மூஞ்சில குத்து
சென்னையின் வெயிலைவிடக் கொடுமையான ஒரு விஷயம் உள்ளதென்றால் அது அந்த வெயிலில் பேருந்தில் போவதுதான். யாராவது உன்னைக் குளிரூட்டப்பட்ட காரில் கூட்டிச் செல்கிறேன், ஒரு கொலை செய்கிறாயா என்று கேட்டால் கூசாமல் கொலை செய்யச் சம்மதிக்கச் சொல்லும் கொடுமை அது.
அதிலும் இந்த வெப்பத்தில் உடல்கள் உரசிக் கொண்டு நிற்கும் கொடுமை இருக்கிறதே… ஏதோ நரகத்தில் எண்ணெய்க் கொப்பரையில் வறுப்பது என்று சொல்வார்களே… சென்னைவாசிகள் நரகம் சென்றால் அது ஒன்றும் அவர்களுக்குப் பெரிய பனிஷ்மென்ட்டாய்த் தோன்றாது என்றே தோன்றுகிறது.
இப்போது யோசித்துப் பாருங்கள்… இதில் நான் காலையும், மாலையும் அலுவலகத்துக்குப் போகவரப் பேருந்தை உபயோகப்படுத்துபவன். ஆனால் இந்தப் பயணங்களில் எக்ஸ்ட்ராவாய் எனக்குப் புரியாத விஷயம் ஒன்று உண்டு.
எங்கள் ஊரில்,”வெளுக்கறவன் கழுதைக்கு வரப்போக சுமை…” என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இப்போது பெரும்பாலான சாஃப்ட்வேர் ஆட்களையும் அதில் சேர்த்துக் கொள்ளலாம் போலிருக்கிறது. எல்லாப் பையன்களும் அதிலும் குறிப்பாக கணிப்பொறி ஆட்கள் போலத் தோன்றும் இளைஞர்கள் எல்லோரும் முதுகில் ஒரு பேக் பேக்கை மாட்டியுள்ளார்கள்.
பேருந்தில் உள்ளிருக்கும் நேரங்களில்கூட அவர்கள் அதைக் கழற்றுவதில்லை. கர்ணனின் உடலுடன் ஒட்டிப் பிறந்த கவசம்போல அவர்களுக்கு அது.
முதலில் தொழில் சம்பந்தமாக லேப்டாப் ஏதாவது கொண்டு செல்கிறார்கள் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவர்கள் உண்மையிலேயெ நான் சொன்ன கழுதை போல் துவைக்கும் துணிகளைச் சுமந்து செல்கிறார்களோ என்று இப்போது சந்தேகமாக இருக்கிறது. அவர்கள் கொண்டு செல்லும் அந்தப் பைகள் அவ்வளவு பெரிதாய்ப் புடைத்திருக்கின்றன.
அதிலும் அந்த பேக்கை மாட்டிகொண்டு பேருந்தின் உள்ளே கூட்டத்தின் இடையே புகுந்து எல்லோருடைய முகத்திலும் பேக் உரச உரச நடப்பதும், கூட்டத்தின் நடுவே வந்து அந்த பேக்குடன் அப்படியே நின்றுகொள்வதும், யாரைப் பற்றியும் கவலைப் படாமல் இஷ்டத்திற்கு மொபைல் பேச்சும் அதுவுமாய்ச் சுற்றுகையில் அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாதோ இவர்களுக்கு என்றே எண்ணத் தோன்றும்.
முதலில் பொறுத்துக்கொண்டாலும் நாட்பட நாட்பட இது ஒருவாறு பெரும் எரிச்சலாகிக் கொண்டே வந்தது. ஒருநாள் காலையில் பேருந்தில் இதே போன்ற ஒரு நிகழ்வு நடக்க, நல்ல எரிச்சலுடனும் ஆனால் முகத்தில் ஒரு மாறாத புன்சிரிப்புடனும் அந்த இளைஞனைக் கேட்டேன்.
“ஏன் தம்பி… இந்த பேக்கை கழற்றி உட்கார்ந்திருக்கும் யாரிடமாவது கொடுக்கக் கூடாதா…? எல்லோருக்கும் கஷ்டமாய் இருக்கில்ல…?”.
சொல்லிவிட்டு இத்தனைபேர் எதிரில் கேட்டுவிட்டோமே… அவன் ஏதாவது வருத்தப்படுவானோ என்று யோசித்துக் கொண்டிருக்கையில் பதிலுக்கு அவன் கேட்ட கேள்வி என்னை ஆச்சர்யப்பட வைத்தது.
“சார்… நீங்க வெளியூரா…?”.
ஆக, பேக் முகத்தில் இடிக்கிறது… கொஞ்சம் கழற்றி வை…!” என்று பேருந்தில் சொல்பவன் சென்னைக்குப் புதுசு என்ற புதிய உண்மை எனக்கு அன்றைக்குத் தெரியவந்தது.
காஞ்சி ரகுராம் 12:37 பிப on ஜூலை 31, 2010 நிரந்தர பந்தம் |
இல்ல சார், இந்த கணினிக்காரர்கள்தான் மாநகரப் பேருந்துக்குப் புதுசு. சென்னைவாசிகள் பஸ்ஸில் ஏறியதுமே, கையில் இருப்பது டிபன் பாக்ஸாக இருந்தாலும் யாரிடமாவது கொடுத்துவிட்டு ஹாயாக நிற்கவே பார்ப்பார்கள். அதிலும் மகளிர் வரிசையில் கொடுத்து நிற்பதில் அலாதி பிரியமானவர்கள்.
ஆனால், இந்த கணினிக்காரர்கள், இத்தனை நாட்களாக அவர்களின் கம்பெனி பஸ்ஸில் சொகுசாகச் சென்று, அங்கே விலை ஏற்றப்பட்டதும் மாநகரப் பேருந்துக்குப் புதிதாக மாற்றலாகி, நின்று கொண்டு இம்சை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆக, இனி நீங்கள், “தம்பி, நீ பஸ்ஸுக்கு புதுசா” என்று தாராளமாக கேட்கலாம் 🙂
மீனாட்சி சுந்தரம் 1:27 முப on ஓகஸ்ட் 1, 2010 நிரந்தர பந்தம் |
ஆனா, அந்த பையில் அவர்கள் என்ன கொண்டு போகிறார்கள் என்று சொல்லவில்லையே ரகுராம்…!
காஞ்சி ரகுராம் 7:51 முப on ஓகஸ்ட் 5, 2010 நிரந்தர பந்தம் |
அது எனக்கும் புரியாத புதிர்.
அதை அறிந்துகொள்ள நெற்று ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது.
டைடல் பார்க்கில் திடீரென்று செக்யூரிட்டி பலப்படுத்தப்பட்டது. எல்லாருடைய பையையும் திறந்து திறந்து பலத்த சோதனையிட்டார்கள். ஒரு ஐந்து நிமிடம் அங்கே நின்றிருந்தால் பையிலிருக்கும் மர்ம வஸ்துக்களைப் பார்த்திருக்கலாம்.
ஆனால் அப்போது அது தோன்றாததில், அந்த பொன்னான வாய்ப்பை வீணடித்துவிட்டேன் 😦
கார்த்திக் 1:29 முப on ஓகஸ்ட் 1, 2010 நிரந்தர பந்தம் |
ஏன் சாப்டுவேர் வாசிகளெல்லாம், அவங்க கேப் (CAB) ல தானே போவாங்க?. எல்லாம் ரிசசென் எஃபக்டா?
ஜெகதீஸ்வரன் 1:14 பிப on ஓகஸ்ட் 1, 2010 நிரந்தர பந்தம் |
நண்பர்கள் தின வாழ்த்துகள் தோழரே!
– ஜெகதீஸ்வரன்
துளசி கோபால் 1:47 முப on ஓகஸ்ட் 2, 2010 நிரந்தர பந்தம் |
சென்னை வெயிலெல்லாம் ஜுஜூபி. இங்கே சண்டிகர் வந்து பாருங்க. மனுசனை வடாம் போட்டுறலாம்:(
சத்யராஜ்குமார் 5:31 பிப on ஓகஸ்ட் 2, 2010 நிரந்தர பந்தம் |
நீங்க சண்டிகர்லயா இருக்கிங்க? பஞ்சாப் பிரச்னை தலை விரிச்சு ஆடிட்டிருந்த சமயம் 47 செக்டர் கிட்டே கொஞ்ச நாள் இருந்திருக்கேன். ரோஸ் கார்டன்ல உக்காந்து சில கதைகள் கூட எழுதியிருக்கேன்!
padmahari 3:50 முப on ஓகஸ்ட் 2, 2010 நிரந்தர பந்தம் |
இந்த இடுகையைப் படிக்கும்போது எனக்கு என் பள்ளிக்காலங்கள் நியாபகத்துக்கு வருகின்றன. படிக்கிறோமோ இல்லையோ, கட்டாயமாக இருக்கவேண்டிய நோட்டுகள்/புத்தகங்கள் என்று ஒரு பட்டியல் எங்களுக்கு உண்டு (எல்லோருக்குமே). அதன்படி எடுத்துச்செல்லவில்லையென்றால் வாத்தியார் அடிப்பார், எடுத்துச்சென்றால் பஸ்ஸிலுள்ளவர்கள் ஏகத்துக்கும் கமெண்ட் அடிப்பார்கள். ஆக, பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம். அந்தப் பைகளை கொடுக்க நாங்கள் தயாராக இருந்தாலும், பெருந்தன்மையுடன் வாங்கிக்கொள்ள ஆட்கள் குறைவு என்பதுதான் நிதர்சனம்! அது இந்தப் பதிவுக்கும் பொருந்துமோ என்னவோ?!
பத்மஹரி,
http://padmahari.wordpress.com
துளசி கோபால் 12:21 முப on ஓகஸ்ட் 3, 2010 நிரந்தர பந்தம் |
இப்ப ஒரு மூணு மாசமாச்சு இங்கே வந்து. பட்டி(Buddi. H. P)யில் ஒரு ஃபேக்டரி போடும் வேலை கோபாலுக்கு. அநேகமாக இந்த வருசக் கடைசிவரை இருக்கவேண்டி வரலாம்.
செக்டர் 21 இல் இருக்கோம்.
pamaran 11:05 முப on பிப்ரவரி 10, 2015 நிரந்தர பந்தம் |
பேக் பேக்-ல இருக்குறது லேப் டாப்-யா. அத உங்கள மாதிரி ஆட்கள்ட்ட கொடுத்தா, திருப்பி வாங்கும் போது பேக் பேக் இருக்கும் . உள்ள லேப் டாப் இருக்காது -னு எங்களுக்கு தெரியுமையா
மீனாட்சி சுந்தரம் 7:51 முப on ஜூன் 11, 2015 நிரந்தர பந்தம் |
அதுசரி.!!!