RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • சித்ரன் 8:03 am on September 1, 2009 நிரந்தர பந்தம் | பதில்
    குறிச்சொற்கள்: இணையம், சித்ரன், google, search, wikipedia   

    தடுக்கிப்பீடியா 

    Google T-shirt

    Google T-shirt

    முதலிலெல்லாம் எந்தச் சமாச்சாரத்தைத் தேடவேண்டுமென்றாலும் இடப்பக்கம் வலப்பக்கம் திரும்பாமல் நேராக கூகிளுக்கு போய் தட்டிவிடவேண்டியதுதான். கோடிக்கணக்கில் இறைந்து கிடக்கும் வலைப்பக்கங்களிலிருந்து நீ கேட்டது இதுதானா பார் என்று பொறுக்கியெடுத்து ஒரு கை அள்ளிக் கொணர்ந்து கூகுள் கொடுக்கும் பிரசாதத்தில் நமக்குத் தேவைப்படுகிற முந்திரிப்பருப்பு நிச்சயம் ஒன்றிரண்டாவது கிடைத்துவிடும்.

    இவ்வாறாக இட்லி, வடை என்று எதைத் தேடுவதென்றாலும் கூகிள் கை கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தது. வேறு எந்த தேடலியந்திரமும் கிட்டே நெருங்க முடியாத அளவு வளர்ச்சியடைந்து இப்போது நெ.1 என்று ஆகிவிட்டது. Search Engine என்ற வகையில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு engine பிடிக்கலாம். சிலருக்கு யாஹூ, சிலருக்கு பிங்கு (Bing). எனக்கு கூகுள் சொந்த மாமா பையன் என்பது மாதிரி உறவாகிவிட்டது.

    “Sometimes when I am alone I google myself” என்கிற வாசகத்தைத் தாங்கிய ஒரு சிவப்பு பனியனை கடையில் பார்த்தவுடனே பிடித்துப் போய், விருப்பமான உடையாய் அவ்வப்போது ரொம்ப நாளைக்கு அணிந்திருந்தேன். மேலும் என்னுடைய google talk ஸ்டேடஸ் செய்தியாக இதையே சில நாள் போட்டு வைத்திருந்தேன். ‘சில நேரம் நான் தனியாக இருக்கும் போது என்னை நானே தேடிப்பார்க்கிறேன்’ என்று அதை அர்த்தப்படித்தி வைத்திருந்தேன். தெருவில், ரயிலில், அலுவலகத்தில் என்று எதிரே வருகிறவர்களின் பார்வை என் பனியன் வாசகத்தின் மேல் படிவதை லேசாக நான் ரசிக்காமலில்லை. இதன் மூலம் நான் வாழ்வாதாரத்துக்கான உத்யோகமாய் கம்ப்யூட்டரைக் கட்டிக்கொண்டு அழுகிறேன் என்பதை எல்லோருக்கும் பிரஸ்தாபித்துவிடுகிற ஒரு தற்பெருமை. என் பனியனைப் படிக்கிற இணையம் பற்றி அறியாதவர்கள் “இன்னாதிது கூகுள்னா?” என்று புருவம் உயர்த்தவும் வாய்ப்புண்டு. Google Talk chat-ல் வந்த ’விவகாரம்’ பிடித்த நண்பரொருவர் வேண்டுமென்றே “ஒரு சின்ன சந்தேகம். google-ன்னா கெட்ட வார்த்தையா?” என்று கேட்க திடுக்கிட்டு உடனே ஸ்டேட்டஸ் செய்தியை மாற்றிவிட்டேன்.

    ஆனால் இப்போதெல்லாம் கூகிளில் எதைத் தேடினாலும் முதல் பக்கத்தில் ஒரு நான்கைந்து ஸர்ச் ரிசல்டுக்குள்ளாகவே ஒரு விக்கிப்பீடியா பக்கத்திலும் நாம் தேடுவது இருக்கிறது என்று கூகிள் காட்ட ஆரம்பித்தது. இது அடிக்கடி தொடரவே மாமா பையனுக்கு எதற்கு சிரமம் கொடுப்பானேன் என்று நேராக விக்கிப் பீடியாவுக்கே போக ஆரம்பித்துவிட்டேன். விக்கிக் பீடியா கிட்டத்தட்ட ஒரு அட்சய பாத்திரமாக ஆகிவிட்டது. எதைக்கேட்டாலும் பரமாத்மா மாதிரி எடுத்துக் கொடுக்கிறது. ஏதாவது ஒன்றைத் தேடப்போனால் தேடியது தவிர அது சம்பந்தப்பட்ட குறிச்சொற்கள் அந்தந்தப் பக்கங்களில் கொட்டிக்கிடப்பதால் அதைக் கிளிக்கி இதைக் கிளிக்கி ஒரு பத்து நிமிடத்தில் விக்கிப் பீடியா என்கிற அடர்ந்த கானகத்தே தொலைந்து போய் காணாமல் போய் விட நேரிடும். ஏதோ ஒரு சில பக்கங்களில் விளையாட்டுப் போல விக்கியை ஆரம்பித்து இப்போது அதை எல்லையில்லா என்சைக்ளொப்பீடியாவாக மாற்றிய மிகப் பெரிய மூளைக்காரர்களுக்கு இந்தப் பொன்னான வேளையில் சிரம் தாழ்த்தி கண்ணம்மாபேட்டை இணைய இளைஞர் மனமகிழ் மன்றம் சார்பாக இந்தக் கதராடையை பொன்னாடையாக அணிவித்து …

    இப்போது போய்ப் பார்த்தால் நான் எழுதிய வலைப்பதிவுகளில் இடையிடையே சொல்லப்படும் விஷயங்களுக்கான இணைப்புப் பக்கமாய் விக்கிப்பீடியாவின் சுட்டிகள்தான் அதிகம் இருக்கின்றன. இட்லி என்று தேடினால் அதற்கொரு பக்கம், ரவா தோசைக்கு ஒரு பக்கம். இது மாதிரி மைலாப்பூர், சைதாப்பேட்டை, கருணாநிதி, விஜயகாந்த் என்று எதைத் தேடினாலும் அதற்கு ஒரு பக்கம் இருக்கிறது. ஆக விக்கிப்பீடியாவானது “நம்மாளு” என்கிற மாதிரி ரொம்பவும் நெருக்கமாகிவிட்டது.

    ஒருதடவை மருந்துக் கடையில் வாங்கி வந்த ப்ரிஸ்கிரிப்ஷன் மருந்தின் பட்டையில் அதன் பெயர் இல்லாததால் அதனுடைய chemical name-ஐ வைத்து விக்கிப்பீடியாவில் தேடி இன்னதுக்குத்தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டு வயிற்றுப் போக்கிலிருந்து நிவாரணமடைந்தேன். பையனுக்கு ஸ்கூலில் கொடுக்கப்படும் ஹோம் ஒர்க்குகளுக்குக்கூட (நாமதாங்க பண்ணனும்) பெரும்பாலும் இப்போதெல்லாம் விக்கிப்பீடியாவையே பெருமளவில் நம்பியிருக்கவேண்டியிருக்கிறது. ஆனால் விக்கிப்பீடியாவின் பக்கங்களில் பொதிந்திருக்கும் விஷயங்களின் நம்பகத்தன்மைக்கு “ப்ரீத்தி மிக்ஸி” அளவுக்கு கியாரண்டி இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். ஆனால் 2 மார்க் ஸ்கூல் வினாக்களுக்கு சில தகவல்கள் எதேஷ்டம்.

    நேற்று ஒரு ஹோம் ஒர்க்குக்காக இந்தியாவில் Deciduous காடுகள் எங்கெல்லாம் இருக்கின்றதென்று தேடிக்கொண்டிருந்தேன். அருகில் வந்து நின்ற மனைவி மானிட்டரை கண்ணுற்றுவிட்டு “தடுக்கி விழுந்தா விக்கிப்பீடியாலதான் போய் விழுகறீங்க போல” என்று சொன்னதால் இப்படியொரு தலைப்பில் இப்படியொரு பதிவு.

    -சித்ரன்

     
    • ila 9:48 மு.பகல் on செப்டம்பர் 1, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      :)

    • Periyasamy 10:06 மு.பகல் on செப்டம்பர் 1, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நானெல்லாம் தினமும் Wikipedia’s இரண்டு கட்டுரையாவது படிக்க நேர்ந்துவிடுகிறது.

      ஆனால் அனைத்துத் தகவல்களையும் அப்படியே நம்பி விட முடியாதுதான்.

    • சத்யராஜ்குமார் 3:01 பிற்பகல் on செப்டம்பர் 1, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      பீடிப்பதுன்னு சொல்றாங்களே அந்த பீடியா? :-|

    • REKHA RAGHAVAN 10:23 மு.பகல் on செப்டம்பர் 2, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      // சத்யராஜ்குமார்/
      பீடிப்பதுன்னு சொல்றாங்களே அந்த பீடியா?

      பிடிப்பது தானே சரி SRK?

      @@ -சித்ரன்

      நல்ல பதிவு. தலைப்பு படு ஜோர்.
      ரேகா ராகவன்

    • சத்யராஜ்குமார் 11:23 மு.பகல் on செப்டம்பர் 2, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      @REKHA RAGHAVAN:

      //பிடிப்பது தானே சரி SRK?//

      பீடிப்பது என்ற சொல் வேறு. பொதுவாக நோய்கள் பீடிப்பதாக சொல்வார்கள்.

    • சித்ரன் 12:54 பிற்பகல் on செப்டம்பர் 2, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நன்றி இளா, பெரியசாமி, சத்யராஜ்குமார், ரேகா ராகவன்.

      @பெரியசாமி: வி.பீடியாவை ஓரளவுதான் நம்பலாம்.
      @சத்யராஜ்குமார் @ரேகா ராகவன்: நான் விக்கிபீடியா நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறேன் என்று கூட சொல்லலாம். அடுத்த டெக்னாலஜி வரும் வரைதான். அப்புறம் சரியாகிவிடும்.

    • Prakash 4:30 மு.பகல் on செப்டம்பர் 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      //அதனுடைய chemical name-ஐ வைத்து விக்கிப்பீடியாவில் தேடி இன்னதுக்குத்தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டு வயிற்றுப் போக்கிலிருந்து நிவாரணமடைந்தேன்.//

      இது தவறான பழக்கம். இனிமே செய்யாதீங்க.

      • சித்ரன் 4:54 மு.பகல் on செப்டம்பர் 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        நன்றி பிரகாஷ். நான் வி.பீடியாவில் சரிபார்த்துக் கொண்டது டாக்டர் எழுதிக்கொடுத்த பிரிஸ்கிரிப்ஷன் மருந்துதான். சந்தேகமும் ஆர்வக்கோளாறும் கலந்த ஒரு நிலையில் அதை செய்யவேண்டியிருந்தது. இந்த மாதிரி அவசர நேரத்தில் சிலசமயம் நமக்கு நாமே டாக்டராகியும் விடுகிறோம். முடிந்தவரை இதைத் தவிர்க்க வேண்டும்.

  • சித்ரன் 10:53 am on August 14, 2009 நிரந்தர பந்தம் | பதில்
    குறிச்சொற்கள்: ஆரோக்கியம், , பன்றிக் காய்ச்சல், மருத்துவம், swine flu   

    ஆறாங்கிளாஸில் ஃபெயிலான பன்றிக் காய்ச்சல் 

    maskமெக்ஸிகோ பன்றிகளிடமிருந்து ஏற்றுமதியாகி பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு இந்தியாவில் இறக்குமதியாகி இருக்கும் swine flu (எ) பன்றிக் காய்ச்சல் சமீபமாய் பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது சென்னையில். விளைவு: பள்ளிகளுக்கு விடுமுறை, பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவும் என்கிற எச்சரிக்கை, முகத்தில் திடீர் மாஸ்க்குகள். தொலைகாட்சிகளில் ஸ்க்ரால் நியூஸில் இடைவிடாமல் இதைப் பற்றிய செய்திகள். தினப்பத்திரிக்கைகளில் பக்கத்துக்குப் பக்கம் ப்டம் போட்டு விளக்கங்கள். மக்களைக் கொஞ்சம் உஷார்படுத்தி, கொஞ்சம் குழப்பி, கொஞ்சம் பயமுறுத்தி, கொஞ்சம் விஷய ஞானமூட்டும் அரசாங்க அறிக்கைகள்.

    மாஸ்க் அணிந்த ஊரில் வெறும் மூஞ்சிக்காரன் முட்டாள் என்கிற மாதிரி ஆகிவிட்டது முகமூடி அணியாதவர்களின் நிலைமை. 50 பைசா என்று விற்றுக் கொண்டிருந்த மாஸ்க் பத்து பதினொன்று என்று போய்க்கொண்டிருக்கிறது. வியாதி, பீதி, நீதி என்று எதுவாக இருந்தாலும் அதை அரசியலாகவோ, வியாபாரமாகவோ அதி அற்புதமாய் மாற்றத் தெரிந்த மனிதர்கள் நிரம்பிய நாட்டில் ‘டாமிப்ளூ’வும் மாஸ்குகளும் பதுக்கப்பட்டு தட்டுப்பாடாகி கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு வருகிற நிலைமையும் ஏற்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். ‘வரும்முன் காப்போம்’ என்பது இவர்களுக்காகவே சொல்லப்பட்டதோ என்னவோ!

    பன்றிக் காய்ச்சல் வராமலிருக்க வழி என்கிற வகையில் மின்னஞ்சலாகவும் குறுஞ்செய்தியாகவும் ஏகப்பட்ட தடுப்பாலோசனைகள் வந்த வண்ணம் உள்ளன. எதைப் பின்பற்றினால் அதிக பலன் என்ற குழப்பம் தெளியாத நிலையில் இதோ அவற்றில் சில:

    1. அதிகாலையில் வெறும் வயிற்றில் இரு ஸ்பூன் வெல்லத்தை தண்ணீரில் கரைத்துக் குடித்தல் மற்றும் இரவு படுக்கைக்கு முன் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூளை அரை தம்ளர் பாலில் கலந்து விழுங்குதல் என்பதை அன்றாடம் செய்துவந்தால் ப. காய்ச்சல் பக்கத்திலேயே வராது.

    2. பக்கத்து வீட்டின் மாடத்திலிருந்து கடன் வாங்கியாவது துளசிச் சாறு காலை மாலை இரு வேளை அருந்துவது நிச்சயம் நோய் தடுக்கும் என்பது ஒரு யோக நிபுணரின் ஆலோசனை.

    3. Calcarea Carb – 30 C என்கிற ஹோமியோபதி மாத்திரைகள் தினம் மூன்று எடுத்துக்கொண்டால் ப.கா பயமில்லாமல் இருக்கலாம்.

    4. பிரியாணியில் போடுகிற “தக்கோலம்” (என்ன சமாச்சாரம் இது? கேள்விப்பட்ட மாதிரியே இல்லை. யாருக்காவது தெரியுமா?) என்கிற சாதனத்தைப் பொடி செய்து தண்ணீரில் கரைத்துச் சாப்பிடவேண்டும். (பிரியாணியாகவே சாப்பிட்டால்?)

    5. சின்ன வெங்காயத்தைத் தட்டி நசுக்கி தினம் இருவேளை சாப்பிடலாம்.

    6. எலுமிச்சை சாறு அடிக்கடி குடித்தல்.

    7. டாபர் சவனப்ராஸ் லேகியம் ஒன்றே போதுமாம். அதிலேயே எல்லாம் இருக்கிறதாம்.

    8. மேற்கண்ட அயிட்டங்கள் கிடைக்காதவர்கள் குறைந்த பட்சம் யூக்கலிப்டஸ் திரவத்தின் ஒரு துளியை ஒரு கைக்குட்டையில் நனைத்து மூக்கில் கட்டிக் கொள்ளலாம்.

    இது தவிர இன்னும் எக்கச்சக்கமாக எச்சரிக்கைகளும் ஆலோசனைகளும் வந்து கொண்டே இருக்கின்றன. ‘இம்யூன் ஸிஸ்டம்’ எனப்படுகிற நோய் எதிர்ப்பாற்றல் என்று ஒன்று இருப்பதே பல பேருக்கு நோய் வந்தபிறகுதான் தெரிய வருகிறது. எங்களுக்கு வந்து போன சிக்குன் குனியாவின் தாக்கமே இன்னும் தீர்ந்தபாடில்லை அதுக்குள் இது வேறா என்று முட்டியைப் பிடித்துக் கொண்டு அலுத்துக்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்.

    ஊரிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் “சென்னையில் பூகம்ப எதிரொலி, சுனாமி எச்சரிக்கை” எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டு ‘பன்றிக் காய்ச்சலாமே. பாத்து இருந்துக்கோ” என்பதைத்தான் அதிகம் குசலம் விசாரிக்கின்றன.

    ‘தனக்கு ஸ்வைன் ஃப்ளூ இருக்கான்னு என்கிட்ட வர்ரவங்களுக்கு எப்படி கண்டுபிடிச்சுச் சொல்லறதுன்னும் தெரியல. இல்லன்னு திருப்பி அனுப்பவும் முடியல. இருந்தா அதுக்கு கரெக்ட்டா என்ன பண்ணனும்னு தெரியல. இந்த வியாதியைப் பத்தி அதிகமா எதுவுமே எங்களுக்குத் தெரியல. வர வர எங்க பொழப்பு ரொம்ப மோசமாயிருச்சு. எங்களையெல்லாம் டாக்டர்ன்னு சொல்லிக்கிறதுக்கே வெக்கமாயிருக்கு’ என்று ஊரில் என் உறவினரிடம் ஒரு டாக்டர் புலம்பித் தள்ளியதாகச் சொன்னார்.

    அதெல்லாம் இருக்கட்டும். இங்கே சென்னையில் ஒரு பிரபல உயர்நிலைப் பள்ளி ஒன்றில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அஞ்சாங்கிளாஸ் வரை மட்டுமே லீவு விட்டிருப்பதாக சொல்கிறார்களே அது ஏன் என்று ஒரு வாரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

     
    • ஓவியன் 11:28 மு.பகல் on ஆகஸ்ட் 14, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      //அதெல்லாம் இருக்கட்டும். இங்கே சென்னையில் ஒரு பிரபல உயர்நிலைப் பள்ளி ஒன்றில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அஞ்சாங்கிளாஸ் வரை மட்டுமே லீவு விட்டிருப்பதாக சொல்கிறார்களே அது ஏன் என்று ஒரு வாரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்//

      ஆறாம் வகுப்பிற்கு மேல் உயிரை கொடுத்தான் படிக்க வேண்டுமோ என்னவோ?

    • சத்யராஜ்குமார் 12:11 பிற்பகல் on ஆகஸ்ட் 14, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      டாக்டரின் நேர்மையை பாராட்டும் அதே நேரத்தில், எந்த தைரியத்தில் ஒரு டாக்டரிடம் போவது என்று கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. :-|

    • பினாத்தல் சுரேஷ் 1:26 பிற்பகல் on ஆகஸ்ட் 14, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      இந்த லீவு சமாசாரம் பயங்கரமாய் குழப்புகிறது. மழைக்காக லீவ் என்றால் மழைவிட்டதும் தொடங்கலாம். இப்போது எப்போது தொடங்கலாம் என்று லீவ் விடுகிறார்கள்?

      டாக்டர்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது :)

    • யாத்ரீகன் 1:53 பிற்பகல் on ஆகஸ்ட் 14, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      >> ஆறாம் வகுப்பிற்கு மேல் உயிரை கொடுத்தான் படிக்க வேண்டுமோ என்னவோ? <<<

      :-) )))))))))

    • என். சொக்கன் 1:55 பிற்பகல் on ஆகஸ்ட் 14, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நல்ல பதிவு, அதைவிட நல்ல தலைப்பு, நன்றி :)

      இப்போதெல்லாம் யாராவது பலமாகத் தும்மினாலே பயமாக இருக்கிறது – பத்திரிகைகளும் டிவிகளும் இந்தப் பயத்துக்கு நன்றாகத் தீனி போடுகிறார்கள் – இவர்களுக்கு அடுத்த பரபரப்பு கிடைக்கும்வரை இது தொடரும்!

      - என். சொக்கன்,
      பெங்களூர்.

    • REKHA RAGHAVAN 1:36 மு.பகல் on ஆகஸ்ட் 15, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      இதென்னடா தலைப்பு ரொம்ப வித்தியாசமாக இருக்கிறதே என்று உள்ளே புகுந்து படித்துவிட்டு கடைசி பாராவுக்கு வந்தால் தலைப்பு வைக்கிறதில் நீங்க எங்கேயோ போயிட்டீங்கன்னு நினைக்கவச்ச அருமையான பதிவு. என்னை பொறுத்த வரை அவசியம் ஏற்பட்டாலொழிய வெளியே போவதை நிறுத்தினாலே பன்றி என்ன ஓணான் (வந்தாலும் வரும்) காயச்சல்லிலிருந்து கூட தப்பித்துவிடலாம்.

      ரேகா ராகவன்

    • படிக்காதவன் 3:16 மு.பகல் on ஆகஸ்ட் 15, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நல்ல பதிவு. நாங்கள் அலுவலகத்தில் கூட கவசம் அணிந்து தான் வேலை பார்க்கின்றோம்.

    • சித்ரன் 1:10 மு.பகல் on ஆகஸ்ட் 18, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      பின்னூட்டங்களுக்கு நன்றி. பள்ளிகள் வழக்கம்போல இயங்க ஆரம்பித்துவிட்டன. அரசாங்கத்தின் உத்தரவால் மீடியாக்கள் அடக்கி வாசிக்க ஆரம்பித்துவிட்டன. இதன் விளைவாக பீதி குறைந்து பரிசோதனை மையங்களில் கூட்டம் குறைந்திருக்க வாய்ப்புண்டு. எப்படியோ ப.கா கட்டுப்படுத்தப்பட்டு ஒழிந்தால் சரி.

      • uma 1:58 மு.பகல் on ஆகஸ்ட் 24, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        நல்ல பதிவு சித்ரன். நமக்கு வந்தால் கூட பரவாயில்லை, பிள்ளைகளுக்கு வந்துவிடக் கூடாது என்று அச்சமாகத்தான் இருக்கிறது. இன்று என் பசங்களுக்கு light fever, cold and cough. நல்ல வேளை டாக்டர் இது சாதரண காய்ச்சல் என்று சொல்லிவிட்டார். சீக்கிரம் இதற்கு எதாவது vaccination கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும்.

  • சத்யராஜ்குமார் 11:17 pm on July 2, 2009 நிரந்தர பந்தம் | பதில்  

    கதை vs தொழில்நுட்பம் 

    ஆரம்பம் தொட்டே கதை எழுதும் ஆர்வத்தை விட, அதில் தொழில்நுட்பத்தை நுழைக்கும் போக்கு என்னிடம் அதிகமாயிருந்தது.

    பேப்பரில் எழுதிக் கொண்டிருந்தவன் சட்டென ஒரு தட்டச்சு இயந்திரத்தை (ஹால்டா) வாங்கி தட்ட ஆரம்பித்தது அப்படித்தான். முறைப்படி டைப்பிங் பழகவில்லை. ஆனால் மனதின் வேகத்துக்கு தடதடவென தட்டி நொறுக்க சில நாட்களிலேயே பழகி விட்டேன். அப்புறம் கணினிக்கு தாவினேன். பாரதி போன்ற ஷெல் சார்ந்த மென்பொருட்களும், டாட்மேட்ரிக்ஸ் ப்ரிண்ட்டரும் என் கதை எழுதும் ஆர்வத்தை குறையாமல் பார்த்துக் கொண்டன.

    அந்த காலகட்டத்தில் சுஜாதா தவிர வேறு யாரெல்லாம் கம்ப்யூட்டரில் கதை தட்டிக் கொண்டிருந்தார்கள் என்று அவ்வளவாய் தெரியாது. (இரா. முருகன்?) கல்கியில் அப்போது என்னைப் பற்றி வெளியான சிறுகுறிப்பில் நான் கம்ப்யூட்டரில் கதை எழுதி வருவது குறித்து பிரசுரமாகி இருந்ததால், ஒரு விழாவில் சந்தித்த ஆர்னிகா நாசர், “கட்டுபடியாகுமா?” என்றார்.

    விண்டோஸ் 3.1 வந்த பின் தமிழைப் போல பாவ்லா காட்டும் ட்ரூ டைப் எழுத்துருக்கள் புழக்கத்துக்கு வந்தன. என்னிடமிருந்த கோரல் ட்ரா என்ற மென்பொருளில் கொஞ்சம் மெனக்கெட்டால் அப்படிப்பட்ட எழுத்துருக்களை உருவாக்கும் வசதி இருந்தது. மெனக்கெட்டேன். ஒரு எழுத்துரு உருவாக்கி அதற்கு ஸரஸ்வதி என பெயரிட்டேன். சமீபத்தில் யுனிகோட் பரவலாகும் வரை எனக்கும் என் நெருங்கிய கணினி நண்பர்களுக்கும் (சித்ரன்) ஸரஸ்வதிதான் ஆஸ்தான எழுத்துரு. 2003-ல் என்றுதான் நினைக்கிறேன், முப்பது முப்பத்திரண்டு தமிழ் வலைப்பதிவாளர்களில் ஒருவனாய் நானும் மாறிய போது, சித்ரன் மூலமாக என்னை யாஹூ அரட்டையில் பிடித்த எழுத்தாளர் பாரா நானும், சித்ரனும் தமிழில் உரையாட ஸரஸ்வதியை உபயோகிக்கிறோம் என்றதும், “என்னது சிம்ரனா?” என்று கிண்டலடித்தார். எனக்கு ஏன் ஸ்ரீதேவி, கவுதமி என்று கவர்ச்சியாய் நடிகை பெயர் வைக்கத் தோணவில்லை என்று நொந்து கொண்டேன்.

    டயரி போன்ற வலைப்பதிவு தொழில்நுட்பத்தை கதை எழுதி கெடுத்த முன்னோடி வில்லன் நான். அதற்கு முக்கிய காரணம், சுவாரஸ்யமான சமாசாரங்களை பதிய எனக்குத் தெரிந்த ஒரே சவுகரியமான வடிவம் சிறுகதை. அமெரிக்காவில் இந்தியர்களின் சின்ன சின்ன அனுபவங்களை சுவாரஸ்யம் கலந்த கதையாக்கி துகள்கள் என்னும் தலைப்பில் வெளியிட, நல்ல வரவேற்பு. அப்போது ப்ளாகரில் இருந்ததால், அது தந்த சுதந்திரத்தை பயன்படுத்தி கதைகளில் கொஞ்சம் DHTML மேஜிக் செய்தேன். அதாவது ஒரு கதை முடிந்த இடத்தில் லின்க் கொடுத்து மவுசை மேலே வைத்தால், கதையின் இன்னொரு முடிவு பிரசன்னமாகும். இது போல பல கதைகளுக்கு இரண்டு முடிவுகள் வைத்திருந்ததையும், DHTML தொழில்நுட்பத்தை அதற்கு பயன்படுத்தியதையும் பாரா அப்போது இமெயிலில் மனசார கீழ்கண்டவாறு பாராட்டினார்.

    அன்புள்ள சத்யராஜ்குமார்

    உங்களது பிளாக்ஸ்பாட் வலைப்பதிவையும் பைட்ஸ் ஆனையும் இன்றுதான் முழுக்கப்
    படித்து முடித்தேன். என் முதல் பாராட்டு, உங்களது தொழில்நுட்ப
    வேலைகளுக்கு.
    மிக அழகாகப் பல விஷயங்களைச் செய்திருக்கிறீர்கள். ஒரு
    கதைக்கு இரண்டு முடிவு கொடுக்கிறபோது சட்டென்று இன்னொரு பேரா
    உதயமாகிறதும் உங்களைப் பற்றிய சிறு குறிப்பு தனி பக்கமாக மேலே
    விழுவதுவும் அழகாக உள்ளன. நேர்த்தியான வடிவமைப்பில் கவர்கிறீர்கள்.

    விஷயத்துக்கு வருகிறேன்.

    மொழியின் அத்தனை சாத்தியங்களும் உங்களுக்கு வசப்படுகின்றன. ‘குமார்’ரக
    எழுத்தாளர்கள் யாருமே மொழி விஷயத்தில் இந்த உயரங்களைத் தொட்டதில்லை;-)
    நிச்சயமாக நீங்கள் மசாலா எழுத்தாளர் இல்லை என்று எல்லா கதைகளும்
    சொல்லிவிட்டன.

    அன்புடன், வாழ்த்துகளுடன்
    பாரா

    இதன் பின் Purist வலைப்பதிவர்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் எனக் கருதி கதைகளை தொகுத்து இணையதளமாக்கி விட்டு, “இன்று – Today” என்னும் இந்த வலைப்பக்கத்தை வலைப்பதிவுகளின் ஒரிஜினல் நோக்கத்துக்கானதாக ஆரம்பித்தேன். சமீபத்தில் போட்டியின் பொருட்டு இரண்டொரு கதைகள் இங்கே இட வேண்டியதாயிற்று.

    நான் வலைப்பதிவில் தலை காட்டிய சில நாட்களிலேயே தமிழோவியம் கணேஷ் சட்டென்று பழக்கமாகி விட்டார். “ஏதாவது பண்ணுங்க.” என்று அடிக்கடி அன்புக்கட்டளை இடுவார். தட்டையான கதைகள் அச்சு ஊடகத்துக்கு சரி. ஹைப்பர் லின்க் போன்ற அற்புத சாத்தியங்கள் கொண்ட இணைய ஊடகத்துக்கும் அதையே ஏன் கட்டிக் கொண்டு அழ வேண்டுமென எண்ணியவன், ஹைப்பர் லின்க் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒரே கதை ஆறு தடங்களில் பிரிந்து ஆறும் ஆறு வெவ்வேறு கதைகள் போல தனித் தனியே படிக்க முடியும்படி கறுப்பு வெள்ளை கனவுகள் எழுதிக் கொடுத்தேன். இதற்கும் இணைய அன்பர்களிடமிருந்து பலத்த வரவேற்பு. 3D கதைகள் என்று கணேஷ் அதற்குப் பெயர் வைத்தார்.

    இப்போது ட்விட்டர் வந்ததும் அதையும் விட்டு வைக்காமல் அங்கும் என் கதை முயற்சி தொடர்ந்ததை என் சமீபத்திய பதிவொன்றின் மூலம் அறிந்திருப்பீர்கள். அதை ட்விட்டரில் எழுதிக் கொண்டிருந்த போது – என்னிடம் பழகும் ஒரு சிலர் இது கொஞ்சம் ஓவரா இல்லையா என்றார்கள். சோதித்துப் பார்ப்பதில் என்ன தவறு? உண்மையில் அந்த ட்விட்டர் முயற்சி சில காலம் கழித்து நான் செய்ய உத்தேசித்திருந்த இன்னொரு புதிய முயற்சியின் வெள்ளோட்டம் என்பது அவர்களுக்குத் தெரியாது.

    தெனாலி இணைய பத்திரிகை ஆசிரியர் குழு கொஞ்ச நாள் முன்பு என்னிடம் தொடர்பு கொண்டு, SMS மீடியாவில் ஒரு தொடர்கதை எழுத முடியுமா என கேட்டிருந்தார்கள். அதற்கான வடிவம் பிடிபட ட்விட்டர் அழகான பயிற்சிக் களம். போன்சாய் மாதிரி ஒரு தொடர் அமைத்து தருவது எனக்கு சவாலாகவும், சுவாரஸ்யமாகவும் தோன்றவே சம்மதித்தேன்.

    இதோ அந்த தொடர்கதை ஆரம்பமாகி விட்டது. முதலில் ஒரு க்ரைம் கதை. வரவேற்பை பொறுத்து பல வகை கதைகளையும் தர எண்ணம். தமிழில் இந்த புது ஊடக முயற்சியை நீங்களும் ருசித்துப் பாருங்கள்.

     
    • சித்ரன் 2:07 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      PDA-வில் கதை எழுதியதை விட்டுட்டீங்களே..

      ஸரஸ்வதி எழுத்துருவை நான் கொஞ்சம் மாற்றி இன்னும் ரெண்டு எழுத்துரு தயாரித்தேன். ஞாபகமிருக்கிறதா?

      தெனாலி முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

      • சத்யராஜ்குமார் 6:02 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        சித்ரன், ஏற்கெனவே பதிவில் சுயபுராணம் தூக்கலாக தெரிந்ததால் நிறைய விஷயங்கள் சொல்லாமல் விட்டு விட்டேன். :-) உங்கள் மனைவி, மகன் பெயரில் தயாரித்த எழுத்துருக்கள்தானே? ஞாபகம் இருக்கிறது.

    • என். சொக்கன் 5:45 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      சத்யராஜ்குமார்,

      அட்வான்ஸ் வாழ்த்துகள். ஆனால் 2 வரி படிப்பதற்காக ஒரு க்ளிக் என்றால் கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது, ட்விட்டரில் போட்டு ஒரு RSS feed கொடுத்தால் பின்பற்றுகிறவர்கள் அதிகமிருப்பார்கள் என்பது என் கருத்து :)

      சித்ரன்,

      PDA என்றதும் சுவாரஸ்யப்பட்டு வந்தேன் – செல்பேசியில் தமிழ் எழுத வழி உண்டா? (யுனிகோட், வேறுகோட் எதுவானாலும் பரவாயில்லை)

      - என். சொக்கன்,
      பெங்களூர்

    • சத்யராஜ்குமார் 6:18 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      சொக்கன், வாழ்த்துக்கு நன்றி. இந்த கதை முற்றிலும் SMS மீடியாவுக்காக. ஒரு reference-க்காக இணையத்திலும் உள்ளது. இது முற்றிலும் தெனாலியின் சோதனை முயற்சியாகும். presentation உத்திகள் இன்னும் முழுதாய் தீர்மானமாகவில்லை. இந்த கதை முடிவதற்குள் சோதனைகள் செய்து பார்த்து தீர்மானிப்பதாக தெனாலியில் சொன்னார்கள். எழுதி தருகிற சின்ன கடமையை நான் செய்து விட்டேன் :-)

      PDA குறித்து – அப்போது ஒரு Casio கைக்கணினி வைத்திருந்தேன். அதில் TTF Fonts நிறுவ முடியும் என்பதால், என்னுடைய(!) ஸரஸ்வதியை அதில் நிறுவி, ரயிலில் செல்லும் நேரத்தில் சிறுகதைகள் எழுத பயன்படுத்தினேன். அதிலே எழுதின ‘சினிமா, சினிமா’ போன்ற கதைகள் குமுதத்தில் வெளி வந்த போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை.

      • என். சொக்கன் 6:56 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        நன்றி சத்யராஜ்குமார் – TTF Fonts நிறுவும் வசதியுடன் ஒரு செல்ஃபோன் வந்தால் நன்றாக இருக்கும்!

        - என். சொக்கன்,
        பெங்களூர்.

        • சத்யராஜ்குமார் 7:26 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம்

          சொக்கன் , நான் முன்னர் வைத்திருந்த HP iPAQ செல்ஃபோனில் கூட ஸரஸ்வதி போட்டு வைத்திருந்தேனே! Windows Mobile OS அடிப்படையிலான எந்த செல்பேசியிலும் சுலபமாக TTF நிறுவலாம். Samsung, HTC போன்ற நிறுவனங்களின் மாடல்கள் மார்க்கெட்டில் உள்ளன. Smart Phone அல்லாத சாதாரண செல்போன்களிலும் அந்த வசதி இருந்தால் தேவலாம் என நீங்கள் ஆதங்கப்படுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

        • என். சொக்கன் 11:09 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம்

          நான் வைத்திருப்பது நோகியா E75, அதில் TTF Fonts நிறுவும் வசதி இல்லை (என்று நினைக்கிறேன்), அதனால்தான் ஆதங்கம் :)

          - என். சொக்கன்,
          பெங்களூர்.

    • blj 10:13 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      Well done and best wishes for the future.

c
புதிய பதிவு எழுதுக
j
அடுத்த பதிவு / அடுத்த மறுமொழி
k
previous post/previous comment
r
பதில்
e
திருத்து
o
மறுமொழிகளை காண்பி / மறை
t
மேலே செல்க
l
புகுபதிகைக்கு செல்ல
h
உதவி காட்டு/மறை
esc
வேண்டாம்