RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • சத்யராஜ்குமார் 11:17 pm on July 2, 2009 நிரந்தர பந்தம் | பதில்  

    கதை vs தொழில்நுட்பம் 

    ஆரம்பம் தொட்டே கதை எழுதும் ஆர்வத்தை விட, அதில் தொழில்நுட்பத்தை நுழைக்கும் போக்கு என்னிடம் அதிகமாயிருந்தது.

    பேப்பரில் எழுதிக் கொண்டிருந்தவன் சட்டென ஒரு தட்டச்சு இயந்திரத்தை (ஹால்டா) வாங்கி தட்ட ஆரம்பித்தது அப்படித்தான். முறைப்படி டைப்பிங் பழகவில்லை. ஆனால் மனதின் வேகத்துக்கு தடதடவென தட்டி நொறுக்க சில நாட்களிலேயே பழகி விட்டேன். அப்புறம் கணினிக்கு தாவினேன். பாரதி போன்ற ஷெல் சார்ந்த மென்பொருட்களும், டாட்மேட்ரிக்ஸ் ப்ரிண்ட்டரும் என் கதை எழுதும் ஆர்வத்தை குறையாமல் பார்த்துக் கொண்டன.

    அந்த காலகட்டத்தில் சுஜாதா தவிர வேறு யாரெல்லாம் கம்ப்யூட்டரில் கதை தட்டிக் கொண்டிருந்தார்கள் என்று அவ்வளவாய் தெரியாது. (இரா. முருகன்?) கல்கியில் அப்போது என்னைப் பற்றி வெளியான சிறுகுறிப்பில் நான் கம்ப்யூட்டரில் கதை எழுதி வருவது குறித்து பிரசுரமாகி இருந்ததால், ஒரு விழாவில் சந்தித்த ஆர்னிகா நாசர், “கட்டுபடியாகுமா?” என்றார்.

    விண்டோஸ் 3.1 வந்த பின் தமிழைப் போல பாவ்லா காட்டும் ட்ரூ டைப் எழுத்துருக்கள் புழக்கத்துக்கு வந்தன. என்னிடமிருந்த கோரல் ட்ரா என்ற மென்பொருளில் கொஞ்சம் மெனக்கெட்டால் அப்படிப்பட்ட எழுத்துருக்களை உருவாக்கும் வசதி இருந்தது. மெனக்கெட்டேன். ஒரு எழுத்துரு உருவாக்கி அதற்கு ஸரஸ்வதி என பெயரிட்டேன். சமீபத்தில் யுனிகோட் பரவலாகும் வரை எனக்கும் என் நெருங்கிய கணினி நண்பர்களுக்கும் (சித்ரன்) ஸரஸ்வதிதான் ஆஸ்தான எழுத்துரு. 2003-ல் என்றுதான் நினைக்கிறேன், முப்பது முப்பத்திரண்டு தமிழ் வலைப்பதிவாளர்களில் ஒருவனாய் நானும் மாறிய போது, சித்ரன் மூலமாக என்னை யாஹூ அரட்டையில் பிடித்த எழுத்தாளர் பாரா நானும், சித்ரனும் தமிழில் உரையாட ஸரஸ்வதியை உபயோகிக்கிறோம் என்றதும், “என்னது சிம்ரனா?” என்று கிண்டலடித்தார். எனக்கு ஏன் ஸ்ரீதேவி, கவுதமி என்று கவர்ச்சியாய் நடிகை பெயர் வைக்கத் தோணவில்லை என்று நொந்து கொண்டேன்.

    டயரி போன்ற வலைப்பதிவு தொழில்நுட்பத்தை கதை எழுதி கெடுத்த முன்னோடி வில்லன் நான். அதற்கு முக்கிய காரணம், சுவாரஸ்யமான சமாசாரங்களை பதிய எனக்குத் தெரிந்த ஒரே சவுகரியமான வடிவம் சிறுகதை. அமெரிக்காவில் இந்தியர்களின் சின்ன சின்ன அனுபவங்களை சுவாரஸ்யம் கலந்த கதையாக்கி துகள்கள் என்னும் தலைப்பில் வெளியிட, நல்ல வரவேற்பு. அப்போது ப்ளாகரில் இருந்ததால், அது தந்த சுதந்திரத்தை பயன்படுத்தி கதைகளில் கொஞ்சம் DHTML மேஜிக் செய்தேன். அதாவது ஒரு கதை முடிந்த இடத்தில் லின்க் கொடுத்து மவுசை மேலே வைத்தால், கதையின் இன்னொரு முடிவு பிரசன்னமாகும். இது போல பல கதைகளுக்கு இரண்டு முடிவுகள் வைத்திருந்ததையும், DHTML தொழில்நுட்பத்தை அதற்கு பயன்படுத்தியதையும் பாரா அப்போது இமெயிலில் மனசார கீழ்கண்டவாறு பாராட்டினார்.

    அன்புள்ள சத்யராஜ்குமார்

    உங்களது பிளாக்ஸ்பாட் வலைப்பதிவையும் பைட்ஸ் ஆனையும் இன்றுதான் முழுக்கப்
    படித்து முடித்தேன். என் முதல் பாராட்டு, உங்களது தொழில்நுட்ப
    வேலைகளுக்கு.
    மிக அழகாகப் பல விஷயங்களைச் செய்திருக்கிறீர்கள். ஒரு
    கதைக்கு இரண்டு முடிவு கொடுக்கிறபோது சட்டென்று இன்னொரு பேரா
    உதயமாகிறதும் உங்களைப் பற்றிய சிறு குறிப்பு தனி பக்கமாக மேலே
    விழுவதுவும் அழகாக உள்ளன. நேர்த்தியான வடிவமைப்பில் கவர்கிறீர்கள்.

    விஷயத்துக்கு வருகிறேன்.

    மொழியின் அத்தனை சாத்தியங்களும் உங்களுக்கு வசப்படுகின்றன. ‘குமார்’ரக
    எழுத்தாளர்கள் யாருமே மொழி விஷயத்தில் இந்த உயரங்களைத் தொட்டதில்லை;-)
    நிச்சயமாக நீங்கள் மசாலா எழுத்தாளர் இல்லை என்று எல்லா கதைகளும்
    சொல்லிவிட்டன.

    அன்புடன், வாழ்த்துகளுடன்
    பாரா

    இதன் பின் Purist வலைப்பதிவர்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் எனக் கருதி கதைகளை தொகுத்து இணையதளமாக்கி விட்டு, “இன்று – Today” என்னும் இந்த வலைப்பக்கத்தை வலைப்பதிவுகளின் ஒரிஜினல் நோக்கத்துக்கானதாக ஆரம்பித்தேன். சமீபத்தில் போட்டியின் பொருட்டு இரண்டொரு கதைகள் இங்கே இட வேண்டியதாயிற்று.

    நான் வலைப்பதிவில் தலை காட்டிய சில நாட்களிலேயே தமிழோவியம் கணேஷ் சட்டென்று பழக்கமாகி விட்டார். “ஏதாவது பண்ணுங்க.” என்று அடிக்கடி அன்புக்கட்டளை இடுவார். தட்டையான கதைகள் அச்சு ஊடகத்துக்கு சரி. ஹைப்பர் லின்க் போன்ற அற்புத சாத்தியங்கள் கொண்ட இணைய ஊடகத்துக்கும் அதையே ஏன் கட்டிக் கொண்டு அழ வேண்டுமென எண்ணியவன், ஹைப்பர் லின்க் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒரே கதை ஆறு தடங்களில் பிரிந்து ஆறும் ஆறு வெவ்வேறு கதைகள் போல தனித் தனியே படிக்க முடியும்படி கறுப்பு வெள்ளை கனவுகள் எழுதிக் கொடுத்தேன். இதற்கும் இணைய அன்பர்களிடமிருந்து பலத்த வரவேற்பு. 3D கதைகள் என்று கணேஷ் அதற்குப் பெயர் வைத்தார்.

    இப்போது ட்விட்டர் வந்ததும் அதையும் விட்டு வைக்காமல் அங்கும் என் கதை முயற்சி தொடர்ந்ததை என் சமீபத்திய பதிவொன்றின் மூலம் அறிந்திருப்பீர்கள். அதை ட்விட்டரில் எழுதிக் கொண்டிருந்த போது – என்னிடம் பழகும் ஒரு சிலர் இது கொஞ்சம் ஓவரா இல்லையா என்றார்கள். சோதித்துப் பார்ப்பதில் என்ன தவறு? உண்மையில் அந்த ட்விட்டர் முயற்சி சில காலம் கழித்து நான் செய்ய உத்தேசித்திருந்த இன்னொரு புதிய முயற்சியின் வெள்ளோட்டம் என்பது அவர்களுக்குத் தெரியாது.

    தெனாலி இணைய பத்திரிகை ஆசிரியர் குழு கொஞ்ச நாள் முன்பு என்னிடம் தொடர்பு கொண்டு, SMS மீடியாவில் ஒரு தொடர்கதை எழுத முடியுமா என கேட்டிருந்தார்கள். அதற்கான வடிவம் பிடிபட ட்விட்டர் அழகான பயிற்சிக் களம். போன்சாய் மாதிரி ஒரு தொடர் அமைத்து தருவது எனக்கு சவாலாகவும், சுவாரஸ்யமாகவும் தோன்றவே சம்மதித்தேன்.

    இதோ அந்த தொடர்கதை ஆரம்பமாகி விட்டது. முதலில் ஒரு க்ரைம் கதை. வரவேற்பை பொறுத்து பல வகை கதைகளையும் தர எண்ணம். தமிழில் இந்த புது ஊடக முயற்சியை நீங்களும் ருசித்துப் பாருங்கள்.

     
    • சித்ரன் 2:07 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      PDA-வில் கதை எழுதியதை விட்டுட்டீங்களே..

      ஸரஸ்வதி எழுத்துருவை நான் கொஞ்சம் மாற்றி இன்னும் ரெண்டு எழுத்துரு தயாரித்தேன். ஞாபகமிருக்கிறதா?

      தெனாலி முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

      • சத்யராஜ்குமார் 6:02 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        சித்ரன், ஏற்கெனவே பதிவில் சுயபுராணம் தூக்கலாக தெரிந்ததால் நிறைய விஷயங்கள் சொல்லாமல் விட்டு விட்டேன். :-) உங்கள் மனைவி, மகன் பெயரில் தயாரித்த எழுத்துருக்கள்தானே? ஞாபகம் இருக்கிறது.

    • என். சொக்கன் 5:45 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      சத்யராஜ்குமார்,

      அட்வான்ஸ் வாழ்த்துகள். ஆனால் 2 வரி படிப்பதற்காக ஒரு க்ளிக் என்றால் கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது, ட்விட்டரில் போட்டு ஒரு RSS feed கொடுத்தால் பின்பற்றுகிறவர்கள் அதிகமிருப்பார்கள் என்பது என் கருத்து :)

      சித்ரன்,

      PDA என்றதும் சுவாரஸ்யப்பட்டு வந்தேன் – செல்பேசியில் தமிழ் எழுத வழி உண்டா? (யுனிகோட், வேறுகோட் எதுவானாலும் பரவாயில்லை)

      - என். சொக்கன்,
      பெங்களூர்

    • சத்யராஜ்குமார் 6:18 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      சொக்கன், வாழ்த்துக்கு நன்றி. இந்த கதை முற்றிலும் SMS மீடியாவுக்காக. ஒரு reference-க்காக இணையத்திலும் உள்ளது. இது முற்றிலும் தெனாலியின் சோதனை முயற்சியாகும். presentation உத்திகள் இன்னும் முழுதாய் தீர்மானமாகவில்லை. இந்த கதை முடிவதற்குள் சோதனைகள் செய்து பார்த்து தீர்மானிப்பதாக தெனாலியில் சொன்னார்கள். எழுதி தருகிற சின்ன கடமையை நான் செய்து விட்டேன் :-)

      PDA குறித்து – அப்போது ஒரு Casio கைக்கணினி வைத்திருந்தேன். அதில் TTF Fonts நிறுவ முடியும் என்பதால், என்னுடைய(!) ஸரஸ்வதியை அதில் நிறுவி, ரயிலில் செல்லும் நேரத்தில் சிறுகதைகள் எழுத பயன்படுத்தினேன். அதிலே எழுதின ‘சினிமா, சினிமா’ போன்ற கதைகள் குமுதத்தில் வெளி வந்த போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை.

      • என். சொக்கன் 6:56 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        நன்றி சத்யராஜ்குமார் – TTF Fonts நிறுவும் வசதியுடன் ஒரு செல்ஃபோன் வந்தால் நன்றாக இருக்கும்!

        - என். சொக்கன்,
        பெங்களூர்.

        • சத்யராஜ்குமார் 7:26 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம்

          சொக்கன் , நான் முன்னர் வைத்திருந்த HP iPAQ செல்ஃபோனில் கூட ஸரஸ்வதி போட்டு வைத்திருந்தேனே! Windows Mobile OS அடிப்படையிலான எந்த செல்பேசியிலும் சுலபமாக TTF நிறுவலாம். Samsung, HTC போன்ற நிறுவனங்களின் மாடல்கள் மார்க்கெட்டில் உள்ளன. Smart Phone அல்லாத சாதாரண செல்போன்களிலும் அந்த வசதி இருந்தால் தேவலாம் என நீங்கள் ஆதங்கப்படுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

        • என். சொக்கன் 11:09 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம்

          நான் வைத்திருப்பது நோகியா E75, அதில் TTF Fonts நிறுவும் வசதி இல்லை (என்று நினைக்கிறேன்), அதனால்தான் ஆதங்கம் :)

          - என். சொக்கன்,
          பெங்களூர்.

    • blj 10:13 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      Well done and best wishes for the future.

  • சத்யராஜ்குமார் 5:16 am on March 19, 2009 நிரந்தர பந்தம் | பதில்  

    கல்லறை ஆட்டம் 


    சங்கமம் – கல்லூரி போட்டிக்காக!

    சங்கமம்-கல்லூரி-போட்டி

    இரண்டாம் இடம் அளித்த வாசகர்கள், நடுவர்கள் மற்றும் சங்கமத்துக்கு நன்றி. பரிசு பெற்ற வெட்டிப் பயல், பெனாத்தல் சுரேஷ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.


    நகரத்துக்கு வெளியே இருந்த ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ் காலேஜின் ஆஸ்டல் ப்ளாக்கில் 113-வது அறை. அறைக்குள் இருந்த மூன்று பேரும் ஜன்னலை மொய்த்திருந்தார்கள். தாடைப் பிரதேசத்தில் ட்ரிம் செய்யப்பட்ட தாடியை அணிந்திருந்த ஜெயராஜ் ஜன்னலுக்கு வெளியே கை காட்டினான். 

    ” நெட்டையா ஒரு மொட்டை மரம் தெரியுதா? ”

    ஜெயராஜ் கை காட்டிய திசையில் ஹாஸ்டல் பிளாக்கை விட்டு சொற்ப தொலைவில் மயானம் தெரிந்தது. மயானம் பூராவும் நிற்க வைத்த சிலுவைக் குறிகள். கல்லறைகள். அங்கங்கே நின்று கொண்டிருந்த அடர் மரங்களுக்கு மத்தியில் அவன் காட்டிய மொட்டை மரம் பளிச்சென்று தெரிந்தது. 

    கிருபாவும், நடேஷும் தலைகளை ஆட்டினார்கள்.

    ” தெரியுது. ”

    ” அந்த மரத்துக்கு நேர் கீழே கறுப்பா ஒரு கல்லறை தெரியுதா? ”

    ” ம். சொல்லு. ”

    ” அதுக்குள்ளே யாரைப் புதைச்சிருக்காங்க தெரியுமா? ”

    ” கண்டிப்பா யாராவது மனுஷனைத்தான் புதைச்சிருக்கணும். ”

    கடி ஜோக் அடிக்க முயன்ற நடேஷை ஜெயராஜ் ரசிக்கவில்லை. ” நடேஷ், நான் சீரியசா பேசறேன். ”

    கிருபா நடேஷின் வாயைப் பொத்தி விட்டு ஜெயராஜிடம் திரும்பினான். ” நான் சீரியஸா கேக்கறேன். நீ சொல்லும்மா! ”

    ” நாம இந்த காலேஜில் சேர்றதுக்கு முன்னாடி ‘வில்லியம்’ன்னு ஒரு சீனியர் படிச்சிட்டிருந்தார். பைனல் இயர் படிக்கிறப்போ ஏதோ வீட்டுப் பிரச்சனை காரணமா தற்கொலை பண்ணிக்கிட்டார். ”

    ” எப்படி? ”

    ” அந்த மயான மொட்டை மரத்துல தூக்கு போட்டுகிட்டார். ”

    ” மை காட். இதெல்லாம் உனக்கு யார் சொன்னா? ”

    ” மத்யானம் பிசிக்ஸ் ப்ரொபஸார் டயனமிக்ஸை ராவிட்டிருந்தார். ரம்பம் ரம்பம் ஆரம்பம்ன்னு கத்தினோம். லெக்சரை நிறுத்திட்டு செத்துப் போன வில்லியம் பத்தி சொன்னார். இன்னொரு விஷயம் கேட்டா ராத்திரி நேரம் இந்த ஜன்னலை திறக்கவே மாட்டிங்க. ”

    ” என்ன அது? ”

    ” மாசா மாசம் எட்டாம் தேதி… அதாவது வில்லியம் செத்துப் போன தேதியில் அவரோட ஆவி மயானத்தை சுத்துதாம். 

    கிருபா உதட்டோரம் புன்னைகையை மாட்டினான். 

    ” இது கப்ஸா. ”

    ” நிஜம்டா. ”

    ” என்னால நம்ப முடியாது. ஆவி கீவி சமாசாரமெல்லாம் சரியான ரீல். ”

    ” நடேஷ், நீ என்னடா சொல்றே? ”

    ” ஆவி அனுபவமெல்லாம் எனக்கு இது வரைக்கும் இல்லை. ஆனா ஆவியே இல்லைன்னு ஒரேடியா மறுக்கவும் மாட்டேன். நமக்கு புரியாத சமாசாரங்கள் எத்தனையோ இருக்கு. ”

    ” உங்களை மாதிரி பயந்த ஆசாமிங்க பத்துப் பேர் இருந்தா போதும். ஆவி என்ன, அதுக்கு மேல வேறேதாவது கூட உலாவுதுன்னு கதை கட்டி விடுவான்க. ”

    ” நீ பெரிய தைரியசாலியாடா? ”

    ” கண்டிப்பா. ”

    ” அப்படின்னா நாங்க உன் தைரியத்துக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறோம். நீ தயாரா? ”

    ” தயார். ”

    ” நடேஷ், எட்டாம் தேதி எப்படா வருது? ”

    ” வர்ற புதன் கிழமை எட்டாம் தேதிதான். ”

    ஜெயராஜ் கிருபாவிடம் திரும்பினான். ” கிருபா, வர்ற புதன் கிழமை ராத்திரி சரியா பனிரெண்டு மணிக்கு நீ தன்னந்தனியா அந்த மயானத்துக்குப் போய்… வில்லியம் தூக்கு போட்டு செத்துப் போன மொட்டை மரத்துல ஒரு ஆணியை ஸ்ட்ராங்கா அடிச்சிட்டு வரணும். வருவியாடா? ”

    ” நான் அடிச்சிட்டு வரத் தயார். ஆனா இந்த விஷயம் நம்ம மூணு பேருக்குள்ளே மட்டும்தான் இருக்கணும். பசங்க கிட்டே விஷயம் பரவினா வார்டன் காதை எட்டிடும். அப்புறம் வார்டன் கன்னா பின்னான்னு திட்டி, என்கொயரி வெச்சு, அம்மா அப்பாவையெல்லாம் அனாவசியமா இங்கே வரவழைச்சுருவார். ”

    ” ஓக்கே. நாங்க யார் கிட்டேயும் சொல்லலை. ”

    0O0

    புதன் கிழமை. தேதி எட்டு. நேரம் நள்ளிரவு 11:55. கிருபா வாட்டர் ட்ரெயினேஜ் பைப் வழியே ஹாஸ்டல் பிளாக்கின் வெளிப்பகுதிக்கு வந்து, பொட்டல் வெளியில் மயானத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

    வலது தோளில் பட்டையை பதித்திருந்த ஜோல்னா பையில் சில இரும்பு ஆணிகள். சுத்தியல்.

    மயானத்தின் குட்டையான பின் பக்க காம்பௌண்ட் சுவரை தொட்டான்.  அதை சுலபமாய் தாண்டிக் குதிக்க முடிந்தது. குதித்த நிமிஷம் ஒரு உயரமான கல்லறையின் மேல் அவன் நிழல் பட்டு நகர, திடுக்கென்று தைரியத்தின் சில சதவிதங்களை இழந்து, மீண்டும் வளர்த்திக் கொண்டான். 

    ‘ ஆவியாவது, மண்ணாவது! ‘ மனசுக்குள் சொலிக் கொண்டே வில்லியமின் கல்லறையை நெருங்கினான். மொட்டை மரம் திம்மென்று நிமிர்ந்து நின்றிருந்தது. அருகாமையிலிருந்த மற்றொரு மரத்தின் இலைகளினூடே சடச்சடவென இறக்கைகளை படபடத்து இரண்டொரு ஆந்தைகள் இரைச்சலிட்டன. 

    ஜோல்னா பையை வில்லியமின் கல்லறை மேல் கிடத்தி, ஜிப்பை பிரித்தான். ஒரு நீளமான ஆணியையும், சுத்தியலையும் உள்ளிருந்து உருவினான்.

    ஆணியை மரத்தில் வைக்கப் போன போது – கைகளில் லேசாய் தயக்கம். மனசு தைரிய சலைனை அவன் ரத்தத்தில் ஏற்றியது.

    ‘ இத்தனை தூரம் வந்து விட்டு பயந்து திரும்புவதா கிருபா? எடு ஆணியை. ‘

    எடுத்தான்.

    ‘ மரத்தில் வை. ‘

    ஆணியின் கூர் முனையை மொட்டை மரத்தில் பதித்தான்.

    ‘ சுத்தியலை உயர்த்து. அடி. ‘

    உயர்த்தினான். ‘நச்’.

    ஆணி அந்த வைரம் பாய்ந்த மரத்தில் சிரமமாய் ஒரே ஒரு மில்லி மீட்டர் இறங்கியது.

    ‘நச்’.

    அடுத்த சுத்தியலடியை ஆணியின் மேல் பிரயோகித்த போது,

    ‘சர்ரக்… சர்ரக்… சர்ரக்… சர்ரக்.. ‘

    முதுகுக்குப் பின்னால் காலடிச் சத்தம். குபுக்கென்று வியர்த்துக் கொட்டி, விசுக்கென்று திரும்பினான். ஒரு மச மச உருவம் ஒரு அடி முன்னால் அவன் கண்ணில் மோதியது. முதுகுத் தண்டில் துவங்கி கபாலம் வரை ஒரு ஐஸ் துண்டம் சர்ரென பயணமாக, நடு நடுங்கும் குரலில் கேட்டான்.

    ” யா… யாரு? ”

    உருவத்திடம் இருந்து  ஜல்லிக் கற்களை உரசுகிற குரலில் பதில் வந்தது. 

    ” நான் வில்லியம். ”

    oO0

    ட்ரெயினேஜ் பைப் பயத்தில் கிருபாவை வழுக்கி வழுக்கி விட்டது. மயானத்திலிருந்து பின்னங்கால் பின்னந்தலையில் பட ஜெட்தனமாய் ஓடி வந்ததில் ஏராளமாய் மூச்சு வாங்கினான். கஷ்டப்பட்டு மேலேறி வராந்தாவில் குதித்தான். 

    அறைக்குள் நுழைந்த போது வியர்வை நயாகராவாய் பெருகிக் கொண்டிருக்க, சொத சொதவென ஈரத்தில் குளித்திருந்தான். மேல் மூச்சு கீழ் மூச்சு எகிற பொத்தென்று படுக்கையில் விழுந்தான். 

    ஜெயராஜும், நடேஷும் பதறிப் போய் கிருபாவை பார்த்தார்கள். 

    ” கிருபா… என்னாச்சு ? ”

    ” அ.. அ… அங்கே… ”

    கோர்வையில்லாமல் குரல் வெளியாக வார்த்தை குழறினான் கிருபா.

    ” என்னடா ஆச்சு? ”

    நடந்ததை கஷ்டப்பட்டு மூச்சு வாங்கியபடி சொல்லி முடித்தான். 

    ” நல்ல வேளை கிருபா… வில்லியமோட ஆவி உன்னை எதுவும் செய்யலை. ”

    ” ஜெயராஜ் அது ஆவிதானா? ”

    ” பின்னே என்னவாம்? யாருன்னு நீ கேட்டப்ப நான் வில்லியம்ன்னு சொல்லலை? ”

    ” ஆமாடா. எனக்கு குழப்பமா இருக்கு. யாராவது என்னை பயமுறுத்தணும்ன்னே… இந்த மாதிரி… ”

    ” ஏண்டா இன்னும் உனக்கு நம்பிக்கை வரலையா? யார், எதுக்காக உன்னை பயமுறுத்தணும்? அது ஆவிதான். ”

    ” வாடா, நாம மூணு பேருமா சேர்ந்து மறுபடியும் அங்கே போய் பார்க்கலாம். ”

    ” ஏன் நாங்க நல்லா இருக்கறது உனக்கு பிடிக்கலையா? தூங்குடா பேசாம. ”

    விளக்கு அணைக்கப்பட, தூக்கம் ரொம்ப நேரம் கழித்து கிருபாவை கட்டிப் பிடித்தது. கெட்ட கெட்ட கனவுகள். திரும்பத் திரும்ப ஒரு கறுப்பு உருவம் அவன் மேல் மோதுகிற மாதிரியே இருந்தது. 

    மறு நாள் காலையில் 102 டிகிரி கொதிக்கிற காய்ச்சலின் பிடியில் சிக்கியிருந்தான் கிருபா.

    0O0

    இரண்டாம் நாள். 

    காய்ச்சல் கட்டுக்குள் வந்திருக்க, இரண்டொரு புத்தகங்களை அள்ளிக் கொண்டு ஹாஸ்டலிலிருந்து வகுப்புக்கு புறப்பட்டான். வராந்தாவில் நடக்கும் போதும் அதே நினைவுகள்.

    வில்லியமின் ஆவி நிஜமா?

    இந்தக் கேள்வி அவனுக்குள் புகைச்சலாய் அலைந்து கொண்டே இருந்தது. வராந்தாவில் வார்டன் எதிர்ப்பட்டார்.

    ” குட்மார்னிங் ஸார். ”

    ” ஒரு நிமிஷம் என் ரூம் வரை வந்துட்டுப் போ. ”

    அவரோடு நடந்து அறைக்குள் நுழைந்தான்.

    ” எந்த டாக்டரை பார்த்தே? ”

    ” வெறும் காய்ச்சல்தான் ஸார். பாரசிட்டமால் எடுத்துகிட்டெஎன். சரியாய்டுச்சு. ”

    ” உன்னோட உடமைகள் என் கிட்டே இருக்கு. ஒப்படைக்கத்தான் கூப்பிட்டேன். ”

    மேஜை டிராயரை திறந்து அதை எடுத்துப் போட்டார்.

    திடுக்கிட்டான் கிருபா.

    நேற்று முன் தினம் மயானத்திலேயே போட்டு விட்டு வந்த ஜோல்னா பை. சுத்தியல்.

    ” அன்னிக்கு ரவுண்ட்ஸ் போலாம்ன்னு ரூமை விட்டு வெளியே வந்தேன். ட்ரெயினேஜ் பைப் வழியே வெளியே போற உன்னை பார்த்தேன். அந்த ராத்திரி வேளையில் எங்கே போறேன்னு உன்னை பாலோ பண்ணினேன். மயானத்து மொட்டை மரத்தில் ஆணி அடிச்சிட்டிருந்தே. என்னை பார்த்ததும் தலை தெறிக்க ஹாஸ்டலுக்கு ஓடி வந்துட்டே. உனக்கு என்ன ஆச்சு? இன்னிக்கு நானும் நீயும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் கிட்டே போகப் போறோம். உங்க அப்பா, அம்மாவை வரச் சொல்லி தந்தி குடுத்துட்டேன். ”

    வார்டன் சொல்லச் சொல்ல திகைப்பானான். 

    கூடவே அந்த விஷயம் அப்போதுதான் அவன் மனசில் உறைத்தது,

    வார்டனின் பெயரும் – வில்லியம்தான்.


     
  • சத்யராஜ்குமார் 5:15 pm on January 7, 2009 நிரந்தர பந்தம் | பதில்
    குறிச்சொற்கள்: pocket novel, rajendrakumar   

    ராஜேந்திரகுமார் 

    தமிழ் எழுத்தில் ராஜேந்திரகுமார் இடம் என்ன? 

    இப்படி ட்விட்டரில்  கேட்டு என். சொக்கன் என் நினைவுகளை தூண்டி விட்டார். சற்றே துரதிர்ஷ்டம் கலந்த நினைவுகள் அவை.

    89-ல் என்றுதான் நினைக்கிறேன். ராஜேஷ்குமார் இல்ல விழா. அதற்காக கோவை வந்திருந்தார். விழாவுக்கு முந்தைய தினம் ஹோட்டலில்  முதன் முதலாய் ராஜேந்திரகுமார் அவர்களை சந்தித்தேன். 

    விறுவிறுப்பான அவர் எழுத்து நடைக்கு நேர் எதிராய் ரொம்பவும் நிதானமான மனிதராகத் தெரிந்தார். என்னுடன் பேசிக் கொண்டே, ஒரு கையில் சிகரட் புகைய, மறு கையால் நீள வெள்ளைத்தாளில் அடுத்த நாவலை எழுதிக் கொண்டிருந்தார். 

    எம்.ஜி.ஆர், தமிழ்வாணன் போலவே அவருக்கும் தனிப்பட்ட ஸ்டைலில் ஒரு தொப்பி அடையாளம் இருக்கிறது. வாசகர் வட்டங்களுக்கு அவர் துள்ளு நடை நன்கு தெரிந்தாலும், வாசிக்காத வட்டங்களைச் சேர்ந்தவர்கள் இவரையும், ராஜேஷ்குமாரையும் நன்கு குழப்பிக் கொள்வார்கள்.

    வாவ், ஙே, பைக் அரை வட்டம் போட்டு திரும்புவது, நெற்றி முடியை கோதி விட்டு நாயகி இடுப்பில் கை வைத்து முறைப்பது இதெல்லாம் தமிழில் அவர் பட்டா போட்டுக் கொண்ட சொற்கள் அல்லது சொற்றொடர்கள்.

    அத்தியாயத்துக்கு ஒரு கேரக்டர் என கதாபாத்திரம் தன்னைத் தானே அறிமுகப் படுத்திக் கொண்டு வரும் அவர் பாணி, பாஸ்ட் புட் நாவல் வடிவத்துக்கு அழகாகக் கை கொடுக்கும் ஓர் உத்தி. ஆட்கள் அறிமுகத்திலேயே பாதி கதை நகர்ந்து விடும். 

    தான் ராஜேஷ்குமார், ப.கோ பிரபாகர் ஆகியோருக்கெல்லாம் முந்தைய தலைமுறை; சுஜாதா, நானெல்லாம் ஒரு ஜெனரேஷன் என்பதை பேச்சினூடே ஓரிரு முறை அழுத்தி சொன்னார். 

    அடுத்த நாள் விழாவில் சூடாக இட்லி வடை சாப்பிட்ட பின், காலை பத்தரை மணிக்கு, ”  வாப்பா. ஒரு வாக் போய்ட்டு வரலாம். ” என்றார்.

    மெதுவாய் நானும், அவரும்  பூ மார்க்கெட் தெருவில் நடக்கும் போது, ” ராஜேஷ்குமாரோட சாயல் இல்லாம இருந்தா உன் கதைகள் நல்லா இருக்கும். ” என்று சொல்லி என்னை திடுக்கிட வைத்தார். என் சிறுகதைகளை இவர் படித்திருக்க மாட்டார் என்றே நான் நினைத்திருந்தேன். 

    ” குமுதத்தில் பத்து சிறுகதை எழுதிட்டு ஒரு நாவல் எழுது. ஹிட் ஆயிடும். ” என்றார்.

    அந்த இரண்டு அறிவுரைகளும் அந்த சமயத்தில் எனக்கு மிகவும் உபயோகமானவை. நான் சற்றும் எதிர்பார்க்காத ஒரு பெரிய மனிதரிடமிருந்து கிடைத்ததுதான் ஆச்சரியம்.

    அந்த விழாவில் கிடைத்த பத்திரிகை ஆசிரியர்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து, சில மாத நாவல்கள் எழுதியது பற்றி தமிழோவியத்தில் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன். அந்த தொடர் அனுபவங்களை தொடர்ந்து எழுத நேரமிருந்திருந்தால் இந்தப் பதிவும் அதில் ஓர் அத்தியாயமாயிருந்திருக்கும்.

    இது வரை எழுதியதில் துரதிர்ஷ்டம் எங்கே வந்தது என்று நீங்கள் யோசித்தால், அது இனிமேல்தான் வருகிறது. என்னுடைய முதல் நாவலை வெளியிட்ட அன்பர் தெரிந்தோ தெரியாமலோ அதை ஒரு விவகாரமாக்கியிருந்தார்.

    ராஜேந்திரகுமாரின் நாவல் வெளிவருவதாக அறிவித்த இதழில் அதற்கு பதிலாக என் நாவலை வெளியிட்டு விட்டார்.

    நாவல் ஏமாற்றமளிக்கவில்லை; ராஜேந்திரகுமார், சத்யராஜ்குமார் இரண்டுமே தமிழில் எட்டு எழுத்துக்கள்தான் என்றெல்லாம் வினோத ஆராய்ச்சி செய்து வாசகர்கள் போஸ்ட் கார்டில் பாராட்டினார்கள்.  ஆனால் ராஜேந்திரகுமார் இந்த விஷயத்தில் படு கோபம் அடைந்திருக்கிறார்.

    அடுத்த முறை நாவல் வாங்கப் போன போது, ” அந்தப் பையன் கிட்டேயே போய் வாங்கிப் போடுங்க. ” என்று அவர்களை விரட்டி விட்டதாகத் தெரிகிறது. இதில் என் தவறு ஏதுமில்லை என்றாலும் இதற்காக அவரிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

    மறுபடி அவரை சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

     
    • bsubra 9:31 பிற்பகல் on ஜனவரி 7, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      அந்தத் தொடரை நேரம் கிடைக்கும்போது தொடருங்களேன்

      • Kathir 8:50 பிற்பகல் on செப்டம்பர் 9, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        உங்களுக்கு ராஜேஷ்குமார் நாவல்கள் படிக்க விருப்பம் என்றால், அவர் நாவல்கள் http://www.emagaz.in இணையதளத்தில்!

    • dYNo 9:36 பிற்பகல் on ஜனவரி 7, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      வாரயிதழ்கள் பல ராஜேஷ் குமார், ராஜேந்திரகுமார் தொடர்களை வெளியிட்டே வண்டியோட்டிய காலமும் இருந்தது. ராஜேந்திர குமாருக்கு ராஜேஷ் குமார் மேல் அப்படி என்ன கோபம்?

    • சத்யராஜ்குமார் 9:56 பிற்பகல் on ஜனவரி 7, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      @bsubra:
      Party culture-லிருந்து தப்பிப்பது பெரிய காரியமாயிருக்கிறது. :-)

      @dYNo:
      ராஜேந்திரகுமாருக்கு ராஜேஷ்குமார் மேல் கோபமா ? அப்படி எதுவும் நான் குறிப்பிடவில்லையே ? ராஜேந்திரகுமாரின் கோபம் அறிவித்தபடி அவர் நாவலை வெளியிடாமல் போன அந்த பதிப்பக ஆசிரியரின் மீது !

    • என். சொக்கன் 12:20 மு.பகல் on ஜனவரி 8, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      மிகச் சுவையான பதிவு, நன்றி சத்யராஜ்குமார் :)

      - என். சொக்கன்,
      பெங்களூர்.

    • REKHA RAGHAVAN 6:03 மு.பகல் on ஜனவரி 8, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      வெளியிடப்படாத விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கு போல . அவ்வப்போது வெளியிடுங்கள் . நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.

      ரேகா ராகவன் .

    • சத்யராஜ்குமார் 9:16 மு.பகல் on ஜனவரி 8, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      @என். சொக்கன்:
      நன்றி சொக்கன் ! இந்தப் பதிவை எழுதத் தூண்டியமைக்கு !

      @REKHA RAGHAVAN:
      சந்தர்ப்பம் கிடைக்கும் போது கண்டிப்பாக எழுதுகிறேன்.

c
புதிய பதிவு எழுதுக
j
அடுத்த பதிவு / அடுத்த மறுமொழி
k
previous post/previous comment
r
பதில்
e
திருத்து
o
மறுமொழிகளை காண்பி / மறை
t
மேலே செல்க
l
புகுபதிகைக்கு செல்ல
h
உதவி காட்டு/மறை
esc
வேண்டாம்