RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • சத்யராஜ்குமார் 5:15 pm on January 7, 2009 நிரந்தர பந்தம் | பதில்
    குறிச்சொற்கள்: pocket novel, rajendrakumar   

    ராஜேந்திரகுமார் 

    தமிழ் எழுத்தில் ராஜேந்திரகுமார் இடம் என்ன? 

    இப்படி ட்விட்டரில்  கேட்டு என். சொக்கன் என் நினைவுகளை தூண்டி விட்டார். சற்றே துரதிர்ஷ்டம் கலந்த நினைவுகள் அவை.

    89-ல் என்றுதான் நினைக்கிறேன். ராஜேஷ்குமார் இல்ல விழா. அதற்காக கோவை வந்திருந்தார். விழாவுக்கு முந்தைய தினம் ஹோட்டலில்  முதன் முதலாய் ராஜேந்திரகுமார் அவர்களை சந்தித்தேன். 

    விறுவிறுப்பான அவர் எழுத்து நடைக்கு நேர் எதிராய் ரொம்பவும் நிதானமான மனிதராகத் தெரிந்தார். என்னுடன் பேசிக் கொண்டே, ஒரு கையில் சிகரட் புகைய, மறு கையால் நீள வெள்ளைத்தாளில் அடுத்த நாவலை எழுதிக் கொண்டிருந்தார். 

    எம்.ஜி.ஆர், தமிழ்வாணன் போலவே அவருக்கும் தனிப்பட்ட ஸ்டைலில் ஒரு தொப்பி அடையாளம் இருக்கிறது. வாசகர் வட்டங்களுக்கு அவர் துள்ளு நடை நன்கு தெரிந்தாலும், வாசிக்காத வட்டங்களைச் சேர்ந்தவர்கள் இவரையும், ராஜேஷ்குமாரையும் நன்கு குழப்பிக் கொள்வார்கள்.

    வாவ், ஙே, பைக் அரை வட்டம் போட்டு திரும்புவது, நெற்றி முடியை கோதி விட்டு நாயகி இடுப்பில் கை வைத்து முறைப்பது இதெல்லாம் தமிழில் அவர் பட்டா போட்டுக் கொண்ட சொற்கள் அல்லது சொற்றொடர்கள்.

    அத்தியாயத்துக்கு ஒரு கேரக்டர் என கதாபாத்திரம் தன்னைத் தானே அறிமுகப் படுத்திக் கொண்டு வரும் அவர் பாணி, பாஸ்ட் புட் நாவல் வடிவத்துக்கு அழகாகக் கை கொடுக்கும் ஓர் உத்தி. ஆட்கள் அறிமுகத்திலேயே பாதி கதை நகர்ந்து விடும். 

    தான் ராஜேஷ்குமார், ப.கோ பிரபாகர் ஆகியோருக்கெல்லாம் முந்தைய தலைமுறை; சுஜாதா, நானெல்லாம் ஒரு ஜெனரேஷன் என்பதை பேச்சினூடே ஓரிரு முறை அழுத்தி சொன்னார். 

    அடுத்த நாள் விழாவில் சூடாக இட்லி வடை சாப்பிட்ட பின், காலை பத்தரை மணிக்கு, ”  வாப்பா. ஒரு வாக் போய்ட்டு வரலாம். ” என்றார்.

    மெதுவாய் நானும், அவரும்  பூ மார்க்கெட் தெருவில் நடக்கும் போது, ” ராஜேஷ்குமாரோட சாயல் இல்லாம இருந்தா உன் கதைகள் நல்லா இருக்கும். ” என்று சொல்லி என்னை திடுக்கிட வைத்தார். என் சிறுகதைகளை இவர் படித்திருக்க மாட்டார் என்றே நான் நினைத்திருந்தேன். 

    ” குமுதத்தில் பத்து சிறுகதை எழுதிட்டு ஒரு நாவல் எழுது. ஹிட் ஆயிடும். ” என்றார்.

    அந்த இரண்டு அறிவுரைகளும் அந்த சமயத்தில் எனக்கு மிகவும் உபயோகமானவை. நான் சற்றும் எதிர்பார்க்காத ஒரு பெரிய மனிதரிடமிருந்து கிடைத்ததுதான் ஆச்சரியம்.

    அந்த விழாவில் கிடைத்த பத்திரிகை ஆசிரியர்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து, சில மாத நாவல்கள் எழுதியது பற்றி தமிழோவியத்தில் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன். அந்த தொடர் அனுபவங்களை தொடர்ந்து எழுத நேரமிருந்திருந்தால் இந்தப் பதிவும் அதில் ஓர் அத்தியாயமாயிருந்திருக்கும்.

    இது வரை எழுதியதில் துரதிர்ஷ்டம் எங்கே வந்தது என்று நீங்கள் யோசித்தால், அது இனிமேல்தான் வருகிறது. என்னுடைய முதல் நாவலை வெளியிட்ட அன்பர் தெரிந்தோ தெரியாமலோ அதை ஒரு விவகாரமாக்கியிருந்தார்.

    ராஜேந்திரகுமாரின் நாவல் வெளிவருவதாக அறிவித்த இதழில் அதற்கு பதிலாக என் நாவலை வெளியிட்டு விட்டார்.

    நாவல் ஏமாற்றமளிக்கவில்லை; ராஜேந்திரகுமார், சத்யராஜ்குமார் இரண்டுமே தமிழில் எட்டு எழுத்துக்கள்தான் என்றெல்லாம் வினோத ஆராய்ச்சி செய்து வாசகர்கள் போஸ்ட் கார்டில் பாராட்டினார்கள்.  ஆனால் ராஜேந்திரகுமார் இந்த விஷயத்தில் படு கோபம் அடைந்திருக்கிறார்.

    அடுத்த முறை நாவல் வாங்கப் போன போது, ” அந்தப் பையன் கிட்டேயே போய் வாங்கிப் போடுங்க. ” என்று அவர்களை விரட்டி விட்டதாகத் தெரிகிறது. இதில் என் தவறு ஏதுமில்லை என்றாலும் இதற்காக அவரிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

    மறுபடி அவரை சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

     
    • bsubra 9:31 பிற்பகல் on ஜனவரி 7, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      அந்தத் தொடரை நேரம் கிடைக்கும்போது தொடருங்களேன்

      • Kathir 8:50 பிற்பகல் on செப்டம்பர் 9, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        உங்களுக்கு ராஜேஷ்குமார் நாவல்கள் படிக்க விருப்பம் என்றால், அவர் நாவல்கள் http://www.emagaz.in இணையதளத்தில்!

    • dYNo 9:36 பிற்பகல் on ஜனவரி 7, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      வாரயிதழ்கள் பல ராஜேஷ் குமார், ராஜேந்திரகுமார் தொடர்களை வெளியிட்டே வண்டியோட்டிய காலமும் இருந்தது. ராஜேந்திர குமாருக்கு ராஜேஷ் குமார் மேல் அப்படி என்ன கோபம்?

    • சத்யராஜ்குமார் 9:56 பிற்பகல் on ஜனவரி 7, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      @bsubra:
      Party culture-லிருந்து தப்பிப்பது பெரிய காரியமாயிருக்கிறது. :-)

      @dYNo:
      ராஜேந்திரகுமாருக்கு ராஜேஷ்குமார் மேல் கோபமா ? அப்படி எதுவும் நான் குறிப்பிடவில்லையே ? ராஜேந்திரகுமாரின் கோபம் அறிவித்தபடி அவர் நாவலை வெளியிடாமல் போன அந்த பதிப்பக ஆசிரியரின் மீது !

    • என். சொக்கன் 12:20 மு.பகல் on ஜனவரி 8, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      மிகச் சுவையான பதிவு, நன்றி சத்யராஜ்குமார் :)

      - என். சொக்கன்,
      பெங்களூர்.

    • REKHA RAGHAVAN 6:03 மு.பகல் on ஜனவரி 8, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      வெளியிடப்படாத விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கு போல . அவ்வப்போது வெளியிடுங்கள் . நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.

      ரேகா ராகவன் .

    • சத்யராஜ்குமார் 9:16 மு.பகல் on ஜனவரி 8, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      @என். சொக்கன்:
      நன்றி சொக்கன் ! இந்தப் பதிவை எழுதத் தூண்டியமைக்கு !

      @REKHA RAGHAVAN:
      சந்தர்ப்பம் கிடைக்கும் போது கண்டிப்பாக எழுதுகிறேன்.

  • சத்யராஜ்குமார் 7:40 am on November 8, 2007 நிரந்தர பந்தம் | பதில்  

    காதல் 

    சுஜாதா குமுதம் ஆசிரியர் ஆனபோது அப்பத்திரிகையில் ரெகுலராய் எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் பலர் திணறிப்போனார்கள். பல காலமாய் குமுதம் ஆதரித்து வந்த சில கதை வடிவங்கள் திடீரென மறுக்கப்பட்டது.

    ” என்ன ஸார் கதை போடறான் சே ! ” என்று அவர்கள் குமுதத்தைத் திட்டினார்கள். ஏற்கெனவே நான் ட்ரான்சிஷனில் இருந்ததால் அங்கே நிகழும் மாற்றங்களை என்னால் சுலபமாய்ப் புரிந்து கொள்ள முடிந்தது.  

    கதை என்பது வெறும் மொழிநடையோ, திருப்பங்களோ மட்டுமல்ல; அவற்றைக் கடந்து அதைப் படித்த பின் ஏற்படும் உணர்வு என்பதை ஏற்கெனவே நான் உணர்ந்திருந்தேன். வாழ்க்கையின் இயல்பான தருணங்களை அடிக்கோடிட்டு கதைகளாக்க ஆரம்பித்திருந்த சமயம் அது. குமுதத்தின் அப்போதைய எதிர்பார்ப்பும் அதுதான். அப்படி எழுதிய ‘காதல்’, ‘சுருண்டு கிடந்தார்’, ‘கூடு’ போன்ற சிறுகதைகளை குமுதம் உடனே வெளியிட்டது. 

    காதல் குறுங்கதையை இந்த வார தமிழோவியத்தில் வாசிக்கலாம்.

     
  • சத்யராஜ்குமார் 7:30 am on November 5, 2007 நிரந்தர பந்தம் | பதில்  

    சாமீய்! – குமுதம் சிறுகதை 

    1998 வாக்கில் நண்பர்களுடன் மாமல்லபுரம் போய் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தேன். பஸ்ஸில் நல்ல கூட்டம். பின்புறம் நானும் சில நண்பர்களும் நின்று கொண்டிருக்க, இன்னும் சில நண்பர்கள் முன்புறம் தொற்றியிருந்தனர்.

    பாதி வழியில் முன்புறமிருந்த நண்பர்கள் இருக்கையிலிருந்த ஒரு நபரைக் காட்டி, ‘ அவர் உங்களோட பேசணுமாம். ‘ என்கிற மாதிரி என்னைப் பார்த்து சைகை செய்தார்கள். முன் பின் தெரியாத அவரைப் பார்த்து நான் நெற்றியைச் சுருக்கி யோசித்துக் கொண்டிருக்க, அவர் கையிலிருந்த புத்தம் புதிய குமுதத்தை அசைத்துக் காட்டி, ‘ சூப்பர். ‘ என்கிற மாதிரி அபிநயித்தார்.

    எனக்குக் கொஞ்சம் விளங்கியது. அவர் படிக்கிறபோது நண்பர்கள், ‘ அட தலைவர்(?!) கதை வந்திருக்கு போலிருக்கு. ‘ என்று பேசிக் கொள்ள, ‘ சத்யராஜ்குமார் இந்த பஸ்சிலா இருக்கார்? ‘ என்று கேட்டு, என்னைப் பார்த்துக் கையசைத்து சுடச்சுட கருத்துத் தெரிவித்தார்.

    அடுத்த பஸ் ஸ்டாப்பில் இறங்கி ஓடி வந்து, ‘ கதைக்குப் பக்கத்தில் ஒரு கையெழுத்துப் போட்டுக் குடுங்க சார். ‘  என்று கேட்டு வாங்கிக் கொண்டு,  பஸ் கிளம்புவதற்குள் மறுபடி தொற்றிக் கொண்டார்.

    கூட்டம் பிதுங்கி வழிகிற அந்தப் பயண அவசரத்தில் அவர் பெயரைக் கூட கேட்க முடியவில்லை. அவர் முகமும் இப்போது நினைவில்லை. என்னையும் அவர் இந்நேரம் மறந்திருப்பார்.  இந்தக் கதையைப் பார்க்கிறபோதெல்லாம் அந்த நினைவுகள் மட்டும் அழியாமல் அப்படியே இருக்கிறது.

    குமுதத்துக்காகவென்றே அளவெடுத்துத் தைத்த சாமீய்! என்ற அந்தக் கதை இங்கே.

     
c
புதிய பதிவு எழுதுக
j
அடுத்த பதிவு / அடுத்த மறுமொழி
k
previous post/previous comment
r
பதில்
e
திருத்து
o
மறுமொழிகளை காண்பி / மறை
t
மேலே செல்க
l
புகுபதிகைக்கு செல்ல
h
உதவி காட்டு/மறை
esc
வேண்டாம்