Updates from செப்டம்பர், 2009 Hide threads | Keyboard Shortcuts

  • தடுக்கிப்பீடியா 

    சித்ரன் 8:03 am on September 1, 2009 நிரந்தர பந்தம் | பதில்
    குறிச்சொற்கள்: இணையம், சித்ரன், google, search, wikipedia

    Google T-shirt

    Google T-shirt

    முதலிலெல்லாம் எந்தச் சமாச்சாரத்தைத் தேடவேண்டுமென்றாலும் இடப்பக்கம் வலப்பக்கம் திரும்பாமல் நேராக கூகிளுக்கு போய் தட்டிவிடவேண்டியதுதான். கோடிக்கணக்கில் இறைந்து கிடக்கும் வலைப்பக்கங்களிலிருந்து நீ கேட்டது இதுதானா பார் என்று பொறுக்கியெடுத்து ஒரு கை அள்ளிக் கொணர்ந்து கூகுள் கொடுக்கும் பிரசாதத்தில் நமக்குத் தேவைப்படுகிற முந்திரிப்பருப்பு நிச்சயம் ஒன்றிரண்டாவது கிடைத்துவிடும்.

    இவ்வாறாக இட்லி, வடை என்று எதைத் தேடுவதென்றாலும் கூகிள் கை கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தது. வேறு எந்த தேடலியந்திரமும் கிட்டே நெருங்க முடியாத அளவு வளர்ச்சியடைந்து இப்போது நெ.1 என்று ஆகிவிட்டது. Search Engine என்ற வகையில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு engine பிடிக்கலாம். சிலருக்கு யாஹூ, சிலருக்கு பிங்கு (Bing). எனக்கு கூகுள் சொந்த மாமா பையன் என்பது மாதிரி உறவாகிவிட்டது.

    “Sometimes when I am alone I google myself” என்கிற வாசகத்தைத் தாங்கிய ஒரு சிவப்பு பனியனை கடையில் பார்த்தவுடனே பிடித்துப் போய், விருப்பமான உடையாய் அவ்வப்போது ரொம்ப நாளைக்கு அணிந்திருந்தேன். மேலும் என்னுடைய google talk ஸ்டேடஸ் செய்தியாக இதையே சில நாள் போட்டு வைத்திருந்தேன். ‘சில நேரம் நான் தனியாக இருக்கும் போது என்னை நானே தேடிப்பார்க்கிறேன்’ என்று அதை அர்த்தப்படித்தி வைத்திருந்தேன். தெருவில், ரயிலில், அலுவலகத்தில் என்று எதிரே வருகிறவர்களின் பார்வை என் பனியன் வாசகத்தின் மேல் படிவதை லேசாக நான் ரசிக்காமலில்லை. இதன் மூலம் நான் வாழ்வாதாரத்துக்கான உத்யோகமாய் கம்ப்யூட்டரைக் கட்டிக்கொண்டு அழுகிறேன் என்பதை எல்லோருக்கும் பிரஸ்தாபித்துவிடுகிற ஒரு தற்பெருமை. என் பனியனைப் படிக்கிற இணையம் பற்றி அறியாதவர்கள் “இன்னாதிது கூகுள்னா?” என்று புருவம் உயர்த்தவும் வாய்ப்புண்டு. Google Talk chat-ல் வந்த ’விவகாரம்’ பிடித்த நண்பரொருவர் வேண்டுமென்றே “ஒரு சின்ன சந்தேகம். google-ன்னா கெட்ட வார்த்தையா?” என்று கேட்க திடுக்கிட்டு உடனே ஸ்டேட்டஸ் செய்தியை மாற்றிவிட்டேன்.

    ஆனால் இப்போதெல்லாம் கூகிளில் எதைத் தேடினாலும் முதல் பக்கத்தில் ஒரு நான்கைந்து ஸர்ச் ரிசல்டுக்குள்ளாகவே ஒரு விக்கிப்பீடியா பக்கத்திலும் நாம் தேடுவது இருக்கிறது என்று கூகிள் காட்ட ஆரம்பித்தது. இது அடிக்கடி தொடரவே மாமா பையனுக்கு எதற்கு சிரமம் கொடுப்பானேன் என்று நேராக விக்கிப் பீடியாவுக்கே போக ஆரம்பித்துவிட்டேன். விக்கிக் பீடியா கிட்டத்தட்ட ஒரு அட்சய பாத்திரமாக ஆகிவிட்டது. எதைக்கேட்டாலும் பரமாத்மா மாதிரி எடுத்துக் கொடுக்கிறது. ஏதாவது ஒன்றைத் தேடப்போனால் தேடியது தவிர அது சம்பந்தப்பட்ட குறிச்சொற்கள் அந்தந்தப் பக்கங்களில் கொட்டிக்கிடப்பதால் அதைக் கிளிக்கி இதைக் கிளிக்கி ஒரு பத்து நிமிடத்தில் விக்கிப் பீடியா என்கிற அடர்ந்த கானகத்தே தொலைந்து போய் காணாமல் போய் விட நேரிடும். ஏதோ ஒரு சில பக்கங்களில் விளையாட்டுப் போல விக்கியை ஆரம்பித்து இப்போது அதை எல்லையில்லா என்சைக்ளொப்பீடியாவாக மாற்றிய மிகப் பெரிய மூளைக்காரர்களுக்கு இந்தப் பொன்னான வேளையில் சிரம் தாழ்த்தி கண்ணம்மாபேட்டை இணைய இளைஞர் மனமகிழ் மன்றம் சார்பாக இந்தக் கதராடையை பொன்னாடையாக அணிவித்து …

    இப்போது போய்ப் பார்த்தால் நான் எழுதிய வலைப்பதிவுகளில் இடையிடையே சொல்லப்படும் விஷயங்களுக்கான இணைப்புப் பக்கமாய் விக்கிப்பீடியாவின் சுட்டிகள்தான் அதிகம் இருக்கின்றன. இட்லி என்று தேடினால் அதற்கொரு பக்கம், ரவா தோசைக்கு ஒரு பக்கம். இது மாதிரி மைலாப்பூர், சைதாப்பேட்டை, கருணாநிதி, விஜயகாந்த் என்று எதைத் தேடினாலும் அதற்கு ஒரு பக்கம் இருக்கிறது. ஆக விக்கிப்பீடியாவானது “நம்மாளு” என்கிற மாதிரி ரொம்பவும் நெருக்கமாகிவிட்டது.

    ஒருதடவை மருந்துக் கடையில் வாங்கி வந்த ப்ரிஸ்கிரிப்ஷன் மருந்தின் பட்டையில் அதன் பெயர் இல்லாததால் அதனுடைய chemical name-ஐ வைத்து விக்கிப்பீடியாவில் தேடி இன்னதுக்குத்தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டு வயிற்றுப் போக்கிலிருந்து நிவாரணமடைந்தேன். பையனுக்கு ஸ்கூலில் கொடுக்கப்படும் ஹோம் ஒர்க்குகளுக்குக்கூட (நாமதாங்க பண்ணனும்) பெரும்பாலும் இப்போதெல்லாம் விக்கிப்பீடியாவையே பெருமளவில் நம்பியிருக்கவேண்டியிருக்கிறது. ஆனால் விக்கிப்பீடியாவின் பக்கங்களில் பொதிந்திருக்கும் விஷயங்களின் நம்பகத்தன்மைக்கு “ப்ரீத்தி மிக்ஸி” அளவுக்கு கியாரண்டி இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். ஆனால் 2 மார்க் ஸ்கூல் வினாக்களுக்கு சில தகவல்கள் எதேஷ்டம்.

    நேற்று ஒரு ஹோம் ஒர்க்குக்காக இந்தியாவில் Deciduous காடுகள் எங்கெல்லாம் இருக்கின்றதென்று தேடிக்கொண்டிருந்தேன். அருகில் வந்து நின்ற மனைவி மானிட்டரை கண்ணுற்றுவிட்டு “தடுக்கி விழுந்தா விக்கிப்பீடியாலதான் போய் விழுகறீங்க போல” என்று சொன்னதால் இப்படியொரு தலைப்பில் இப்படியொரு பதிவு.

    -சித்ரன்

     
    • ila 9:48 மு.பகல் on செப்டம்பர் 1, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      :)

    • Periyasamy 10:06 மு.பகல் on செப்டம்பர் 1, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நானெல்லாம் தினமும் Wikipedia’s இரண்டு கட்டுரையாவது படிக்க நேர்ந்துவிடுகிறது.

      ஆனால் அனைத்துத் தகவல்களையும் அப்படியே நம்பி விட முடியாதுதான்.

    • சத்யராஜ்குமார் 3:01 பிற்பகல் on செப்டம்பர் 1, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      பீடிப்பதுன்னு சொல்றாங்களே அந்த பீடியா? :-|

    • REKHA RAGHAVAN 10:23 மு.பகல் on செப்டம்பர் 2, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      // சத்யராஜ்குமார்/
      பீடிப்பதுன்னு சொல்றாங்களே அந்த பீடியா?

      பிடிப்பது தானே சரி SRK?

      @@ -சித்ரன்

      நல்ல பதிவு. தலைப்பு படு ஜோர்.
      ரேகா ராகவன்

    • சத்யராஜ்குமார் 11:23 மு.பகல் on செப்டம்பர் 2, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      @REKHA RAGHAVAN:

      //பிடிப்பது தானே சரி SRK?//

      பீடிப்பது என்ற சொல் வேறு. பொதுவாக நோய்கள் பீடிப்பதாக சொல்வார்கள்.

    • சித்ரன் 12:54 பிற்பகல் on செப்டம்பர் 2, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நன்றி இளா, பெரியசாமி, சத்யராஜ்குமார், ரேகா ராகவன்.

      @பெரியசாமி: வி.பீடியாவை ஓரளவுதான் நம்பலாம்.
      @சத்யராஜ்குமார் @ரேகா ராகவன்: நான் விக்கிபீடியா நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறேன் என்று கூட சொல்லலாம். அடுத்த டெக்னாலஜி வரும் வரைதான். அப்புறம் சரியாகிவிடும்.

    • Prakash 4:30 மு.பகல் on செப்டம்பர் 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      //அதனுடைய chemical name-ஐ வைத்து விக்கிப்பீடியாவில் தேடி இன்னதுக்குத்தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டு வயிற்றுப் போக்கிலிருந்து நிவாரணமடைந்தேன்.//

      இது தவறான பழக்கம். இனிமே செய்யாதீங்க.

      • சித்ரன் 4:54 மு.பகல் on செப்டம்பர் 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        நன்றி பிரகாஷ். நான் வி.பீடியாவில் சரிபார்த்துக் கொண்டது டாக்டர் எழுதிக்கொடுத்த பிரிஸ்கிரிப்ஷன் மருந்துதான். சந்தேகமும் ஆர்வக்கோளாறும் கலந்த ஒரு நிலையில் அதை செய்யவேண்டியிருந்தது. இந்த மாதிரி அவசர நேரத்தில் சிலசமயம் நமக்கு நாமே டாக்டராகியும் விடுகிறோம். முடிந்தவரை இதைத் தவிர்க்க வேண்டும்.

  • காசி கேட்ட கேள்விகள் 

    சத்யராஜ்குமார் 6:51 am on August 26, 2009 நிரந்தர பந்தம் | பதில்
    குறிச்சொற்கள்: காசி, கேள்வி-பதில், தமிழ்மணம்

    காசி கேட்டுக் கொண்டபடி அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பிய பதில்களை இங்கே வெளியிடுகிறேன். அவர் தொகுத்திருந்தால், நீக்க வேண்டியதை நீக்கி உங்களையும் என்னையும் காப்பாற்றியிருப்பார். இப்போது வேறு வழியில்லை. நீங்கள் படித்துதான் ஆக வேண்டும்.

    1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று
    எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும்
    இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம்
    செய்யவேண்டும்?

    வலைப்பூக்கள் துளிர் விடத் துவங்கியபோது இருந்ததை விட இப்போது பல்மடங்கு அதிகமாய் உள்ளடக்கங்கள் பெருகியுள்ளன. பத்திரிகைகள், பதிப்பகங்கள் போன்ற தொழில்முறை ஊடகங்களோடு ஒப்பிட்டால் எழுத்து நயம் குறைவாகவே இருந்தாலும் (என் தளத்தையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) கருத்தளவில் விரும்பத்தக்க உள்ளடக்கங்கள் நிறைய வாசிக்க கிடைக்கின்றன. தேவையான அளவுக்கு உள்ளதா என்றால் இன்னும் இல்லை என்றே சொல்ல வேண்டும். படிப்பவர்களும், படைப்பவர்களும் எழுத்து நயத்தை பொருட்படுத்தாமல் பொருளடக்கத்துக்கு முதலிடம் கொடுத்தால் இந்த நிலை மாறும். அவரவர்க்கு தெரிந்த விஷயங்களை அவரவர் பாணியில் அளித்தாலே போதுமானது. கவர வேண்டும் என்ற நோக்கத்தை விட, பகர வேண்டும் என்ற நோக்கம் அதிகரித்தல் ஆரோக்கியமானது.

    கேள்வியின் இரண்டாம் பாகத்துக்கான பதில் இணையத்துக்கு வெளியே துவங்குவதாக நினைக்கிறேன். இணையம் மற்றும் கணினியில் நிகழ்வன பெரும்பாலும் நிஜ வாழ்க்கையின் நகல் செயல்பாடுகளாகும். வெளியே தமிழ் புழக்கம் அதிகரித்தால் இணையம், கணினிகளிலும் வேறு வழியே இல்லாமல் அவை நிகழும்.

    2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம்
    அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை
    போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல்
    போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம்
    தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு,
    குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

    இலக்கியம், இதழ்கள் அளவில் தமிழர் சமூகத்தின் ஒரு குறைந்த சதவீதம் மட்டுமே அனுபவிக்கிறது. மின்னஞ்சல், மின்னரட்டை போன்றவற்றிற்கும் இது பொருந்தும். மின் வணிகம், அரசாளுமை பற்றி எனக்குத் தெரியவில்லை. என்னுடைய அறிவுக்கு எட்டிய வரை இவைகள் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறதென்று நினைக்கிறேன்.

    தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம்
    அனுபவிக்கிறதா என்பதை விட தகவல்-நுட்பப் புரட்சியின் பயனை முழு தமிழர் சமூகமும்
    அனுபவிக்கிறதா என்ற கேள்வியே முக்கியமானது.

    3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின்
    பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த
    அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும்
    முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?

    இன்றைக்கு இணையத்திலும், கணினியிலும் தமிழின் பயன்பாடு அதிகரிக்க தொண்ணூறு சதவீதம் உதவியுள்ளது தன்னார்வலர்களின் பங்களிப்பும், அளவிடற்கரிய அவர்களின் உழைப்பும்தான். அதில் கொஞ்சமேனும் தமிழை வைத்துப் பிழைக்கும் அரசியலமைப்புகள் செய்திருந்தால் இன்னும் பல தூரம் போயிருப்போம். அவர்களுக்கு அதற்கு நேரமோ, அக்கறையோ இல்லை.

    மேலேடுத்துச் செல்ல முக்கியமானதாக நான் கருதுவது செல்பேசி வழி தமிழ் மென்பொருள்கள். நுறு சதவித மின் தமிழ் ஆட்சி அதன் மூலமே சாத்தியப்படும். ஒலிப் பதிவுகளும், ஒளிப் பதிவுகளும் சாத்தியமாகி விட்ட இத்தருணத்தில் எழுத படிக்க தெரியாதவர்களின் கையிலும் இருக்கும் கைப்பேசிகளே தமிழுக்கான மின் தூதுவர்கள்.

    4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச்
    சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான
    செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

    கேள்வி #3-ல் குறிப்பிட்ட படி கைப்பேசி சார்ந்த தமிழ் மென்பொருள் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்துவேன். அதிலே இணைய இணைப்பு சுலபமாக, நியாயமான செலவில் பெற வழி வகை செய்வேன்.

    5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக
    வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

    தமிழ் வலைப்பதிவுகள் தக்க பரிமாண வளர்ச்சியை அடைந்து வருகிறது. ‘மொக்கை’ என்று அழைக்கப்பட்ட கலாசாரம் விரைவிலேயே அதன் ஆதரவை இழந்து விட்டது போல் தெரிகிறது. உருப்படியான பதிவுகள் போட வேண்டும் என்ற எண்ணம் நிறைய பேரின் வலைப்பதிவுகளில் எதிரொலிக்கிறது. அதை ஊக்குவிக்கும் வண்ணம் பல தளங்கள் போட்டிகள் வைத்து முன்னெடுத்துச் செல்கின்றன.

    புதியவர்களுக்கான யோசனை? நான் வலைப் பதிய ஆரம்பித்த நாளிலிருந்தே ஒரு கருத்தைத்தான் திரும்ப திரும்ப சொல்கிறேன். எழுத்து நயம் பற்றி கவலைப்பட வேண்டாம். அது காலப் போக்கில் அகப்படும். ஒவ்வொருவரின் பார்வையும் அவரவர் பெருவிரல் ரேகை போன்றது. அதை பதிவு செய்ய முயன்றாலே போதும்.

    6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை
    நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய
    உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

    தமிழில் திரட்டிகளின் முன்னோடியாக விளங்கிய தமிழ்மணத்தின் ஐந்து ஆண்டு சேவை அபாரம். பல வகையிலும் அது தன்னை மேம்படுத்திக் கொண்டு வந்ததை கண்கூடாகப் பார்த்தோம். வரும் ஆண்டுகளில் அது செய்ய வேண்டியது கைப் பேசி தளத்திலும் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதே ஆகும்.

     
    • சித்ரன் 10:53 மு.பகல் on ஆகஸ்ட் 26, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      தமிழில் வலைப்பதிவுகள் பிரபலமாகத் தொடங்கிய காலத்திலிருந்தே தமிழ்மணம் என்ற ஒன்றும் பிரபலமாகத் தொடங்கியிருந்தது. அந்த வகையில் தமிழில் வலைப்பதிவு எழுதுபவர்கள் தங்களை “ப்ரமோட்” செய்து கொள்ள மிகப் பெரியதொரு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தவர் திரு.காசி. அவருக்கு என் பாராட்டுகளும், ஐந்தாண்டு முடிவடைந்ததற்காக வாழ்த்துக்களும்.

    • Sentil 9:12 பிற்பகல் on ஆகஸ்ட் 26, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      ” கவர வேண்டும் என்ற நோக்கத்தை விட, பகர வேண்டும் என்ற நோக்கம் அதிகரித்தல் ஆரோக்கியமானது.”

      This is a real boost. Thank you for encouraging mokkais like us :-)

  • உரையாடல் முடிவுகள்: சலசலப்பு 

    சத்யராஜ்குமார் 8:15 pm on August 10, 2009 நிரந்தர பந்தம் | பதில்
    குறிச்சொற்கள்: உரையாடல், சிறுகதைப் போட்டி, ஜ்யோவ்ராம் சுந்தர், பின்னூட்டங்கள், பைத்தியக்காரன், முடிவுகள்

    பல சிறுகதைப் போட்டிகளில் பங்கு பெற்றிருக்கிறேன். பரிசுகள் கிடைத்துள்ளன. கிடைக்காமலும் போயுள்ளன. கிடைத்த போது மகிழ்ந்திருக்கிறேன். கிடைக்காத போது வருந்தியதில்லை.

    ஆரம்பத்தில் போட்டிகள் நடக்கும் திசையில் தலை வைத்துக் கூட படுக்காமல் இருந்தவன்தான். இத்தனைக்கும் வாரா வாரம் ஏதாவது ஒரு பத்திரிகையில் கதை வந்து கொண்டிருக்கும். மாத நாவல்களும் கொஞ்சம் எழுதினேன். வீடு தேடி வந்து சந்தித்துச் செல்லும் வாசகர்கள். தினமும் ஒரு கத்தை போஸ்ட் கார்டு கடிதங்கள். புகழின் ருசியை லேசாக அனுபவிக்க முடிந்தது.

    ஒரு வாசகர்தான் எனக்கு ஸ்பீட் ப்ரேக் போட்டார். சிந்தெடிக் கதைகளால் உங்களுக்கு பேர் கிடைக்கப் போவதில்லை. பத்து நல்ல சிறுகதைகளாவது எழுதுவது ரொம்ப முக்கியம். உங்களால் முடியும் என்பதால் சொல்கிறேன்.

    குமுதம் அப்போது மாவட்டம் தோறும் ஒரு சிறுகதைப் போட்டி நடத்தியது. அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து பரீட்சை எழுதுவது போல கதை எழுதித் தர வேண்டும். போலீஸ் நிலைய வன்புணரலை மையமாக வைத்து வழக்கம் போல க்ரைம் கலந்த ஒரு கதை எழுதினேன். எனக்கு நன்கு அறிமுகமான க்ரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமார் முக்கிய நடுவர். இருந்தும் எனக்கு பரிசு கிடைக்கவில்லை. சூசன் எழுதிய ‘அம்மாவும், சில கரப்பான் பூச்சிகளும்’ என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது.

    ஒரு நல்ல சிறுகதைக்கான இலக்கணம் சூசனின் கதையில் இருந்தது. அதை நான் மறக்காமல் உள்வாங்கிக் கொண்டேன். அடுத்து பல நாட்களுக்கு கதை எதுவும் எழுதாமல் நிறைய சிறுகதைகளை தேடித் தேடி வாசித்தேன். மனசுக்குள் அச்சிறுகதைகளை போஸ்ட் மார்ட்டம் செய்து பார்ப்பது வாடிக்கையானது. அதற்கப்புறம்தான் கல்கியில் அந்நிய துக்கம், உள்காயம், ஒரு வினாடியும் ஒரு யுகமும், குறுநில மன்னர்கள் என வரிசையாய் பரிசுகள் கிடைத்தன. கலைமகள், அமுத சுரபியிலும் பரிசுகள் வாங்கினேன்.

    இங்கே நான் சொல்ல வந்தது கிடைத்த பரிசுகள் பற்றி அல்ல. கிடைக்காத பரிசு பற்றி. அன்றைக்கு நான் மனம் சோர்ந்திருந்தால் கல்கியில் இத்தனை சிறுகதைகள் எழுதியிருக்க மாட்டேன்.

    பத்திரிகையோ, வலைப்பதிவோ… சில போட்டி அறிவிப்புகளைப் பார்த்தால் கலந்து கொள்ளும் ஆர்வம் ஏற்படுகிறது. பங்கேற்கிறேன். சில மாதங்களுக்கு முன் சிறில் அலெக்ஸ் நடத்திய விஞ்ஞான சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டேன். அமரர் சுஜாதா நினைவு சிறுகதைப் போட்டியிலும் பங்கெடுத்தேன். என் கதை இந்த இரு போட்டிகளிலும் தேர்வாகவில்லை. அதனாலென்ன, கலந்து கொண்டிருக்கா விட்டால் அந்த இரு கதைகளையும் எழுதியிருக்காமல் போயிருப்பேன்.

    யோசித்துப் பார்த்தால் பத்திரிகைகளால் நிராகரிக்கப்பட்ட கதைகள்தான் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கின்றன. ‘பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம். இதையே உங்கள் கதை பற்றிய கடைசி தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என்று சொல்லும் அந்த சின்ன சீட்டுக்கள் பத்து திருக்குறள் அதிகாரங்கள் போதிப்பதை மவுனமாக போதித்தன. ஏன் நிராகரித்தார்கள் என்று யாரையும் விளக்கமெல்லாம் கேட்க முடியாது. நாமாக புரிந்து கொள்ள வேண்டும்.

    எழுதுவது என் கடமை. அமைப்புகள் அவற்றை ஏற்றுக் கொள்வதும், கொள்ளாததும் அவர்கள் சவுகரியம். இந்தப் பக்குவம் எழுத்தாளர்களுக்கு முக்கியம். பிரசுரிக்காத நிறுவனத்தை திட்டுவதும், பரிசு கொடுக்காத அமைப்புகளை கண்டிப்பதும் நம்மை வளர்த்தப் போவதில்லை. மேலும் மேலும் படிப்பதும், மேலும் மேலும் எழுதிக் கொண்டிருப்பதுமே நாம் தொடர்ந்து இயங்க வழி வகுக்கும்.

    வாய் பேசக் கூட தெரியாத குழந்தைகள் தட்டுத் தடுமாறி, தவழ்ந்து, விழுந்து, எழுந்து, சிரித்து தானாகவே சகலமும் கற்றுக் கொள்ளும் வித்தையை கூர்ந்து பார்த்தால் புரியும் இதுதான் இயற்கையான Learning Process என்னும் சூட்சுமம். உங்கள் படைப்புகளுக்கு நீங்களே நீதிபதியாவது முக்கியம். நீதிபதி என்பவர் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி தீர்ப்பெழுதுபவர் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

    நம் கதையில் என்ன பிரச்சனை என்று நம்மைத்தான் நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். வேறு யாரையும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டாம். அந்த நேரத்தில் பத்து சிறுகதைகள் படித்தால் அவை நமக்கு பதில் சொல்லும்.


    தொடர்புள்ள இடுகை:- சிதைவுகள்: சிறுகதைப் போட்டி முடிவுகள்


     
    • sureஷ் 8:38 பிற்பகல் on ஆகஸ்ட் 10, 2009 நிரந்தர பந்தம் | பதில்

    • புருனோ 8:50 பிற்பகல் on ஆகஸ்ட் 10, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      //அதனாலென்ன, கலந்து கொண்டிருக்கா விட்டால் அந்த இரு கதைகளையும் எழுதியிருக்காமல் போயிருப்பேன்.
      //

      :) :)

    • புருனோ 8:51 பிற்பகல் on ஆகஸ்ட் 10, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      //எழுதுவது என் கடமை. அமைப்புகள் அவற்றை ஏற்றுக் கொள்வதும், கொள்ளாததும் அவர்கள் சவுகரியம். இந்தப் பக்குவம் எழுத்தாளர்களுக்கு முக்கியம். பிரசுரிக்காத நிறுவனத்தை திட்டுவதும், பரிசு கொடுக்காத அமைப்புகளை கண்டிப்பதும் நம்மை வளர்த்தப் போவதில்லை. மேலும் மேலும் படிப்பதும், மேலும் மேலும் எழுதிக் கொண்டிருப்பதுமே நாம் தொடர்ந்து இயங்க வழி வகுக்கும்.//

      சூப்பர்

    • SnapJudge 10:03 பிற்பகல் on ஆகஸ்ட் 10, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      வாழ்த்துகள்!

    • என். சொக்கன் 10:24 பிற்பகல் on ஆகஸ்ட் 10, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      சத்யராஜ்குமார்,

      இரண்டு நாள்களாக நானும் இதையேதான் நினைத்துக்கொண்டிருந்தேன் – இணையத்தில் எழுதுகிறவர்கள், வாசிக்கிறவர்கள் தங்கள் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றி அடைந்தவர்களாக இருப்பார்கள், வெற்றி, தோல்வி சகஜம் என்பதை உணர்ந்த முதிர்ச்சி அவர்களிடம் இருக்கும் என்பது என் கருத்து, அதனால்தான், என்னுடைய பத்திரிகைக் கட்டுரைகள் பலவற்றை இணையத்தில் இடுவதில்லை, இங்குள்ளவர்கள் அதையெல்லாம் கடந்தவர்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

      ஆனால், இந்தப் போட்டி முடிவு ஏற்படுத்திய சலசலப்பும், குற்றம் சாட்டுதலும், போட்டி நடத்தியவர்கள்மீது எழுப்பப்படும் சந்தேகங்களும், பரிசு பெற்றவர்கள்மேல் சேறு வாரியிறைக்கப்படுவதும் ரொம்ப வேதனையாக இருக்கிறது. இருநூறு பேர் கலந்துகொள்கிற போட்டியில் இருபது பேர்மட்டும்தான் வெற்றி பெறமுடியும் எனும்போதே இத்தனை பிரச்னை என்றால், பத்திரிகைப் போட்டிகளில் ஆயிரத்துக்கு நாலு கதைதானே தேர்ந்தெடுப்பார்கள், மிச்சமுள்ள 996 பேர் இப்படி எதிர்மறையாகப் பேச ஆரம்பித்தால் அவர்களால் இன்னொரு நல்ல கதை எழுதமுடியுமா?

      போட்டிகளை எப்போதும் புதிதாகக் கதை எழுதுவதற்கான வாய்ப்பாக**மட்டுமே** கருதவேண்டும் என நினைக்கிறேன். பரிசு கிடைத்தால் மகிழ்ச்சி, கிடைக்காவிட்டால், நம் கதையில் இருக்கக்கூடிய தவறை அறிந்து திருத்தலாம், தவறில்லை என்று தோன்றினால் இன்னோர் இடத்துக்கு அனுப்பிப் பரிசு வாங்கிக்கொள்ளலாம், எப்படி யோசித்தாலும் தோல்வியை நினைத்துத் துவண்டுபோவது ஓர் அர்த்தமற்ற செயலாகத் தோன்றுகிறது.

      முக்கியக் குறிப்பு: நான் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளவில்லை, ஆகவே என் கருத்தைத் தோற்றவன் வேதாந்தமாகவோ, ஜெயித்தவரின் அலட்டலாகவோ நினைத்துவிடவேண்டாம் – சத்யராஜ்குமாரின் பதிவில் உள்ள நியாயமான கருத்துகளை, புதிதாக எழுதுகிறவர்கள்மீது அவர் காட்டியுள்ள உண்மையான அக்கறையை அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன், அவ்வளவே.

      • சத்யராஜ்குமார் 6:31 மு.பகல் on ஆகஸ்ட் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        சொக்கன், விரிவான கருத்தை வெளியிட்டதற்கு நன்றி. நானும் பல இடங்களில் பல ரூபங்களில் என் எழுத்து அனுபவங்களை பதிவிட்டு வருகிறேன். சொற்பம் பேருக்கேனும் அவை பயன்படலாம் என்ற நல்லெண்ணமே. எவ்வளவு பேர் அதை சரியான கோணத்தில் பார்த்து புரிந்து கொள்கிறார்கள் என்று தெரியாது. உங்கள் பின்னூட்டம் இப்பதிவு தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதை தடுக்க உதவும். மறுபடி நன்றி.

    • sumazla 12:11 மு.பகல் on ஆகஸ்ட் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      //வாய் பேசக் கூட தெரியாத குழந்தைகள் தட்டுத் தடுமாறி, தவழ்ந்து, விழுந்து, எழுந்து, சிரித்து தானாகவே சகலமும் கற்றுக் கொள்ளும் வித்தையை கூர்ந்து பார்த்தால் புரியும் இதுதான் இயற்கையான Learning Process என்னும் சூட்சுமம்//

      நல்ல போதிப்பு! இது போன்ற வாழ்க்கைப்பாடத்தை, கதையாற்றலை, எல்லாரும் அவரவர் கணிப்பில் தனியொரு ப்ளாகில் போட்டால்(தொகுத்தால்), என்னை போன்ற வளரும் ஆர்வமிக்க எழுத்தாளர்களுக்கு மிகவும் பயன் தரும், முயலுங்களேன்.

      • சத்யராஜ்குமார் 6:41 மு.பகல் on ஆகஸ்ட் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        sumazla, நன்றி. என் எழுத்து அனுபவங்களையும், நான் பின் பற்றும் சில நுட்பங்களை பற்றியும் அவ்வப்போது இங்கே ‘இன்று -Today’-யிலும், பிற இடங்களிலும் பதிந்திருக்கிறேன். தமிழோவியத்தில் ‘என்னை எழுதியவர்கள்’ சிறு தொடரிலும் கொஞ்சம் குறிப்பிட்டிருக்கிறேன். தமிழோவியம் ஆசிரியர் சிறுகதைகள் குறித்து ஒரு சிறு தொடர் எழுத கேட்டுள்ளார். முடிந்தால் விரைவில் ஆரம்பிக்கலாம்.

        மற்றபடி உங்களுக்குள் இருக்கும் ஆர்வம் என்னும் தீயே போதும். உங்களை வளர்த்தெடுக்கும். வாழ்த்துக்கள்.

    • சித்ரன் 1:57 மு.பகல் on ஆகஸ்ட் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள் கூட ஒரு சிறுகதையை எழுதிமுடிப்பதற்குள் ஒரு மிகப்பெரிய பிரசவ வலியை அனுபவித்து விடுகிறார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டிருகிறேன். 100 தடவை திருத்தி எழுதுபவர்கள் இருக்கிறார்கள். தன்னை ஒரு மிகச் சிறந்த சிறுகதையாளன் என்று உணர்ந்து கொண்டிருப்பவன் கூட அதை இன்னும் சிறப்பாக செம்மையாகச் செய்வது எப்படி என்ற தேடலில் ஈடுபடும்போதுதான் மிகச் சிறந்த படைப்புகள் உருவாகின்றன என்பது எனது கட்சி.

      போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே தன்னை ஒரு மிகப் பெரிய எழுத்தாளனாக அறிவித்துக் கொள்ள முடியும் என்கிற பாவனை புதிய எழுத்தாளர்களுக்கு இருப்பது ஆரோக்கியமான விஷயமல்ல. மாறாக SRK சொல்வது போல வெற்றி பெற்றவர்களின் கதைகளை உற்று நோக்கி நல்ல சிறுகதைகள் எவ்வாறு எழுதப்படுகின்றன என்பது பற்றிய சூட்சுமத்தைக் கற்றுக் கொள்ளலாம்.

      பரிசு கிடைக்காவிட்டாலும், படிக்கிறவரை உலுக்கும், கவரும், அல்லது பாதிக்கும் ஒரு வரியையாவது தம்மால் எழுத முடிந்தால் அதுதான் வெற்றி என்பதை போட்டியில் கலந்து கொள்கிறவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். படைப்புகள் நிராகரிக்கப் படுகிறதென்றால் அடுத்த படைப்பை இன்னும் வீரியமாய் எப்படி அளிக்கலாம் என்ற முனைப்புடன் செயல்படவேண்டும். நல்ல படைப்புகள் ஒரு போதும் சோரம் போகாது. ஒன்றிரண்டு எழுத ஆரம்பிப்பதற்குள்ளாகவே அவைகளை மிகச் சிறந்த படைப்புகளாக பாவித்துக்கொண்டு அரசியலை அவிழ்த்துவிடுவதை விட்டுவிட்டு நல்ல படைப்புகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்கிற நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வதில் கவனம் செலுத்தலாம்.

      முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிப் பிரசுரித்தபின்னும் கூட இன்னும் என் எழுத்தாள நண்பர்களிடமெல்லாம் “நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?” என்ற கேள்வியை வீசியபடியேதான் இருக்கிறேன். ஏதாவது ஒரு புது விஷயம் யாரிடமிருந்து கிடைத்தாலும் அதை உள்வாங்கத் தயாராக இருக்கிறேன்.

      இது வரை இல்லாத ஒரு மிகச் சிறந்த சிறுகதையை என்றாவது ஒரு நாள் எழுதிவிட வேண்டுமென்பதற்காக எவ்வளவு வேண்டுமென்றாலும் மெனக்கெடலாம். தப்பில்லை.

      • சத்யராஜ்குமார் 6:48 மு.பகல் on ஆகஸ்ட் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        சித்ரன், பதிவின் சுருக்கம் கருதி நான் சொல்லாமல் விட்ட பல விஷயங்களை நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். பழைய கல்கி இதழ்களில் ஆறுதல் பரிசு லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தால் ஒரு உண்மை புரியும். சில மிகச் சிறந்த எழுத்தாளர்களின் கதைகள் கூட பரிசுக்குத் தேர்வாகாதிருப்பதைக் காணலாம். அவற்றில் சில பரிசு பெற்ற கதைகளை விட அருமையாக இருக்கும். பரிசு பெறாத கதைகள் சரியாக எழுதப்படாதவை என நினைப்பது மாயை.

    • பாரா 6:50 மு.பகல் on ஆகஸ்ட் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      அன்புள்ள சத்யராஜ்!

      வணக்கம். நலமா? இது மிக அவசியமான கட்டுரை. 1989-90 ஆண்டுகளில் கல்கியில் ஒரு சிறுகதை(யாவது) வெளிவரவேண்டுமென்ற வெறியில் தினசரி ஒரு கதை எழுதி அனுப்பியபடியே இருப்பேன். அநேகமாக 110 கதைகள் என்று நினைக்கிறேன். ஞாயிறுகள் தவிர தினசரி அஞ்சலில் ஒன்றைச் சேர்ப்பது வழக்கம். அந்த 110ல் ஒன்றுகூடப் பிரசுரமாகவில்லை. ஆனால் ஒழுங்காகப் பத்து நாள்களில் திரும்பி வரும்.[அப்போது குமுதத்துக்கு அனுப்பினால் - ஸ்டாம்ப்புடன் அனுப்பினாலும் - திரும்பி வராது.]

      ரொம்ப வெறுத்துப் போய் ஒருநாள் கிண்டியில் அப்போதிருந்த கல்கி அலுவலகத்துக்கு நேரில் சென்று திரு. பி.எஸ். மணி என்கிற குண்டு மணி அவர்களை [பிரதம உதவி ஆசிரியர்]சந்தித்து, சண்டை பிடித்தேன்.

      ‘நல்லா இருந்தா வரும் சார். திரும்பி வருதுன்னா சரியா இல்லைன்னு அர்த்தம். இன்னும் பெட்டரா எழுதப்பாருங்க’ என்று சொன்னார்.

      என்ன சரியாக இல்லை, எது சரியில்லை என்று விடாமல் அவரைக் குடைந்து, அவர்கள் என் கதைகளைப் படிக்கவேயில்லை என்றெல்லாம் குற்றம் சாட்டி, கிட்டத்தட்ட அவரைக் கொலைவெறிக்குத் தள்ளியது நினைவுக்கு வருகிறது.

      இறுதியில் ‘டிசைட் பண்ற பக்கம் உக்காந்திருக்கோம்ங்கற திமிர்ல பேசறிங்க சார். என்னிக்கானா ஒருநாள் உங்க இடத்துல நான் இருப்பேன்’ என்று வீரசபதம் செய்துவிட்டு வந்தேன்.

      திரு குண்டுமணி கோபித்துக்கொள்ளவில்லை. பிறகும் தொடர்ந்த என் முயற்சியில் ஒரு கதை கல்கியில் முதல் முதலாகப் பிரசுரமானது. பிரசுரித்தவர் அவர்தான். பிறகு நேரில் சந்தித்தபோது, ‘இதை ஏன் பப்ளிஷ் பண்ணிங்கன்னு கேக்க மாட்டிங்கல்ல? பண்ணலன்னா மட்டும் கோவம் பொத்துட்டு வந்துடுமே’ என்றார் சிரித்தபடி.

      நானும் சிரித்துக்கொண்டே ‘ஏன் பப்ளிஷ் பண்ணிங்க?’ என்றேன். ஒரு நல்ல சிறுகதைக்கான இலக்கணம் என்று அவர் அறிந்தவற்றை அப்போது எனக்குச் சொல்லி, அவை அந்தக் கதையில் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

      ஒரு நல்ல சிறுகதையின் இலக்கணத்தை அறியக்கூட ஒரு நல்ல சிறுகதையை முதலில் எழுதியாகவேண்டும்போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

      இரண்டே வருடங்கள். என் சிறுகதைகள்தாம் எனக்குக் கல்கியில் வேலை வாங்கிக்கொடுத்தன. வீம்புக்குப் போட்ட சபதம் எப்படியோ நிறைவேறியது. பிறகு நிதானத்துக்கு வந்து, பழைய 110 கதைகளைப் படித்துப் பார்த்தபோதுதான் குண்டுமணி சொன்னது புரிந்தது. வேறு யாராவது அந்த 110ஐ அனுப்பியிருந்தால் கண்டிப்பாக நிராகரிக்கவே செய்திருப்பேன். என் வாழ்வில் நான் வாசித்த மிக மோசமான கதைகள் கண்டிப்பாக அவையே.

      திரு. மணியிடம் ஒருவரி மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று மிகவும் ஏங்கினேன். துரதிருஷ்டவசமாக அவர் அப்போது உயிருடன் இல்லை.

      • சத்யராஜ்குமார் 8:40 மு.பகல் on ஆகஸ்ட் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        அன்புள்ள பாரா,

        வணக்கம்.

        நான் நலமே. நீங்கள் நலமா? விரிவான பதிவுக்கு நன்றி. உங்கள் அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொண்டது இந்தக் கட்டுரையில் முன் வைத்த கருத்துக்களுக்கு வலு சேர்க்கிறது. பார்க்கப் போனால் எல்லா எழுத்தாளர்களின் கதையும் இப்படித்தான் ஆரம்பிக்கிறதென்று புரிகிறது. ‘உச்சியிலிருந்தே துவங்கு!’ என்று ஜென்னில் சொல்வது போல் எழுத ஆரம்பிக்கும் பாக்கியம் எல்லோருக்கும் கிட்டுவதில்லை.

        அன்புடன்,
        சத்யராஜ்குமார்

    • sumazla 8:05 மு.பகல் on ஆகஸ்ட் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நன்றி சார், உங்கள் தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். நான் எழுதிய பயிற்சி சிறுகதை இங்கே:
      http://sumazla.blogspot.com/2009/08/blog-post_6112.html
      நேரமிருந்தால், படித்து கருத்து சொல்லுங்களேன்.

    • Balaji Manoharan 9:25 மு.பகல் on ஆகஸ்ட் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      மிக்க பயனுள்ள பதிவு.

      இணையத்துல நானும் நிறைய போட்டிகள்ல கலந்து தோற்றுப் போயிருக்கிறேன். இந்த போட்டியில் கூட மூன்று கதைகள் எழுதி ஒன்று தான் வெற்றி. மீதம் இருக்கும் இரண்டு கதைகளையும் போஸ்ட் மார்ட்டம் செய்து கொண்டிருக்கிறேன். அதற்கான காரணமும் ஓரளவு தெரிந்து கொண்டுவிட்டேன்.

      ஒரு கதை நாடக பாணியில் அமைந்தது. அவ்வளவு நல்ல கருவை இதை விட எவரும் மோசமாக எழுத முடியாது என்று தோன்றியது. ஜெ.மோவின் நதிக்கரையில் பாணியில் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறேன். அதற்கு முன்பு நிறைய படிக்க வேண்டும்.

      மற்றொரு கதையில் (குட்டிப்பாப்பா) முடிவை இன்னும் அழகாக சொல்லியிருக்கலாம். இருந்தாலும் கை வைக்க மனம் வரவில்லை :)

      வெற்றி பெற்ற‌ க‌தையில் இருந்து க‌ற்றுக் கொண்ட‌ பாட‌ம், ஒரு கதையில் க‌தாசிரிய‌ன் த‌ன் மூக்கை நுழைக்காம‌ல் இருந்தால் போதும். இவ‌ர் ந‌ல்ல‌வ‌ர், இவ‌ர் பாவ‌ம் என்று த‌வ‌றுத‌லாக‌ எங்கேயும் சொல்ல முய‌ற்சிக்க‌ கூடாது. அப்ப‌டி சொல்லியிருந்தால் இந்த‌ க‌தை மோச‌மான‌ ஒரு சிறுக‌தைக்கு எடுத்துக்காட்டாக‌ இருந்திருக்கும்.

      உங்க‌ளுடைய‌ மைய‌வில‌க்கு கூட‌ என‌க்கு ஒரு பாட‌ம் தான். அது போல‌ நானும் ஒரு சிறுக‌தை முய‌ற்சி செய்திருந்தேன். க‌டைசி வ‌ரியில் க‌தாபாத்திர‌ம் த‌ன்னை தானே ச‌மாத‌ன‌ப்ப‌டுத்திக் கொள்வ‌து போல‌ வைத்து த‌வ‌று செய்திருந்தேன்.

      பாரா, சொக்க‌னுடைய‌ பின்னூட்ட‌ங்க‌ளும் எங்க‌ளுக்கு மிக‌வும் ப‌ய‌னுள்ள‌தாக‌ இருக்கும்.

      பதிவிற்காக மீண்டும் ஒரு முறை நன்றி…

      • சத்யராஜ்குமார் 2:29 பிற்பகல் on ஆகஸ்ட் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        பாலாஜி,

        உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி. சிறுகதை எழுதும் முயற்சிகளில் நீங்கள் சீரியஸாக இறங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சிறுகதைகள் இனி அவ்வளவுதான் என்று ஒரு சிலர் கருதுகிறார்கள். உரையாடல் போட்டிக்கும், பிற சிறுகதை போட்டிகளுக்கும் வந்திருக்கும் கதைகளை பார்த்தால் அப்படித் தோன்றவில்லை. Money Value இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் எழுத அல்லது படிக்க ஆர்வம் குறைந்த மாதிரி தெரியவில்லை. இதற்கென்று ஒரு வட்டம் எப்போதும் இருக்குமென்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்த வரை சிறுகதை எழுதுவது சதுரங்கம் விளையாடுவதைப் போல மகிழ்ச்சி அளிக்கிறது.

        அன்புடன்,
        சத்யராஜ்குமார்

    • சித்ரன் 8:13 மு.பகல் on ஆகஸ்ட் 12, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      பரிசு பெற்ற சூசன் சிறுகதையின் முழுத் தலைப்பும் திடீரென்று ஞாபகத்துக்கு வந்தது. அது “புகை படிந்த அம்மாவும், சில கரப்பான் பூச்சிகளும்”. சரியா?

    • dYNo 10:36 மு.பகல் on ஆகஸ்ட் 12, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      அங்கன சொன்னதுதான்… நீங்க சொல்றது 100% நிஜம்!
      http://twitter.com/dynobuoy/status/3235990238

      வெற்றிக்கு (மீண்டும்) வாழ்த்துகள்!!

    • யுவகிருஷ்ணா 12:01 பிற்பகல் on ஆகஸ்ட் 12, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நல்ல பகிர்வு!

      பெருசுகளின் அனுபவங்களைப் பார்த்தால் எனக்கெல்லாம் ரொம்ப ஈஸியாக அங்கீகாரம் கிடைத்து வருவதாக தெரிகிறது :)

      • சத்யராஜ்குமார் 12:13 பிற்பகல் on ஆகஸ்ட் 12, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        யுவகிருஷ்ணா, நன்றி! ஈசியாக அங்கீகாரம் கிடைக்கும் என்பதில் எனக்கு இன்னமும் நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு அங்கீகாரத்துக்குப் பின்னாலும் நிச்சயம் கண்ணுக்குத் தெரியாத உழைப்பு இருக்கவே செய்யும்.

    • Prakash 1:07 மு.பகல் on ஆகஸ்ட் 13, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      வாசிப்பு மட்டும் தான் உண்மையை காட்டுகின்றது. ஏன் டா இப்படி எழுதினோம் என்று நொந்து கொள்ளும் அளவிற்கு !

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
திருத்து
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
வேண்டாம்