RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • பொன்.சுதா 6:17 am on October 20, 2009 நிரந்தர பந்தம் | பதில்  

    பன்றிக்காய்ச்சலும் பதினேழாம் பதிகமும் 

    நாளுக்கு இரண்டு மூன்று முறை கடந்து சென்றும் கண்ணில் படாமலேயே போயிருக்கிறது. நண்பர் ஒருவருக்காக அந்த இடத்தில் காத்திருக்கும் போது தான் பார்க்க நேர்ந்தது.

    பன்றிக் காய்சலுக்கு முன்னெச்சரிக்கை என்ற பெயரில் என்னென்னவெல்லாம் செய்தார்கள்.

    இன்னுமொரு மாபெரும் மார்க்கமிருப்பதை உலகுக்கு அறிவிக்கும் பொருட்டே இப்பதிவை சமர்பிக்கிறேன்.
    swine1
    சென்னை சைதாப்பேட்டையில் என் இல்லத்தினருகில் உள்ள திருவாசக மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஃப்ளெக்ஸில் கண்டடைந்தது இது.

    7ம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர் எழுந்தருளி இருந்த போது குளிர்சுரம் என்னும் கொடிய நோய் மக்களைத் தாக்கியதாம். மக்கள் கூடி சம்பந்தரிடம் முறையிட்ட போது அவர் சில பதிகங்கள் பாடித் தந்தாராம். அதைப் பாடி மக்கள் குளிர்சுரத்திலிருந்து தப்பித்தார்கள் என்ற செய்தியோடு, அந்த பதிகத்தின் பாடல்களும் அதில் பதிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல அப்பதிகங்களை திருநீறு அணித்து தினமும் பாடினால் சிக்கன்குனியா, பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றவை வராது என்று எழுதி இருந்தது.

    இதன் நம்பகத் தன்மை குறித்து வல்லுனர்கள் ஆதாரபூர்வமாக விளக்கினால் நன்றாக இருக்கும். பன்றிக் காய்ச்சல் வந்தவர்கள் யாராவது ஒருவருக்கு இதை முயற்சித்து பலன் இருப்பின் உலகெங்கும் பரப்பலாமே. நமது அரிய கண்டுபிடிப்பை. அப்படி செய்கின்ற போது தமிழ் தவிர இந்திய மற்றும் உலக மொழியினர் இப்பதிகத்தை உச்சரிக்க முடியுமா? எனவே தமிழாசியர்களை உலகெங்கும் பயிற்சியாளர்களாக அனுப்பி சம்பாதிக்கச் செய்யலாம். கற்ற தமிழால் வாழட்டுமே.
    swine3
    மற்ற மொழியினர் இதை அப்படியே பாட வேண்டுமா? அல்லது இதை மொழி பெயர்த்து அவர்கள் மொழியில் சொல்லலாமா? சொன்னால் பலனிருக்குமா? தெரியவில்லை. யாரிடம் கேட்பது? மருந்தும், மருத்துவர்களும் இதன் மூலம் செயலிழந்து போவதால் அவர்களை எப்படி பயன்படுத்திக் கொள்வது? மருத்துவக் கல்லூரிகளை என்ன செய்வது என்பதை அரசுகள் தீர்மானிக்க வேண்டிவரும்.

    இப்பதிகத்தை தெரிந்து கொள்ள உலகெங்கும் உள்ள அனைவரும் பறந்தோடி வந்தால் சைதை தாங்குமா என்று ஒருபுறம் கவலையாகவும் இருக்கிறது.

    முக்கியமாக ஒன்று, ஃப்ளெக்ஸில் 17 வது பதிகம் கிடைக்கவில்லை என்று குறிபிடப்பட்டு இருக்கிறது. அதைத் தவிர்த்துப் படிப்பதால் பலன் எதாவது குறையுமாவென்றும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்.

    அப்பதிகத்தைத் தேடித் தர ஆய்வு மேற்கொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    - பொன்.சுதா

    கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.

     
  • சித்ரன் 10:53 am on August 14, 2009 நிரந்தர பந்தம் | பதில்
    குறிச்சொற்கள்: ஆரோக்கியம், , பன்றிக் காய்ச்சல், மருத்துவம், swine flu   

    ஆறாங்கிளாஸில் ஃபெயிலான பன்றிக் காய்ச்சல் 

    maskமெக்ஸிகோ பன்றிகளிடமிருந்து ஏற்றுமதியாகி பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு இந்தியாவில் இறக்குமதியாகி இருக்கும் swine flu (எ) பன்றிக் காய்ச்சல் சமீபமாய் பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது சென்னையில். விளைவு: பள்ளிகளுக்கு விடுமுறை, பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவும் என்கிற எச்சரிக்கை, முகத்தில் திடீர் மாஸ்க்குகள். தொலைகாட்சிகளில் ஸ்க்ரால் நியூஸில் இடைவிடாமல் இதைப் பற்றிய செய்திகள். தினப்பத்திரிக்கைகளில் பக்கத்துக்குப் பக்கம் ப்டம் போட்டு விளக்கங்கள். மக்களைக் கொஞ்சம் உஷார்படுத்தி, கொஞ்சம் குழப்பி, கொஞ்சம் பயமுறுத்தி, கொஞ்சம் விஷய ஞானமூட்டும் அரசாங்க அறிக்கைகள்.

    மாஸ்க் அணிந்த ஊரில் வெறும் மூஞ்சிக்காரன் முட்டாள் என்கிற மாதிரி ஆகிவிட்டது முகமூடி அணியாதவர்களின் நிலைமை. 50 பைசா என்று விற்றுக் கொண்டிருந்த மாஸ்க் பத்து பதினொன்று என்று போய்க்கொண்டிருக்கிறது. வியாதி, பீதி, நீதி என்று எதுவாக இருந்தாலும் அதை அரசியலாகவோ, வியாபாரமாகவோ அதி அற்புதமாய் மாற்றத் தெரிந்த மனிதர்கள் நிரம்பிய நாட்டில் ‘டாமிப்ளூ’வும் மாஸ்குகளும் பதுக்கப்பட்டு தட்டுப்பாடாகி கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு வருகிற நிலைமையும் ஏற்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். ‘வரும்முன் காப்போம்’ என்பது இவர்களுக்காகவே சொல்லப்பட்டதோ என்னவோ!

    பன்றிக் காய்ச்சல் வராமலிருக்க வழி என்கிற வகையில் மின்னஞ்சலாகவும் குறுஞ்செய்தியாகவும் ஏகப்பட்ட தடுப்பாலோசனைகள் வந்த வண்ணம் உள்ளன. எதைப் பின்பற்றினால் அதிக பலன் என்ற குழப்பம் தெளியாத நிலையில் இதோ அவற்றில் சில:

    1. அதிகாலையில் வெறும் வயிற்றில் இரு ஸ்பூன் வெல்லத்தை தண்ணீரில் கரைத்துக் குடித்தல் மற்றும் இரவு படுக்கைக்கு முன் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூளை அரை தம்ளர் பாலில் கலந்து விழுங்குதல் என்பதை அன்றாடம் செய்துவந்தால் ப. காய்ச்சல் பக்கத்திலேயே வராது.

    2. பக்கத்து வீட்டின் மாடத்திலிருந்து கடன் வாங்கியாவது துளசிச் சாறு காலை மாலை இரு வேளை அருந்துவது நிச்சயம் நோய் தடுக்கும் என்பது ஒரு யோக நிபுணரின் ஆலோசனை.

    3. Calcarea Carb – 30 C என்கிற ஹோமியோபதி மாத்திரைகள் தினம் மூன்று எடுத்துக்கொண்டால் ப.கா பயமில்லாமல் இருக்கலாம்.

    4. பிரியாணியில் போடுகிற “தக்கோலம்” (என்ன சமாச்சாரம் இது? கேள்விப்பட்ட மாதிரியே இல்லை. யாருக்காவது தெரியுமா?) என்கிற சாதனத்தைப் பொடி செய்து தண்ணீரில் கரைத்துச் சாப்பிடவேண்டும். (பிரியாணியாகவே சாப்பிட்டால்?)

    5. சின்ன வெங்காயத்தைத் தட்டி நசுக்கி தினம் இருவேளை சாப்பிடலாம்.

    6. எலுமிச்சை சாறு அடிக்கடி குடித்தல்.

    7. டாபர் சவனப்ராஸ் லேகியம் ஒன்றே போதுமாம். அதிலேயே எல்லாம் இருக்கிறதாம்.

    8. மேற்கண்ட அயிட்டங்கள் கிடைக்காதவர்கள் குறைந்த பட்சம் யூக்கலிப்டஸ் திரவத்தின் ஒரு துளியை ஒரு கைக்குட்டையில் நனைத்து மூக்கில் கட்டிக் கொள்ளலாம்.

    இது தவிர இன்னும் எக்கச்சக்கமாக எச்சரிக்கைகளும் ஆலோசனைகளும் வந்து கொண்டே இருக்கின்றன. ‘இம்யூன் ஸிஸ்டம்’ எனப்படுகிற நோய் எதிர்ப்பாற்றல் என்று ஒன்று இருப்பதே பல பேருக்கு நோய் வந்தபிறகுதான் தெரிய வருகிறது. எங்களுக்கு வந்து போன சிக்குன் குனியாவின் தாக்கமே இன்னும் தீர்ந்தபாடில்லை அதுக்குள் இது வேறா என்று முட்டியைப் பிடித்துக் கொண்டு அலுத்துக்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்.

    ஊரிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் “சென்னையில் பூகம்ப எதிரொலி, சுனாமி எச்சரிக்கை” எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டு ‘பன்றிக் காய்ச்சலாமே. பாத்து இருந்துக்கோ” என்பதைத்தான் அதிகம் குசலம் விசாரிக்கின்றன.

    ‘தனக்கு ஸ்வைன் ஃப்ளூ இருக்கான்னு என்கிட்ட வர்ரவங்களுக்கு எப்படி கண்டுபிடிச்சுச் சொல்லறதுன்னும் தெரியல. இல்லன்னு திருப்பி அனுப்பவும் முடியல. இருந்தா அதுக்கு கரெக்ட்டா என்ன பண்ணனும்னு தெரியல. இந்த வியாதியைப் பத்தி அதிகமா எதுவுமே எங்களுக்குத் தெரியல. வர வர எங்க பொழப்பு ரொம்ப மோசமாயிருச்சு. எங்களையெல்லாம் டாக்டர்ன்னு சொல்லிக்கிறதுக்கே வெக்கமாயிருக்கு’ என்று ஊரில் என் உறவினரிடம் ஒரு டாக்டர் புலம்பித் தள்ளியதாகச் சொன்னார்.

    அதெல்லாம் இருக்கட்டும். இங்கே சென்னையில் ஒரு பிரபல உயர்நிலைப் பள்ளி ஒன்றில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அஞ்சாங்கிளாஸ் வரை மட்டுமே லீவு விட்டிருப்பதாக சொல்கிறார்களே அது ஏன் என்று ஒரு வாரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

     
    • ஓவியன் 11:28 மு.பகல் on ஆகஸ்ட் 14, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      //அதெல்லாம் இருக்கட்டும். இங்கே சென்னையில் ஒரு பிரபல உயர்நிலைப் பள்ளி ஒன்றில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அஞ்சாங்கிளாஸ் வரை மட்டுமே லீவு விட்டிருப்பதாக சொல்கிறார்களே அது ஏன் என்று ஒரு வாரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்//

      ஆறாம் வகுப்பிற்கு மேல் உயிரை கொடுத்தான் படிக்க வேண்டுமோ என்னவோ?

    • சத்யராஜ்குமார் 12:11 பிற்பகல் on ஆகஸ்ட் 14, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      டாக்டரின் நேர்மையை பாராட்டும் அதே நேரத்தில், எந்த தைரியத்தில் ஒரு டாக்டரிடம் போவது என்று கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. :-|

    • பினாத்தல் சுரேஷ் 1:26 பிற்பகல் on ஆகஸ்ட் 14, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      இந்த லீவு சமாசாரம் பயங்கரமாய் குழப்புகிறது. மழைக்காக லீவ் என்றால் மழைவிட்டதும் தொடங்கலாம். இப்போது எப்போது தொடங்கலாம் என்று லீவ் விடுகிறார்கள்?

      டாக்டர்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது :)

    • யாத்ரீகன் 1:53 பிற்பகல் on ஆகஸ்ட் 14, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      >> ஆறாம் வகுப்பிற்கு மேல் உயிரை கொடுத்தான் படிக்க வேண்டுமோ என்னவோ? <<<

      :-) )))))))))

    • என். சொக்கன் 1:55 பிற்பகல் on ஆகஸ்ட் 14, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நல்ல பதிவு, அதைவிட நல்ல தலைப்பு, நன்றி :)

      இப்போதெல்லாம் யாராவது பலமாகத் தும்மினாலே பயமாக இருக்கிறது – பத்திரிகைகளும் டிவிகளும் இந்தப் பயத்துக்கு நன்றாகத் தீனி போடுகிறார்கள் – இவர்களுக்கு அடுத்த பரபரப்பு கிடைக்கும்வரை இது தொடரும்!

      - என். சொக்கன்,
      பெங்களூர்.

    • REKHA RAGHAVAN 1:36 மு.பகல் on ஆகஸ்ட் 15, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      இதென்னடா தலைப்பு ரொம்ப வித்தியாசமாக இருக்கிறதே என்று உள்ளே புகுந்து படித்துவிட்டு கடைசி பாராவுக்கு வந்தால் தலைப்பு வைக்கிறதில் நீங்க எங்கேயோ போயிட்டீங்கன்னு நினைக்கவச்ச அருமையான பதிவு. என்னை பொறுத்த வரை அவசியம் ஏற்பட்டாலொழிய வெளியே போவதை நிறுத்தினாலே பன்றி என்ன ஓணான் (வந்தாலும் வரும்) காயச்சல்லிலிருந்து கூட தப்பித்துவிடலாம்.

      ரேகா ராகவன்

    • படிக்காதவன் 3:16 மு.பகல் on ஆகஸ்ட் 15, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நல்ல பதிவு. நாங்கள் அலுவலகத்தில் கூட கவசம் அணிந்து தான் வேலை பார்க்கின்றோம்.

    • சித்ரன் 1:10 மு.பகல் on ஆகஸ்ட் 18, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      பின்னூட்டங்களுக்கு நன்றி. பள்ளிகள் வழக்கம்போல இயங்க ஆரம்பித்துவிட்டன. அரசாங்கத்தின் உத்தரவால் மீடியாக்கள் அடக்கி வாசிக்க ஆரம்பித்துவிட்டன. இதன் விளைவாக பீதி குறைந்து பரிசோதனை மையங்களில் கூட்டம் குறைந்திருக்க வாய்ப்புண்டு. எப்படியோ ப.கா கட்டுப்படுத்தப்பட்டு ஒழிந்தால் சரி.

      • uma 1:58 மு.பகல் on ஆகஸ்ட் 24, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        நல்ல பதிவு சித்ரன். நமக்கு வந்தால் கூட பரவாயில்லை, பிள்ளைகளுக்கு வந்துவிடக் கூடாது என்று அச்சமாகத்தான் இருக்கிறது. இன்று என் பசங்களுக்கு light fever, cold and cough. நல்ல வேளை டாக்டர் இது சாதரண காய்ச்சல் என்று சொல்லிவிட்டார். சீக்கிரம் இதற்கு எதாவது vaccination கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும்.

  • சத்யராஜ்குமார் 8:56 am on October 12, 2007 நிரந்தர பந்தம் | பதில்  

    எச்சரிக்கை 

    (மேல்) நாட்டு வைத்தியம் பதிவில் குழந்தைகளுக்கான இருமல் மருந்து குறித்த விவாதம் எழுந்தது. மருத்துவர் பரிந்துரை இல்லாமல் கடைகளில் வினியோகிக்கப்படும் பல இருமல் மருந்துகளின் அபாயம் குறித்து பத்மா அர்விந்த் நிறைய தகவல்கள் அளித்திருந்தார்.

    FDA எச்சரிக்கையைத் தொடர்ந்து,  அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் நேற்று தாமாகவே முன்வந்து மேற்படி மருந்துகளை கடைகளில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டன.

    ஏற்கெனவே இம்மருந்துகளை நீங்கள் வீட்டில் வைத்திருந்தால் அவற்றைத் திருப்பிக் கொடுக்கவோ குப்பைத் தொட்டியில் வீசவோ முயற்சிக்கலாம்.

     
c
புதிய பதிவு எழுதுக
j
அடுத்த பதிவு / அடுத்த மறுமொழி
k
previous post/previous comment
r
பதில்
e
திருத்து
o
மறுமொழிகளை காண்பி / மறை
t
மேலே செல்க
l
புகுபதிகைக்கு செல்ல
h
உதவி காட்டு/மறை
esc
வேண்டாம்