Updates from மார்ச், 2010 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

  • சித்ரன் ரகுநாத் 8:27 am on March 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: ஃப்ளிக்கர், இந்தியா, கலாச்சாரம், , , தேடல், நவீன இந்தியா, பாரம்பரியம், புகைப்படங்கள், புகைப்படம்,   

    இந்தியா இவ்வளவுதானா? 

    India என்று கூகிளில் தேடினால் என்னெல்லாம் வருகிறது என்று ஒரு பொழுதுபோகாத பொம்மு மாதிரி ஒரு சின்ன ஆராய்ச்சியில் இறங்கியபோது சில விஷயங்கள் புலப்பட்டன. கூகுள் தேடுதல் முடிவுகளின் முதல் பக்கத்தில் வந்தது என்னவென்றால் கொஞ்சம் இந்திய வரைபடங்கள். சில தாஜ்மஹால் படங்கள். வெவ்வேறு நிறங்களில் இந்திய தேசியக் கொடி. அப்புறம் இந்தியா கேட் அல்லது கேட்வே ஆஃப் இந்தியா. தொடர்ந்து அடுத்தடுத்த பக்கங்களில் மேற்சொன்னவற்றின் கலவையாக திரும்பத் திரும்ப அதேதான்.

    சரி ஃப்ளிக்கரில் என்ன காட்டுகிறது என்று தேடிப்பார்த்தபோது, அது தேடிக்கொடுக்கும் ‘4,278,685 results’ களில் அதிகபட்சம் கண்ணில் படுவது யாதெனில்.. தலைப்பாகை அணிந்த ஆண்கள் மற்றும் காதில் மூக்கில் கழுத்தில் விதவிதமாக நகைகளும் தலையில் முக்காடும் அணிந்த பெண்கள். பிச்சைக்கார அல்லது ஏழ்மை நிலையிலுள்ள சிறுமிகள்-சிறுவர்கள். வெண்தாடி சாமியர்கள்-சாதுக்கள். இளைத்துக் கருத்த முதியவர்களின் சுருக்கம் விழுந்த க்ளோஷப் முகங்கள். மறுபடி தாஜ்மஹால். படகுகள். கலர்ப்பொடி.

    இந்தியா என்றால் இவை மட்டும் தானா என்று யோசனை வந்தது. வியக்கவைக்கிற அளவுக்கு வேறு பரிமாணங்கள் இந்தியாவுக்கு எத்தனையோ இருக்கிறதே!! ஏன் அவைகள் இந்தப் புகைப்படங்களில் சிக்கவில்லை என்கிற ஆச்சரியம் முளைத்தது.

    வேறு பரிமாணம் என்று நான் சொல்வது இந்தியாவின் நாகரீக வளர்ச்சி, நகரங்கள், நவீன தெருக்கள் மற்றும் கட்டிடங்கள், தொழிற்துறை முன்னேற்றங்கள், அழகு ததும்பும் இடங்கள், நவீன இந்தியாவின் மக்கள் இப்படியாக சில விஷயங்கள். கொஞ்சம் மெனக்கெட்டுத் தேடினால் இவ்வாறாக சில புகைப்படங்கள் கிடைக்கின்றனதான்.

    நான் ஒரு வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து கூகிளிலோ ப்ளிக்கரிலோ காட்டும் புகைப்படங்களை பார்த்திருந்தால் இந்தியா ஒரு ஏழை நாடு. அதன் அனைவரும் ஒருவித புராதனமான உடை அணிபவர்கள். பிச்சைக்காரர்களும், போதை புகைக்கிற சாதுக்களும் நிறைந்து காணப்படுவர். எங்கு பார்த்தாலும் வறண்ட நிலங்கள், குப்பை மிகுந்த நகரங்கள். கல்வியறிவு இல்லாத மக்கள். பாம்பாட்டிகள். யானைகள். எப்போதோ மன்னர்கள் கட்டிய ஒரு சில மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், கோயில்கள், மண் ரோடுகள் எட்செட்ரா என்றெல்லாம்தான் இந்தியாவைப் பற்றி ஒரு பிம்பம் கொள்வேன். அதாவது நான் சொல்வது அவ்வாறான புகைப்படங்களைப் பார்க்கும்போது தோன்றும் ஒரு பொதுவான, மேலோட்டமான, உடனடிப் பார்வை.

    ஏற்கெனவே ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் முடிந்த அளவு கச்சடா நாடாகக் காட்டி ஆஸ்காரும் வாங்கி இந்தியா பற்றிய ஒரு மோசமான ஆவணமாகப் பதிந்தும் போய்விட்டிருக்கிற நிலையில் இப்படியாக ஏற்படுகிற பிம்பம் சரியானதல்ல.

    பரத் பாலா தயாரித்த ஏ.ஆர். ரஹ்மானின் வந்தே மாதரம் வீடியோவைப் பார்த்தபோது கூட மேற்கண்ட உணர்வுதான் தோன்றியது. பாலைவனம், இறுக்கமான முகங்களோடு ராஜஸ்தானிகள் என்று ஒரு வறண்ட நிலையை, ஏழ்மையைப் பறை சாற்றுவது போன்ற உணர்வை அந்த வீடியோ வெளிப்படுத்தியதாக ஒரு எண்ணம் தோன்றியது. இந்தியாவைப் பற்றி எதுவும் தெரியாத யாராவது இந்த வீடியோவைப் பார்த்தால் இவ்வளவுதானா இந்தியா என்கிற மாதிரியான பிம்பம்தான் தோன்றும்.

    அது தவிர இந்தியா என்றாலே வட இந்தியா மட்டும்தான் என்கிற தோற்றத்தையே இதிலிருந்து இணையத்தில் புழங்குகிற புகைப்படங்கள் தருகின்றன. தென்னிந்தியப் புகைப்படங்கள் அதிகம் கண்ணில் தென்படுவது இல்லை. இந்தியாவிலிருக்கிற அமெச்சூர் மற்றும் தொழில்முறைப் புகைப்படக்காரர்கள், பத்திரிக்கைகளில் பணிபுரியும் புகைப்படக்காரர்கள் ஆகியோர்களின் கேமராக்கள் தென்னிந்தியாவின் பக்கமும் கொஞ்சம் ஃபோகஸ் செய்தால் நலம் பயக்கும். அல்லது வலையேற்றப் பட்ட புகைப்படங்களில் முக்கால்வாசி வெளிநாட்டவரால் கிளிக்கப்பட்டதாகக் கூட இருக்கலாம். அவர்கள் எப்போதும் போல இந்தியாவின் எழிலை விட்டுவிட்டு ஏழ்மையை வெளிச்சமிட்டுக் காட்டுவதில் ஆர்வம் காட்டுபவர்களாக இருந்திருக்கக்கூடும்.

    உண்மையான நவீன இந்தியாவின் அழகை எடுத்துக்காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாய் இல்லையோ என்றுதான் தோன்றுகிறது. அப்படியே இருந்தாலும் கூட அவைகள் சரியான வகையில் இந்தியா பற்றிய இணைய பக்கங்களில் உபயோகப்படுத்தப்படவில்லை. அல்லது நல்ல புகைப்படங்களை இணைய பக்கங்களில் இணைக்கும்போது அவைகளின் குறிச்சொற்கள் மற்றும் கோப்புகளின் பெயர்கள் ஏனோதானோ என்று இருப்பதால் தேடியந்திரங்கள் சரியாகக் காட்டுவதில்லை என்று கூடச் சொல்லலாம். தேடியந்திரங்களில் குறிப்பிட்ட குறிச்சொற்கள் உபயோகித்துத் தேடும்போது மட்டுமே ஒரு சிலது கிடைக்கின்றன. அப்படியே கிடைத்தாலும் இந்தியாவின் பொதுவான லைஃப் ஸ்டைலை அவைகள் காட்டவில்லை என்பதுதான் குறை.

    கூகுளில் நம் பெயர் உள்ளிட்டுத் தேடும்போது எப்படி நம் சம்பந்தப்பட்ட வலைப்பக்கங்களை அழகாய்க் கச்சிதமாய் கொண்டுவந்து கொடுக்கிறதோ அது போலவே இந்தியா பற்றிய தலைசிறந்த புகைப்படங்களை இணையத் தேடலின் போது முன்னிறுத்த டெக்னாலஜியை உபயோகித்தால் இப்புகைப்படங்கள் சரியான முறையில் பார்வையாளர்களைச் நிச்சயம் சென்றடையும் என்பது நிச்சயம்.

    அதிகபட்சம் கிராமங்களால் நிறைந்திருக்கும் இந்தியாவில் புகைப்படங்களில் வேறு எதைத்தான் காட்டமுடியும் என்று கேள்வி எழலாம். எத்தனையோ இருக்கிறது. இந்தியா வண்ணமயமானது. இது ஒரு அற்புதமான பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் உள்ளடக்கியது. இந்தியா ஒரு வளரும் வல்லரசு நாடு. இந்தியாவில் வெளிநாடுகளைச் சார்ந்த சுற்றுலாவாசிகளைக் கவர என்னென்னவோ இருக்கின்றன. மலைவாசத்தலங்கள், இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள். பிரம்மாண்டமான கோவில்கள், புராதனச் சின்னங்கள், பாரம்பரியம், நடனங்கள், நீர் நிலைகள், யோகா, தியானம், இயற்கை வைத்திய முறைகள், பசுமை, மக்கள், கல்வி, கலாச்சாரம், உணவு வகைகள் என இந்தியாவின் எத்தனையோ முகங்கள் புகைப்படக்காரர்களுக்கு வரப்பிரசாதமாய் அதிரும் வண்ணங்களில் அம்சமாய்க் காட்சிப்படுத்தக் கிடைக்கின்றன.

    ஆனால், புகைப்படக்கலைக்குத் தீனி போடும் மிகத் தொன்மையான இந்திய தேசப் பாரம்பரியச் சின்னங்களை அரசு சிறந்த முறையில் பராமரிப்பதில்லை என்பது வருத்தத்திற்குரியது. ஒரு சில உதாரணங்களாக மஹாபலிபுரத்தில் பல்லவர்களின் ஒரு சிற்ப மண்டபம் அற்ப சங்க்யைக்கு ஒதுங்குவதற்காகப் பயன்படுவதும், சென்னை அருங்காட்சியகத்தில் சோழற்கால கல்வெட்டுக்களின் மேலேயே காதலர்கள் இதயம் வரைந்து அம்பு விட்டு siva loves priya போன்ற காவியங்களை மானாவாரியாகப் பொறித்து வைத்திருந்ததையும் சொல்லலாம். இந்த இடத்தில் சதா நாற்காலிக்குப் போட்டியிடும் அரசாங்கத்தைச் சாடுவதா அல்லது அலட்சியப் போக்குள்ள மக்களை குறை சொல்வதா என்றே தெரியவில்லை. ஆனால் இரண்டுமே ஒன்றுக்கொன்று சம்பந்தமுள்ளதுதான் என்பதை மறுக்க முடியாது.

    இணையம் என்பது பரந்துவிரிந்து ஒரு மிக முக்கியமான ஊடகமாக வளர்ந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் இந்தியாவை அதன் நவீன விஷயங்களை ஒரு உன்னத அழகியலோடு புகைப்படங்களில் காண ஆசையாயிருக்கிறது. அதை நிறைவேற்றும் பொறுப்பை சுற்றுலாத்துறையும் காமிராக்காரர்களும் கையில் எடுத்துக்கொள்ளவேண்டும். அதற்கு கிழவர்களின் முகச்சுருக்கங்கள், தலைப்பாகை, மூக்கொழுகும் சிறுவர்கள் தாண்டி யோசிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

    -சித்ரன்

     
    • நிரஞ்சன் 8:39 முப on மார்ச் 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      ///மலைவாசத்தலங்கள், இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள். பிரம்மாண்டமான கோவில்கள், புராதனச் சின்னங்கள், பாரம்பரியம், நடனங்கள், நீர் நிலைகள், யோகா, தியானம், இயற்கை வைத்திய முறைகள், பசுமை, மக்கள், கல்வி, கலாச்சாரம், உணவு வகைகள் என இந்தியாவின் எத்தனையோ முகங்கள் புகைப்படக்காரர்களுக்கு வரப்பிரசாதமாய் அதிரும் வண்ணங்களில் அம்சமாய்க் காட்சிப்படுத்தக் கிடைக்கின்றன.///

      Yes!!. India is rocking!!!!. அருமையான பதிவு.

    • துளசி கோபால் 8:48 முப on மார்ச் 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      அட! இன்னிக்கு இதையே வேறொரு நிலையில் நினைச்சேன். இங்கே இந்தியாவில் டிவியில் காண்பிக்கும் விளம்பரங்கள் டாப் க்ளாஸ். 20 , 30 விநாடிகளில் நச் ன்னு இருக்கு. ஷாம்பூ, ஸோப், நகைநட்டுக்கள், புடவைகள்தான் ஏராளம். இதைமட்டும் பார்க்கும் வெளிநாட்டினர் இந்தியா ஏகத்துக்கும் வளர்ச்சி அடைந்த அதி நவீன நாகரிகம் உள்ள நாடுன்னு நினைப்பாங்க.

      கிளம்பிவந்து பார்த்துட்டுப் போலாமுன்னு வருபவர்களுக்கு ‘சோதனை’ விமான நிலயத்துலேயே ஆரம்பிச்சுரும்.

      35 ஆண்டுகளுக்குப் பின் சென்னை வாழ்க்கையை அனுபவிக்க வந்த நான்……ஹூம்….

      அனுபங்களைப் புத்தகமாக எழுதத்தான் வேணும்.

    • Vijayashankar 9:17 முப on மார்ச் 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      உண்மையான அழகு பார்ப்பவர் கண்ணில் இருக்கு. அதை மறுக்க முடியாது. உலக பெரிய முதன்மை பணக்காரர்கள் வரிசையில் நான்கு இந்தியர்கள். இது போதும் உலகில் வளம் மிகுந்த நாடு என்று பறை சாற்றிக்கொள்ள. சிம்பிளாக இருப்பது நம் வழக்கம். நீங்கள் வெளிநாட்டில் ( ஏன் நானும் கூடத்தான் ) குப்பை கொட்டியதால் இந்திய மீது இது ஒரு இழி மோகம் ஆகிவிட்டது . ஆத்தூர் செந்தில் குமார் , திருச்சியில் ஒரு செந்தில் என அமெரிக்காவில் வாழ்ந்த இந்தியர்கள் புலம் பெயர்ந்து நாட்டுக்கு உழைப்பது உங்களுக்கு தெரியவில்லையா? ஏன் நான் இன்னும் டெவலப் ஆனா நேசன் என்று சொள்ளப்படுகிறோம், இந்த தாழ்வு மனப்பான்மையால் தான்!

      இந்த மாதிரி பேசுபவர்களை கேட்டு தான் அமெரிக்கா மோகம் குறைந்து இந்திய வந்து சேர்ந்தேன். மீண்டும் மீண்டும் அதை கேட்பது புளித்த மோர் போல இருக்கு.

      • சித்ரன் 12:20 முப on மார்ச் 24, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

        விஜயசங்கர், இந்தக் கட்டுரை இணையப் புகைப்படங்களில் இந்தியாவின் தோற்றம் என்பது பற்றியதே தவிர இந்தியாவைப் பற்றி இழியோ பழியோ சொல்வதற்கல்ல. தவிர நான் எந்த வெளிநாட்டிலும் குப்பை கொட்டியவனல்ல. இந்தியாவில், சென்னையில் வசிக்கிற ஒரு எளிமையான ஆசாமி நான். நீங்கள் சொல்கிற மாதிரி உலகப்பணக்காரர்கள் வரிசையில் எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் குடி தண்ணீர், அடிப்படை வசதிகள் இல்லாத எண்ணற்ற கிராமங்கள் தன்னிறைவு அடையாமல் இந்தியாவில் இருக்கிறதே. வளம் கொழிக்கும் நம் இந்தியாவில் “வளங்கள்” எங்கே யாருக்குப் போய் சேர்கின்றன என்பது கேள்வி. மற்றபடி திருச்சி செந்தில், ஆத்தூர் செந்தில் மற்றும் இந்தியா திரும்பிய உங்களுக்கும் வண்ணமயமான Incredible India சார்பில் வந்தனங்கள்.

    • சத்யராஜ்குமார் 4:49 பிப on மார்ச் 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      சித்ரன், உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் இதெல்லாம் ஷங்கர் படங்கள் லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்க பாடுபடுவது போலத்தான். இயற்கையாய் நிகழ வேண்டிய இவைகள் பெரும்பாலும் நம் நாட்டை பிரதிநிதிப் படுத்தும் அதிகாரம் கொண்டவர்களின் கையில் உள்ளது. ஒரு வேளை என்னைப் போல வெளி நாட்டில் குப்பை கொட்டியிருந்தால் இது போன்ற கட்டுரைகளை நீங்கள் எழுதாமல் போகக்கூடும்.

    • பொன்.சுதா 11:23 பிப on மார்ச் 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல பதிவு. நிஜமான ஆதங்கம். வாழ்த்துக்கள் சித்திரன்…

    • prabu 11:47 பிப on மார்ச் 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      arumai

    • சித்ரன் 11:52 பிப on மார்ச் 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நன்றி நிரஞ்சன், துளசி கோபால், விஜயசங்கர், SRK, பொன்.சுதா, பிரபு.

    • Satish 12:23 முப on மார்ச் 24, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      Good article chithran ji… I too accept and regret for india portrayed as posted… Y dont we take a step, create a blog and show the other side (beauty, nature, culture etc.) of our country. Hope many of us got a very good picture collections portraying beautiful india.

    • padmahari 12:03 பிப on மார்ச் 24, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல பதிவு. பாராட்டுக்கள் சித்ரன்! எனக்கும் இதே எண்ணங்கள்தான் பலமுறை ஏற்பட்டன. இந்தியாவைப் பற்றிய சில உரைகள நிகழ்த்தும்போது, கூகுளில் தேடினால் கிடைக்கும் படங்களில்…..
      //நான் ஒரு வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து கூகிளிலோ ப்ளிக்கரிலோ காட்டும் புகைப்படங்களை பார்த்திருந்தால் இந்தியா ஒரு ஏழை நாடு. அதன் அனைவரும் ஒருவித புராதனமான உடை அணிபவர்கள். பிச்சைக்காரர்களும், போதை புகைக்கிற சாதுக்களும் நிறைந்து காணப்படுவர். எங்கு பார்த்தாலும் வறண்ட நிலங்கள், குப்பை மிகுந்த நகரங்கள். கல்வியறிவு இல்லாத மக்கள். பாம்பாட்டிகள். யானைகள். எப்போதோ மன்னர்கள் கட்டிய ஒரு சில மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், கோயில்கள், மண் ரோடுகள் எட்செட்ரா என்றெல்லாம்தான் இந்தியாவைப் பற்றி ஒரு பிம்பம் கொள்வேன். அதாவது நான் சொல்வது அவ்வாறான புகைப்படங்களைப் பார்க்கும்போது தோன்றும் ஒரு பொதுவான, மேலோட்டமான, உடனடிப் பார்வை.//
      என்பதுதான் நிதர்சனம். இதை எழுத நினைத்ததுண்டு, ஆனால் அதை உங்கள் பதிவில் படித்ததில் மிக்க மகிழ்ச்சியும், திருப்தியும்! வாழ்த்துக்கள், பகிர்வுக்கு நன்றி.
      http://padmahari.wordpress.com

  • சத்யராஜ்குமார் 10:27 am on March 6, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: , , Tips   

    கூகிள் தேடலும், உங்கள் வலைப்பதிவும். 

    சமீபத்தில் கூகிள் வழங்கிகளில் வேலை செய்ய நேர்ந்தது. அப்போது கிடைத்த சில்லறை ஞானங்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்டால் நம் வலைப்பதிவர்களுக்கு உபயோகப்படுமே என்று தோன்றியது.

    முன் எப்போதையும் விட இப்போது இணையத்தில் தமிழ் பக்கங்களை நிர்வகிப்போர் மிக அதிகமாய் உள்ளனர். பலருக்கும் <a>, <b> போன்ற HTML tags இந்நேரம் அத்துபடியாகியிருக்கும். நீங்கள் பதிவை வெளியிட்ட பின் தேடுபொறிகள் அவற்றை தேடி எடுத்துக் கொள்வதையும் அறிவீர்கள். அப்படி தேடி எடுத்துக் கொள்ள keywords என்ற meta tag உபயோகப்பட்டு வந்ததையும் அறிவீர்கள். உதாரணமாக:

    <META NAME=”keywords” CONTENT=”நித்யானந்தா, சுவாமிகள், வீடியோ”>
    என்று உங்கள் வலைப்பக்கத்தின் <head>-க்கு நடுவே சேர்த்து விடுவது.

    மேற்படி மெட்டா கட்டளையை காலம் காலமாக தேடுபொறிகள் உபயோகித்து வந்தன. ஆனால் என்னைப் பற்றி நானே நான் ரொம்ப நல்லவன்ங்க என்று சொல்லிக் கொள்ளும்படி இருப்பதால் கூகிள் இதை மதிப்பதில்லை. எதை எழுதினாலும் அப்போதைக்கு பிரபலமாயிருக்கும் குறிச்சொற்களை போட்டு விட்டால் தங்கள் பக்கத்தை தேடலில் முன்னால் கொண்டு வரலாம் என்று இந்த யுக்தியை பலரும் குயுக்தியாய் மாற்றி விட்டதே காரணம்.

    நித்யானந்தாவின் படுக்கையறைக்குள் அத்து மீறி நுழைந்து விடியோ எடுத்து உலகுக்கு காட்டிய சன் டிவி போல கூகிள் உங்கள் வலைமனைக்குள் தானாகவே நுழைந்து எல்லாமே எடுத்துக் கொள்ளும் என எண்ணிக் கொள்ள வேண்டாம். அது உங்கள் ப்ரைவசியை நிச்சயம் மதிக்கிறது.

    உங்கள் தளத்தில் கூகிள் என்னவெல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டும், எதையெல்லாம் தேடல் முடிவுகளில் காட்ட வேண்டும் அல்லது காட்டக் கூடாது என்று கூகிள் தேடுபொறிக்கு உங்கள் பதிவிலேயே கட்டளை தர முடியும்.

    அப்படியே அது ஒரு பதிவை எடுத்துக் கொள்ள அனுமதித்தாலும், தன் வழங்கியில் அது ஆண்டாண்டு காலத்துக்கும் cache ஆக சேமித்து வைத்துக் கொள்ளலாமா, கூடாதா என்று கூட நீங்கள் வரையறுக்க முடியும். எப்படி? ஓரிரு எளிய robots கட்டளைகளையும், கூகிள் ஸ்விட்சுகளையும் உங்கள் பதிவில் இடுவதன் மூலம் அது சாத்தியமாகும்.

    இந்தப் பதிவை தொடாதே:

    <META NAME=”robots” CONTENT=”noindex”>

    என் பதிவை திரட்டிக் கொள், ஆனால் என் பதிவில் உள்ள தொடுப்புகளுக்குப் போகாதே.

    <META NAME=”robots” CONTENT=”nofollow”>

    என் பதிவை திரட்டு, ஆனால் உன் வழங்கியில் cache ஆக சேமித்து வைக்காதே.

    <META NAME=”robots” CONTENT=”noarchive”>

    உங்கள் பக்கம் கூகிளால் திரட்டப்பட்டாலும் அவற்றில் சில பகுதிகளை தேடல் முடிவுகளில் காட்டாதிருக்க உதவுபவை கீழ்கண்ட கூகிள் சுவிட்சுகள்.

    மின்னஞ்சல் தேடல் முடிவுகளில் இடம் பெறாதிருக்க:

    <!–googleoff: all–>என் மின்னஞ்சல் முகவரி naan@enserver.com
    <!–googleon: all–>என் கட்டுரையின் இப்பகுதி தேடல் முடிவுகளில் இடம் பெறலாம்.

    ரஞ்சிதா என்ற சொல்லோடு nithyaanandhaa.html பக்கம் தொடர்பு படுத்தப்படாது. ஆனால் நித்யானந்தா என்று தேடினால் fraud.html காண்பிக்கப்படும்.

    <!–googleoff: anchor–><A href=”nithyaanandhaa.html”>
    ரஞ்சிதா </A>
    <!–googleon: anchor–>
    <A href=”fraud.html”>
    நித்யானந்தா </A>

    ரஜினி என்று தேடினால் இந்தப் பக்கத்தை காட்டாதே. அஜீத் என்று தேடுவோருக்கு மட்டும் காட்டினால் போதும்.

    <!–googleon: index–>அஜீத் பேச்சுக்கு கை தட்டினார் <!–googleoff: index–>ரஜினி
    <!–googleon: index–>அதை கலைஞர் ரசித்தாரா?

    உங்கள் கட்டுரையை யாராவது தேடிப் பிடிக்கும்போது, கூகிள் உங்கள் கட்டுரையில் நீங்கள் கண்டித்து மேற்கோள் காட்டியுள்ள கெட்ட வார்த்தைகளை உங்கள் தொடுப்புக்குக் கீழ் காட்டாதிருக்க:

    <!–googleoff: snippet–>உங்கள் கட்டுரைக்கு நடுவே சாரு சமீபத்தில் எழுதிய கெட்ட வார்த்தை கட்டுரையின் மேற்கோள்.
    <!–googleon: snippet–>உங்கள் கட்டுரையின் வாசகங்கள்.

    வாழ்க கூகிளானந்தா!

     
  • கனகராஜன் 7:46 pm on March 2, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    இலக்கியவாதியும், ஒரு ஜோடி செருப்பும் 

    முரளிகிருஷ்ணன் என்னை முதன்முதலாக தேடிக் கொண்டு வந்தபோது நான் காணாமல் போன செருப்பைத் தேடிக்கொண்டிருந்தேன்.

    முதலில் செருப்பைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். நான் புதிதாக 180 ரூபாய்க்கு செருப்பு வாங்கி‍னேன். கவிஞர் ஸ்நேகிதன் தனக்கு மிகவும் வேண்டிய ஒருத்தர் தெப்பக்குளம் வீதியில் செருப்புக்கடை வைத்திருப்பதாகச் சொன்னான். 200 ரூபாய் செருப்பை 180 ரூபாய்க்கு விலைபேசி வாங்கினோம். பழைய செருப்பைக் கழற்றிவிட்டு புதுச்செருப்பை அணிந்து கொண்டேன். சிறிது தூரம் நடந்த பின்னால் செருப்புக்கும் எனக்கும் ஒத்துவரவில்லையோ என்று தோன்றியது. போகப் போக சரியாகிவிடும் என்றான் ஸ்நேகிதன்.

    இரவு 8 மணிக்கு மேல் வீட்டுக்குக் கிளம்புவேன். ஒரு 20 நிமிட பஸ் பயணம். அபபுறம் ஊர் வந்ததும் பாலமுருகன் ஸ்வீட் ஸ்டாலுக்குப் போய், அங்கே சரவணனைப் பார்த்துப் பேசிவிட்டுத்தான் வீட்டுக்குப் போவது வழக்கம். அங்கே எப்படியும் ஒருமணி நேரம் காலியாகிவிடும். அன்றைக்கு செருப்பைக் கழற்றிவிட்டு கடைக்குள் நுழைந்தேன். அங்கே செந்தில், சக்தி என்று சில நண்பர்கள் இருந்தார்கள். ஒரு முக்கால் மணி நேரம் பேசிக் கொண்டிருந்திருப்போம். எனக்கு நல்ல பசி.

    “சரி சரவணா… நான் கிளம்பறேன்…”

    வெளியே வந்து பார்த்தபோது செருப்பைக் காணவில்லை. பதற்றத்தோடு தேடினேன்.

    “சரவணா… செருப்பைக் காணோம்…”

    “செருப்பைக் காணோமா? எங்க விட்டிங்க? நல்லா பாருங்க…”

    “இங்கதான் விட்டேன்… புதுச்செருப்பு சரவணா… காணோம்…”

    கடையில் வேறு நல்ல வியாபாரம். கூட்டம்.

    “யராவது தொட்டுட்டுப் போயிட்டாங்களோ?” என்றான் செந்தில்.

    எனக்கு திக்கென்றது. போச்சா? அநியாயமா போச்சா? 180 ரூபாய் செருப்பு. பசங்க விளையாடறாங்களா? உண்மையிலேயே யாராவது திருடிட்டுப் போயிட்டாங்களா? கடையைச் சுற்றி சுற்றித் தேடினேன். எனக்கு குழப்பம், ‍கோபம், ஆத்திரம், இயலாமை எல்லாவற்றையும் ஒரு குடுவையில் போட்டு கலக்கி குடித்த மாதிரி இருந்தது.

    நாளைக்கு செருப்பில்லாமல் அலுவலகம் போக வேண்டும். செருப்பில்லாமல் பஸ் ஸ்டாப்பில் நிற்பது எவ்வளவு அவமானத்துக்குரிய விஷயம்? இப்போது வீட்டுக்கு செருப்பில்லாமல்தான் நடந்துபோக வேண்டுமா? எனக்கான கவலைகள் என்னைச் சுற்றி வலையாகப் பின்ன ஆரம்பித்தது.

    செருப்பை ஒளித்து வைத்து விளையாடறாங்களா? கடைக்குள் செந்திலையும் காணோம். சக்தியும் இல்லை. சரவணன் வியாபாரத்தில் பிஸியாகிவிட்டான். வீட்டுக்குப் போவதா? இங்கேயே நிற்பதா? உண்மையிலேயே யாராவது திருடிப் போய்விட்டார்களா? கடையைச் சுற்றிச் சுற்றித் தேடினேன். என் விசனம் புரியாமல் தெருநாய் ஒன்று வாலை ஆட்டிக் கொண்டு என் பின்னாலே வந்தது. நான் செருப்பைத் தேடுவது அதற்கு சுவாரசியமாகப் போய்விட்டது. இன்னைக்கு நான் நிம்மதியா தூங்கப் போறதில்லே. எந்த முடிவுக்கும் வராமல் அப்படியே கடை முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

    அப்போது பார்த்து ஒரு டி.எஸ்.50 வந்து நின்றது. “கனகு… செளக்கியமா?” என்றவனைப் பார்த்தேன். பக்கத்து ஊரான பொன்னாச்சியூர் பாலு. என்னோட படித்தவன். “ம்… செளக்கியம்தான்” என்று ஒப்புக்கு பதில் சொன்னேன்.

    “உன்னைத்தான் தேடி வந்தோம்…” என்றான். அப்போதுதான் அவனுக்கு பின்னால் உட்கார்ந்திருந்த ஆளைக் கவனித்தேன். இரண்டு பேரு‍மே லுங்கியில் இருந்தார்கள்.

    “அப்படியா?” இவங்க் எதுக்கு இந்த நேரத்தில தேடி வந்திருக்கறாங்க. இப்ப எனக்கு செருப்பைத் தவிர வேற எந்த கவனமும் இல்லை.

    இரண்டு பேருமே இறங்கி என்னருகே வந்தார்கள்.

    “முரளிகிருஷ்ணன்…” என்றான் பாலுவுடன் வந்தவன்.

    “எந்த முரளிகிருஷ்ணன்..?” என்று கேட்டேன். அவன் முகம் சட்டென்று மாறிப்போய்விட்டது. எனக்கு அவனை யாரென்று சுத்தமாகத் தெரியவில்லை. அவன் யாரென்று சொல்லிவிட்டு சீக்கிரம் விடைபெற்றுப் ‍போனால் தேவலை. நான் செருப்பைத் தேடுவேன்.

    “என்ன கனகு? என்னைத் தெரியலையா? நான் உங்களுக்கு லெட்டர் போட்டிருக்கேன். நீங்ககூட பதில் எழுதியிருந்தீங்களே…”

    எனக்கு கொஞ்சம் ஞாபகம் வந்தது. கூடவே கொஞ்சம் பயமும்… இலக்கியவாதி முரளிகிருஷ்ணனா? அப்ப சீக்கிரம் கிளம்ப வாய்ப்பில்லை. ஏற்கனவே நடேசன் மாதிரி இலக்கியவாதிகளால் பாதிக்கப்பட்டு நொந்து நூலாகியிருந்த சமயம். எப்படித் தப்பிப்பது? இவர்களை சீக்கிரம் அனுப்பி வைக்கவேண்டும்.

    “ஞாபகம் இருக்கு…” என்றேன்.

    “முரளி என்னோட நீண்ட கால நண்பன்… ஒரே கம்பெனியில் கொஞ்ச நாள் வேலை பார்த்திருக்கறோம்… என்னைப் பார்க்க அடிக்கடி வருவான்… உன்னைப்பத்திக் கேட்டான்… நீ இந்த நேரத்துல நீ சரவணன் கடையில இருப்பேன்னு கவிஞர் அம்சப்ரியா சொன்னாரு… அவரோட வீட்டுக்குப் போயிட்டு வர்றோம்…” என்றான் பாலு.

    அம்சப்ரியா தப்பிச்சுட்டு என்னை மாட்ட வச்சுட்டாரு…

    நான் தலையை ஆட்டிக் கொண்டு கேட்டு சிரித்து வைத்தேன்.

    “என்னோட செருப்பைக் காணோம்… தேடிட்டு இருக்கேன்…”

    “அப்புறம் இலக்கியப்பணியெல்லாம் எப்படி இருக்கு?” என்று முரளிகிருஷ்ணன் கேட்டான்.

    இதுக்கு என்ன பதில் சொல்வது என்று சத்தியமாய்த் தெரியவில்லை. “நான் எழுதுவதை நிறுத்திவிட்டேன்.” என்றேன்.

    “அது எப்படி எழுதாம இருக்க முடியாதே?” என்றான் முரளிகிருஷ்ணன்.

    “முடியுதே…”

    அவன் ஏதோ துக்கத்தில் ஆழ்ந்துவிட்டான். அப்புறம் கி.ராஜநாரயணனைப் பற்றி பேச ஆரம்பித்தான். கடுமையான விமர்சனம். நான் செருப்பைத் துழாவுவதில் கவனமாயிருந்தேன். சட்டென்று பேச்சை நிறுத்தினான். என்னைக் கவனித்தான். “நீங்க செருப்பைத் தேடிட்டு இருக்கறீங்க…”

    “ஆமாங்க…”

    “செருப்பு கிடைச்சாத்தான் பேசுவீங்க…?”

    சிரிக்கிற மாதிரி நடித்தேன். காணாமல் போன செருப்பு என்னை தவிக்க வைத்தது. என் கவலை இவர்களுக்குப் புரியாது. இவர்களை எப்படி சீக்கரம் அனுப்புவது? ஒரே வழி. டீ சாப்பிட வைத்து அனுப்பிவிடுவது. அப்புறம் வந்து செருப்பைத் தேடுவது.

    “டீ சாப்பிடலாம்…” என்றேன்.

    “சாப்பிடலாமே…”

    எதிரேதான் செந்திலின் டீக்கடை. உள்ளே நுழைந்ததும் செந்தில் விஷமத்தனமாகப் புன்னகைத்தான். “செருப்பு கடைச்சுதாண்ணா?”

    எரிச்சலோடு, “இல்லை…” என்றேன்.

    “நல்லாத்தேடிப் பாருங்கண்ணா… கிடைக்கும்” என்றான். நான் சந்தேகத்தோடு கடை நோட்டமிட்டேன். கல்லாப்பெட்டி டேபிளுக்கு கீழே என் செருப்பு ஒளிந்து கொண்டிருந்தது.

    “ஓவ்… என் செருப்பு…” என்று உற்சாகத்தில் கத்திவிட்டேன்.

    “இது உங்க செருப்புங்களாண்ணா…”

    “செந்திலு… பாத்தியா உன் வேலைய என்கிட்டயே காட்டிட்டே..”

    “பரவாயில்லீங்கண்ணா… எப்படியோ கண்டுபுடிச்சீட்டீங்க…”

    நிம்மதியாக இருந்தது. ஆனால் அந்த நிம்மதி படக்கென்று பிடுங்கப்பட்டது.

    “இப்ப நம்ம ஃபிரியா பேசலாமா?” என்றான் முரளிகிருஷ்ணன்.

    எனக்குப் பசி. “சாப்பிடற நேரமாச்சே?” என்று பலஹீனமாய் சொன்னதற்கு, “நாங்க சாப்பிட்டாச்சு… மட்டன் குழம்பு…”
    முரளிகிருஷ்ணன் கையை மூக்கருகே வைத்து வாசனை பிடிக்க வைத்தான்.

    போச்சுடா… இன்னைக்கு இலக்கியம் பேசாம போகமாட்டான் போலிருக்கு… மூன்று டீ சொல்லிவிட்டு முரளிகிருஷ்ணனைப் பார்த்தேன்…

    அவன் பேச ஆரம்பித்தான்… இல்ல இல்ல… திட்ட ஆரம்பித்தான்.

    ஜெயமோகன், குட்டி ரேவதி, சல்மா, வெண்ணிலா, எஸ்.ராமகிருஷ்ணன்… என்று ஒருத்தர் பாக்கி இல்லாமல் திட்டினான். குறிப்பாக பெண் படைப்பாளிகள் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை… மணி பத்தரைக்கு மேலாகிவிட்டது. பசி தாங்கமுடியாமல் கண்கள் இருட்டிக் கொண்டிருக்க, தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தேன். செருப்பு கிடைக்காமலே போயிருந்தால் நன்மையாக இருந்திருக்கும்.

    • கனகராஜன்
     
    • அருள் 12:08 முப on மார்ச் 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      பாவம்-ங்க கனகராஜன் நீங்க. உங்க வேதனை எனக்கு புரியுது. இது மாதிரிதான் நாட்டுல பல பேரு பாதிக்கப் பட்டிருக்காங்க.

    • madurai saravanan 11:13 முப on மார்ச் 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      good article . but feeling good

    • REKHA RAGHAVAN 12:36 பிப on மார்ச் 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      //செருப்பு கிடைக்காமலே போயிருந்தால் நன்மையாக இருந்திருக்கும்.//

      புத்தம் புது செருப்பை வாங்கிய கையோடு தொலைப்பது என்பது எவ்வளவு வருத்தத்தை கொடுக்கும் என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பதிவு.

      ரேகா ராகவன்.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி