RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • சோபா சதீஷ் 4:24 pm on November 22, 2009 நிரந்தர பந்தம் | பதில்  

    போதைக்கு அடிமையாகும் தாவரங்கள் 

    மனிதன் தாவரங்களையும் விட்டு வைக்கவில்லை.

    திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் விவசாயிகள் பூச்சி மருந்துடன் பிராந்தி கலந்து அடிக்கிறார்களாம். பூச்சிக் கொல்லியைவிட வேகமாய் பூச்சிகளை அழிப்பதுடன், பயிர்கள் ஆரோக்யமாய் வளர்கின்றன என்றும் சொல்கிறார்கள்.

    அரசு மார்க்கெட் செய்யும் டாஸ்மாக் விற்பனை அதிகரிக்க மற்றும் ஒரு விஷயம் கிடைச்சாச்சு.

    ஆக……பயிர்களுக்கு இப்போது ரெண்டு ‘தண்ணி’ தேவைப்படுகிறது.

    முதல் அடிப்படைத் தண்ணீரைத் தரவே பக்கத்திலிருக்கும் மூன்று மாநிலங்களும் தகராறு செய்துவரும் நிலையில் இப்போது அடுத்த தேவை வந்துவிட்டது. தண்ணீர்தான் எவ்வளவு பிரச்னை?

    என்றோ, எங்கிருந்தோ வந்த பென்னி குக் என்னும் ஆங்கிலேயன்.. இங்குள்ள மக்கள் தேவையறிந்து முல்லைப்பெரியாறு அணை கட்டிக்கொடுத்தான். இங்குள்ள தோழனோ தண்ணீர் தர வீம்பு செய்கிறான். பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திரம் தயாராகிறது.

    காவிரி ஆற்றில் முதன்முதல் அணை கட்டிய கரிகாலனே இன்று பிறந்து வந்தாலும்கூட, அவனும் காவேரி மினரல் வாட்டர்தான் வாங்கிக் குடிக்க வேண்டி இருக்கும்.

    யோசித்துப் பாருங்கள்…..

    ஊரெல்லாம் தண்ணீர்ப் பஞ்சம் வந்தாலும் இந்த மினரல் வாட்டர்க்காரனுக்கு பஞ்சமே வரமாட்டேன்கிறது.

    அதேபோல், தண்ணீரை பாட்டிலில் அடைத்து கர்நாடகாவிலிருந்தோ கேரளாவிலிருந்தோ அனுப்பினால் எவனும் தடுப்பதில்லை.

    ஏன்… தடுத்தால் அந்த கம்பெனி, ”சரி… தண்ணீரைத் தமிழகம் கொண்டு செல்லவில்லை. நீயே வைத்துக்கொள். ஆனால் பாட்டிலுக்கு ரூபாய் பதினைந்து கொடு…” என்று சொல்லும்.

    ஆக… தண்ணீர் பிரச்னையில்லை. அது இலவசமாய் இருப்பதுதான் பிரச்னை. அதனால்தான் அங்கே அரசியல் விளையாடுகிறது. விஷயம் உணர்வுப்பூர்வமாய் மாறிவிடுகிறது.

    அதையே நீ உபயோகப்படுத்தும் தண்ணீருக்கு லிட்டருக்கு 5பைசா என்று சொல்லிப் பாருங்கள்….”அய்யா, எனக்கு இந்த வருடம் இவ்வளவு தண்ணீர் போதும்; மீதியை எங்கு வேண்டுமானாலும் அனுப்பிக் கொள்ளுங்கள்” என்பான்.

    இப்போது உணர்வுப் பூர்வமாய் இருக்கும் தண்ணீர், பிறகு மேனேஜ்மெண்ட்டாய் மாறிவிடும். பிரச்னை சுலபமாய் தீர்ந்துவிடும்.

    நமக்கு தெரிந்தது… மேலே இருப்பவர்களுக்கு தெரியாமலா இருக்கும்..?

    அடடே… நாம ஆரம்பிச்ச விசயத்துலருந்து எங்கேயோ வந்துட்டோம் போல இருக்கே…

    சமீபத்தில் ஒரு இன்ஷ்யூரன்ஸ் பாலிஸி எடுக்கப் போயிருந்த இடத்தில் சந்தித்த நண்பரிடம் ஆர்வமாய் இந்த விஷயத்தை சொன்னதும், “வயித்துல இருக்கற தேவையில்லாத புழுக்களைக் கொல்ல பிராந்தியே போதும்… வேற மருந்துகள் தேவையில்லை…. இல்லியா….” என்றார்.

    அவர் ஒரு ‘குடிமகன்’ என்பது அப்புறம்தான் ஞாபகம் வந்து தொலைத்தது.

    - சோபா சதீஷ்

     
  • சத்யராஜ்குமார் 7:41 pm on June 7, 2009 நிரந்தர பந்தம் | பதில்  

    நயாகரா நமக்கு இன்னொரு காசி ராமேஸ்வரமாகி விட்டது. எங்கே திரும்பினாலும் இந்திய முகங்கள். இந்த முறை அத்தையை கூட்டிக் கொண்டு போக வேண்டியிருந்தது. இப்போது நான் இருக்கும் இடத்திலிருந்து காரில் செல்ல எட்டு மணி நேரம். விமானமா, காரா என வீட்டுக்குள் சொல்லரங்கம் நடந்து கார் என்று முடிவானது. கொஞ்சம் டிட்டிபாசனா மட்டும் தெரிந்தால் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் இங்கே சுலபமாய் கார் ஓட்டலாம்.
    Niagara Falls
    பல முறை போய் வந்து விட்ட படியால் அங்கே செய்யத்தக்கவை, தகாதவை எல்லாம் எனக்கு மனப்பாடமாகி விட்டது. எத்தனை முறை சென்று பார்த்தாலும் Maid of the Mist படகுப் பயணம் பரவசமூட்டும் தெய்வீக அனுபவம். கோகெயின் போன்ற போதை வஸ்துக்கள் அடித்தால் எப்படி இருக்கும் என்று எனக்கு சத்தியமாய் தெரியாது. ஆனால் இப்படித்தான் சோவென்ற இரைச்சலுடன் மசமசவென நாலாபுறமும் தண்ணீர் புகை மாதிரி சூழ, அங்கங்கே வானவில் பளிச்சிட்டுக் கொண்டு சொர்க்கம் மாதிரி இருக்கும் என்பது அனுமானம்.

    நயாகராவுக்கு பக்கத்து ஊரான Buffalo என்னும் ஊரில் லாட்ஜ் எடுத்தால் விலை மலிவாக இருக்கும் என்று யாராவது அறிவுரை சொன்னால் வாயை துடைத்த நாப்கினோடு சேர்த்து இதையும் தொட்டியில் போட்டு விடுங்கள். நயாகரா உள்ளூருக்குள் Buffalo Avenue-வை ஒட்டி பல ஹோட்டல்கள் உள்ளன. முப்பதோ, நாப்பதோ கூட போனாலும் அங்கே அறை எடுப்பது உத்தமம். அருவி இருக்கும் இடத்துக்கு நடந்து போகலாம்.

    குறிப்பிட்ட நாள் இரவுகளில் அருவிக்கு மேலே வாணவேடிக்கை நிகழ்ச்சியும், விளக்கொளி நிகழ்ச்சிகளும் இருக்கும். இருட்டினதும் ஆரம்பிக்கும் (வெயில் காலத்தில் இங்கே இருட்டுவதற்கு ராத்திரி ஒன்பது மணியாகும்) இந்த நிகழ்ச்சிகள் சும்மா பத்துப் பதினைந்து நிமிஷம்தான் எனினும் நம்ம ஊரிலிருந்து வந்திருக்கும் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தைகளுக்கு மகிழ்ச்சியூட்டும். ஆக நிகழ்ச்சி நடக்கும் நாட்களை இணைய தளங்களில் பார்த்து தெரிந்து கொண்டு சாயந்தரம் போல இங்கே அறை எடுத்தால், அன்றைய மாலை சின்ன வாக்கிங் போய் ஒரு நயாகரா ட்ரெயிலர் காட்டி விட்டு வரலாம்.

    நயாகரா வெல்கம் சென்ட்டர் என்று ஒரு பெரிய கட்டிடம் போனவுடன் கண்ணில் படும். உள்ளே விசாரணை கவுன்ட்டரில் நீங்கள் என்ன கேட்டாலும் சினேகமாய் பதில் சொல்லும் வரவேற்பாளர்கள் $60 மதிப்புள்ள டூர் பேக்கேஜ் டிக்கட்டை உங்கள் தலையில் கட்டி விட நிறைய வாய்ப்புண்டு. அவர்களை அலட்சியம் செய்து, கொஞ்சம் பூங்காவுக்குள் நடந்து சென்றால் அபிஷியல் விசிட்டர் சென்ட்டர் பார்க்கலாம். சின்ன ட்ராம் வண்டியில் ஆறு முக்கிய இடங்களை சுற்றிக் காட்ட $30-க்கு அங்கே டிக்கட் கிடைக்கும்.
    Cave of the Winds

    என்னைக் கேட்டால் அங்கே முக்கிய சங்கதிகள் இரண்டே இரண்டுதான். ஒன்று Maid of the Mist. இன்னொன்று Cave of the Winds. முன்னது கமல். பின்னது அதிரடி ரஜினி. இருநூறடி உயரத்திலிருந்து விழும் அந்த காட்டாற்று அருவியில் கிட்டத்தட்ட நீங்கள் குளிக்கலாம். இருதய பலஹீனமானவர்களும், மூச்சுத்திணறல் உபாதை உள்ளவர்களும் இந்த காற்று குகை பகுதிக்கு வர வேண்டாம் என்று கொட்டை கொட்டையாய் சிவப்பு எழுத்து எச்சரிக்கை பலகைகள் நிறைய பார்க்கலாம். இந்த முறை நான் போன போது, மூர்ச்சையடைந்த நம்ம ஊர் பெரியவரை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

    அமெரிக்கா வந்த பின் அடர்ந்த காடுகளுக்கு அடிக்கடி ட்ரெக்கிங் போவதுண்டு. நான் வசிக்குமிடம் வருடத்தில் பாதி நாள் குளிர் பிரதேசம் என்பதால், ஒரு தடவை கூட பாம்பை கண்ணில் பார்த்ததில்லை. முதல் தடவையாக Cave of the Winds ஸ்தலத்தில், செடி கொடிகளுக்கிடையில் நிம்மதியாய் படுத்திருந்த ஒரு பாம்பை பார்த்தேன்.

    அது படம் எடுக்கவில்லை. அதை நான் எடுத்த படம் கீழே.

    Snake

     
  • சத்யராஜ்குமார் 8:34 pm on May 14, 2009 நிரந்தர பந்தம் | பதில்  

    ஆதிமூலம் 

    பூச்சி புழுக்கள் தோன்றி, பிறகு நானும் நீங்களுமாக ஆனதற்குக் காரணம் DNA இல்லையாம். DNA-வின் ஒன்று விட்ட அண்ணன் RNA என்று ஒரு ஆங்கிலேய ரசாயனக்காரர் கண்டுபிடித்துச் சொல்லி விட்டார்.

    குளம் குட்டை ஓரமாய் ஒரு வெம்மையான மாலைப்பொழுதில் சூரியனின் புற ஊதா கதிர்களோடு நிகழ்ந்த ரசாயன மாற்றத்தில் முதல் முதலாய் ஒரு RNA எப்படி தோன்றியிருக்கும் என சோதனைக் குடுவையில் செய்து காட்டியிருக்கிறார்.

    DNA நிரவகிக்கும் பரம்பரை தகவல்களை ஆதி காலத்தில் RNAதான் கையாண்டிரு்க்கும் என்பது இவர் வாதம்.

    DNA, RNA இதெல்லாம் என்னண்ணே என்று கேட்டால் செல்களை ஆக்கவும் அழிக்கவுமான ஜெனட்டிக் சங்கதிகளை DNA சேமித்து வைத்திருக்கிறதாம். தபால்காரர் கணக்காக அந்தத் தகவல்களை எடுத்துக் கொண்டு போய் செல்களிடம் சேர்ப்பதோடன்றி சிக்கலான ஜெனட்டிக் சங்கேத தகவல்களை செல்களுக்குப் புரியும்படி மொழிபெயர்த்துச் சொல்லும் வேலையையும் RNA பார்த்துக் கொள்கிறதாம்.

    4 பில்லியன் வருடங்களுக்கு முன்பு உயிர்கள் தோன்றிய போது பரம்பரை தகவல்களை சேமிப்பது, பரிமாறுவது என இரண்டு வேலையையும் RNA பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் வேலைப்பளு தாங்காமல் DNA-விடம் பாதி வேலையைப் பிரித்துக் கொடுத்து விட்டதால் இத்தனை நாளாய் விஞ்ஞானிகள் டிராக் மாறி DNA-தான் உயிர்கள் தோன்றவும், பரிமாண விருத்திக்கும் காரணமாயிருக்கும் என்று தப்பாட்டம் ஆடி வந்திருக்கிறார்கள் என்கிறார் John D. Sutherland என்னும் இந்த ராசாயனவியலாளர்.

    புரட்சிகரமான இந்த ஆய்வு முடிவை வெளியிட்டவர் எதற்கும் இருக்கட்டுமென, “இன்னும் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் நிறைய இருக்கிறது. நான் சொன்ன அத்தனையுமே தப்பாகக் கூட இருக்கலாம்.” என்று ஒரு குண்டையும் தூக்கிப் போட்டு விட்டார். இதுதான் விஞ்ஞானிகள் டச்சா?

     
c
புதிய பதிவு எழுதுக
j
அடுத்த பதிவு / அடுத்த மறுமொழி
k
previous post/previous comment
r
பதில்
e
திருத்து
o
மறுமொழிகளை காண்பி / மறை
t
மேலே செல்க
l
புகுபதிகைக்கு செல்ல
h
உதவி காட்டு/மறை
esc
வேண்டாம்