளாஸில் ஃபெயிலான பன்றிக் காய்ச்சல் 

    maskமெக்ஸிகோ பன்றிகளிடமிருந்து ஏற்றுமதியாகி பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு இந்தியாவில் இறக்குமதியாகி இருக்கும் swine flu (எ) பன்றிக் காய்ச்சல் சமீபமாய் பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது சென்னையில். விளைவு: பள்ளிகளுக்கு விடுமுறை, பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவும் என்கிற எச்சரிக்கை, முகத்தில் திடீர் மாஸ்க்குகள். தொலைகாட்சிகளில் ஸ்க்ரால் நியூஸில் இடைவிடாமல் இதைப் பற்றிய செய்திகள். தினப்பத்திரிக்கைகளில் பக்கத்துக்குப் பக்கம் ப்டம் போட்டு விளக்கங்கள். மக்களைக் கொஞ்சம் உஷார்படுத்தி, கொஞ்சம் குழப்பி, கொஞ்சம் பயமுறுத்தி, கொஞ்சம் விஷய ஞானமூட்டும் அரசாங்க அறிக்கைகள்.

    மாஸ்க் அணிந்த ஊரில் வெறும் மூஞ்சிக்காரன் முட்டாள் என்கிற மாதிரி ஆகிவிட்டது முகமூடி அணியாதவர்களின் நிலைமை. 50 பைசா என்று விற்றுக் கொண்டிருந்த மாஸ்க் பத்து பதினொன்று என்று போய்க்கொண்டிருக்கிறது. வியாதி, பீதி, நீதி என்று எதுவாக இருந்தாலும் அதை அரசியலாகவோ, வியாபாரமாகவோ அதி அற்புதமாய் மாற்றத் தெரிந்த மனிதர்கள் நிரம்பிய நாட்டில் ‘டாமிப்ளூ’வும் மாஸ்குகளும் பதுக்கப்பட்டு தட்டுப்பாடாகி கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு வருகிற நிலைமையும் ஏற்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். ‘வரும்முன் காப்போம்’ என்பது இவர்களுக்காகவே சொல்லப்பட்டதோ என்னவோ!

    பன்றிக் காய்ச்சல் வராமலிருக்க வழி என்கிற வகையில் மின்னஞ்சலாகவும் குறுஞ்செய்தியாகவும் ஏகப்பட்ட தடுப்பாலோசனைகள் வந்த வண்ணம் உள்ளன. எதைப் பின்பற்றினால் அதிக பலன் என்ற குழப்பம் தெளியாத நிலையில் இதோ அவற்றில் சில:

    1. அதிகாலையில் வெறும் வயிற்றில் இரு ஸ்பூன் வெல்லத்தை தண்ணீரில் கரைத்துக் குடித்தல் மற்றும் இரவு படுக்கைக்கு முன் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூளை அரை தம்ளர் பாலில் கலந்து விழுங்குதல் என்பதை அன்றாடம் செய்துவந்தால் ப. காய்ச்சல் பக்கத்திலேயே வராது.

    2. பக்கத்து வீட்டின் மாடத்திலிருந்து கடன் வாங்கியாவது துளசிச் சாறு காலை மாலை இரு வேளை அருந்துவது நிச்சயம் நோய் தடுக்கும் என்பது ஒரு யோக நிபுணரின் ஆலோசனை.

    3. Calcarea Carb – 30 C என்கிற ஹோமியோபதி மாத்திரைகள் தினம் மூன்று எடுத்துக்கொண்டால் ப.கா பயமில்லாமல் இருக்கலாம்.

    4. பிரியாணியில் போடுகிற “தக்கோலம்” (என்ன சமாச்சாரம் இது? கேள்விப்பட்ட மாதிரியே இல்லை. யாருக்காவது தெரியுமா?) என்கிற சாதனத்தைப் பொடி செய்து தண்ணீரில் கரைத்துச் சாப்பிடவேண்டும். (பிரியாணியாகவே சாப்பிட்டால்?)

    5. சின்ன வெங்காயத்தைத் தட்டி நசுக்கி தினம் இருவேளை சாப்பிடலாம்.

    6. எலுமிச்சை சாறு அடிக்கடி குடித்தல்.

    7. டாபர் சவனப்ராஸ் லேகியம் ஒன்றே போதுமாம். அதிலேயே எல்லாம் இருக்கிறதாம்.

    8. மேற்கண்ட அயிட்டங்கள் கிடைக்காதவர்கள் குறைந்த பட்சம் யூக்கலிப்டஸ் திரவத்தின் ஒரு துளியை ஒரு கைக்குட்டையில் நனைத்து மூக்கில் கட்டிக் கொள்ளலாம்.

    இது தவிர இன்னும் எக்கச்சக்கமாக எச்சரிக்கைகளும் ஆலோசனைகளும் வந்து கொண்டே இருக்கின்றன. ‘இம்யூன் ஸிஸ்டம்’ எனப்படுகிற நோய் எதிர்ப்பாற்றல் என்று ஒன்று இருப்பதே பல பேருக்கு நோய் வந்தபிறகுதான் தெரிய வருகிறது. எங்களுக்கு வந்து போன சிக்குன் குனியாவின் தாக்கமே இன்னும் தீர்ந்தபாடில்லை அதுக்குள் இது வேறா என்று முட்டியைப் பிடித்துக் கொண்டு அலுத்துக்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்.

    ஊரிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் “சென்னையில் பூகம்ப எதிரொலி, சுனாமி எச்சரிக்கை” எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டு ‘பன்றிக் காய்ச்சலாமே. பாத்து இருந்துக்கோ” என்பதைத்தான் அதிகம் குசலம் விசாரிக்கின்றன.

    ‘தனக்கு ஸ்வைன் ஃப்ளூ இருக்கான்னு என்கிட்ட வர்ரவங்களுக்கு எப்படி கண்டுபிடிச்சுச் சொல்லறதுன்னும் தெரியல. இல்லன்னு திருப்பி அனுப்பவும் முடியல. இருந்தா அதுக்கு கரெக்ட்டா என்ன பண்ணனும்னு தெரியல. இந்த வியாதியைப் பத்தி அதிகமா எதுவுமே எங்களுக்குத் தெரியல. வர வர எங்க பொழப்பு ரொம்ப மோசமாயிருச்சு. எங்களையெல்லாம் டாக்டர்ன்னு சொல்லிக்கிறதுக்கே வெக்கமாயிருக்கு’ என்று ஊரில் என் உறவினரிடம் ஒரு டாக்டர் புலம்பித் தள்ளியதாகச் சொன்னார்.

    அதெல்லாம் இருக்கட்டும். இங்கே சென்னையில் ஒரு பிரபல உயர்நிலைப் பள்ளி ஒன்றில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அஞ்சாங்கிளாஸ் வரை மட்டுமே லீவு விட்டிருப்பதாக சொல்கிறார்களே அது ஏன் என்று ஒரு வாரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

     
    • ஓவியன் 11:28 மு.பகல் on ஆகஸ்ட் 14, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      //அதெல்லாம் இருக்கட்டும். இங்கே சென்னையில் ஒரு பிரபல உயர்நிலைப் பள்ளி ஒன்றில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அஞ்சாங்கிளாஸ் வரை மட்டுமே லீவு விட்டிருப்பதாக சொல்கிறார்களே அது ஏன் என்று ஒரு வாரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்//

      ஆறாம் வகுப்பிற்கு மேல் உயிரை கொடுத்தான் படிக்க வேண்டுமோ என்னவோ?

    • சத்யராஜ்குமார் 12:11 பிற்பகல் on ஆகஸ்ட் 14, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      டாக்டரின் நேர்மையை பாராட்டும் அதே நேரத்தில், எந்த தைரியத்தில் ஒரு டாக்டரிடம் போவது என்று கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. :-|

    • பினாத்தல் சுரேஷ் 1:26 பிற்பகல் on ஆகஸ்ட் 14, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      இந்த லீவு சமாசாரம் பயங்கரமாய் குழப்புகிறது. மழைக்காக லீவ் என்றால் மழைவிட்டதும் தொடங்கலாம். இப்போது எப்போது தொடங்கலாம் என்று லீவ் விடுகிறார்கள்?

      டாக்டர்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது :)

    • யாத்ரீகன் 1:53 பிற்பகல் on ஆகஸ்ட் 14, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      >> ஆறாம் வகுப்பிற்கு மேல் உயிரை கொடுத்தான் படிக்க வேண்டுமோ என்னவோ? <<<

      :-) )))))))))

    • என். சொக்கன் 1:55 பிற்பகல் on ஆகஸ்ட் 14, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நல்ல பதிவு, அதைவிட நல்ல தலைப்பு, நன்றி :)

      இப்போதெல்லாம் யாராவது பலமாகத் தும்மினாலே பயமாக இருக்கிறது – பத்திரிகைகளும் டிவிகளும் இந்தப் பயத்துக்கு நன்றாகத் தீனி போடுகிறார்கள் – இவர்களுக்கு அடுத்த பரபரப்பு கிடைக்கும்வரை இது தொடரும்!

      - என். சொக்கன்,
      பெங்களூர்.

    • REKHA RAGHAVAN 1:36 மு.பகல் on ஆகஸ்ட் 15, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      இதென்னடா தலைப்பு ரொம்ப வித்தியாசமாக இருக்கிறதே என்று உள்ளே புகுந்து படித்துவிட்டு கடைசி பாராவுக்கு வந்தால் தலைப்பு வைக்கிறதில் நீங்க எங்கேயோ போயிட்டீங்கன்னு நினைக்கவச்ச அருமையான பதிவு. என்னை பொறுத்த வரை அவசியம் ஏற்பட்டாலொழிய வெளியே போவதை நிறுத்தினாலே பன்றி என்ன ஓணான் (வந்தாலும் வரும்) காயச்சல்லிலிருந்து கூட தப்பித்துவிடலாம்.

      ரேகா ராகவன்

    • படிக்காதவன் 3:16 மு.பகல் on ஆகஸ்ட் 15, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நல்ல பதிவு. நாங்கள் அலுவலகத்தில் கூட கவசம் அணிந்து தான் வேலை பார்க்கின்றோம்.

    • சித்ரன் 1:10 மு.பகல் on ஆகஸ்ட் 18, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      பின்னூட்டங்களுக்கு நன்றி. பள்ளிகள் வழக்கம்போல இயங்க ஆரம்பித்துவிட்டன. அரசாங்கத்தின் உத்தரவால் மீடியாக்கள் அடக்கி வாசிக்க ஆரம்பித்துவிட்டன. இதன் விளைவாக பீதி குறைந்து பரிசோதனை மையங்களில் கூட்டம் குறைந்திருக்க வாய்ப்புண்டு. எப்படியோ ப.கா கட்டுப்படுத்தப்பட்டு ஒழிந்தால் சரி.

      • uma 1:58 மு.பகல் on ஆகஸ்ட் 24, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        நல்ல பதிவு சித்ரன். நமக்கு வந்தால் கூட பரவாயில்லை, பிள்ளைகளுக்கு வந்துவிடக் கூடாது என்று அச்சமாகத்தான் இருக்கிறது. இன்று என் பசங்களுக்கு light fever, cold and cough. நல்ல வேளை டாக்டர் இது சாதரண காய்ச்சல் என்று சொல்லிவிட்டார். சீக்கிரம் இதற்கு எதாவது vaccination கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும்.

  • சத்யராஜ்குமார் 6:19 am on July 16, 2008 நிரந்தர பந்தம் | பதில்
    குறிச்சொற்கள்: health, shenandoah, trekking   

    மலை 

    இந்த கோடையில் இரண்டு முறை ட்ரெக்கிங் போய் வந்தாயிற்று. இறங்கும்போது குதூகலமாயிருக்கிறது. திரும்ப ஏறி வரும்போதுதான் தாவு தீர்கிறது. இருதயம் படு வேகமாய் எகிற, நிமிஷத்தில் உடம்பெல்லாம் வேர்வை மழை. ஒரு முறை போய் வந்தால் ஒரு வாரத்துக்கு தைரியமாய் சிக்கனும், டர்க்கியும், முட்டையின் மஞ்சள் கருவையும் எந்த ஒரு குற்ற உணர்ச்சியுமில்லாமல் சாப்பிடலாம்.

    இரண்டு முறையும் காமிரா கொண்டு போக மறந்து விட்டோம். இணையத்தில் தொடுப்புகள் இருக்கின்றன. Shenandoah Valley மற்றும் Fountain Head Park (கவனம். இது யூ ட்யூப் சுட்டி).

    வீட்டில் இதைப் பற்றி சிலாகிக்க முயன்றபோது – ” இதென்ன பிரமாதம் ? பழனி பாதயாத்திரையை விடவா ? ” என்று வாயடைக்கப்பட்டது.

     
  • சித்ரன் 7:00 am on October 9, 2007 நிரந்தர பந்தம் | பதில்
    குறிச்சொற்கள்: சுற்றுச்சூழல்   

    மலிவு விலை அனுபவம் 

    சென்னைவாசியாக இருக்கப்பட்ட ஜீவராசிகள் யாராவது இந்த இடத்துக்கு ஒரு முறையேனும் விஜயம் செய்திருக்காவிடில் அவர்களுக்கு நரகத்தில் “நெருக்கிப்பிழி” தண்டனை நிச்சயமாக ரிஸர்வ் செய்து வைக்கப்படும். ஏற்கெனவே அனுபவித்தவன் என்கிற வகையில் நான் அந்த தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வேன். மனிதக் குரல்களும் பாத்திர பண்டங்களின் சப்தங்களும், மேனேஜர் நாச்சிமுத்து எங்கிருந்தாலும் கிரவுண்டு ஃப்ளோருக்கு வரவும் என்று மைக் அறிவிப்புகளும், டிவியில் இடைவிடாது அலறும் விளம்பரங்களும் நிரம்பி வழியும் கூடங்கள். குவித்து வைக்கப்பட்டிருக்கும் வாழ்க்கைக்கான மலிவு விலைப்பொருள்கள். தங்கள் அரட்டை போக மிச்சமிருக்கும் நேரத்தில் கஸ்டமரை கவனிக்கும் பையன்கள். பெண்பிள்ளைகள். பாலிதீன் கவர்களில் டெலிவரி டேபிளின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குப் சறுக்கும் நாம் வாங்கிய பொருட்கள். ஐநூறு ரூபாய் தாள்களை அநாயாசமாக சரசரவென எண்ணும் கேஷியர் (பொடிப்) பையன்கள். நம் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை கண்களால் பகிரங்கமாய் சோதனை செய்யும் வாயிற்காப்போன்கள்.

    வெறும் மின்விசிறிகளுடன் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த கட்டிடம் காலப்போக்கில் நவீனமாகி குளிரூட்டப்பட்டிருக்கிறது. இம்முறை உடைகள், தோல் பொருட்கள் விற்கிற பகுதிக்குச் சென்ற போது திடீரென்று எனக்கு மூச்சு முட்ட ஆரம்பித்தது. கட்டுக்கடங்காத கூட்டத்தின் செருப்பிலிருந்து எழும் தூசு, விற்பனைப் பையன்கள் துணிகளை அடிக்கடி உதறுவதால் எழும் நெடி, மூலைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் முடை நாற்றம், இன்னபிற எல்லாம் ஏ.சியில் கலந்து மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறதாய் உணர்ந்தேன். பிராணவாயு போதவில்லை என்று தோன்றியது. பிரம்மாண்டமான pollution.

    எந்த இடம் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு “நெருக்கிப்பிழி”-யில் பத்து சதவிகிதம் தள்ளுபடி.

     
c
புதிய பதிவு எழுதுக
j
அடுத்த பதிவு / அடுத்த மறுமொழி
k
previous post/previous comment
r
பதில்
e
திருத்து
o
மறுமொழிகளை காண்பி / மறை
t
மேலே செல்க
l
புகுபதிகைக்கு செல்ல
h
உதவி காட்டு/மறை
esc
வேண்டாம்