திண்ணை
சில அறிமுகங்கள் நம் வாழ்க்கையை வெகுவாக மாற்றி விடும்.
நியூஜெர்ஸி சிந்தனை வட்டம் பொறுப்பாளர் ஆனந்த் முருகானந்தம் எனக்கு அப்படித்தான். நினைவு தெரிந்த நாள் முதல் அவர் அமெரிக்காவில் இருக்கிறார். முப்பது வருஷங்களுக்கு முன்பு ஒரு இந்திய விஜயத்தின் போது ராத்திரி பனிரெண்டு மணிக்கு எங்கள் வீட்டுக் கதவைத் தட்டியதும், அப்போது புதிதாய் வாங்கியிருந்த வெட் கிரைண்டரை பார்த்து, “பரவாயில்லையே… இந்திய சமையலறைகளும் இயந்திர மயமாகி வருதே.” என்று வியப்பை தெரிவித்து விட்டுப் போனது சின்ன வயசு ஞாபகங்களில் ஒன்றாக இன்னும் மனதில் இருக்கிறது.
அவர் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும், “போய் பார்த்து பேசிட்டு வா” என்று சொல்லி பக்கத்து ஊரிலிருக்கும் அவர் வீட்டுக்கு அம்மா என்னை அனுப்பி வைப்பாள். எனக்கு சில சமயம் கொஞ்சம் எரிச்சலாக கூட இருக்கும். பத்து பதினைந்து நாள் விடுமுறையில் வந்திருக்கும் அவரைப் பார்க்க பல பேர் வருவார்கள், போவார்கள். அங்கே என்னைப் போல பொடியனுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கப் போகிறது. இதெல்லாம் அந்த விவரம் தெரியாத வயதில் நமக்குள் தோன்றும் எண்ணங்களே தவிர பக்கத்தில் உட்கார்ந்து பத்து நிமிஷமாவது அவர் பேசாமல் இருக்க மாட்டார். விடை பெறும்போது மறக்காமல் கொஞ்சம் சாக்லேட்டுகளும், சின்ன பரிசுப் பொருளும் தந்தனுப்புவார்.
தெரிந்தோ தெரியாமலோ அந்த சந்திப்புகள் ஏற்படுத்திய பாதிப்பு ஏதோ ஒரு வெளிநாட்டில் என்றாவது வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசையை மனதின் ஆழத்தில் ஒரு நீரோட்டம் போல ஓட விட்டிருக்கிறது. அடி மனதின் ஆசைகள்தான் கிடைக்கிற சந்தர்ப்பங்களை முழு வேகத்தில் பயன்படுத்திக் கொள்ளும் உத்வேகத்தை அளிக்கின்றன.
ஆறேழு வருஷங்களுக்கு முன்பு நியூஜெர்ஸியில் அவர் வீட்டுக்குப் பக்கத்திலேயே வந்து சேர்ந்தது அதிசயம்தான். அப்போது என்னிடம் கார் இல்லை என்பதால் அவரே வந்து வீட்டுக்கு அழைத்துப் போனார். அன்றுதான் திண்ணை என்ற மின்னிதழை எனக்கு அறிமுகப்படுத்தினார். “என் நண்பர் ராஜாராம்தான் இதை நடத்தறார். இதிலே கதை எழுதறியா?”
திண்ணையின் ஓரிரு இதழ்களை படித்துப் பார்த்தவன் அதிலிருந்த கட்டுரைகளையும், எழுதியவர்களின் பெயர்களையும் பார்த்து மிரண்டு போனேன். சிற்றிதழ்வாதிகளுக்கு இருப்பது போலவே வெகுஜன இதழ்களில் எழுதி வருபவர்களுக்கும் ஒருவகை சிற்றிதழ் அலர்ஜி உண்டு. அதற்கு நானும் விதிவிலக்கல்ல. குமுதம், விகடன், கல்கி போன்ற வாரப் பத்திரிகைகள் தவிர வேறெதிலும் நான் அதுவரை கதைகள் எழுதியதில்லை. ச. மஞ்சுளாதேவி நடத்தி வந்த ‘வேறு திசைகள்’ என்ற பத்திரிகை மட்டும் ஒரே ஒரு விதிவிலக்கு.
ஆனந்த் அவர்களிடம் அப்போது நான் எதுவும் சொல்லவில்லை. அதற்கப்புறம் சில வருஷங்களுக்குப் பிறகு ஒரு முறை சிந்தனை வட்டம் விழாவுக்குப் போன போது, ஆனந்த் வீட்டில் தங்க நேர்ந்தது. திரு ராஜாராம் அவர்களும் அன்று அங்கே தங்கியிருந்தார். நான் எழுதுவேன் என்று தெரிந்து, “திண்ணைக்கு அனுப்புங்க.” என்று அவரும் சொன்னார்.
“இல்லைங்க நான் குமுதத்தில் எல்லாம் எழுதிட்டிருந்தவன். ரொம்ப இலக்கியத்தரமா எழுத வராது.” என்றேன்.
”அப்படி எல்லாம் இல்லை. நீங்க அனுப்புங்க.” என்றார்.
துரதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் நான் எழுதுவது மிகவும் குறைந்து போயிருந்ததால் அப்போது திண்ணைக்கு அனுப்ப முடியவில்லை. வேறொரு சமயம் மறுபடியும் திரு. ராஜாராம் அவர்களை ஆனந்த் அவர்களின் வீட்டில் சந்திக்க நேர்ந்தது. கதைகளைப் பற்றி பேச்சு வந்த போது, “நான் கேட்டேன். நீங்கதான் அனுப்பவே இல்லை.” என்றார்.
அப்போதிருந்தே எனக்கு உறுத்திக் கொண்டே இருந்ததால், பத்து நாளுக்கு முன்னால் மிச்சம் என்ற சிறுகதையை அனுப்பி வைத்தேன். திண்ணையில் இந்த வாரம் (28 ஆகஸ்ட் 2009) வெளிவந்துள்ளது.
மிச்சம்
சிறுகதை
~ சத்யராஜ்குமார் ~
சுருக்கென்று ஒரு முள் குத்தியதைப் போல கேள்வி. சிரித்துக் கொண்டேதான் கேட்டான். இவனைப் போன்ற அமெரிக்கனுக்கு அது கை வந்த கலை.
”ஏன் இப்படி இருக்கிங்க?”
வாஷிங்டன் டல்லஸ் ஏர்போர்ட்டில் செக்யூரிட்டி சோதனைக்காக நீண்ட வரிசையில் நின்றிருந்தேன். மூன்று வருஷங்கள் கழித்து இந்தியா போகிற குறுகுறுப்பு மனசுக்குள் ஜில்லென்று பரவியிருந்தது.
”எப்படி இருக்கோம்?”
….
என். சொக்கன் 12:00 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் |
:))))))))))) அந்தக் கடைசி வரி சுய எள்ளலைவிட, அமெரிக்கனின் விமர்சனங்கள் ரொம்பப் பிடிச்சிருந்தது – இந்த ‘தனி’க் குணம் அமெரிக்காவில்மட்டுமில்லை, பெங்களூரிலும் உண்டு 🙂 என்ன, இந்தியனுக்குபதில் இங்கே தமிழன், அவ்ளோதான்!
சுஜாதாவின் ‘மீண்டும் மத்யமர் கதைகள்’ படிச்சிருக்கீங்களா? அந்த வரிசையில முதல் கதை – வருஷாவருஷம் அமெரிக்காவிலிருந்து செம அவஸ்தைப்பட்டு இங்கே சீஸனுக்கு வந்து போகும் ஒரு பாடகரைப்பற்றியது, அந்தக் கதையின் கடைசி வரியும் இப்படிதான் ‘நச்’சுன்னு முடியும் 🙂
அழகான கதை, நன்றி சத்யராஜ்குமார்!
– என். சொக்கன்,
பெங்களூர்.
சத்யராஜ்குமார் 11:18 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் |
நன்றி சொக்கன், சரியான பார்வையுடன் கதையை அணுகினதற்கு கூடுதல் நன்றிகள். சித்ரனுக்கான பதிலையும் பார்க்கவும்.
REKHA RAGHAVAN 12:17 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் |
நீங்கள் போனில் சொன்ன உடனே தேடித் பிடித்து படித்துவிட்டேன். நிகழ்வை நேரில் பார்ப்பது போல வாசகனை கொண்டு வருகிறீர்கள் பாருங்கள் அதுதான் SRK!
ரேகா ராகவன்
சத்யராஜ்குமார் 11:19 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் |
நன்றி ரேகா ராகவன்.
சித்ரன் 8:20 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் |
கதையின் முற்பாதியில் டேவிட்டினுடன் நடக்கும் உரையாடல்களில் நீங்கள் சொல்லிவருகிற விஷயங்கள். இந்தியர்கள் எங்கு சென்றாலும் எப்போதும் போல கூட்டமாக ஆனால் அதே சமயம் ஒருவருக்கொருவர் நெருக்கமாகவும் அக்கறை கொள்பவர்களாகவும் உருவகப்படுத்தியதும், அதைப் பார்த்து டேவிட் புலம்புவது கூட அவனுக்கிருக்கும் பொறாமையால்தான் என்பதை பிரதான கதாபாத்திரம் வழியாகச் சொல்வதும் ஆக இந்தப் பகுதி நன்றாக வந்திருக்கிறது.
//ஒவ்வொரு இந்தியனும் ஒரு இந்தியாவை இரும்பு வளையமா சுத்திகிட்டு அலையறிங்க//
இந்த வரிகள் அருமை.
சத்யராஜ்குமார் 11:17 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் |
நன்றி சித்ரன். கதையை படித்து விட்டு ஒரு வாசகர் இந்தியர்களை (குறிப்பாக இந்து மதத்தவர்களை) தாழ்த்தி எழுதியிருப்பதாக மின்னஞ்சலில் சிறிது காரத்துடன் குறிப்பிட்டிருந்தார். அது தவறான புரிதலாகும். சொக்கன் குறிப்பிட்டதைப் போல கதையில் எந்த race வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். இன்னொரு விஷயம் நம்மைப் பற்றி நமக்குள் நாம் எவ்வளவு உயர்வாக பேசிக் கொண்டாலும் மற்றவர்கள் பார்வையையும், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற நிஜத்தையும் மாற்ற முடியாது. அதற்கடுத்தபடியாக என்னைச் சுற்றி நடப்பதையும், நான் கேட்பதையும், பார்ப்பதையும் எழுதும்போது அது என்/நம் அடையாளத்தோடு இருப்பதை தவிர்க்க இயலாது. அது யார் மனதையும் புண்படுத்துமானால் மன்னிக்க வேண்டுகிறேன்!
சுபமூகா 9:59 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் |
சூப்பர்!
வழக்கமான அசத்துகிற நடை 🙂
பாராட்டுகள்.
அன்புடன்,
சுபமூகா
சத்யராஜ்குமார் 10:41 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் |
வாங்க சுபமூகா! எப்படி இருக்கீங்க? மறுபடி அமெரிக்கா வந்திங்களா?
சுபமூகா 9:34 பிப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம்
நலம். தற்போது இந்தியாவில் தான்!
அன்புடன்
‘சுபமூகா’
Ravishankar 10:04 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் |
கதை நல்லா இருக்கு சத்யா.
சத்யராஜ்குமார் 10:40 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் |
நன்றி ரவிஷங்கர்!
சுதாகர் 10:13 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் |
தங்க செயின், பெல்ட் போன்றவற்றை கழற்றி ஸ்கேன் செய்யவேண்டும்னு எல்லா செக் பாய்ண்ட்-லயும் போட்டிருப்பாங்க. இந்த மறதி எல்லோருக்கும் வரும்.
நானும் அரைஞாண் கயிறு, மெட்டல் தாயத்து எல்லாம் போட்டிருக்கேன். முக்கியமான நாடுகளுக்கும் (இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய்) பல தடவ போயிட்டு வந்திருக்கேன். எங்கயுமே எனக்கு அலாரம் அடிச்சது இல்ல…
உங்க லாஜிக் படி, அந்த மெயின் கதாபாத்திரம் அமெரிக்கா வந்தப்பவும், அவனுக்கு அலாரம் அடிச்சிருக்கணுமே?
சத்யராஜ்குமார் 10:39 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் |
சுதாகர், நியாயமான கேள்விகள்! கதை எழுதும்போது இதைப் பற்றி யோசித்தேன். இரண்டு காரணங்கள் அதை ஜஸ்டிபை செய்வதாகப் பட்டது.
1) முன்னமே அலாரம் அடித்திருக்கிறதா என்று சொல்ல வேண்டிய தேவை இல்லை. ஏனெனில் அவஸ்தைகளை பொருட்படுத்தாமல் பாரம்பரிய மிச்சங்களை சுமப்பது பற்றி அந்த பாத்திரத்துக்கு கவலையில்லை.
2) ஸ்கேனர்கள் டெக்னாலஜி நாளுக்கு நாள் முன்னேறுபவை, அல்லது சந்தர்ப்பத்துக்கேற்ப முடுக்கி விடப்படுபவை. அவன் முன்னர் பயணித்த போதிருந்த அலர்ட் லெவல் வேறாக இருக்கலாம்.
சுதாகர் 10:15 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் |
உங்க கதயோட நோக்கம், உள்ளர்த்தம் புரியுது.. ஆனாலும், இந்த லாஜிக் எனக்கு இடிக்குது… அதான் கேட்டேன்! 🙂
சத்யராஜ்குமார் 10:39 முப on ஓகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் |
நன்றி. கண்டிப்பாக இதெல்லாம் கேட்க வேண்டும். 🙂
SnapJudge 9:56 பிப on செப்ரெம்பர் 3, 2009 நிரந்தர பந்தம்
கதை என்றளவில் ரசித்துவிட்டு செல் என்றால், பகிர்விற்கு நன்றிகளும் வணக்கங்களும். 🙂
————
முன்பின் தெரியாத அமெரிக்கர் இரண்டைக் குறித்துதான் பிறரோடு நெடு நேரம் அளவளாவுவார். 1. தட்பவெட்பம்; 2. விளையாட்டு போட்டி
அதை மீறி யதார்த்தமின்றி இந்தக் கதை விரிகிறது. தன்னுடனேயே பேசிக் கொள்கிறவகை என்றாலோ, நெடுங்காலம் அறிமுகமான கீழ்வீட்டுக்காரர்களோடு சொல்லாடுவது என்றாலோ இந்த மாதிரி வரிகளை நெருடாமல் வாசிக்கலாம்:
—”உங்களுக்கே தெரியாத உங்க கலாசாரத்தை உங்க குழந்தைகளுக்கு வீட்டுக்குள்ளே சொல்லித்தர முடியாம வெளியே அனுப்பி கத்து தர முயற்சிப்பதுதான் உறுத்துது.” —
இதெல்லாம் ரொம்ப அதீதம். திண்ணை அத்தைகளும் தாத்தாக்களும் மட்டுமே இவ்வகை உரிமையோடு தீர்ப்பெழுதித் தருவார்கள்.
Again, இந்த மாதிரி நிகழ்வு நிஜத்தில் நடந்திருக்கலாம். ஆனால் இயல்பாகவோ மனதில் சென்று சிம்மாசனம் அமைக்கும் விதமாகவோ நீண்ட காலம் அசை போடக் கூடிய வினாக்களை தீர்க்கமாக எழுப்பும் விதமாகவோ இல்லை.
சத்யராஜ்குமார் 10:06 பிப on செப்ரெம்பர் 3, 2009 நிரந்தர பந்தம்
//கதை என்றளவில் ரசித்துவிட்டு செல் என்றால்,//
அப்படிச் சொல்ல முடியாது. 🙂 கொஞ்சம் அலசி ஆராயவோ சுட்டிக் காட்டவுமோதானே இந்த இடம் இருக்கிறது.
கதையில் நீங்கள் குறிப்பிட்ட யதார்த்தம் மிஸ் ஆகிறதை ஒப்புக் கொள்கிறேன். இதில் வரும் அமெரிக்கனின் உரையாடல்கள் பெரும்பாலும் நெருக்கமான அமெரிக்கர்களிடமிருந்து வெளிப்பட்டவை. கதையை வேறு பாத்திரங்களுடன் அமைத்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. அல்லது மனங்களின் உரையாடலாகவும் வைத்திருக்கலாம்.
விமர்சனத்துக்கு நன்றி.
செந்தில் (Bangalore) 6:51 முப on ஜூலை 19, 2010 நிரந்தர பந்தம் |
உங்கள் கதைகள் அனைத்தும் அருமை. அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் பிளாஸ்டிக் பூ வாழ்க்கையை படம் பிடித்து காட்டி அமெரிக்க மோகம் கொண்டவர்களுக்கு பாடம் கற்பிக்கிறது. தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்.
காதலர் தினம் aka Valentine’s day | இன்று - Today 7:53 பிப on பிப்ரவரி 13, 2015 நிரந்தர பந்தம் |
[…] பொறுப்பாளரும், நிறுவனருமான திரு. ஆனந்த் முருகானந்தம் பற்றி ஏற்கெனவே இங்கே […]
Senthil kumar 1:14 முப on செப்ரெம்பர் 2, 2015 நிரந்தர பந்தம் |
Mozhinadai Thoivillamal kondu sendra vitham Arumai…