RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • சத்யராஜ்குமார் 11:54 am on July 12, 2009 நிரந்தர பந்தம் | பதில் |  

    நியூஜெர்ஸியில் ஒரு இலக்கிய சந்திப்பு 

    அமெரிக்காவில் கிடைக்கும் நிறைய ‘முதல்’களில் முதல் நெடுந்தொலைவு கார்ப் பயணம் மறக்க முடியாதது. இந்த அனுபவத்தை சிறுகதையாக எழுத வேண்டுமென்று நினைத்திருந்த எனக்கு, “ஜெமோ-வை சந்திக்கலாம் வாங்க!” என்று பாஸ்டன் பாலா குறுஞ்செய்தி அனுப்பியபோது சட்டென ஸ்பார்க் ஆனது ஒரு கரு.

    நியூஜெர்ஸியில் ஒரு இலக்கிய சந்திப்பு – என்ற அந்த சிறுகதை நான் நினைத்தது போலவே பலருக்கும் தங்கள் முதல் road trip நினைவுகளை கிளறி விட்டிருக்கிறது என்பதை ஒருபக்கம், srikan2 ஆகிய ட்விட்டர் நண்பர்களின் ட்வீட் பின்னூட்டம் வாயிலாக அறிய முடிகிறது.

    ஒரு முக்கிய குறிப்பு. கதையில் வரும் பாத்திரங்களை யாரோடும் முடிச்சுப் போட்டு பார்க்க வேண்டாம். பெரும்பாலான ஐ.டி இளைஞர்களின் இலக்கிய பார்வையும், சாலைப் பயண அனுபவமும் மட்டுமே இந்த கதை தாங்கி நிற்கும் விஷயங்கள்.

    கதை கீழே…


    நியூஜெர்ஸியில் ஒரு இலக்கிய சந்திப்பு

    ~ சத்யராஜ்குமார் ~


    காருக்குள் கலர் கலராய் வெளிச்சமடிக்க, ”டேய் கோபி, போலீஸ்டா!” – செல்போனில் அலறினேன். நட்ட நடுநிசியில் 95 நெடுஞ்சாலையில் விர் விர்ரென பறக்கும் இத்தனை கார்களுக்கு நடுவில் – தட்டுத் தடுமாறி ஓட்டிச் செல்லும் நானா கிடைத்தேன்?

    ”பதறாதே. ஓரங்கட்டி நிறுத்து.” என்று ஆலோசனை வழங்கினான் கோபி.

    ”இலக்கியம் வெங்காயமெல்லாம் வேண்டாம்ன்னு முதல்லயே சொன்னேன். கேட்டியா நீ?”

    மேலும் படிக்க…

     
    • சித்ரன் 12:17 பிற்பகல் on ஜூலை 12, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      ’இலக்கியத்துக்கும் எனக்கும் ரொம்ப தூரம்’-கிற ஒரு சின்ன வரியை வெச்சுக்கிட்டு இம்புட்டு அம்சமா ஒரு சிறுகதை குடுக்கறதுக்கு உங்களாலதான் முடியும் ராஜா. கெளப்பீட்டீங்க. க்ளைமாக்ஸ்-ல வாய்விட்டுச் சிரிச்சுட்டேன்.

    • Vino 8:52 பிற்பகல் on ஜூலை 12, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      nice story.

    • செல்வராஜ் 9:50 பிற்பகல் on ஜூலை 12, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      வேடிக்கை தான். கடைசி வரியில் புன்சிரிப்பு வந்தது உண்மை. நானெல்லாம் திசை மாறி ஒரு இருபது முப்பது மைல் தூரத்தில் விழித்துக் கொண்டுவிட்டேன்! (அதை விட விரைவாகவே தெரிந்தாலும், அடுத்த இறக்கத்தில் இறங்கித் திரும்ப அவ்வளவு தொலைவு ஆகிவிடும்).

      நிற்க. உங்கள் நயாகரா இடுகை உதவியாய் இருக்கிறது. அநேகமாக எங்கள் யாத்திரை அடுத்த வாரம் இருக்கலாம்.

      • சத்யராஜ்குமார் 5:37 மு.பகல் on ஜூலை 13, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        செல்வராஜ், சுவாரஸ்யத்துக்காக முன்னூறு மைல் வைத்தது அதிகம்தான் என்றாலும் சாத்தியமில்லாமலில்லை என்று நினைக்கிறேன். நயாகரா டிப்ஸ் உபயோகமாயிருப்பதறிந்து மகிழ்ச்சி.

    • SnapJudge 8:54 மு.பகல் on ஜூலை 13, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      :) )

      —கதை படித்தால் என்ன கிடைக்கும், அஜாக்ஸ் படித்தால் அடுத்த வேலை கிடைக்கும் என்று திருப்பியடித்தார்கள். —

      அது :)

    • Karthick 4:06 பிற்பகல் on ஜூலை 14, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      Super and I like it. I am learning driving now. I feel that a lot of people who driving in this country do not have patience. :( They honk at a small mistake of others.

    • k.b.janarthanan 12:32 பிற்பகல் on ஜூலை 21, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      சத்யராஜ் சார், சூப்பர் சிறுகதைக்கும் உங்களுக்கும் தூரம் அதிகமில்லை! நல்ல ரசித்தேன். -கே.பி.ஜனார்த்தனன்

  • சத்யராஜ்குமார் 7:41 pm on June 7, 2009 நிரந்தர பந்தம் | பதில் |  

    நயாகரா நமக்கு இன்னொரு காசி ராமேஸ்வரமாகி விட்டது. எங்கே திரும்பினாலும் இந்திய முகங்கள். இந்த முறை அத்தையை கூட்டிக் கொண்டு போக வேண்டியிருந்தது. இப்போது நான் இருக்கும் இடத்திலிருந்து காரில் செல்ல எட்டு மணி நேரம். விமானமா, காரா என வீட்டுக்குள் சொல்லரங்கம் நடந்து கார் என்று முடிவானது. கொஞ்சம் டிட்டிபாசனா மட்டும் தெரிந்தால் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் இங்கே சுலபமாய் கார் ஓட்டலாம்.
    Niagara Falls
    பல முறை போய் வந்து விட்ட படியால் அங்கே செய்யத்தக்கவை, தகாதவை எல்லாம் எனக்கு மனப்பாடமாகி விட்டது. எத்தனை முறை சென்று பார்த்தாலும் Maid of the Mist படகுப் பயணம் பரவசமூட்டும் தெய்வீக அனுபவம். கோகெயின் போன்ற போதை வஸ்துக்கள் அடித்தால் எப்படி இருக்கும் என்று எனக்கு சத்தியமாய் தெரியாது. ஆனால் இப்படித்தான் சோவென்ற இரைச்சலுடன் மசமசவென நாலாபுறமும் தண்ணீர் புகை மாதிரி சூழ, அங்கங்கே வானவில் பளிச்சிட்டுக் கொண்டு சொர்க்கம் மாதிரி இருக்கும் என்பது அனுமானம்.

    நயாகராவுக்கு பக்கத்து ஊரான Buffalo என்னும் ஊரில் லாட்ஜ் எடுத்தால் விலை மலிவாக இருக்கும் என்று யாராவது அறிவுரை சொன்னால் வாயை துடைத்த நாப்கினோடு சேர்த்து இதையும் தொட்டியில் போட்டு விடுங்கள். நயாகரா உள்ளூருக்குள் Buffalo Avenue-வை ஒட்டி பல ஹோட்டல்கள் உள்ளன. முப்பதோ, நாப்பதோ கூட போனாலும் அங்கே அறை எடுப்பது உத்தமம். அருவி இருக்கும் இடத்துக்கு நடந்து போகலாம்.

    குறிப்பிட்ட நாள் இரவுகளில் அருவிக்கு மேலே வாணவேடிக்கை நிகழ்ச்சியும், விளக்கொளி நிகழ்ச்சிகளும் இருக்கும். இருட்டினதும் ஆரம்பிக்கும் (வெயில் காலத்தில் இங்கே இருட்டுவதற்கு ராத்திரி ஒன்பது மணியாகும்) இந்த நிகழ்ச்சிகள் சும்மா பத்துப் பதினைந்து நிமிஷம்தான் எனினும் நம்ம ஊரிலிருந்து வந்திருக்கும் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தைகளுக்கு மகிழ்ச்சியூட்டும். ஆக நிகழ்ச்சி நடக்கும் நாட்களை இணைய தளங்களில் பார்த்து தெரிந்து கொண்டு சாயந்தரம் போல இங்கே அறை எடுத்தால், அன்றைய மாலை சின்ன வாக்கிங் போய் ஒரு நயாகரா ட்ரெயிலர் காட்டி விட்டு வரலாம்.

    நயாகரா வெல்கம் சென்ட்டர் என்று ஒரு பெரிய கட்டிடம் போனவுடன் கண்ணில் படும். உள்ளே விசாரணை கவுன்ட்டரில் நீங்கள் என்ன கேட்டாலும் சினேகமாய் பதில் சொல்லும் வரவேற்பாளர்கள் $60 மதிப்புள்ள டூர் பேக்கேஜ் டிக்கட்டை உங்கள் தலையில் கட்டி விட நிறைய வாய்ப்புண்டு. அவர்களை அலட்சியம் செய்து, கொஞ்சம் பூங்காவுக்குள் நடந்து சென்றால் அபிஷியல் விசிட்டர் சென்ட்டர் பார்க்கலாம். சின்ன ட்ராம் வண்டியில் ஆறு முக்கிய இடங்களை சுற்றிக் காட்ட $30-க்கு அங்கே டிக்கட் கிடைக்கும்.
    Cave of the Winds

    என்னைக் கேட்டால் அங்கே முக்கிய சங்கதிகள் இரண்டே இரண்டுதான். ஒன்று Maid of the Mist. இன்னொன்று Cave of the Winds. முன்னது கமல். பின்னது அதிரடி ரஜினி. இருநூறடி உயரத்திலிருந்து விழும் அந்த காட்டாற்று அருவியில் கிட்டத்தட்ட நீங்கள் குளிக்கலாம். இருதய பலஹீனமானவர்களும், மூச்சுத்திணறல் உபாதை உள்ளவர்களும் இந்த காற்று குகை பகுதிக்கு வர வேண்டாம் என்று கொட்டை கொட்டையாய் சிவப்பு எழுத்து எச்சரிக்கை பலகைகள் நிறைய பார்க்கலாம். இந்த முறை நான் போன போது, மூர்ச்சையடைந்த நம்ம ஊர் பெரியவரை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

    அமெரிக்கா வந்த பின் அடர்ந்த காடுகளுக்கு அடிக்கடி ட்ரெக்கிங் போவதுண்டு. நான் வசிக்குமிடம் வருடத்தில் பாதி நாள் குளிர் பிரதேசம் என்பதால், ஒரு தடவை கூட பாம்பை கண்ணில் பார்த்ததில்லை. முதல் தடவையாக Cave of the Winds ஸ்தலத்தில், செடி கொடிகளுக்கிடையில் நிம்மதியாய் படுத்திருந்த ஒரு பாம்பை பார்த்தேன்.

    அது படம் எடுக்கவில்லை. அதை நான் எடுத்த படம் கீழே.

    Snake

     
  • சத்யராஜ்குமார் 6:18 am on August 29, 2008 நிரந்தர பந்தம் | பதில் |
    குறிச்சொற்கள்: தமிழ்நாடு   

    தமிழ்நாடு 2008 

    மூன்று வருடங்கள் கழித்து மூன்று வார மின்னல் விடுப்பில் தென்னிந்திய விசிட். ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்ததுமே பார்த்த பைக் விபத்து மனதைப் பிசைந்தது. தூக்கினால் காகிதம் போல மடங்கும் உடல். ஆம்புலன்ஸில் ஏற்றப்படும் ஜீன்ஸ் அணிந்த அந்த பைக் இளைஞன் காதில் மாட்டியிருக்கும் வெள்ளை நிற ஐபாட் ஒயரோடு இன்னமும் கண்ணுக்குள் இருக்கிறான்.

    அர்த்த ராத்திரியிலும் மூச்சைத் திணறடிக்கும் டிராபிக். சென்னைக்கு இன்னும் நிறைய பாலங்கள் தேவை. ஏட்டிக்குப் போட்டியாய் போட்டுக் கொண்ட வாகன ஹை பீம் விளக்கு வெளிச்சத்தி்ல் கண் கூசுமளவுக்கு இந்தியா ஒளிர்கிறது. விலைவாசி ஸ்பென்சர் ப்ளாஸா மொட்டை மாடியிலிருந்து, ” ஹாய் ” என்கிறது. அகல வழி இணையத் தொடர்பு பரவலாகி விட்டதால் ஆங்காங்கே Pay and use Wi-Fi Hotspot-கள் நிறைய இருக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்.

    பொதுக் கழிப்பறையில் சிறுநீர் கழிக்க ஐம்பது பைசா என்று போர்டு மாட்டியிருக்க, வழக்கம் போல ஒரு ரூபாய் அடாவடி வசூல். ” ஏங்க இப்படி ? ” என்று கேட்டதுதான் தாமதம். நாலு தடியாட்கள் சூழ்ந்து கொண்டு மிரட்டும் தொனியில் அது அப்படித்தான் என எனக்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்கள். தமிழ்ப்படத்தில் இங்கே ஒரு சண்டைக்காட்சி வைக்கலாம். இயற்கை உபாதையோடு அங்கே வாக்குவாதம் பண்ணிக்கொண்டிருக்க இயலவில்லை. மாநகராட்சி அலுவலக குப்பைத்தொட்டிக்கு ஒரு கடிதம் மட்டும் எழுதிப்போட்டேன்.

    எங்கள் ஊர்ப்பக்கம் அடர்ந்த தென்னை மரங்கள் அசைந்த இடங்கள் தோறும் இப்போது கண்ணுக்கெட்டிய தூரம் வரை காற்றாலைகள் அழகாய்ச் சுழல்கின்றன. இரண்டு நாள் முன்புதான் ஒரு ராட்சஸ காற்றாலை உயிர்ச்சேதம் ஏதுமின்றி இரண்டாய் முறிந்து விழுந்ததாம்.

    ஐகாரஸ் பிரகாஷ், நரேன், பாரா போன்றவர்களை சந்திக்க முயன்று முடியவில்லை. சென்னையில் இருந்த சொற்ப நாட்களில் அவர்கள் நேரமும், என் நேரமும் ஒத்து வரவில்லை. காசியை மட்டும் ஏர்போர்ட் போகிற வழியில் கத்திப்பாரா பாலத்தினடியில் ஒண்ணரை நிமிஷம் சந்தி்த்துப் பேச முடிந்தது.

    எங்கள் மாவட்டத்தில் அரசு பஸ்கள் முதற்கொண்டு அத்தனை வாகனங்களிலும் பட்டப்பகலில் A படக்காட்சிகளை கர்ண கடூரமாய் ஸ்பீக்கர்கள் அலற வீடியோ காண்பிக்கிறார்கள். சிறார்கள் பிஞ்சிலேயே ஜூஸாவது உறுதி. தவிர 2020-ல் இந்தியா வல்லரசாகும் போது கோவை பகுதியில் பாதிப்பேர் செவிடாகியிருப்பார்கள்.

    கோவையில் மனைவி மக்கள் பந்துக்கள் துணிக்கடைக்குள் புகுந்த அவகாசத்தில் நான் புத்தகக்கண்காட்சிக்கு நழுவினேன். நிறைய ஸ்டால்கள். நிறைய மக்கள். இது மகிழ்ச்சி்க்குரிய விஷயம். அடுத்த வாரம் பொள்ளாச்சியில் கண்காட்சியாம். ‘புத்தக உலகம்’ என்ற பெயரில் பொள்ளாச்சியில் கடை வைத்திருக்கும் அன்பர்கள் சொன்னார்கள். அவர்கள் கடைக்கு நாஸரும், மணிவண்ணணும் ரெகுலர் வாடிக்கையாளர்களாம். ஷூட்டிங் வரும்போதெல்லாம் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு அங்கே எட்டிப் பார்த்து விட்டுப் போகிறார்கள் என்றனர். மார்க்சிஸ புத்தகங்கள் அவர்கள் விருப்பத்துக்குரியன என்பது உபரி தகவல்.

    ஜெயா டிவியிலோ, மக்கள் டிவியிலோ எனது இணைய தளத்தைக் காட்டினார்கள் என்று ஒன்று விட்ட அண்ணன் சொன்னார். காண்பித்த புண்ணியவானுக்கும், ஒரு வேளை மின்சார பகவான் அருளி இருந்து அதைப் பார்த்தவர்களுக்கும் நன்றி.

    எனது ஆரம்பப் பள்ளி ஆசிரியை ஒருவரை சந்தித்தபோது, ” சில வருஷம் முன்னால் எம்.ஏ தமிழ் இலக்கியம் தொலைதூரக் கல்வி முறையில் படித்தேன். உன்னோட கதை எனக்கு ஆன்ஸிலரி பாடமாக வைத்திருந்தார்கள் ! ” என்றார். மண்டைக்குள் ஜில்லென்று ஒரு பரவசம்.

    நண்பர்கள் அறிவுறுத்தி உதவியதன் பேரில் திருமகள் நிலையம் எனது சிறுகதை தொகுப்பு ஒன்றை செப்டம்பரில் வெளியிடுகிறது. இலக்கிய சிந்தனை விருது கிடைக்கப்பெற்ற ‘ஒரு விநாடியும் ஒரு யுகமும்’ என்ற சிறுகதையின் தலைப்பையே புத்தகமும் தலைப்பாகக் கொண்டுள்ளது. கல்கி, விகடன், அமுதசுரபி, கலைமகள் போன்ற இதழ்களில் பரிசு பெற்ற கதைகளுடன் பிற கதைகளும் தொகுப்பில் உள்ளன. இந்த வலைப்பூவின் வலதுபுறம் புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்க்கலாம்.

    சிறப்பாக ஒரு வெளியீட்டு விழா வைக்க ஆசைப்பட்டார்கள். குழந்தைக்கு காதுகுத்து விழா வேறு நான் வைத்திருந்ததால் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.

     
c
புதிய பதிவு எழுதுக
j
அடுத்த பதிவு / அடுத்த மறுமொழி
k
previous post/previous comment
r
பதில்
e
திருத்து
o
மறுமொழிகளை காண்பி / மறை
t
மேலே செல்க
l
புகுபதிகைக்கு செல்ல
h
உதவி காட்டு/மறை
esc
வேண்டாம்