ஆவணப்படுத்தவும் 'வாழ்க்கை'வகை

பூச்சாண்டி நண்பன்

நவம்பர் 10, 2009

poochandiஎனக்குப் பெண் பார்க்க ஆரம்பித்த காலம். “கல்யாணத்துக்கு இப்ப என்னம்மா அவசரம்? இன்னும் ஒரு வாரம் போகட்டும்…” என்ற என் காமெடி சென்ஸ் தாங்காமல் அம்மா ஒரு மாசம் என்னுடன் பேசுவதையே நிறுத்திவிட்டாள்.

வாரம், மாதம், வருடம் என காலம்தான் எவ்வளவு மாறிவிட்டது?

ஆல் இன்டியா ரேடியோ மட்டும் கேட்டுக் கொண்டிருந்த ஊரில் ஆயிரத்தெட்டு FM ஸ்டேஷன்கள்.

தூர்தர்ஷன் பார்க்க பொது டிவி போன வீடுகளில் ரிமோட் அழுத்தி அழுத்தி வலது பெருவிரல் வலிக்கிறது.

போஸ்டல் கொரியராகிவிட்டது. போன் செல்லாகிவிட்டது.

LP  ரெக்கார்டுகளில் கேட்ட பாடல்கள் ரீமிக்ஸாய் ஐபாட்களில் அலறுகிறது.

பையனாய் இருந்த நான் ஆள் ஆகி எனக்கு 2 வயதில் பையன் இருக்கிறான்.

டிவிகளின் ஸிக்னேச்சர் மியூஸிக், சீரியல்களின் டைட்டில் பாடல்களுக்கு தலையாட்டிக் கொண்டிருந்த என் பையன், இப்போது டிவிடியிலோ, சிஸ்டத்திலோ, “வர்றான் வர்றான் பூச்சாண்டி ரயிலு வண்டியில…” பாட்டைத்தான் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறான். இந்தப் பாடல் வந்த  பின்பு சாப்பிட அடம்பிடிக்கும் என் மகனுக்கு சோறூட்டுவது எளிதாகிவிட்டது இப்போது.

முன்பெல்லாம் இருட்டைக் காட்டி ‘பூச்சாண்டி வந்துருவான்’ என்று சோறூட்டினாள் அம்மா. இப்போதோ கரண்டு இல்லாத இருட்டுகளில் பூச்சாண்டி வராததால் மகனுக்கு சோறூட்ட முடியாமல் திணறுகிறாள் என் மனைவி.

காலம் மாறித்தான் போச்சு. எனக்கு பூதமாய் இருந்த பூச்சாண்டி என் மகனுக்கு ஃப்ரண்டாகிவிட்டான்.

-மீனாட்சி சுந்தரம்

கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.

பேச்சிலர் அறையில் ஒரு பூனைக் குடும்பம்

நவம்பர் 5, 2009

bachelorஎனது சமையல் அறையில் சற்று உயரத்தில் ஒரு ஜன்னல் இருக்கிறது. அதற்கு கதவெல்லாம் இல்லை. குறுக்காய் மூன்று கம்பிகள் மட்டும் உண்டு. அந்த இடைவெளியில் பூனைகள் நுழையலாம். ஆகவே அவ்வப்போது பூனைகள் நுழைவதுண்டு. பேச்சிலர் அறையில் சாம்பிளுக்குகூட எதுவும் கிடைக்காமல் அவைகள் கோபமாய் திட்டிக்கொண்டு போவது எனக்கு அடிக்கடி நடக்கிற சம்பவம். அது மாதிரி சமீபத்திலும் ஒரு பூனை நுழைந்தது. வழக்கம் போல் என நான் நினைக்க, வந்த பூனை போகவில்லை. தனித்துக் கேட்ட அதன் குரல் பிறகு கோரஸாய் ஒலிக்கத் தொடங்கியது. நான் புரியாமல் உள்ளே போனேன். லாஃப்ட்டில் இருந்த பழைய பெட்டிகளை நகர்த்தி எட்டிப் பார்க்க நான் திடுக்கிட்டு போனேன். அங்கே கறுப்பு வெள்ளையில் ஒரு தாய்ப் பூனையும் மிக அழகாய் பிரவுன் மற்றும் வெள்ளை கலந்த நிறத்தில் அதன் இரண்டு குட்டிகளும் இருந்தன. தாய் பூனை நான் பார்ப்பதை உணர்ந்து சட்டென நிமிர்ந்து என்னைப் பார்த்து கோபமாய் சீற நான் பயந்து போய் இறங்கிக் கொண்டேன்.

என்ன செய்வதென யோசித்தேன். அதற்குள் விஷயம் காம்பெளண்டின் ஃப்ளாஷ் நியுஸில் வந்தது. பக்கத்து வீட்டுக்காரர்கள் வரத் தொடங்கினார்கள். ஆளாளுக்கு அதைப் போய் எட்டிப் பார்ப்பதும் தாய்ப் பூனை சீறுவதுமாய் காட்சி தொடர்ந்தது. அதை எப்படி விரட்டுவது என அவர்களிடம் ஐடியா கேட்டேன். இப்படி தொல்லை தந்தால் அதுவே இடம் மாறிவிடும் என்றார்கள். அது மட்டுமல்ல. “பூனையெல்லாம் குட்டி போட்டு குடும்பம் நடத்துது.. நீங்களும் இருக்கீங்களே..?” என்று கமெண்ட் வேறு போட்டு விட்டு போனார்கள். ஆகா என்னமா யோசிக்கறாங்க. ரூம் போட்டு யோசிப்பாங்களோ என்று நான் வடிவேல் மாதிரி யோசித்து விட்டு பதில் சொல்லாமல் அமைதி காப்பேன். பூனைகளின் வரவால் பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. அவர்களை உயரத் தூக்கி அவைகளைக் காட்டச் சொல்லி அடம்பிடித்தார்கள். இவர்களின் தொல்லையில் நான்தான் இடம் மாறிவிடுவேன் போலிருந்தது. பூனைகள் சுகமாய் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தன. அதன் அதிகபட்ச இடமாற்றம் இடது மூலையிலிருந்து வலது மூலைக்கு வந்ததுதான்.

விரட்ட நினைத்து முடியாமல் கடைசியாய் நானும் அதை ரசிக்க ஆரம்பித்தேன். அந்த குட்டிகளின் குறும்புகள் ஒவ்வொன்றும் கவிதையாய் இருந்தது. அந்த குட்டிகள் அந்த தாய் பூனைகளை படுத்துகிற பாடும் தாய் பூனையின் பொறுமையும் ஆச்சரியம் தந்தது. இதற்கிடையில் அந்த அப்பா பூனையின் தொல்லை வேறு. ஜன்னல் பக்கம் நின்று அவைகளை வீட்டிற்கு வரச் சொல்லி ஆனமட்டும் கத்திப் பார்க்கும். ஊஹூம். அதனிடம் எந்த பதிலும் வராது. கடைசியாய் தாய்ப் பூனைக்கு கோபம்தான் வரும். வந்த கோபத்தில் பதிலுக்கு சீற அது தலை தெறிக்க ஓடிப்போகும்.

நான் தாய்ப் பூனை இல்லாத சமயத்தில் குட்டிகளை எடுத்துக் கொஞ்சுவேன். குழந்தைகளிடம் கொடுத்து விளையாட விடுவேன். அதன் அழகிய அசைவுகளை என் செல்போனில் பதிவாக்கினேன். எப்போதாவது கொஞ்சம் பால். எப்போதாவது பிஸ்கட் வைக்க அதுகள் ஆரம்பத்தில் தயங்கி பிறகு என் அன்பின் மீது நம்பிக்கை வந்து என்னிடம் நெருங்கியது. அதன் பிறகு என் அதிகபட்ச அன்பே தொல்லையாய் மாறிவிட்டதோ தெரியவில்லை. ஒரு நாள் அதன் சத்தத்தை காணவில்லை. அவசரமாய் போய் லாஃப்ட்டில் எட்டிப் பார்க்க பூனைகள் இல்லாமல் இடம் வெறுமையாய் இருந்தது. எனக்கு மனசு சட்டென கனத்து போனது. எங்கே போனது? வந்துவிடும் என காத்திருக்க அதற்கு பிறகு அது வரவேயில்லை. ரோட்டில் போகிற போது அந்த மாதிரி கலரில் பூனைகளைப் பார்க்கிறபோது என் அறையில் இருந்த பூனைகளோ என என் மனசு எப்போதும் தேட ஆரம்பித்தது. எனக்கு சமாதானம் ஆகவில்லை. வெறுப்புதான் வந்தது.

பிறகு வீட்டிற்கு வந்தேன். கம்பிகள், கயிறுகள் கட்டி அந்த ஜன்னலை மூடினேன். இனிமேல் இந்த மாதிரி உறவே வேண்டாமெனத் தோன்றியது. ஆனாலும் அந்த வருத்தம் மட்டும் தீரவில்லை. பிரிவென்றால் துயரம்தானே. அது பூனையானாலும்..!

-சரசுராம்

கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.

கதவைத் திற. குழந்தைகள் வரட்டும்!

அக்டோபர் 27, 2009

child-doorபெரும்பாலும் மூடிக்கிடக்கிற கதவுகளைக் கொண்ட அபார்ட்மெண்ட் வீடுகள். சாத்திய கதவுகளுக்குப் பின் தங்களுக்கென ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கிக்கொண்டு அதில் ராஜாவாக ராணியாக இளவரசர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள். அடுத்தவர் வீடுகளிலிருந்து வருவது பிரியாணி வாசமானாலும், எலெக்ட்ரிக் ஒயர் கருகுகிற வாசமானாலும் கவலைப்படாமல் மானாட மயிலாட-வில் மூழ்குபவர்கள். சென்னைப் பெருநகரில் இந்த மாதிரி அபார்ட்மெண்ட் ஒன்றில் வேறு வழியில்லாமல் வசிக்க நேர்ந்துவிடுகிற அவலத்தில் சின்னச் சின்ன சந்தோஷங்களும் உண்டு. அவைகளில் மிக முக்கியமாய் குழந்தைகள்.

பக்கத்து வீட்டுக்கு ஒரு இளம் தம்பதியினர் ஒரு தவழ்கிற குழந்தையுடன் குடிவந்தபோது அவர்களுக்கும் சாத்தின கதவுகளைப் பார்த்து சலிப்பு ஏற்பட்டிருக்கலாம். அல்லது அப்பாடா, தொல்லை விட்டது என்று நிம்மதியாகக்கூட உணர்ந்திருக்கலாம். அப்புறம் கொஞ்சமாய் இருபத்தியிரண்டரை டிகிரி திறந்திருந்த எங்கள் கதவு வழியே மெதுவாய் பரவியது நட்பு. அபார்ட்மெண்டின் மூன்று தளங்களையும் அதகளம் பண்ணி, மாதமிரண்டு என்ற கணக்கில் ட்யூப்லைட்டுகளை உடைத்து விளையாடும் என் பையன் மற்றும் அவன் சகாக்கள் முன்பெல்லாம் பாதி நேரம் எங்கள் வீட்டுக்குள்தான் இருப்பார்கள் என்பதால் நிறைய அம்மா அப்பாக்களுக்கு பரிச்சயப்பட்டவர்களாய் இருந்தோம். பொடிசுகளைக் காணோம் என்றால் நேராய் இங்கே வந்து விசாரிக்கும் அளவுக்கு. விசாரிப்புக்குப் பின் ஐந்து நிமிடங்களாவது அரட்டை.

பக்கத்து வீட்டுக்கு குடிவந்த அந்த 7 மாதக் குழந்தை முதன் முதலில் எங்கள் வீட்டுக்கு அதன் அம்மாவுடன் வந்து அமைதியே திருவுருவாய் ஒரே இடத்தில் உட்கார்ந்து பராக்கு பார்த்தது. எப்போதாவது கொஞ்சமாய்த் தவழும். அவ்வளவுதான். ஓரிடத்தில் உட்காருவதுதான் நமக்குப் பிடிக்காத விஷயமாயிற்றே? அதுவும் சும்மா! விடுவானேன். அக்குள்களில் துண்டால் வளைத்துப் பிடித்து ”நடரா ராசா” என்று ஒருநாள் நடக்கப் பழக்கினேன். கம்ப்யூட்டரில் உட்காரவைத்து கூகிளிலிருந்து ஆப்பிளைக் காண்பித்தேன். உடனே ”ஆப்பி” என்ற வார்த்தையைக் கற்றுக் கொண்டது. ‘வேண்டும்’ என்பதை “ஈனும்” என்றும் ‘வேண்டாம்’ என்பதை “மானா” என்றும் சொல்லப் பழகியது. நடக்க ஆரம்பித்தபிறகு நான் “அப் அப்” என்று சொல்ல சேர் மேல் ஏற ஆரம்பித்தது. நடக்க ஆரம்பித்த குழந்தை பிறகு ஓடவும் ஆரம்பித்தது. எல்லாமே என் பையன் வளரும் போது பார்த்ததுதான் என்றாலும் ஆச்சரியம் குறையாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என் பையனும் அவன் செய்கைகளை, குறும்புகளை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.

குழந்தைகள் வேகமாகக் கற்றுக் கொள்கின்றன. நிறைய விஷயங்களை துல்லியமாய் ஞாபகம் வைத்துக்கொள்கின்றன. ஒருமுறை சொல்லிக் கொடுத்தாலே ‘சட்’-டென்று பிடித்துக் கொள்கின்றன. சட்டென்று பதில் சொல்லிவிட முடியாத வகையில் நிறைய கேள்விகள் கேட்கின்றன. அந்தக் குழந்தை அவனது ஜியாலஜிஸ்ட் அப்பா மாதிரியே நல்ல புத்திசாலி. நான் பார்த்துக் கொண்டிருந்த இந்த ஒன்றரை வருடத்தில் நிறைய கற்றுக்கொண்டு வளர்ந்தும் விட்டான். ஒரு மொட்டை, ஒரு ஹேர் கட்டுக்கு அப்புறம் பெரிய பையன் மாதிரி தோற்றமும் வந்துவிட்டது. மழலையாய் ஒற்றை வார்த்தைகளில் புற உலகோடு தொடர்பு கொண்டிருந்தவன் அப்புறம் ரெண்டு வார்த்தைகள் சேர்த்தார்போல் பேசக் கற்றுக்கொண்டான். பார்த்துக் கொண்டிருக்கும்போதே பெரிய வாக்கியங்களாகவும் பேச ஆரம்பித்துவிட்டான். நேற்று அவன் ஏதோ குறும்பு செய்தபோது தங்கமணி “அங்கிள் பார்த்தா அடி பிச்சுருவாரு” என்று செல்லமாய் கண்களை உருட்ட, அது கெஞ்சுகிற குரலில் “தய்சவேது அடிக்க மானா” என்றது. உங்களுக்குப் புரிகிறதா? ச்சோ ஸ்வீட்.

குழந்தைகளோடு விளையாடும்போது பெரியவர்களின் ’ஸ்ட்ரெஸ்’ எனப்படும் சமாச்சாரம் பெருமளவு குறைகிறது. அதற்கான simple rule நாமும் விளையாடும்போது குழந்தையாக மாறிவிடவேண்டும் என்பதே. ’ஸ்ட்ரெஸ்’ நிறைய குறைய வேண்டுமென்றால் குப்புறப் படுத்துக்கொண்டு குழந்தையை முதுகின் மேலேறி மிதிக்க அல்லது குதிக்கச் சொன்னால் போதும். (முதுகுத்தண்டு பிரச்சினையிருப்பவர்கள் இந்த ஆலோசனையைப் பின்பற்றினால் பிறகு பெண்டு கழன்றுவிடும் என்றும் எச்சரிக்கிறேன்)

அப்பார்ட்மெண்டுகளில் பெரியவர்களின் அக்கப்போர் வேண்டாமென்றால் வேண்டாம். ஆனால் குழந்தைகளுக்காக எப்போதும் கதவைக் கொஞ்சமாகத் திறந்து வைக்கலாமென்றுதான் தோன்றுகிறது.

-சித்ரன்

கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.