Updates from பிப்ரவரி, 2010 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

  • சரசுராம் 11:40 am on February 26, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    நாளை மறுநாள் 

    எங்கள் ஊரில் எனக்கு தெரிந்த அண்ணன் ஒருவர் தனக்கு வேலையிலிருந்து விரைவில் ஓய்வு (Retirement) கிடைக்கப் போவதாகச் சொன்னார். சொன்ன போது அவர் கண்களில் அப்படியொரு சோகம். அந்த சோகம் அவரை சட்டென மிக வயதானவராய் தோற்றம் காண வைத்தது. விட்டால் அழுதுவிடுவார் போலிருந்தது. 35 வருட அரசாங்க உத்தியோகம். அதிலும் இடம் மாறாமல் அவர் அத்தனை வருடமும் பணியாற்றியது ஒரே இடத்தில். அதே இடம். அதே ஃபேன். அதே காற்று. எப்போதாவது மாறும் மனிதர்கள். ஆச்சர்யம் தாங்காமல் எப்படி முடிந்தது என்றேன். கை சொடுக்குவதற்குள் போய் விட்டது என்றார். இவ்வளவு மோசமான கை சொடுக்கை நான் கேள்விப்பட்டது இல்லை என்றேன். ஒய்வுக்கு பிறகு என்ன செய்ய போகிறேன் என நினைத்தாலே அடிவயிற்றில் அமிலம் சுரப்பதாகச் சொன்னார். ஓய்வென்பது அவ்வளவு பயங்கர விஷயமாயென்ன? கேட்டதும் எனக்கும் சேர்த்தே அந்த அமிலம் சுரந்தது.

    அவர் கொஞ்சம் இலக்கியம் பேசுவார். ஜெயகாந்தன், லா.ச.ரா., சி.சு.செல்லப்பா என அவர் பட்டியல் இலக்கியவாதிகள். அவருக்கு முன்பு ஓய்வு பெற்றவர்கள் அந்த ஏரியாவில் நிறையப் பேர் இருந்தார்கள். ஆனால் அவர் அவர்களுடன் பேசுவதை விட எங்களுடன்தான் பேசுவதையே அதிகம் விரும்புவார். ஏன் என்று காரணம் கேட்க அவர் சொன்னார். பேச்சில் எந்த மாற்றமும் இல்லாமல் கடந்த காலத்தின் ஆபிஸ் விஷயங்கள், புளித்துப்போன அதே அரசியல், அக்கம் பக்கத்து வீட்டை பற்றிய புரளி பேசுவது என அந்த வட்டம் மிக குறுகியதாக இருக்கும் என்றார். சரியோ தப்போ நட்பும் பகிர்தலும் சுமையை குறைக்கும் இல்லயா என்றேன். நான் சொன்னதில் இருந்த உண்மை புரிந்து சரி பார்ப்போம் என்றார்.
    இந்த மாதிரி வேலை பார்ப்பவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஓய்வுக்கு முன்பு. ஓய்வுக்கு பின்பு என்று. வேலைக்கு போகும் போது அவர்களின் தோற்றம் மிக உற்சாகமானதாக இருக்கும். ஓய்வுக்கு பிறகு உடனே தளர்ந்து போய் விடுவார்கள். திடும்மென ஒளவையார் மாதிரி வயதானவர்களாக தோற்றம் மாறி விடுவார்கள்.  அவர்களின் பேச்சின் தொனிக்கும் வயதாகிப் போவதை உணர்ந்திருக்கிறேன். என்ன காரணம்?  அவர்களின் உடலிற்கு தந்த ஓய்வை அவர்களின் மனத்திற்கும் சேர்த்து எடுத்துக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    மனம் அற்புதமானது. அதற்கு நிறம் இல்லை. மணம் இல்லை. வடிவம் இல்லை. அது தினமும் புது புது உடைகள் மாற்றி தன்னை புதுப்பித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதன் வயதை மட்டும் யோசிக்கவில்லை என்றால் அதன் இளமைக்கு எப்போதும் மேக்கப்பே தேவையில்லை.

    என்னைப் பொறுத்தவரை ஓய்வு பெற்றவர்களுக்கு சென்னை மாதிரியான பெருநகரங்கள் வரப் பிரசாதங்கள் என்று சொல்லுவேன். நாடகம் விருப்பமென்றால் நாடகங்கள். கிரேஸி மோகன், எஸ்.வி. சேகர் போன்றோரின் கிச்சுகிச்சு நாடகங்கள் தவிர நவீன நாடகங்களும் பார்க்கலாம்.  நல்ல திரைப்படங்கள் (தமிழ் படங்கள் அல்ல) வேண்டுமென்றால் Alliance Francoise, Indo Cine Appreciation Foundation (ICAF) போன்ற அமைப்புகள் காட்டும் தரமான உலக சினிமாக்கள். லைட் மியூசிக்கா அல்லது பாலமுரளிகிருஷ்ணா, அருணா சாய்ராம், ஒ.எஸ்.அருண் போன்றோரின் கிளாசிக் வேண்டுமா ஹிண்டுவோ தினமணி தினமும் புரட்டினால் ‘இன்றைய நிகழ்ச்சி’களில் கிடைக்கும் அதற்கான வாய்ப்பு. அதற்கு பிறகு அரசியல் நெடி அதிகம் இருந்தாலும் கொஞ்சம் சகித்துக் கொண்டால் அடிக்கடி நடக்கும் இலக்கிய கூட்டங்கள். மற்றும் மிக பிரமாண்ட நூலகங்கள் என நம்மை நமது நேரங்களை மிக பயனுள்ளதாக, மனதை எப்போதும் சந்தோசமாக வைத்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லுவேன்.

    குறிப்பாய் ஓய்வுக்கு பிறகு. இவைகள் தவிர நேரமில்லையென விட்டுப்போன நல்ல நண்பர்கள் நல்ல உறவினர்களின் நட்பை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் எல்லோரும் அறிந்த கோயில்கள் குளங்கள்.

    நான் அவரிடம் இந்த லிஸ்டை ஒப்புவித்தேன். அவரும் ஏற்றுக் கொண்டு அந்த ஊரில் கிடைக்கும் வாய்ப்புகளை மட்டும் பயன்படுத்திக் கொள்வதாக சொன்னார். அப்போது அவரது குரலில் நல்ல உற்சாகமும் நம்பிக்கையும் தெரிந்தது.

    அடுத்த முறை பார்க்கும் போது அவருக்கு முன்பு ஓய்வு பெற்ற அந்த நண்பர்களோடு (நான் ஏற்கெனவே சொன்ன) அண்ணா கலகலப்பாய் பேசிக் கொண்டிருந்தார். நான் அவரை பார்த்துவிட்டு நகர பிறகு அவர் என்னை பார்த்த போது சொன்னது இதுதான். ”நான் ஓய்வு பெற்றதற்கு பிறகு வந்து இவங்களோடு நட்பு வச்சுகிட்டா அது ரொம்ப சுயநலமா போய்விடும். அதுதான் இப்ப இருந்தே அவங்களோடு பேசி பழக ஆரம்பிச்சுட்டேன்”.
    -சரசுராம்.
     
    • அபர்ணா 12:16 பிப on பிப்ரவரி 26, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      வேலைக்குப் போகும் பெண்கள் ஓய்வு பெற்ற பிறகு என்னவெல்லாம் செய்யலாம்? அதையும் சொல்லுங்களேன்.

    • சத்யராஜ்குமார் 9:40 பிப on பிப்ரவரி 26, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      பொள்ளாச்சியில் கலைமகள் சபா தரமான பிற நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்கள். சினிமா, டி விக்கு வெளியே ஒரு உலகம் பல உலகங்கள் இருப்பதை நம் மக்களில் பெரும்பாலானோர் ஏனோ புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

    • subhashreeramakrishnan 2:01 பிப on மார்ச் 14, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      very good one…i felt as if i am that “ANNA”..hats off to sarsuram for that…now because of internet..i feel we can keep ourself engaged with good blogs like this…i am a home maker …i dont find time for my self ….meditation, yoga, books and net keeps me busy…ya..as mr.sathyarajkumar says there is a world beyond tv….

  • சத்யராஜ்குமார் 8:57 pm on February 19, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: ஜெமோ, ஜெயமோகன், jeyamohan   

    சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 4 

    ஒரு வெள்ளிக்கிழமை காலை பாஸ்டன் பாலா ட்விட்டரில் நம்பர் பெற்று செல்பேசியில் அழைத்தார்.

    ஜெயமோகன் வாஷிங்டன் டி சி வரார். ஒரு பஸ் டூர் போறோம். நீங்களும் வரலாமே?”

    சில மாதங்கள் முன்புதான் அவர் அமெரிக்க வருகை குறித்து இணைய தளத்தில் படித்தேன். எப்படியும் வெள்ளை மாளிகையை பார்க்க வருவீர்கள். அதற்கு மிக அருகில்தான் எனது அலுவலகம். அங்கே வரும்போது கூப்பிட்டால் உங்களை வந்து சந்திக்கிறேன் என அவருக்கு மின்னஞ்சல் செய்திருந்தேன்.

    உங்கள் பெயரை நான் அறிவேன். ஆனால் நீங்கள் எழுதிய கதைகளை படித்ததில்லை. நிச்சயம் சந்திக்கலாம் என ஜெமோ பதிலனுப்பினார்.

    ஏதேனும் ஒரு வகையில் அறிமுகமானவர்கள் டி சி வருவதாக அறிந்தால் அவர்களுக்கு அழைப்பு விடுக்கத் தவறுவதில்லை. சிலர் அதை சம்பிரதாயமாக கருதலாம். சிலருக்கு அதற்கான அவகாசம் இல்லாமல் போகலாம். இலவசக் கொத்தனார் போல சிலர் ஒரு முறை தவறினாலும் மறு முறை சந்தித்து விடலாம். ஜெமோ விசிட் என்பது முதல் இரண்டு வகைகளில் ஒன்றாகப் போய் விடும் வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஏனோ என் மனதுக்கு தோன்றி விட்டதால் இது குறித்து அதற்கப்புறம் நான் மறந்தே போனேன். பாலா கூப்பிட்டு பேசும் வரை.

    நியூயார்க் போன்ற நகரங்களுடைய சைசில் நாலில் ஒரு பங்கு கூட இல்லை வாஷிங்டன் டிசி. பஸ் டூர் எதற்கு? பார்க்க வேண்டிய இடங்களை உத்தேசமாய் தீர்மானித்துக் கொண்டால் ரயிலில் போவது உத்தமம் என்று நான் சொல்ல, ரயிலில் நகரம் தொட்டு, பின் நடப்பதென முடிவானது.

    மாலை டி சி தமிழ்சங்க ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் அழைத்தார். அவர் வீட்டில்தான் ஜெமோ தங்க உள்ளார். நாங்கள் அப்போதுதான் பரஸ்பரம் அறிமுகமாகிக் கொள்கிறோம். உங்கள் சிறுகதைகளை பத்திரிகையில் வாசித்திருக்கிறேன் என்று சொல்லி மகிழ்ச்சி ஊட்டினார் வேல்முருகன். அச்சிதழ்களில் எழுதி கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு மேலான பின்னும் கொஞ்சம் பேரேனும் என்னை நினைவில் வைத்திருப்பதை அறியும்போது, நெஞ்சம் சில்லிடுகிறது. மறு நாள் காலை East Falls Church ரயில் நிலையத்தில் எல்லோரும் சந்தித்துக் கொள்ள முடிவானது.

    காலை ஒன்பதரை வாக்கில் Falls Church ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஜெமோ-வை சந்தித்தேன். மனிதரின் பார்வை கூர்மையாக துளைக்கிறது. சுமார் முப்பது வினாடிகளுக்கு என்னை உச்சி முதல் பாதம் வரை துளைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் வெறுமனே புன்னகைத்தபடி அவர் என்ன யோசிக்கிறார் என புதிராய் பார்த்துக் கொண்டிருந்தேன்.

    பாலா எல்லோரையும் நிற்க வைத்து பிளாக்பெர்ரியில் போட்டோ எடுத்த பின் ரயில் வந்தது. அடுத்த இரண்டு நாட்கள் அவருடன் சுவாரஸ்யமாக, படு வேகமாக கடந்தன. நான் கலகலவென பேசக்கூடியவனல்ல எனினும், பாலா மற்றும் நியூஜெர்சியிலிருந்து வந்திருந்த அரவிந்த் ஆகியோரின் சரம் சரமான கேள்விகளுக்கு ஜெமோவின் பதில்கள் பனிப்பொழிவு போல கொட்டிக் கொண்டே இருந்ததை கேட்டு மகிழ முடிந்தது. கேள்விகள் ஓயும் தருணங்களில் அவரே ஒரு புது டாபிக்கை ஆரம்பித்து வைத்து விடுகிறார்.

    வெள்ளை மாளிகையை ஒட்டிய பூங்காவில் சிமென்ட் பென்ச்சில் உட்கார்ந்திருந்த அமெரிக்க அகோரியை ஆர்வமாய் படம் பிடித்துக் கொண்ட ஜெமோ, ‘நான் கடவுள்’ இயக்குனர் பாலாவிடம் இதைக் காட்ட வேண்டும் என்றார்.

    இடையில் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் முன்னர் நான் எழுதி பிழைத்த கதையை கேட்டுத் தெரிந்து கொண்ட ஜெமோ, ”நீங்க மாத நாவல் மாயையில் அகப்படாமல் தப்பித்து இங்கு வந்தது பெரிய விஷயம்.” என்றார். அவ்வப்போது இலக்கியம் பற்றி பேசாத சமயங்களில் அவரிடம் ஒரு தகப்பன் மனநிலை வெளிப்பட்டுக் கொண்டே இருப்பதை கவனிக்க முடிந்தது.

    கட்டிடங்களையும், நினைவிடங்களையும் பார்த்தலைந்து வெய்யிலில் வறுபட்ட பின் மாலை தமிழ் சங்க நிகழ்ச்சி. ஆர்ப்பாட்டமில்லாமல் மென்மையாய் உரையாடும் பதிவர் நிர்மலின் அறிமுகம் அங்கே கிடைத்தது. நிகழ்ச்சி முடிந்து திரும்புகையில் புதுக் கவிதைகளின் ஆதிக்கம் தமிழ் மொழியின் அழகியலை தொலைத்து விட்டதா என்ற வாசகரின் கேள்வி மிக நல்ல கேள்வி என்றார் ஜெமோ.

    அன்றிரவு ஒரு பத்து நிமிஷம் என் வீட்டில் தேநீர் அருந்திச் செல்ல எந்த தயக்கமுமில்லாமல் ஒப்புக் கொண்டார். அடுத்த பத்து நாட்களில் காலி செய்ய இருந்ததால் வீடு ஆங்காங்கே கொஞ்சம் பல்லிளித்துக் கொண்டு அலங்கோலமாகத்தான் இருந்தது. அமெரிக்க நடுத்தர மக்களின் வீடுகள் பற்றி அவர் எழுதிய கட்டுரையை அந்த கணம் மறு பரிசீலனை செய்திருப்பார் என நினைக்கிறேன்.

    என் மனைவி நன்றாக சமைக்கக் கூடியவர். ஆனால் ஜெமோ இரவுகளில் பழங்கள் தவிர வேறேதும் உண்ண மாட்டார் என்றறிந்ததும் பதட்டமாகி விட்டார். அன்றைக்குப் பார்த்து ப்ரிட்ஜ் காலி. தப்பிப் பிழைத்திருந்த ஓரிரு ஆரஞ்சுப் பழங்களையும் , எலுமிச்சம்பழத்தையும் வைத்து ஒப்பேற்றியதில் எனக்கும் ஒரு மாதிரி மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

    அதையெல்லாம் ஜெமோ சட்டை செய்த மாதிரி தெரியவில்லை. அரவிந்த், பாஸ்டன் பாலா, வேல்முருகனிடம் மிக சுவாரஸ்யமாய் இலக்கிய விவாதம் புரிந்து கொண்டிருந்தார்.

    க்ரைம் புதினங்கள் எழுதிக் கொண்டிருந்தவனின் வீட்டில் ஸ்ட்ரக்சுரலிசம் பற்றிய விவாதம். இந்த சந்திப்பு அப்பட்டமான ஒரு மாய யதார்த்த நிகழ்வு.


    1 | 2 | 3 |


     
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி