பூச்சாண்டி நண்பன்


poochandiஎனக்குப் பெண் பார்க்க ஆரம்பித்த காலம். “கல்யாணத்துக்கு இப்ப என்னம்மா அவசரம்? இன்னும் ஒரு வாரம் போகட்டும்…” என்ற என் காமெடி சென்ஸ் தாங்காமல் அம்மா ஒரு மாசம் என்னுடன் பேசுவதையே நிறுத்திவிட்டாள்.

வாரம், மாதம், வருடம் என காலம்தான் எவ்வளவு மாறிவிட்டது?

ஆல் இன்டியா ரேடியோ மட்டும் கேட்டுக் கொண்டிருந்த ஊரில் ஆயிரத்தெட்டு FM ஸ்டேஷன்கள்.

தூர்தர்ஷன் பார்க்க பொது டிவி போன வீடுகளில் ரிமோட் அழுத்தி அழுத்தி வலது பெருவிரல் வலிக்கிறது.

போஸ்டல் கொரியராகிவிட்டது. போன் செல்லாகிவிட்டது.

LP  ரெக்கார்டுகளில் கேட்ட பாடல்கள் ரீமிக்ஸாய் ஐபாட்களில் அலறுகிறது.

பையனாய் இருந்த நான் ஆள் ஆகி எனக்கு 2 வயதில் பையன் இருக்கிறான்.

டிவிகளின் ஸிக்னேச்சர் மியூஸிக், சீரியல்களின் டைட்டில் பாடல்களுக்கு தலையாட்டிக் கொண்டிருந்த என் பையன், இப்போது டிவிடியிலோ, சிஸ்டத்திலோ, “வர்றான் வர்றான் பூச்சாண்டி ரயிலு வண்டியில…” பாட்டைத்தான் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறான். இந்தப் பாடல் வந்த  பின்பு சாப்பிட அடம்பிடிக்கும் என் மகனுக்கு சோறூட்டுவது எளிதாகிவிட்டது இப்போது.

முன்பெல்லாம் இருட்டைக் காட்டி ‘பூச்சாண்டி வந்துருவான்’ என்று சோறூட்டினாள் அம்மா. இப்போதோ கரண்டு இல்லாத இருட்டுகளில் பூச்சாண்டி வராததால் மகனுக்கு சோறூட்ட முடியாமல் திணறுகிறாள் என் மனைவி.

காலம் மாறித்தான் போச்சு. எனக்கு பூதமாய் இருந்த பூச்சாண்டி என் மகனுக்கு ஃப்ரண்டாகிவிட்டான்.

-மீனாட்சி சுந்தரம்

கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.