சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 3
வருடம் நினைவில்லை.
எழுத்தாளர் ராம் ‘சரசுராம்’ என்ற பெயரில் எழுதத் துவங்குவதற்கு முன்பொரு நாள். சாயந்தரம் போல வீட்டுக்கு வந்தவர், “ப்ரீயா இருந்தா வாங்களேன். சென்னையில் இருந்து வந்திருக்கும் என் நண்பர் ஒருவர் அஷோக் ஹோட்டலில் தங்கியிருக்கார். பார்த்துட்டு வரலாம்.”
புதுப் புது சந்திப்புகள் எப்போதும் மகிழ்ச்சிக்குரியன. யார் என்று கூட கேட்கவில்லை. சாவி இதழுக்காக எழுதிக் கொண்டிருந்த கதையை பாதியில் நிறுத்தி விட்டு புறப்பட்டேன். எழுதிக்கொண்டிருந்த அந்த சிறுகதை பற்றி வழக்கம் போல ராமிடம் விவாதித்துச் சென்றதில் மூன்று கிலோ மீட்டர்களை சட்டென்று கடந்தோம்.
பொள்ளாச்சியில் சினிமா ஷூட்டிங்குகள் அமோகமாக நடை பெற்று வந்த நாட்கள் அவை. அஷோக் ஹோட்டல் போன்ற லாட்ஜ்கள் சினிமா கலைஞர்களால் நிரம்பியிருக்கும். ராம் இரண்டாம் தளத்தில் இருந்த அறைக்கதவை தட்டியபோது, தலைவாசல் விஜய் எங்களை முறைத்துப் பார்த்துக் கொண்டே கடந்து சென்றார். (ஏன் முறைத்தார் என்று தெரியவில்லை)
கதவு திறந்தது. கண்ணாடி அணிந்த, லேசாய் தலை சிலும்பிய, இளம் மஞ்சள் டி ஷர்ட்டும், நீல நிறத்தில் கட்டம் கட்டிய லுங்கியும் தரித்திருந்த இளைஞர், ”வாங்க ராம். ” என்றார். கையில் சிகரட் புகைந்து கொண்டிருந்தது. ”இவர்தான் எழுத்தாளர் ம.வே.சிவகுமார்!” என்று எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் சரசுராம்.
அந்த சமயத்தில் நான் கமர்ஷியல் இலக்கியத்தில்(!) முழு மூச்சாய் இருந்ததால் ஒரு அற்புதமான எழுத்தாளரை சந்திக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல், ”ஹலோ.” என்று சும்மா கை குலுக்கி விட்டு, ஓரமாய் நின்று அவர்கள் இருவரும் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
தேவர் மகன் ஷூட்டிங்கிற்காக வந்திருக்கிறார் என்று தெரிந்தது. பாங்க்கில் நல்ல வேலையில் இருப்பவர். சினிமா வெறியில் காலவரையற்ற விடுப்பு எடுத்துக் கொண்டு கமல், பாலச்சந்தர் போன்றோரிடம் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்று அறிந்தேன். ஒரு சிகரட் தீர்ந்தால் பயர் குறையாமல் அடுத்த சிகரட் பற்ற வைத்துக் கொண்டு பேசினார்.
சுமார் ஒரு மணி நேர சந்திப்பிற்குப் பிறகு வீடு திரும்புகையில், ”அவர் புக் ஏதாச்சும் இருக்கா?” என்று கேட்க, சரசுராம் அவர் வீட்டிலிருந்து ‘வேடந்தாங்கல்’ நாவலை எடுத்துக் கொடுத்தார். துள்ளலும், எள்ளலும் நிறைந்த எழுத்து நடை. படிக்கப் படிக்க பிரமித்தேன். இரு பொருள் பொதிந்த அந்த தலைப்பு அதன் பின் பல சிறுகதைகளுக்கு நல்ல பெயர் சூட்ட இன்ஸ்பிரேஷனாக இருந்தது.
பல வருஷம் கழித்து தேவர்மகன் ஷுட்டிங் அனுபவத்தை வைத்து ம.வே.சிவகுமார் எழுதிய ஒரு சிறுகதை குமுதத்தில் வெளி வந்தது. இசைக் கலைஞர் ஒருவரின் நாதஸ்வரத்தை செட் ப்ராப்பர்ட்டியாக வாங்கிக் கொடுத்து விட்டு மன அவதிப்படும் உதவி டைரக்டரின் கதை. அஷோக் ஹோட்டல் சந்திப்பு மனசுக்குள் பளிச்சிட்டு மறைந்தது. சமீபத்தில் விகடனில் அவர் சிறுகதை ஒன்றைப் படிக்க நேர்ந்த போது, அந்த சந்திப்பு பற்றி எழுத வேண்டும் என தோன்றியது.
பதிவை எழுதி முடித்து, அவர் படம் கிடைக்குமா என்று இணையத்தில் தேடியவனுக்கு கிடைத்தது கருணை மனு என்ற அதிர்ச்சி தரும் இந்த கட்டுரை.
மிக இளம் வயதில் நமது சமூகம் சிலருக்கு அளிக்கும் அங்கீகாரம் வரம் போன்ற கலர் பேப்பரில் சுருட்டித் தரும் சாபம்.
சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 1 | சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 2
துளசி கோபால் 11:16 பிப on திசெம்பர் 8, 2009 நிரந்தர பந்தம் |
கருணை மனுவை வாசித்துவிட்டு, மனம் கலங்கி பேய்முழி முழித்துக் கொண்டிருக்கின்றேன்.
சத்யராஜ்குமார் 7:44 முப on திசெம்பர் 11, 2009 நிரந்தர பந்தம் |
திறமை தற்காலத்தில் பணத்தால் அளக்கப்படுவது வருத்தமான விஷயம். இலக்கியம் சோறு போடுமா என்று உஷா ராமச்சந்திரன் அவர் வலைப்பதிவில் கேள்வி எழுப்பியிருந்தார். இலக்கியம் என்பது கோபுரம் மாதிரி. அஸ்திவாரம் இருந்தால் மட்டுமே அண்ணாந்து பார்ப்பார்கள் என்று அதற்கு நான் பதில் இட்டது நினைவுக்கு வருகிறது.
என். சொக்கன் 2:03 முப on திசெம்பர் 9, 2009 நிரந்தர பந்தம் |
ம. வே. சிவக்குமார் அற்புதமான எழுத்தாளர், அவருடைய சிறுகதைத் தொகுப்புகள் (இரண்டா, மூணா? நினைவில்லை!), நாவல்கள் (வேடந்தாங்கல், பாப்கார்ன் கனவுகள்) அனைத்தும் மிகக் கவனமாகக் கட்டமைக்கப்பட்ட, அதேசமயம் எதார்த்தமான படைப்புகள்.
சில மாதங்களுக்குமுன்னால் தேவர் மகன் படப்பிடிப்பு அனுபவங்களை ஒரு மாத நாவலில் எழுதினார் – அது முழுப் புத்தகமாக வரப்போவதாகப் படித்த நினைவு, என்ன ஆச்சுன்னு தெரியலை.
நீங்கள் சொல்லும் அந்த விகடன் கதை, எந்த வாரம் வந்தது சத்யராஜ்குமார்?
– என். சொக்கன்,
பெங்களூரு.
சத்யராஜ்குமார் 7:46 முப on திசெம்பர் 11, 2009 நிரந்தர பந்தம் |
சலிக்காத எழுத்து சொக்கன். ஒரு நாலைந்து மாதங்களுக்குள்தான் வந்தது. ஆர்க்கைவில் தேடிப்பார்த்து லின்க் அனுப்புகிறேன்.
woven 3:06 முப on திசெம்பர் 9, 2009 நிரந்தர பந்தம் |
http://pksivakumar.blogspot.com/2007/01/blog-post_26.html
முன்பு பி.கே.எஸ். பதிவில் மூலம் அறியப்பட்ட (எனக்கு) ம.வே.சிவக்குமாரின் கருணை மனு அதே வலி மீண்டும் நினைவுப்படுத்தியது.
சத்யராஜ்குமார் 7:53 முப on திசெம்பர் 11, 2009 நிரந்தர பந்தம் |
சுட்டிக்கு நன்றி. யதார்த்த நிலையிலிருந்து பார்த்தால் அவர் செயல் தவறு என்றுதான் சட்டென்று நினைக்கத் தோன்றும்.
Raju 8:39 முப on திசெம்பர் 14, 2009 நிரந்தர பந்தம்
நல்ல பதிவு.
பிரபலம், ஜால்ரா இவை தான தமிழனின் தலை எழுத்து.
தனி மனித ஒழுக்கமும் சில சமயம் காலை வாரி விடும். ( சிலருக்கு சிகரெட் வாசம் பிடிக்காது… எங்கப்பா டி.எஸ்.பி யாக இருந்த சமயம், சிகரெட் வாசத்தோடு யாரவது வந்தால், அவர் முகம் கோணலாகி, வந்தவர் காரியம் நடக்காது! )
அவர் எழுத்துக்கள் படிக்க ( ஆன்லைனில் ) என்ன வழி? பணம் கொடுத்து வாங்கும் ஈ-புக் வசதி உண்டா?
அவர் தம் குழந்தைகளுக்கு ஆற்ற வேண்டிய கட்டாய சேவைகளை செய்து முடித்த திருப்தி அவர் கடிதத்தில் தென்படுகிறது!
சத்யராஜ்குமார் 7:16 முப on திசெம்பர் 16, 2009 நிரந்தர பந்தம்
@Raju மின்வடிவில் எங்கேயும் இருக்கிற மாதிரி தெரியவில்லை.
சித்ரன் 5:16 முப on திசெம்பர் 9, 2009 நிரந்தர பந்தம் |
ம.வே. சிவக்குமார் ஒரு அற்புதமான எழுத்தாளர். அநாயாசமான நீரோட்டம் போன்ற புதுமையான எழுத்து நடை அவருடையது. பொள்ளாச்சியில் தேவர் மகன் படப்பிடிப்புக்கு நடுவேயும், மற்ற இடங்களிலும் அவரை சந்தித்து உரையாடிய பொழுதுகள் நினைவுக்கு வருகின்றன. சரசுராமும், நானும் அவருக்கு கொஞ்சம் சர்ப்ரைஸ் எல்லாம் கொடுத்தது ஒரு சின்ன கதை.
என்னைப் பொறுத்தவரை இந்த ‘வடக்கிருத்தல்’ விஷயத்துக்கெல்லாம் அவர் போயிருக்கவேண்டியதில்லை. நம்பிக்கைதானே வாழ்க்கை. கடைசி வரை மோதிப் பார்த்துவிட வேண்டாமா? ‘ஒலகம் பெர்சு மாமூ’ என்பதை மனதில் கொண்டாலே எப்படியாவது ஜெயித்துவிட முடியாதா?? (என்ன, வாழ்வதற்கு கொஞ்சம் நுண்ணரசியலும் தெரிந்திருக்கவேண்டும்.)
சத்யராஜ்குமார் 7:53 முப on திசெம்பர் 11, 2009 நிரந்தர பந்தம் |
//சரசுராமும், நானும் அவருக்கு கொஞ்சம் சர்ப்ரைஸ் எல்லாம் கொடுத்தது ஒரு சின்ன கதை.//
அதைப்பற்றி எழுதுங்களேன்.
சித்ரன் 11:19 முப on திசெம்பர் 12, 2009 நிரந்தர பந்தம்
சின்ன கதை என்று தப்பாக எழுதிவிட்டேன். அது ஒரு பெரிய கதை. இங்கே தாங்காது.
v.sundaravadivelu 12:24 பிப on ஜனவரி 4, 2010 நிரந்தர பந்தம் |
it s a great curse for writers, especially tamil writers. even the great writer STELLA BRUCE cannot survive in this stupid society.
meens 1:23 முப on ஜனவரி 21, 2010 நிரந்தர பந்தம் |
ma.ve sivakumar’s books now available at Alliance pathipagam with reasonable prices