இந்தியா இவ்வளவுதானா?
India என்று கூகிளில் தேடினால் என்னெல்லாம் வருகிறது என்று ஒரு பொழுதுபோகாத பொம்மு மாதிரி ஒரு சின்ன ஆராய்ச்சியில் இறங்கியபோது சில விஷயங்கள் புலப்பட்டன. கூகுள் தேடுதல் முடிவுகளின் முதல் பக்கத்தில் வந்தது என்னவென்றால் கொஞ்சம் இந்திய வரைபடங்கள். சில தாஜ்மஹால் படங்கள். வெவ்வேறு நிறங்களில் இந்திய தேசியக் கொடி. அப்புறம் இந்தியா கேட் அல்லது கேட்வே ஆஃப் இந்தியா. தொடர்ந்து அடுத்தடுத்த பக்கங்களில் மேற்சொன்னவற்றின் கலவையாக திரும்பத் திரும்ப அதேதான்.
சரி ஃப்ளிக்கரில் என்ன காட்டுகிறது என்று தேடிப்பார்த்தபோது, அது தேடிக்கொடுக்கும் ‘4,278,685 results’ களில் அதிகபட்சம் கண்ணில் படுவது யாதெனில்.. தலைப்பாகை அணிந்த ஆண்கள் மற்றும் காதில் மூக்கில் கழுத்தில் விதவிதமாக நகைகளும் தலையில் முக்காடும் அணிந்த பெண்கள். பிச்சைக்கார அல்லது ஏழ்மை நிலையிலுள்ள சிறுமிகள்-சிறுவர்கள். வெண்தாடி சாமியர்கள்-சாதுக்கள். இளைத்துக் கருத்த முதியவர்களின் சுருக்கம் விழுந்த க்ளோஷப் முகங்கள். மறுபடி தாஜ்மஹால். படகுகள். கலர்ப்பொடி.
இந்தியா என்றால் இவை மட்டும் தானா என்று யோசனை வந்தது. வியக்கவைக்கிற அளவுக்கு வேறு பரிமாணங்கள் இந்தியாவுக்கு எத்தனையோ இருக்கிறதே!! ஏன் அவைகள் இந்தப் புகைப்படங்களில் சிக்கவில்லை என்கிற ஆச்சரியம் முளைத்தது.
வேறு பரிமாணம் என்று நான் சொல்வது இந்தியாவின் நாகரீக வளர்ச்சி, நகரங்கள், நவீன தெருக்கள் மற்றும் கட்டிடங்கள், தொழிற்துறை முன்னேற்றங்கள், அழகு ததும்பும் இடங்கள், நவீன இந்தியாவின் மக்கள் இப்படியாக சில விஷயங்கள். கொஞ்சம் மெனக்கெட்டுத் தேடினால் இவ்வாறாக சில புகைப்படங்கள் கிடைக்கின்றனதான்.
நான் ஒரு வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து கூகிளிலோ ப்ளிக்கரிலோ காட்டும் புகைப்படங்களை பார்த்திருந்தால் இந்தியா ஒரு ஏழை நாடு. அதன் அனைவரும் ஒருவித புராதனமான உடை அணிபவர்கள். பிச்சைக்காரர்களும், போதை புகைக்கிற சாதுக்களும் நிறைந்து காணப்படுவர். எங்கு பார்த்தாலும் வறண்ட நிலங்கள், குப்பை மிகுந்த நகரங்கள். கல்வியறிவு இல்லாத மக்கள். பாம்பாட்டிகள். யானைகள். எப்போதோ மன்னர்கள் கட்டிய ஒரு சில மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், கோயில்கள், மண் ரோடுகள் எட்செட்ரா என்றெல்லாம்தான் இந்தியாவைப் பற்றி ஒரு பிம்பம் கொள்வேன். அதாவது நான் சொல்வது அவ்வாறான புகைப்படங்களைப் பார்க்கும்போது தோன்றும் ஒரு பொதுவான, மேலோட்டமான, உடனடிப் பார்வை.
ஏற்கெனவே ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் முடிந்த அளவு கச்சடா நாடாகக் காட்டி ஆஸ்காரும் வாங்கி இந்தியா பற்றிய ஒரு மோசமான ஆவணமாகப் பதிந்தும் போய்விட்டிருக்கிற நிலையில் இப்படியாக ஏற்படுகிற பிம்பம் சரியானதல்ல.
பரத் பாலா தயாரித்த ஏ.ஆர். ரஹ்மானின் வந்தே மாதரம் வீடியோவைப் பார்த்தபோது கூட மேற்கண்ட உணர்வுதான் தோன்றியது. பாலைவனம், இறுக்கமான முகங்களோடு ராஜஸ்தானிகள் என்று ஒரு வறண்ட நிலையை, ஏழ்மையைப் பறை சாற்றுவது போன்ற உணர்வை அந்த வீடியோ வெளிப்படுத்தியதாக ஒரு எண்ணம் தோன்றியது. இந்தியாவைப் பற்றி எதுவும் தெரியாத யாராவது இந்த வீடியோவைப் பார்த்தால் இவ்வளவுதானா இந்தியா என்கிற மாதிரியான பிம்பம்தான் தோன்றும்.
அது தவிர இந்தியா என்றாலே வட இந்தியா மட்டும்தான் என்கிற தோற்றத்தையே இதிலிருந்து இணையத்தில் புழங்குகிற புகைப்படங்கள் தருகின்றன. தென்னிந்தியப் புகைப்படங்கள் அதிகம் கண்ணில் தென்படுவது இல்லை. இந்தியாவிலிருக்கிற அமெச்சூர் மற்றும் தொழில்முறைப் புகைப்படக்காரர்கள், பத்திரிக்கைகளில் பணிபுரியும் புகைப்படக்காரர்கள் ஆகியோர்களின் கேமராக்கள் தென்னிந்தியாவின் பக்கமும் கொஞ்சம் ஃபோகஸ் செய்தால் நலம் பயக்கும். அல்லது வலையேற்றப் பட்ட புகைப்படங்களில் முக்கால்வாசி வெளிநாட்டவரால் கிளிக்கப்பட்டதாகக் கூட இருக்கலாம். அவர்கள் எப்போதும் போல இந்தியாவின் எழிலை விட்டுவிட்டு ஏழ்மையை வெளிச்சமிட்டுக் காட்டுவதில் ஆர்வம் காட்டுபவர்களாக இருந்திருக்கக்கூடும்.
உண்மையான நவீன இந்தியாவின் அழகை எடுத்துக்காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாய் இல்லையோ என்றுதான் தோன்றுகிறது. அப்படியே இருந்தாலும் கூட அவைகள் சரியான வகையில் இந்தியா பற்றிய இணைய பக்கங்களில் உபயோகப்படுத்தப்படவில்லை. அல்லது நல்ல புகைப்படங்களை இணைய பக்கங்களில் இணைக்கும்போது அவைகளின் குறிச்சொற்கள் மற்றும் கோப்புகளின் பெயர்கள் ஏனோதானோ என்று இருப்பதால் தேடியந்திரங்கள் சரியாகக் காட்டுவதில்லை என்று கூடச் சொல்லலாம். தேடியந்திரங்களில் குறிப்பிட்ட குறிச்சொற்கள் உபயோகித்துத் தேடும்போது மட்டுமே ஒரு சிலது கிடைக்கின்றன. அப்படியே கிடைத்தாலும் இந்தியாவின் பொதுவான லைஃப் ஸ்டைலை அவைகள் காட்டவில்லை என்பதுதான் குறை.
கூகுளில் நம் பெயர் உள்ளிட்டுத் தேடும்போது எப்படி நம் சம்பந்தப்பட்ட வலைப்பக்கங்களை அழகாய்க் கச்சிதமாய் கொண்டுவந்து கொடுக்கிறதோ அது போலவே இந்தியா பற்றிய தலைசிறந்த புகைப்படங்களை இணையத் தேடலின் போது முன்னிறுத்த டெக்னாலஜியை உபயோகித்தால் இப்புகைப்படங்கள் சரியான முறையில் பார்வையாளர்களைச் நிச்சயம் சென்றடையும் என்பது நிச்சயம்.
அதிகபட்சம் கிராமங்களால் நிறைந்திருக்கும் இந்தியாவில் புகைப்படங்களில் வேறு எதைத்தான் காட்டமுடியும் என்று கேள்வி எழலாம். எத்தனையோ இருக்கிறது. இந்தியா வண்ணமயமானது. இது ஒரு அற்புதமான பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் உள்ளடக்கியது. இந்தியா ஒரு வளரும் வல்லரசு நாடு. இந்தியாவில் வெளிநாடுகளைச் சார்ந்த சுற்றுலாவாசிகளைக் கவர என்னென்னவோ இருக்கின்றன. மலைவாசத்தலங்கள், இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள். பிரம்மாண்டமான கோவில்கள், புராதனச் சின்னங்கள், பாரம்பரியம், நடனங்கள், நீர் நிலைகள், யோகா, தியானம், இயற்கை வைத்திய முறைகள், பசுமை, மக்கள், கல்வி, கலாச்சாரம், உணவு வகைகள் என இந்தியாவின் எத்தனையோ முகங்கள் புகைப்படக்காரர்களுக்கு வரப்பிரசாதமாய் அதிரும் வண்ணங்களில் அம்சமாய்க் காட்சிப்படுத்தக் கிடைக்கின்றன.
ஆனால், புகைப்படக்கலைக்குத் தீனி போடும் மிகத் தொன்மையான இந்திய தேசப் பாரம்பரியச் சின்னங்களை அரசு சிறந்த முறையில் பராமரிப்பதில்லை என்பது வருத்தத்திற்குரியது. ஒரு சில உதாரணங்களாக மஹாபலிபுரத்தில் பல்லவர்களின் ஒரு சிற்ப மண்டபம் அற்ப சங்க்யைக்கு ஒதுங்குவதற்காகப் பயன்படுவதும், சென்னை அருங்காட்சியகத்தில் சோழற்கால கல்வெட்டுக்களின் மேலேயே காதலர்கள் இதயம் வரைந்து அம்பு விட்டு siva loves priya போன்ற காவியங்களை மானாவாரியாகப் பொறித்து வைத்திருந்ததையும் சொல்லலாம். இந்த இடத்தில் சதா நாற்காலிக்குப் போட்டியிடும் அரசாங்கத்தைச் சாடுவதா அல்லது அலட்சியப் போக்குள்ள மக்களை குறை சொல்வதா என்றே தெரியவில்லை. ஆனால் இரண்டுமே ஒன்றுக்கொன்று சம்பந்தமுள்ளதுதான் என்பதை மறுக்க முடியாது.
இணையம் என்பது பரந்துவிரிந்து ஒரு மிக முக்கியமான ஊடகமாக வளர்ந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் இந்தியாவை அதன் நவீன விஷயங்களை ஒரு உன்னத அழகியலோடு புகைப்படங்களில் காண ஆசையாயிருக்கிறது. அதை நிறைவேற்றும் பொறுப்பை சுற்றுலாத்துறையும் காமிராக்காரர்களும் கையில் எடுத்துக்கொள்ளவேண்டும். அதற்கு கிழவர்களின் முகச்சுருக்கங்கள், தலைப்பாகை, மூக்கொழுகும் சிறுவர்கள் தாண்டி யோசிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
-சித்ரன்
நிரஞ்சன் 8:39 முப on மார்ச் 23, 2010 நிரந்தர பந்தம் |
///மலைவாசத்தலங்கள், இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள். பிரம்மாண்டமான கோவில்கள், புராதனச் சின்னங்கள், பாரம்பரியம், நடனங்கள், நீர் நிலைகள், யோகா, தியானம், இயற்கை வைத்திய முறைகள், பசுமை, மக்கள், கல்வி, கலாச்சாரம், உணவு வகைகள் என இந்தியாவின் எத்தனையோ முகங்கள் புகைப்படக்காரர்களுக்கு வரப்பிரசாதமாய் அதிரும் வண்ணங்களில் அம்சமாய்க் காட்சிப்படுத்தக் கிடைக்கின்றன.///
Yes!!. India is rocking!!!!. அருமையான பதிவு.
துளசி கோபால் 8:48 முப on மார்ச் 23, 2010 நிரந்தர பந்தம் |
அட! இன்னிக்கு இதையே வேறொரு நிலையில் நினைச்சேன். இங்கே இந்தியாவில் டிவியில் காண்பிக்கும் விளம்பரங்கள் டாப் க்ளாஸ். 20 , 30 விநாடிகளில் நச் ன்னு இருக்கு. ஷாம்பூ, ஸோப், நகைநட்டுக்கள், புடவைகள்தான் ஏராளம். இதைமட்டும் பார்க்கும் வெளிநாட்டினர் இந்தியா ஏகத்துக்கும் வளர்ச்சி அடைந்த அதி நவீன நாகரிகம் உள்ள நாடுன்னு நினைப்பாங்க.
கிளம்பிவந்து பார்த்துட்டுப் போலாமுன்னு வருபவர்களுக்கு ‘சோதனை’ விமான நிலயத்துலேயே ஆரம்பிச்சுரும்.
35 ஆண்டுகளுக்குப் பின் சென்னை வாழ்க்கையை அனுபவிக்க வந்த நான்……ஹூம்….
அனுபங்களைப் புத்தகமாக எழுதத்தான் வேணும்.
Vijayashankar 9:17 முப on மார்ச் 23, 2010 நிரந்தர பந்தம் |
உண்மையான அழகு பார்ப்பவர் கண்ணில் இருக்கு. அதை மறுக்க முடியாது. உலக பெரிய முதன்மை பணக்காரர்கள் வரிசையில் நான்கு இந்தியர்கள். இது போதும் உலகில் வளம் மிகுந்த நாடு என்று பறை சாற்றிக்கொள்ள. சிம்பிளாக இருப்பது நம் வழக்கம். நீங்கள் வெளிநாட்டில் ( ஏன் நானும் கூடத்தான் ) குப்பை கொட்டியதால் இந்திய மீது இது ஒரு இழி மோகம் ஆகிவிட்டது . ஆத்தூர் செந்தில் குமார் , திருச்சியில் ஒரு செந்தில் என அமெரிக்காவில் வாழ்ந்த இந்தியர்கள் புலம் பெயர்ந்து நாட்டுக்கு உழைப்பது உங்களுக்கு தெரியவில்லையா? ஏன் நான் இன்னும் டெவலப் ஆனா நேசன் என்று சொள்ளப்படுகிறோம், இந்த தாழ்வு மனப்பான்மையால் தான்!
இந்த மாதிரி பேசுபவர்களை கேட்டு தான் அமெரிக்கா மோகம் குறைந்து இந்திய வந்து சேர்ந்தேன். மீண்டும் மீண்டும் அதை கேட்பது புளித்த மோர் போல இருக்கு.
சித்ரன் 12:20 முப on மார்ச் 24, 2010 நிரந்தர பந்தம் |
விஜயசங்கர், இந்தக் கட்டுரை இணையப் புகைப்படங்களில் இந்தியாவின் தோற்றம் என்பது பற்றியதே தவிர இந்தியாவைப் பற்றி இழியோ பழியோ சொல்வதற்கல்ல. தவிர நான் எந்த வெளிநாட்டிலும் குப்பை கொட்டியவனல்ல. இந்தியாவில், சென்னையில் வசிக்கிற ஒரு எளிமையான ஆசாமி நான். நீங்கள் சொல்கிற மாதிரி உலகப்பணக்காரர்கள் வரிசையில் எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் குடி தண்ணீர், அடிப்படை வசதிகள் இல்லாத எண்ணற்ற கிராமங்கள் தன்னிறைவு அடையாமல் இந்தியாவில் இருக்கிறதே. வளம் கொழிக்கும் நம் இந்தியாவில் “வளங்கள்” எங்கே யாருக்குப் போய் சேர்கின்றன என்பது கேள்வி. மற்றபடி திருச்சி செந்தில், ஆத்தூர் செந்தில் மற்றும் இந்தியா திரும்பிய உங்களுக்கும் வண்ணமயமான Incredible India சார்பில் வந்தனங்கள்.
சத்யராஜ்குமார் 4:49 பிப on மார்ச் 23, 2010 நிரந்தர பந்தம் |
சித்ரன், உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் இதெல்லாம் ஷங்கர் படங்கள் லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்க பாடுபடுவது போலத்தான். இயற்கையாய் நிகழ வேண்டிய இவைகள் பெரும்பாலும் நம் நாட்டை பிரதிநிதிப் படுத்தும் அதிகாரம் கொண்டவர்களின் கையில் உள்ளது. ஒரு வேளை என்னைப் போல வெளி நாட்டில் குப்பை கொட்டியிருந்தால் இது போன்ற கட்டுரைகளை நீங்கள் எழுதாமல் போகக்கூடும்.
பொன்.சுதா 11:23 பிப on மார்ச் 23, 2010 நிரந்தர பந்தம் |
நல்ல பதிவு. நிஜமான ஆதங்கம். வாழ்த்துக்கள் சித்திரன்…
prabu 11:47 பிப on மார்ச் 23, 2010 நிரந்தர பந்தம் |
arumai
சித்ரன் 11:52 பிப on மார்ச் 23, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி நிரஞ்சன், துளசி கோபால், விஜயசங்கர், SRK, பொன்.சுதா, பிரபு.
Satish 12:23 முப on மார்ச் 24, 2010 நிரந்தர பந்தம் |
Good article chithran ji… I too accept and regret for india portrayed as posted… Y dont we take a step, create a blog and show the other side (beauty, nature, culture etc.) of our country. Hope many of us got a very good picture collections portraying beautiful india.
சித்ரன் 4:13 முப on மார்ச் 24, 2010 நிரந்தர பந்தம் |
Thanks Satish.
padmahari 12:03 பிப on மார்ச் 24, 2010 நிரந்தர பந்தம் |
நல்ல பதிவு. பாராட்டுக்கள் சித்ரன்! எனக்கும் இதே எண்ணங்கள்தான் பலமுறை ஏற்பட்டன. இந்தியாவைப் பற்றிய சில உரைகள நிகழ்த்தும்போது, கூகுளில் தேடினால் கிடைக்கும் படங்களில்…..
//நான் ஒரு வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து கூகிளிலோ ப்ளிக்கரிலோ காட்டும் புகைப்படங்களை பார்த்திருந்தால் இந்தியா ஒரு ஏழை நாடு. அதன் அனைவரும் ஒருவித புராதனமான உடை அணிபவர்கள். பிச்சைக்காரர்களும், போதை புகைக்கிற சாதுக்களும் நிறைந்து காணப்படுவர். எங்கு பார்த்தாலும் வறண்ட நிலங்கள், குப்பை மிகுந்த நகரங்கள். கல்வியறிவு இல்லாத மக்கள். பாம்பாட்டிகள். யானைகள். எப்போதோ மன்னர்கள் கட்டிய ஒரு சில மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், கோயில்கள், மண் ரோடுகள் எட்செட்ரா என்றெல்லாம்தான் இந்தியாவைப் பற்றி ஒரு பிம்பம் கொள்வேன். அதாவது நான் சொல்வது அவ்வாறான புகைப்படங்களைப் பார்க்கும்போது தோன்றும் ஒரு பொதுவான, மேலோட்டமான, உடனடிப் பார்வை.//
என்பதுதான் நிதர்சனம். இதை எழுத நினைத்ததுண்டு, ஆனால் அதை உங்கள் பதிவில் படித்ததில் மிக்க மகிழ்ச்சியும், திருப்தியும்! வாழ்த்துக்கள், பகிர்வுக்கு நன்றி.
http://padmahari.wordpress.com
சித்ரன் 11:53 பிப on மார்ச் 24, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி பத்மஹரி!