Updates from ஜூன், 2010 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

  • சரசுராம் 12:03 pm on June 24, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: , , மொட்டைமாடி   

    மொட்டை மாடி.. மொட்டை மாடி… 

    கோயில் இல்லாத ஊரில் கூட குடியிருக்கலாம். ஆனால் மொட்டைமாடி இல்லாத வீட்டில் குடியிருக்கக்கூடாது என்பேன். அதுவும் சென்னை மாதிரி வெப்ப நகரங்களில். சென்னையில் மார்ச்சில் தொடங்கி ஒரு ஆறேழு மாதங்களை சொல்லி மாளாது. வெயில் பிரபுதேவாவை விட சூப்பராய் ஆடும். ருத்ரதாண்டவம் என்று சொல்லலாம். வியர்வையில் குளித்து குளித்து உடம்பு கூவத்தைவிடவும் நாறும். தினமும் ஒரு பாடி ஸ்ப்ரே போதாது. மனிதர்கள் யாராவது கிடைத்தால் அடிக்கிற வெறியில் உக்கிரமாய் அலைவதாகவே தோன்றும்.

    கோடையில் விடுமுறையும் சேர்ந்து கொள்கிறது.   பகலெல்லாம் பசங்களின் கிரிக்கெட்டில் அதிரும் அந்த மொட்டை மாடியின் உடம்பு. ஆனால் எத்தனை அடிச்சாலும் தாங்கறாண்டா- என்று வடிவேல் சொல்கிற மாதிரி அது சாதாரணமாய் இருப்பதாகவே எனக்கு தோன்றும். எங்கள் சினிமா மற்றும் பல்வேறு கதைகளை இந்த மொட்டை மாடியில்தான் பேசியிருக்கிறோம். அத்தனை கதைகளையும் கேட்டுவிட்டு அது ஆடி கவிழ்க்காமல்  அமைதியாக இருந்தபோதுதான் அதன்மீது எனக்கு இன்னும் மதிப்பு கூடியது.

    துணிகள் மற்றும் வடகங்களை காயவைக்க என பகல் பொழுதில் அதற்கு வேலை. அதன் பின்னும் அதற்கு ஓய்வு இல்லை. இரவில் மொட்டைமாடியில் படுப்பதற்கான ஆயத்தங்கள் மாலையே தொடங்கிவிடுகிறது. சாயந்திரமே அவரவர் படுக்கும் இடங்களில் அளவு மாறாமல் தண்ணீர் ஊற்றி ஈரமாக்குவார்கள். இரவில் படுக்கும்போது தரை குளிர்ச்சியாய் இருக்க முன் ஏற்பாடு. இரவு அந்த அமர்க்களம் தாங்க முடியாது.

    அந்த கோடை முழுவதும் எங்கள் காம்பெளண்டின் பத்து பனிரெண்டு குடித்தனங்களும் அந்த மொட்டைமாடிதான் பெட்ரூம். நான் எப்பொழுதாவது பொறுக்க முடியாத புழுக்கத்தில் மட்டும் அங்கே படுக்க போவதுண்டு. இடம் தேடவேண்டியிருக்கும்.  தேடிப் பார்க்கும் என் பார்வையில் அது ஒரு அகதிகள் முகாம் மாதிரி காட்சி தரும். கிடைக்கிற இடத்தில் படுத்து வெளிச்சத்திற்கு முன்பு இறங்கிவிடுவேன். மொட்டைமாடியின் இரவு நிகழ்வுகள் ஒரு சுவாரஸ்ய சினிமா.

    எங்கள் பக்கத்து வீட்டுக்கு பத்து வயது குழந்தைக்கு இரவில் நடக்கிற பழக்கம். அதுவே மாடியில் இருந்து தனியாக வந்து பாத்ரூம் எல்லாம் போய் விட்டு தானாவே படுத்துக்கொள்ளும். இப்படியே விட்டால் குழந்தை அப்படியே போய் விடும் என்று பயந்து அதை முழித்து முழித்துப் பார்க்க முடியாமல் அவளது அம்மா தன் சேலை நுனியில் அதன் உடையை கட்டி படுத்திருப்பார்கள். தூங்க அடம்பிடித்து தீராத குறும்புடன் நான்கைந்து குழந்தைகள். அவர்களின் அம்மாக்கள் அவர்களை அமுக்கிபிடித்து தூங்கவைக்க நடத்துவது ஒரு பாவமான போராட்டம்தான். அதற்குபிறகு தூக்கத்தில் பேசும் பையன்கள். அவர்களின் பகல் நேர தேடல்கள் இரவில் வசனங்களாக வெளிவரும். காலையில் கேட்டால் நான் அப்படியில்லை என்று மறுப்பார்கள். இருடா ரிக்கார்ட் பண்ணி போட்டுக் காட்டறேன் என்றால் நிற்காமல் ஓடுவார்கள்.

    எங்கள் மாடி அறைகளில் வேலைக்கு போகும் பெண்கள் தனியாக அறையெடுத்து தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கும் மொட்டைமாடிதான் அடைக்கலம். அதில் சில பெண்களுக்கு போன் வந்து விட்டால் போதும் விடிய விடிய அரட்டைதான். அந்த இருட்டில் மொட்டை மாடியின் ஒரு தூரத்தில் அவர்கள் ஒரு கரிய உருவமாய் தெரிவார்கள். திடீரென பார்த்து பேயென நினைத்து பயந்த குழந்தைகளும் உண்டு. அவர்கள் அப்படி அமர்ந்து என்னதான் பேசுவார்கள் என்பது எல்லாருக்குமான கேள்வி. பேச அப்படியென்னதான் இருக்கிறதென்பதும் ஒரு புரியாத புதிர். ஒருநாள் அப்படி பேசிவிட்டு தலைமாட்டில் ஒரு பெண் செல்போனை வைத்துவிட்டுத் தூங்க, காலையில் பார்க்கும்போது அது காணாமல் போயிருந்தது. அதை யார் எடுத்திருப்பார்கள் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியாத குற்றம். பேச்சு தாங்க முடியாமல் கடுப்பாகி யாராவது தூக்கி பக்கத்தில் இருந்த கிணற்றில் போட்டிருக்கலாம் என்றும் பேச்சு வந்தது. இதற்குதான் எழுபது சதவிகித வாய்ப்பிருப்பதாக ரகசிய குரலில் பேசிக்கொண்டார்கள்.

    எங்கெங்கோ சுற்றிவிட்டு லேட் நைட்டாய் மொட்டைமாடிக்கு திரும்பும் காம்பெளண்ட் பசங்களின் குரூப் ஒன்று. வீட்டிற்கு தெரியாமல் இரவு காட்சிக்கு போய்விட்டு வருவதாகச் சொல்வார்கள். அவர்களுடன் கூடவே வரும் சரக்கு  மற்றும் சிகரெட்டின் வாசனை. இந்த கால பசங்களிடம் ’சரக்கி’ல்லையென்று யார் சொன்னார்கள்? ஒருநாள் மாடியில் குடியிருக்கும் மணி ‘தண்ணி’ அடித்துவிட்டு வந்து போதையில் மொட்டை மாடியிலிருந்து விழ அவன் தரையில் விழாமல் கொஞ்சம் அதிர்ஷ்டத்தில் முதல் மாடி சுவற்றில் விழுந்து துணி காயப்போட்ட மாதிரி  தொங்கிக்கொண்டிருந்தான். அவனை உடனடியாய் பார்த்து ஹாஸ்பிடல் போய் காப்பாற்றியது தனிக்கதை. அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு போன பிறகும் அந்த வீட்டிற்கு அந்த மணியின் ஞாபகமாய் ‘குடி’யிருந்த கோயில் என்று பெயரும் இருக்கிறது.

    எப்பொழுதாவது வந்து அனைவரையும் விரட்டும் கோடை மழை. பாய் தலையணைகளை சுருட்டிக்கொண்டு இறங்குவதற்குள் அது நம்மை பாதி நனைத்துவிடும். மழை பெய்வதே தெரியாமல் தூங்கி முழுக்க நனையும் சில வறட்டு சனங்களும் எங்கள் மொட்டைமாடியில் உண்டு. அப்படியாவது குளிக்கட்டுமென்று நாங்களும் விட்டுவிடுவோம்.

    பல்வேறு ஒலிகளில் கிளம்பும் குறட்டைகளை பொறுத்துக் கொண்டு படுத்தால் தவறாமல் வரும் இதமான காற்று.  நைட் லேம்ப்பாய் எப்போதுமாய் இருக்கும் மெல்லிய இயற்கை வெளிச்சம். அவ்வவ்போது வெவ்வேறு முகங்களில் தலை காட்டும் நிலா. பெருத்த சத்தத்துடன் மிக அருகில் கடந்து போகும் விமானங்கள். வானத்தின் மூக்குத்திகள் மாதிரி மின்னும் தொலைதூர நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்து விட்டால் பத்து நிமிடத்தில் தூக்கத்திற்கு உத்திரவாதம் உண்டு. மொத்தத்தில் மொட்டைமாடியை கோடையில் எங்களை தாங்கும் கொடைக்கானல் என்பேன். ஆமாம் மொட்டை மாடியை யார் ’மொட்டை’ மாடி என்று சொன்னது? அதற்குள் இத்தனை ‘விஷயங்கள்’ இருக்கிறதாக்கும்.

     
    • ஆயில்யன் 12:22 பிப on ஜூன் 24, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      மொட்டை மாடி நினைவுகள் செம சூப்பரூ 🙂

      அதுவும் வடகத்தில் ஆரம்பிச்சு நிலா கண்டு, விண்மீன்கள் எண்ண ஆரம்பித்து அலுத்து போன நொடியில் அனேகமாய் தூக்கம் தழுவியிருக்ககூடும். நண்பர்களோடு மொட்டை மாடி உறக்கமும் பேச்சுக்கள் வெகு சுவாரஸ்யம்! மொட்டை மாடி இரவு தூக்கத்துக்காக மாடியில்,மாலையில் தண்ணீர் ஊற்றி குளிரவைத்து,ஏற்பாடுகளை செய்வது லீவ் குஷியில் இருக்கும் குட்டீஸ்களின் விருப்பமான வேலையும் கூட!

      //அந்த மணியின் ஞாபகமாய் ‘குடி’யிருந்த கோயில் என்று பெயரும் இருக்கிறது./

      LOL:)))))))

    • ஜெகதீஸ்வரன் 11:00 முப on ஜூன் 26, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      இரவுகளில் பனிபெய்து தாலாட்டு பாடி தூங்க வைக்கும் இடம் அதுவே!…

      வாழ்க வளமுடன்!

      – ஜெகதீஸ்வரன்.
      http://sagotharan.wordpress.com

  • சித்ரன் ரகுநாத் 12:47 pm on June 21, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: திரைப்படம், பொழுதுபோக்கு, விமர்சனம்   

    உலகக் கொட்டாவி 

    இந்த வார ‘கற்பனை எக்ஸ்ப்ரஸ்’ இதழுக்காக நான் எழுதிய தலையங்கம்:

    இப்போதெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆனவுடனேயே ரசிகர்கள் ஒவ்வொருவரையும் அந்தப் படம் அல்லது அதற்கான விமர்சனங்கள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை வலைப்பதிவுகளில் எல்லோரும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இணையத்தில் கச்சேரி களைகட்டிவிடுகிறது.

    சிலர் பார்த்துவிட்டும் சிலர் பார்க்காமலும் எழுதுகிறார்கள். விமர்சனங்களைப் படித்தவர்களில் சிலர் உஷாராகி தன் பர்ஸைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள். ரிஸ்க் பிரியர்கள் அவற்றைப் புறக்கணித்துவிட்டு குடும்பத்தோடு தியேட்டரில் ஆஜராகி விடுகிறார்கள். சிலர் டிவிடியும் டோரண்டும் தேடுகிறார்கள். நடிகர் நடிகைகளின் அல்லது இயக்குநர்களின் ரசிகர்களை ஒன்றும் செய்வதற்கில்லை. எப்படியிருந்தாலும் பார்த்துவிட்டுத் தன் அபிமானத்தைப் பதிவுசெய்துவிடுவார்கள்.

    உள்ளங்கையில் எதையோ ஒளித்து மூடி எதிரிலிருப்பவரிடம் என்ன இது என்று கேட்டு நிறைய பதில் வாங்கிப் பின்பு இதுதான் என்று திறந்து காட்டுவதும் மற்றவர் ’ச்சே!.. பத்து பைசாவா.. இதுக்குத்தான் இந்த பில்டப்-பா.. நான் என்னமோ என்று நினைத்தேன்’ என்று வழிவதுமான விளையாட்டுப் போல இருக்கிறது சில நேரத்தில். வெளியாகிற படங்களைச் சொல்கிறேன்.

    இப்பொழுதெல்லாம் புதிதாக எந்தப் படம் வந்தாலும் எப்படியிருக்கிறதென்று படம் பார்த்தவர்களைக் கேட்டால் “கதை சரியில்லை. ஆனால் Making is good” என்கிற திருவாசகம் தவறாமல் எல்லோர் வாயிலும் வந்துவிடுகிறது. ஸ்டைலான எடிட்டிங், அசத்தும் சினிமோட்டோகிராபி, ஆடத் தூண்டும் கொரியோகிராபி மற்றும் இன்னபிற கிராபிகளில் திரைக்குத் தேவைப்படும் மற்ற தொழிற்நுட்ப வல்லுநர்கள் படத்தின் கதையை மீறி தங்கள் திறமையை வெளிப்படுத்திவிடுகிறார்கள்தான். தப்பில்லை.

    திரைப்பட ஆர்வமிருக்கிற யாராயினும் கிடைத்த டிஜிட்டல் கேமராக்களை வைத்துக் கொண்டு குறும்படங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆக ஒரு லட்சம் ரூபாய் இருந்தால் யார் வேண்டுமென்றாலும் அழகாக ஒரு படம் பண்ணி டைரக்டர் கார்டு போட்டுக்கொள்ளலாம் என்கிற இந்தச் சூழலில் ஏற்கெனவே கோடம்பாக்கத்தில் தன் கால்களை பலமாகப் பதித்தவர்கள் எத்தனை கவனமாக இருக்கவேண்டும்? நான் பார்த்த ஒரு சில குறும்படங்கள் அருமையாகவே இருக்கின்றன. வாய்ப்புகள் சரியாக அமையும் பட்சத்தில் இவர்கள் ஒரு புயலாக கோ.பாக்கத்திற்குள் பிரவேசித்து மக்களை ஆச்சரியத்திலாழ்த்தும் படங்களைக் கொடுக்கத் தவறமாட்டார்கள் என நம்புகிறேன.

    வெறும் ஆர்ப்பாட்டங்கள் எதையும் நிரூபிக்கப்போவதில்லை. இறுதியில் வெல்வது சரக்கு (திரைக்கதை) மட்டுமே. உலகத் திரைப்பட டி.வி.டிக்களை லாரியில் அள்ளிக் கொண்டு போகிற கோலிவுட்டுக்கு இது தெரியாததல்ல.

    ரசிகர்கள் மனதில் லோடு லோடாக ஏற்றிவைத்துக் கொண்டிருக்கிற எதிர்பார்ப்புகளுக்கு ஈடாக எதுவும் அளித்துவிடவில்லையென்றால் பின்னர் ‘படம் குப்பை’ என்கிற வார்த்தை எளிதாய் வந்து விழுந்துவிடும். படம் பற்றி மாதக் கணக்கில் செய்துவந்த பில்டப்-புகளும் அது வரை செய்து வந்த அதிரடி விளம்பரங்களும் நொடியில் தலை குப்புற விழும் நிலை ஏற்படும்.

    கோடிகள் கொட்டுகிற உழைப்பு என்றாலும் கதையோ திரைக்கதையோ காட்சியமைப்புகளோ வசனங்களோ சொதப்பும் பட்சத்தில் எத்தனையோ பேர் தூக்கங்கெட்டு மெனக்கெட்டு கல்லிலும் முள்ளிலும் கால் கடுக்கப் பாடுபட்டதை ஒரு கொட்டாவியால் சிம்பிளாகப் புறக்கணித்துவிடுவான் ரசிகன். ஆனாலும் கொடுத்த காசு விரயமான உணர்வைக் குறைக்க “படத்துல ஃபோட்டோகிராபி அசத்துது. அதுக்காகவே பாக்கலாம்” என்று பிறரிடம் சொல்லி சமாதானமடைந்து கொள்ள நேரிடுவது வேறு கதை.

    சினிமாவில் நடிகர்களையும் இயக்குநர்களையும், பாடகர்களையும், இசையமைப்பாளர்களையும் மட்டுமே அறிந்து வைத்திருந்த காலம் போய் இருபதாண்டுகளுக்கு முன்னமிருந்தே மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களையும் மக்கள் இனங்காணத் துவங்கிவிட்டார்கள். தோட்டா தரணியிலிருந்து ஆரம்பித்து விக்ரம் தர்மா, லெனின் – வி.டி.விஜயன், சாபு சிரில், சந்தோஷ் சிவன், ஆண்டனி, ஸ்ரீதர், நீரவ் ஷா என்று நிறைய பேரை வாயிலிருந்து உதிர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் கொஞ்ச நாளில் கொரியப் பட கொரியோகிராபர்களின் பெயர்களைக் கூடச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

    ஆக ஒரு டைரக்டர் தோல்வியடையும் இடத்தில் குறிப்பிட்டுச் சொல்ல படத்தில் மற்ற கலைஞர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்களுக்கு அது ப்ளஸ்தான். ஆனால் தயாரிப்பாளர் பாவமல்லவா?

    தொழில்நுட்பத்தை மட்டுமே வைத்துக்கொண்டு எந்தப் படமும் வெற்றியடைந்துவிட முடியாது. சினிமா என்பது கூட்டு முயற்சி. திரைப்படமெடுக்கும் ஒவ்வொரு டீமுக்கும் தாங்கள் கூட்டாக ஜெயிக்க வேண்டும் என்பதுதான் அவா. மறுப்பதற்கில்லை. ஆனால் நடுக்கடலிலும், மலை உச்சியிலும் கயிறு கட்டித் தொங்கி எடுத்த படத்தில் கதை சரியில்லையென்றால் அப்புறம் திரையரங்கில் பாப்கார்ன் வாங்க ஆளிருக்காது என்பதை இயக்குநர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

    பிரம்மாண்டங்கள் என்பதெல்லாம் தாண்டி சும்மா ஒரு சின்ன அழகான கதையை அதிராமல் சொன்னாலே அது நிச்சயம் வெற்றி பெறும்.

    தியேட்டருக்குள் இரண்டரை மணி நேரம் அடைபடுகிற ரசிகர்களை சிரிக்க வைத்து, அழ வைத்து, உணர்வுகளைக் கிள்ளி, நெகிழவைத்து, நினைவலைகளைக் கிளறி, நெஞ்சம் நிறைத்து வீட்டுக்கு அனுப்பிவைப்பதென்பது ஒரு டைரக்டருக்கு சாதாரணப் பொறுப்பு கிடையாது.

    கரணம் தப்பினாலும் கொட்டாவிதான். உலகப் படமெடுப்பவர்களுக்கும் இது பொருந்தும்.

     
    • சத்யராஜ்குமார் 8:13 பிப on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      அத்தி பூத்தாற்போல வரும் நல்ல படங்களின் கலையழகை உணர்வதற்கு அடிக்கடி வரும் நொள்ளைப் படங்கள் பெரும் உதவி புரிகின்றன என்பதால் அவைகளையும் வரவேற்கிறேன். 🙂

    • சித்ரன் 12:01 முப on ஜூன் 22, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      @சத்யராஜ்குமார்: சும்மா வரவேற்பது மட்டும்தானா? இல்லை தியேட்டரில் போய்ப் பார்க்கிறீர்களா?

    • Karthik 12:20 முப on ஜூன் 22, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல பதிவு.
      ஆங்கில படங்களை : லவ், ஆக்க்ஷன், காமெடி, டிராமா, ஹாரர் ன்னு வகைப்படுத்தர மாதிரி.
      தமிழ்ப் படங்களை : நல்ல திரைக்கதை, நல்ல இசை, நல்ல ஃபோட்டோகிராபி ன்னு தான் சொல்ல முடியுது.

    • பொன்.சுதா 1:23 முப on ஜூன் 24, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல பதிவு சித்திரன்.

  • சத்யராஜ்குமார் 7:01 pm on June 19, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    தமிழின் முதல் மொபைல் நூல் 

    1996-97 வாக்கில் சொந்த இணைய தளம் வைத்திருந்தேன். குமுதம், விகடன் போன்ற வாராந்திரிகளில் வெளியான எனது சிறுகதைகள் சிலவற்றை அதில் தொகுத்திருந்தேன். இணையம் அதிகம் பரவலாகியிருக்காத நிலையில் ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் எனக்கு எப்படி அதை பலருக்கும் எடுத்துச் செல்வது என்பது அப்போது தெரியவில்லை.

    அது போலவே இன்னும் செல்பேசி தளத்தில் தமிழ் படைப்புகள் பரவலாகியிருக்காத இத்தருணத்தில் இப்போது Android Mobile-ல் முதல் முறையாக தமிழில் ஒரு மின்னூல் கொண்டு வந்துள்ளேன். முழுக்க முழுக்க இது ஒரு பரிசோதனை முயற்சி. இதை ஒரு பீரியாடிக் போல செயல் பட வைக்க உத்தேசம். ஆன்ட்’ராய்ட் போன் அளிக்கும் மென்பொருள் இற்றைப்படுத்தும் வசதி மூலமாக எனக்கு நேரம் வாய்க்கும் போதெல்லாம் புது கதை அல்லது கட்டுரை தொகுப்புகள் வாசகருக்குக் கிடைக்கும்.

    விரைவில் ஐ போனிலும் இதை அறிமுகப்படுத்த உள்ளேன். ஆப்பிள் நிறுவனம் அனுமதி வழங்கும் பட்சத்தில்.

    இப்போதைக்கு ஆண்ட்’ராய்ட் போன் உபயோகிக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் eNool என்னும் இந்த இலவச மென்பொருளை தரவிறக்கி படித்து மகிழ அன்புடன் அழைக்கிறேன்.

    Android Market Place-ல் eNool அல்லது tamil என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.


    UPDATE: eNool ஐபோனிலும் இப்போது கிடைக்கும்.


     
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி