Updates from திசெம்பர், 2010 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

  • சித்ரன் ரகுநாத் 7:20 am on December 4, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: காதல் கதை, , பாடம், ஷேக்ஸ்பியர்   

    பன்னிரண்டாவது இரவு – ஒரு காதல் கதை 

    ‘ஒலிவியாவை உண்மையாகவும் ஆழமாகவும் நீ காதலிப்பது போலவே உன்னைக் காதலிக்கும் இந்த இளம் பெண்ணுக்கு என்ன நிலைமை ஏற்படும்? உன் காதலை அவள் பெற முடியாதென்று நீ அவளிடம் சொல்லியிருந்தால் அந்த பதிலால் அவள் திருப்தியடைந்திருக்க மாட்டாளல்லவா?’

    ‘ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காதலிக்கிற அளவு ஒரு பெண்ணால் ஆணைக் காதலிக்க முடியாது. பெண்களின் இதயம் இம்மாதிரி ஆழமான காதலையெல்லாம் தாங்காது’

    ‘அவளிடம் என் காதல் கதையையும் அதனால் நானடைந்த கஷ்டத்தையும் அவள் இதயம் உருகும்வரை சொல்.”

    ‘என் எஜமானன் போலவே நானும் உன்னைக் காதலித்தால், நீ அதை ஏற்றுக்கொள்ளும்வரை விடமாட்டேன். காற்று முழுவதையும் உன் பெயரால் நிரப்புவேன். மலைகள் முழுவதும் உன் பெயரை எதிரொலிக்க வைப்பேன்.’

    தற்செயலாக பையன் படித்துக்கொண்டிருந்த பாடபுத்தகத்தை வாங்கிப் பார்த்தபோது மேற்கண்ட வரிகள் கண்ணில் பட்டன. அது ஒரு ஆங்கில நான் – டீடெய்ல் புத்தகம். ஷேக்ஸ்பியரின் (சிறு)கதைகள். ஜெயராஜ் படம் வரைந்திருந்தார். “ Twelfth Night”  என்ற ஒரு கதையில்தான் இதெல்லாம் வருகிறது. கதையில் சரமாரியாக யார் யாரோ யாரையெல்லாமோ காதலித்து உருகிக்கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு முக்கோண அல்லது நாற்கோண காதல் கதையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். முழுதாகப் படிக்கவில்லை. குறிப்பிட்ட வரிகளை மட்டும் கொஞ்சம் மொன்னையாக மொழிபெயர்த்திருக்கிறேன்.

    பாடத்துக்குக் கீழே சில கேள்விகள் கொடுத்திருந்தார்கள். அந்த கேள்விக்கான பதில்களை படித்து பையனாகப்பட்டவன் பரீட்சையில் எழுத வேண்டும். அவற்றில் சில:

    வயோலா ஆர்ஸினோவின் மேல எப்படி காதல் வயப்பட்டாள்? அதை எவ்வாறு அவனிடம் அதை வெளிப்படுத்தினாள்?

    ஒலிவியா சிசாரியோவிடம் எப்படித் தன் காதலைச் சொன்னாள்?

    ஒரு ஆணாகவும் ஒரு காதலனாகவும் இருந்த செபாஸ்டியனைப் பற்றி என்ன நினைக்கிறாய்?

    பிறகு என் மனைவி இந்தக் கேள்விகளையெல்லாம் மகனிடம் கேட்க அவன் படித்தவற்றை ராகம் போட்டு ஒப்பித்துக் கொண்டிருந்தான். வீடு முழுக்க காதல் வழிந்துகொண்டிருந்தது.

    நான் எதுவும் கேட்க முற்படுவதற்குள் மனைவிக்கு ஒரு ஃபோன் வந்தது. மகனின் வகுப்பில் படிக்கும் இன்னொரு பையனின் அம்மா. கொஞ்சம் ஒட்டுக்கேட்டதில் இந்த ஒலிவியா- வயோலா- சிசாரியோவின் காதல் விவகாரத்தைப் பற்றித்தான் அக்கப்போர் பேசிக்கொண்டிருந்தார்கள் என்று தெரிந்தது. மனைவி ஃபோனை வைத்த பிறகு ரகசியமாய் என்ன விஷயம் என்று கேட்டபோது ஐந்தாம் வகுப்புப் படிக்கும் சின்னப் பசங்களுக்கு இந்த மாதிரி காதல் கதையெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்லையா என்று அந்தப் பையனின் அம்மா அங்கலாய்த்தார்களாம். பள்ளி வளாகத்தில் ஆர்.ஐஸ்வர்யா-வின் அம்மா கூட இதையேதான் சொல்லி ஒருபாட்டம் புலம்பியிருக்கிறார். “அதுவும் ஸ்ட்ரெய்ட்டான ஒரு நல்ல லவ் ஸ்டோரிய சொல்லிக்குடுத்தாக்கூட பரவாயில்லை. இதென்னமோ கொளப்பமான காதல் கதையால்ல இருக்கு”. என்றாராம்.

    “எப்படி டீச்சர் இதையெல்லாம் பசங்களுக்கு சொல்லித்தர்ராங்க? இதெல்லாம் இப்பவே தெரிஞ்சு பசங்க கெட்டுப்போயிர மாட்டாங்களா?” மனைவியின் கேள்வி வந்து விழுந்தது.

    “டிவி. சொல்லித்தராததையா டீச்சர் சொல்லிக்குடுக்கப் போறாங்க..” என்றேன்.

     
    • REKHA RAGHAVAN 7:40 முப on திசெம்பர் 4, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      //“டிவி. சொல்லித்தராததையா டீச்சர் சொல்லிக்குடுக்கப் போறாங்க..”//

      அதானே! எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?

    • என். சொக்கன் 1:01 முப on திசெம்பர் 6, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல கட்டுரை சித்ரன் – ஷேக்ஸ்பியரின் கதைக்கருக்கள் சிக்கலானவைதான். ஆனால் கொஞ்சம் முயன்றால் எல்லோருக்கும் புரியும்படி சொல்லலாம், நம் விருப்பம்போல் நீட்டிச் சுருக்கலாம், குழந்தைக் கதைகளாகக்கூட மாற்றலாம் – என்னுடைய ஷேக்ஸ்பியர் வாழ்க்கை வரலாறுப் புத்தகத்தின் பின்பகுதியில் இதைக் கொஞ்சம் முயற்சி செய்தேன். படித்தவர்களுக்கு எவ்வளவு தூரம் புரிந்தது என்று தெரியவில்லை 🙂

      – என். சொக்கன்,
      பெங்களூரு.

    • காஞ்சி ரகுராம் 1:36 முப on திசெம்பர் 6, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      அங்கலாய்க்கும் அம்மாக்களுக்கு: இந்தப் பாடங்கள் சற்று ஓவரென்றாலும், பத்தோடு பதினொன்றாய்க் கரைந்துவிடும் (எதைப் படித்தாலும் பரிட்சையுடன் மறந்து விடுகிறார்களே!). ஆனால் நீங்கள் பார்க்கும் டிவி சீரியல்கள்தான் விஷ விருட்சத்தை பிஞ்சு மனங்களில் விதைத்துக் கொண்டிருக்கின்றன.

    • செந்தில் 10:43 பிப on திசெம்பர் 7, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      அருமை சித்ரன்ஜி.. பசங்க பலதும் படித்து பாண்டித்தியம் பெற இது உதவும். 🙂

    • சித்ரன் 12:34 பிப on திசெம்பர் 8, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நன்றி! @ரேகா ராகவன், என்.சொக்கன், காஞ்சி ரகுராம், செந்தில்.

  • சித்ரன் ரகுநாத் 1:26 pm on July 2, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: அடையாறு, அட்ரஸ், குடி, , போதை, முகவரி, விஸ்கி   

    விஸ்கி 

    என் நண்பர் ஒருவர் அடையாறில் ஒரு வீட்டுக்கு புதிதாய்க் குடி போயிருந்தார். இன்று அவர் அழைப்பின் பேரில் அவர் வீட்டைத் தேடிப் போனேன். அவர் சொன்ன வழியும் அடையாளங்களும் மண்டைக்குள் இருந்தது. மெயின் ரோட்டிலிருந்து சட்டென்று பார்த்தால் தெரியாத கிளை மெயின் ரோட்டில் உள்ளே வரவேண்டும். ரோடு முக்கில் ஒரு காலணியகம் இருக்கும். அதை ஒட்டின ரோடு. அதற்குள் நேராக உள்ளே வந்தால் இரண்டாவது லெஃப்ட். அங்கேயிருக்கிற ஒரு ஸ்கூலுக்கு எதிர் வீடு.

    ரொம்ப சுலபமாய் கண்டுபிடித்திருக்க வேண்டியது. ஆனால் இரண்டாவது லெஃப்டில் திரும்பி, பிறகு தேடியதில் அப்படி ஒரு ஸ்கூல் இருக்கிற சுவடே இல்லை. ஆகவே அந்தத் தெருவில் ஒரு கடையருகே பராக்குப் பார்த்தபடி நின்றிருந்த ஒருவரிடம் வண்டியை நிறுத்தி அங்கே ஒரு ஸ்கூல் இருக்கிறதா என்று விசாரித்தேன். ஏண்டா கேட்டோமென்று ஆகிவிட்டது. அவர் விஸ்கி போன்ற ஏதோ வாசத்துடன் லேசாய்த் தள்ளாடியபடி..

    ”எந்த ஸ்கூலு?”

    பள்ளியின் பெயரைச் சொன்னேன்.

    “அந்தப் பேர்ல ஒரு ஹோம் அப்றோம் ஒரு ஸ்கூல் ரெண்டுமே கீது.. நீ எங்கப் போணும்”

    ”ஸ்கூல்”

    ”ஸ்கூல் இங்க கடியாது. அது வேற எடத்துல கீதுபா. ஹோம்-ன்றது வேற. ஸ்கூல்ன்றது வேற. ஸ்கூல்-ல இன்னா வேல ஒனிக்கு?

    “ஸ்கூல்-ல எதும் வேலையில்ல. எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் புதுசா குடிவந்திருக்கார்.. அவர் வீட்ட தேடிட்டிருக்கேன்”

    “தின்னவேலிலேந்து வந்துக்கிறாரே அவுரா.. வாத்தியாரா?”

    “இல்ல. இந்த ஸ்ட்ரீட்-ல ஸ்கூல் இருக்கா இல்லியா?”

    “ஸ்கூலா? ஹோமா.. கரீட்டா சொல்லு.. அட்ரஸ் எதுனா வெச்சுனுருக்கியா?”

    “அட்ரஸ்லாம் இல்ல.. செகண்ட் லெஃப்ட்-ல ஸ்கூல்-க்கு எதுத்தா மாதிரின்னார்..”

    “த்தோடா… அட்ரஸ் இல்லேன்ற! எப்டி கண்டுபுடிப்ப? ஒனிக்கு எங்காப் போணும் சொல்லு.. அவரு முதலியாரா.. நாலு மாசத்துக்கு முன்னாடி வந்தாரு?”

    “இல்ல. இன்னிக்கு மத்தியானம்தான் வந்தார்.. செகண்ட் லெஃப்ட் இதான?..”

    “இத்தான்.. இன்னாபா ப்ரெண்ட்டூன்ற..ஃபோன் வெச்சிகிறாரா? வண்டிய ஆஃப் பண்ணுபா.. அவர் கைல போனப் போடு.. ந்தா.. ஓரமா நில்லு.. ஆட்டோ வர்து பாரு. இட்ச்சுறப்போவுது..”

    “அப்ப அந்த ஸ்கூல் இங்க இல்லயா..”

    “ஸ்கூல் மெயின் ரோட்டாண்ட கீது.. நீ அவரு கைல போன போட்டு அட்ரஸ் கேளுபா.. நான் சும்மாங்காட்டி சொன்னா அப்பால நீ இன்னிக்கு பூரா அலஞ்சுன்னேருப்ப. வோணுமா?!”

    இந்த ஆளிடம் கேட்டுக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்றுணர்ந்து நான் வண்டியை ஆஃப் பண்ணிவிட்டு போனை எடுத்து நம்பரை அழுத்தி நண்பரை விளித்தேன்..

    “த பாரு.. நான் தான் இந்த ஏரியா டி.வி கேபிள் கனெக்‌ஷனு … எங்க குடிவந்துக்குறாருன்னு கரீட்டா சொல்லு. வோணும்னா நான் வந்து வூட்ட காட்டுறேன். டி.வி வெச்சுக்கிறாரா?”

    “வீடு தெரியாமதான உங்ககிட்ட கேட்டுக்கிட்டிருக்கேன்..”

    “போன என்னாண்ட குடு… நான் தெளீவா கேட்டு சொல்றேன்.. நீ பாட்டுக்கு எதுனா கேட்டுகினுருக்காத.. அப்றம் இன்னோரு தபா நீ வேற எங்கணா பூடுவ”

    நண்பரிடம் போனில் பேசவிடாமல் சைடில் கூடவே விஸ்கி பேசிக்கொண்டிருந்தார். ‘அட குடுன்றன்ல.. இன்னா.. சொல்றது புர்ல?”

    கொஞ்சம் விட்டால் என் கையை முறுக்கி என் பிடரியில் ஒன்று போட்டுவிடுவாரோ என்று பயம் வந்தது.

    நான் அங்கிருந்து உடனே அகலுவதுதான் நல்லது என்கிற முடிவில் அவசரமாக நண்பரிடம் நான் இருக்குமிடத்தைச் சொல்லி எப்படி வரவேண்டுமென்று கேட்டேன். நண்பர் “ஸாரிங்க.. நீங்க வந்தது சரிதான். ஆனா செகண்ட் லெஃப்ட்- இல்ல லாஸ்ட் லெஃப்ட்.. அப்டியே திரும்பி மெயின் ரோட்லயே வாங்க.. கண்டு புடிச்சிரலாம்.” என்றார்.

    “இன்னாபா.. இன்னான்றாரு ப்ரண்டு… ஒனிக்கு ஸ்கூலுக்கு போணுமா.. ஹோமுக்கு போணுமா..”

    ’ஸ்கூலுக்கு பக்கத்துல இருக்கற ப்ரெண்டோட ஹோமுக்கு’ என்று மனதில் நினைத்துக் கொண்டு “இல்லீங்க. அவர் கரெக்டா வழி சொல்லிட்டாரு.. நான் கண்டுபுடிச்சு போய்க்கிறேன்..”

    வண்டியைக் கிளப்பினேன். “இன்னாத்த கண்டுபுட்ச்ச.. ஒரு அட்ரஸ் சரியா வச்சுகினு வரமாட்ட? ந்தா.. நில்லுன்றன்ல?’

    “ரொம்ப தேங்க்ஸ்-ங்க நான் போய்க்கிறேன்..” நான் சட்டென்று தெருவில் U போட்டுக் கிளப்பினேன்.

    “இன்னாத்துக்கு தேங்க்ஸூ.. த.. பார்ரா தொர போய்க்கினேக்றாரு… நேரப் போயி லெஃப்ட்-ல.. அட.. நில்லுன்றேன்.. அந்த ஸ்கூலு.. த்*** டேய்ய்… அங்க போய் அலஞ்சுகினுருக்காத.. வண்ட்டான் பாரு… பேமானி.. அட்ரஸ் கேட்டுக்கினு…

    விஸ்கியின் குரல் தேய்ந்து மறைய நான் விரைந்து லாஸ்ட் லெஃப்ட்-டில் இருந்த ஸ்கூலுக்கு எதிர்புறம் இருந்த நண்பரின் வீட்டை சரியாக சென்றடைந்துவிட்டேன். அங்கே விஸ்கி சொன்ன ஸ்கூலும் ஹோமும் அடுத்தடுத்து இருந்தது.

    நண்பர் வீட்டில் அரைமணி நேரம் உட்கார்ந்து பேசிவிட்டு வந்த வழியிலேயே திரும்பும்போது, ரோட்டோரமாய் ஒரு ஆட்டோ நின்றிருக்க அதன் ட்ரைவர் ஆட்டோவுக்குள் உட்கார்ந்திருந்தவரிடம் சத்தமாய்க் பேசிக் கொண்டிருந்தார். “யோவ்..  சாவு கிராக்கி.. ஒனக்கு எங்கதான்யா போணும்? ஒழுங்கா சொல்லித் தொலை.. கய்தே.. அட்ரஸூ கேட்டா  தெரியாதுன்ற.. என்னோட ஆட்டோல ஏறி ஏய்யா உசுர வாங்கற? பேமானி…”

    திரும்பிப் பார்த்த போது ஆட்டோவினுள் மேலதிக போதையில் விஸ்கி சரிவாய்ப் படுத்திருந்தார்.

     
    • ஆயில்யன் 1:39 பிப on ஜூலை 2, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      சரக்கு வுட்டுக்கிட்டு இது மாதிரி லந்து கொடுக்கறதுக்குன்னே நிறைய பார்ட்டீங்க இருக்கு போல 🙂 சரக்கு உள்ள போயிட்டாலே அவுங்களும் நல்லா உசரத்துக்கு போயி குந்திக்கினு வுடற அலம்பல் இருக்கே அவ்வ்வ்வ்வ் 🙂 பாவம் அந்த ஆட்டோ டிரைவரு லக்கேஜ் ஏத்திக்கிட்டு எங்க போய் திரிஞ்சுக்கிட்டிருக்காரோ ! :))

    • நண்பன் 10:50 பிப on ஜூலை 2, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      இந்த பதிவோட நோக்கம் என்ன?

      • சித்ரன் 4:27 முப on ஜூலை 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

        இந்தப் பதிவின் நோக்கம் எனக்கேற்பட்ட அனுபவத்தை கொஞ்சம் சுவாரஸ்யமாக பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதுதான்..

    • minimeens 4:30 முப on ஜூலை 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      இது ரொம்ப அழகு…!

    • தாகன் 11:44 முப on ஜூலை 7, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      இந்த ஜென்மத்தில் இனிமேல் வேற யார்கிட்டேயும் address கேக்க மாட்டிங்க!!!!!

    • செந்தில் 10:13 பிப on ஜூலை 8, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      சித்ரன்ஜி, முகவரி அறிந்திட மளிகை கடை அல்லது துணி தேய்ப்பவரை அனுகவும், இவ் இருவரும், அவர்களின் சுற்த்தாரை பெரும் அளவு அறிந்து வைத்திர்பார்கள்.

  • சித்ரன் ரகுநாத் 12:47 pm on June 21, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: திரைப்படம், பொழுதுபோக்கு, விமர்சனம்   

    உலகக் கொட்டாவி 

    இந்த வார ‘கற்பனை எக்ஸ்ப்ரஸ்’ இதழுக்காக நான் எழுதிய தலையங்கம்:

    இப்போதெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆனவுடனேயே ரசிகர்கள் ஒவ்வொருவரையும் அந்தப் படம் அல்லது அதற்கான விமர்சனங்கள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை வலைப்பதிவுகளில் எல்லோரும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இணையத்தில் கச்சேரி களைகட்டிவிடுகிறது.

    சிலர் பார்த்துவிட்டும் சிலர் பார்க்காமலும் எழுதுகிறார்கள். விமர்சனங்களைப் படித்தவர்களில் சிலர் உஷாராகி தன் பர்ஸைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள். ரிஸ்க் பிரியர்கள் அவற்றைப் புறக்கணித்துவிட்டு குடும்பத்தோடு தியேட்டரில் ஆஜராகி விடுகிறார்கள். சிலர் டிவிடியும் டோரண்டும் தேடுகிறார்கள். நடிகர் நடிகைகளின் அல்லது இயக்குநர்களின் ரசிகர்களை ஒன்றும் செய்வதற்கில்லை. எப்படியிருந்தாலும் பார்த்துவிட்டுத் தன் அபிமானத்தைப் பதிவுசெய்துவிடுவார்கள்.

    உள்ளங்கையில் எதையோ ஒளித்து மூடி எதிரிலிருப்பவரிடம் என்ன இது என்று கேட்டு நிறைய பதில் வாங்கிப் பின்பு இதுதான் என்று திறந்து காட்டுவதும் மற்றவர் ’ச்சே!.. பத்து பைசாவா.. இதுக்குத்தான் இந்த பில்டப்-பா.. நான் என்னமோ என்று நினைத்தேன்’ என்று வழிவதுமான விளையாட்டுப் போல இருக்கிறது சில நேரத்தில். வெளியாகிற படங்களைச் சொல்கிறேன்.

    இப்பொழுதெல்லாம் புதிதாக எந்தப் படம் வந்தாலும் எப்படியிருக்கிறதென்று படம் பார்த்தவர்களைக் கேட்டால் “கதை சரியில்லை. ஆனால் Making is good” என்கிற திருவாசகம் தவறாமல் எல்லோர் வாயிலும் வந்துவிடுகிறது. ஸ்டைலான எடிட்டிங், அசத்தும் சினிமோட்டோகிராபி, ஆடத் தூண்டும் கொரியோகிராபி மற்றும் இன்னபிற கிராபிகளில் திரைக்குத் தேவைப்படும் மற்ற தொழிற்நுட்ப வல்லுநர்கள் படத்தின் கதையை மீறி தங்கள் திறமையை வெளிப்படுத்திவிடுகிறார்கள்தான். தப்பில்லை.

    திரைப்பட ஆர்வமிருக்கிற யாராயினும் கிடைத்த டிஜிட்டல் கேமராக்களை வைத்துக் கொண்டு குறும்படங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆக ஒரு லட்சம் ரூபாய் இருந்தால் யார் வேண்டுமென்றாலும் அழகாக ஒரு படம் பண்ணி டைரக்டர் கார்டு போட்டுக்கொள்ளலாம் என்கிற இந்தச் சூழலில் ஏற்கெனவே கோடம்பாக்கத்தில் தன் கால்களை பலமாகப் பதித்தவர்கள் எத்தனை கவனமாக இருக்கவேண்டும்? நான் பார்த்த ஒரு சில குறும்படங்கள் அருமையாகவே இருக்கின்றன. வாய்ப்புகள் சரியாக அமையும் பட்சத்தில் இவர்கள் ஒரு புயலாக கோ.பாக்கத்திற்குள் பிரவேசித்து மக்களை ஆச்சரியத்திலாழ்த்தும் படங்களைக் கொடுக்கத் தவறமாட்டார்கள் என நம்புகிறேன.

    வெறும் ஆர்ப்பாட்டங்கள் எதையும் நிரூபிக்கப்போவதில்லை. இறுதியில் வெல்வது சரக்கு (திரைக்கதை) மட்டுமே. உலகத் திரைப்பட டி.வி.டிக்களை லாரியில் அள்ளிக் கொண்டு போகிற கோலிவுட்டுக்கு இது தெரியாததல்ல.

    ரசிகர்கள் மனதில் லோடு லோடாக ஏற்றிவைத்துக் கொண்டிருக்கிற எதிர்பார்ப்புகளுக்கு ஈடாக எதுவும் அளித்துவிடவில்லையென்றால் பின்னர் ‘படம் குப்பை’ என்கிற வார்த்தை எளிதாய் வந்து விழுந்துவிடும். படம் பற்றி மாதக் கணக்கில் செய்துவந்த பில்டப்-புகளும் அது வரை செய்து வந்த அதிரடி விளம்பரங்களும் நொடியில் தலை குப்புற விழும் நிலை ஏற்படும்.

    கோடிகள் கொட்டுகிற உழைப்பு என்றாலும் கதையோ திரைக்கதையோ காட்சியமைப்புகளோ வசனங்களோ சொதப்பும் பட்சத்தில் எத்தனையோ பேர் தூக்கங்கெட்டு மெனக்கெட்டு கல்லிலும் முள்ளிலும் கால் கடுக்கப் பாடுபட்டதை ஒரு கொட்டாவியால் சிம்பிளாகப் புறக்கணித்துவிடுவான் ரசிகன். ஆனாலும் கொடுத்த காசு விரயமான உணர்வைக் குறைக்க “படத்துல ஃபோட்டோகிராபி அசத்துது. அதுக்காகவே பாக்கலாம்” என்று பிறரிடம் சொல்லி சமாதானமடைந்து கொள்ள நேரிடுவது வேறு கதை.

    சினிமாவில் நடிகர்களையும் இயக்குநர்களையும், பாடகர்களையும், இசையமைப்பாளர்களையும் மட்டுமே அறிந்து வைத்திருந்த காலம் போய் இருபதாண்டுகளுக்கு முன்னமிருந்தே மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களையும் மக்கள் இனங்காணத் துவங்கிவிட்டார்கள். தோட்டா தரணியிலிருந்து ஆரம்பித்து விக்ரம் தர்மா, லெனின் – வி.டி.விஜயன், சாபு சிரில், சந்தோஷ் சிவன், ஆண்டனி, ஸ்ரீதர், நீரவ் ஷா என்று நிறைய பேரை வாயிலிருந்து உதிர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் கொஞ்ச நாளில் கொரியப் பட கொரியோகிராபர்களின் பெயர்களைக் கூடச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

    ஆக ஒரு டைரக்டர் தோல்வியடையும் இடத்தில் குறிப்பிட்டுச் சொல்ல படத்தில் மற்ற கலைஞர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்களுக்கு அது ப்ளஸ்தான். ஆனால் தயாரிப்பாளர் பாவமல்லவா?

    தொழில்நுட்பத்தை மட்டுமே வைத்துக்கொண்டு எந்தப் படமும் வெற்றியடைந்துவிட முடியாது. சினிமா என்பது கூட்டு முயற்சி. திரைப்படமெடுக்கும் ஒவ்வொரு டீமுக்கும் தாங்கள் கூட்டாக ஜெயிக்க வேண்டும் என்பதுதான் அவா. மறுப்பதற்கில்லை. ஆனால் நடுக்கடலிலும், மலை உச்சியிலும் கயிறு கட்டித் தொங்கி எடுத்த படத்தில் கதை சரியில்லையென்றால் அப்புறம் திரையரங்கில் பாப்கார்ன் வாங்க ஆளிருக்காது என்பதை இயக்குநர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

    பிரம்மாண்டங்கள் என்பதெல்லாம் தாண்டி சும்மா ஒரு சின்ன அழகான கதையை அதிராமல் சொன்னாலே அது நிச்சயம் வெற்றி பெறும்.

    தியேட்டருக்குள் இரண்டரை மணி நேரம் அடைபடுகிற ரசிகர்களை சிரிக்க வைத்து, அழ வைத்து, உணர்வுகளைக் கிள்ளி, நெகிழவைத்து, நினைவலைகளைக் கிளறி, நெஞ்சம் நிறைத்து வீட்டுக்கு அனுப்பிவைப்பதென்பது ஒரு டைரக்டருக்கு சாதாரணப் பொறுப்பு கிடையாது.

    கரணம் தப்பினாலும் கொட்டாவிதான். உலகப் படமெடுப்பவர்களுக்கும் இது பொருந்தும்.

     
    • சத்யராஜ்குமார் 8:13 பிப on ஜூன் 21, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      அத்தி பூத்தாற்போல வரும் நல்ல படங்களின் கலையழகை உணர்வதற்கு அடிக்கடி வரும் நொள்ளைப் படங்கள் பெரும் உதவி புரிகின்றன என்பதால் அவைகளையும் வரவேற்கிறேன். 🙂

    • சித்ரன் 12:01 முப on ஜூன் 22, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      @சத்யராஜ்குமார்: சும்மா வரவேற்பது மட்டும்தானா? இல்லை தியேட்டரில் போய்ப் பார்க்கிறீர்களா?

    • Karthik 12:20 முப on ஜூன் 22, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல பதிவு.
      ஆங்கில படங்களை : லவ், ஆக்க்ஷன், காமெடி, டிராமா, ஹாரர் ன்னு வகைப்படுத்தர மாதிரி.
      தமிழ்ப் படங்களை : நல்ல திரைக்கதை, நல்ல இசை, நல்ல ஃபோட்டோகிராபி ன்னு தான் சொல்ல முடியுது.

    • பொன்.சுதா 1:23 முப on ஜூன் 24, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல பதிவு சித்திரன்.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி