சிறை
முந்தா நாள் நண்பர் வீட்டில் ஒன்று கூடல். ஜூன் முதல் அக்டோபர் வரை இந்த மாதிரி இடங்களில் நிச்சயம் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் அம்மா-அப்பாக்களைப் பார்க்கலாம். அன்றும் மூன்று தந்தைமார்களைப் பார்த்தேன்.
“மூணு மாசம் இருக்கச் சொல்றாங்க. என்னால பத்து நாள் கூட இருக்க முடியுமா தெரியலை.”
டீக்கடை இல்லை. பெட்டிக்கடை இல்லை. தானாக எங்கும் வெளியே செல்ல முடியவில்லை. நிறைய மனிதர்களை கண்ணில் காண முடியவில்லை. அருகிலேயே தெரிந்தவர் வீடு இருந்தாலும் சட்டென்று அங்கே சென்று கதவைத் தட்டி பேசி விட்டு வர முடிவதில்லை. முன் கூட்டியே செல்லில் பேசி, சந்திப்பைத் திட்டமிட்டு… எல்லாம் ரொம்ப செயற்கை. இப்படியே குற்றச்சாட்டுகள் நீள்கின்றன. தாங்கள் முள் மேல் இருப்பது போல ஒரு வித பதட்டத்துடனே பேசுகிறார்கள். இது வாழ்நாளில் தங்களுக்குக் கிடைத்து விட்ட மிகப் பெரிய தண்டனை போல் கருதுகிறார்கள்.
அமெரிக்கா வந்து விட்டு இங்கே இந்தியாவைக் காண முயலும் லாஜிக் புரியவில்லை. இவ்வளவுக்கும் இவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள், நல்ல பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். இது வேறு உலகம். இந்த உலகத்தின் தன்னியல்புகளை புரிந்து கொள்ள முயன்றால் அதற்கு மூன்று மாதமில்லை, ஆறு மாதம் கூட போதாது என்பது புரியும்.
வெகு சிலரே அந்தக் கலையில் தேர்ந்துள்ளார்கள். இங்கே வந்ததும் தங்களை முற்றிலுமாக மாற்றிக் கொள்கிறார்கள். காலை பத்து மணிக்கு மேல் மகனும் – மருமகளுமோ, மருமகனும்-மகளுமோ அலுவலகம் சென்று விட்டதும் கிடைக்கும் தொந்தரவுகளற்ற தனிமையையும், அமைதியையும் ரசிக்கிறார்கள். இண்ட்டர்னெட்டில் தினமலரோ, ஹிந்துவோ வாசிக்கக் கற்றுக் கொண்டு படித்து மகிழ்கிறார்கள். அருகாமை நூலகத்தைக் கண்டு பிடித்து பொழுதைக் கழிக்க தெரிந்து கொள்கிறார்கள்.
இந்தப் புதிய உலகை ரசிக்க ஆரம்பிக்கும் இவர்களுக்கு ஆறு மாதங்கள் ஆறு நொடிகள் போல கடக்கின்றன.
தங்களுக்கான அன்றாட வாழ்க்கை சொந்த ஊரில் இருக்கவே இருக்கிறது என்பதை ஒரு பெரும் கூட்டத்தின் விதிவிலக்குகளாக இருக்கும் இவர்கள் புரிந்து கொண்டிருப்பதே இதன் சூட்சுமம்.
REKHA RAGHAVAN 10:17 முப on செப்ரெம்பர் 9, 2012 நிரந்தர பந்தம் |
உண்மைதான்.வாழ்க்கையை அதன் போக்கில் ரசிக்கத் தெரிந்தவனுக்கு நான்கு சுவர்களுக்குள்ளும் சொர்கமுண்டு! கடைசி பாரா எனக்கு அழகாக பொருந்துகிறது.
ரேகா ராகவன்.
கவிதா 11:37 முப on செப்ரெம்பர் 9, 2012 நிரந்தர பந்தம் |
அமெரிக்கா வந்து விட்டு இங்கே இந்தியாவைக் காண முயலும் லாஜிக் புரியவில்லை. இவ்வளவுக்கும் இவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள்//
இந்தியாவில் பலவருடம் இருந்துவிட்டு, அமெரிக்கா வந்துவிட்டதற்காக ஒரிரு நாட்களில்/மாதங்களில் மாற்றிக்கொள்ள சொல்லுவதும், மாற்றிக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதும் எந்த விதத்தில் நியாயம்.
அவர்கள் இந்தியாவைக் காண முயலவில்லை. இந்தியாவுடன் ஒப்பிட்டுப்பார்க்கிறார்கள் அவ்வளவே. !
சித்ரன் ரகுநாத் 1:27 பிப on செப்ரெம்பர் 9, 2012 நிரந்தர பந்தம் |
//மருமகளுமோ, மருமகனும்-மகளுமோ அலுவலகம் சென்று விட்டதும் கிடைக்கும் தொந்தரவுகளற்ற தனிமையையும், அமைதியையும் //
சில பெற்றோர்களுக்கு மகனோ, மகளோ, மருமகளோ யாருடனாவது இருப்பது ஆறுதலாக இருக்கலாம். தனிமை, அமைதி இவற்றைவிட இனிமையான தொந்தரவுகள் பிடித்து இருக்கலாம். இண்டெர்நெட்டில் தினமலரும், ஹிந்துவும் படிப்பது ஒரு வகை காம்ப்ரமைஸ்தானே? மேலும் இந்தியாவின் ஏதாவது டவுனிலிருந்தோ, கிராமத்திலிருந்தோ வந்த பெற்றோர்கள் எனில் அருகாமை லைப்ரரிக்குத் தனியாக செல்ல பயமோ கூச்சமோ தடுக்கலாம்.
நீங்கள் சொன்னமாதிரி விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் எல்லோரிடமும் “சூழ்நிலைக்குத் தகுந்தமாதிரி” தன்னை மாற்றிக்கொள்ளும் திறனோ, விருப்பமோ இருக்குமா என்பது சந்தேகமே. என்ன சொல்லுகிறீர்கள்?
krish 6:16 முப on செப்ரெம்பர் 10, 2012 நிரந்தர பந்தம் |
சரியாத்தான் சொல்லியுள்ளீர்கள்.நன்றி.
சத்யராஜ்குமார் 7:38 பிப on செப்ரெம்பர் 11, 2012 நிரந்தர பந்தம் |
ரேகா ராகவன், கவிதா, சித்ரன், க்ரிஷ், உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
//இந்தியாவுடன் ஒப்பிட்டுப்பார்க்கிறார்கள் அவ்வளவே//
ஒப்பிடுவதோடு நில்லாமல் அவை இல்லாததால் இங்கே தங்களுக்கு எந்த மகிழ்ச்சியுமில்லை என ஒட்ட மறுக்கிறார்கள்.
//ஆனால் எல்லோரிடமும் “சூழ்நிலைக்குத் தகுந்தமாதிரி” தன்னை மாற்றிக்கொள்ளும் திறனோ, விருப்பமோ இருக்குமா என்பது சந்தேகமே. என்ன சொல்லுகிறீர்கள்?//
//மாற்றிக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதும் எந்த விதத்தில் நியாயம்.//
எனக்கு எந்த எதிர்பார்ப்புமில்லை. மாறுவதும் மாறாததும் தனி நபர்கள் சம்பந்தப்பட்டதே. ஆனால் சூழ்நிலையைப் புரிந்து கொள்வதும், அதனுடன் தன்னைப் பொருத்திக் கொள்வதுமே வாழ்க்கைத் தத்துவம் என நமக்கு மட்டுமல்ல, பூச்சி பொட்டு என எல்லாவற்றுக்குமே இயற்கை விதித்திருக்கிறது. ஒரு சாரார் புலம்பி வருந்தி துயருறுவதையும், மறு சாரார் மகிழ்ச்சியுடன் புது சூழலை அனுபவிப்பதையும் ஒருங்கே கவனித்ததால் பதிவு செய்தேன்.