சிறுகதை. சிக்கல்கள். [3]
அடுத்து எழுதப் போகும் கதை காலையில் பார்த்த சுவாரஸ்யமான நிகழ்ச்சியாகவும் இருக்கலாம், அல்லது போன அத்தியாயத்தில் குறிப்பிட்ட நாய்க்குட்டி சம்பவம் போல முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் நடந்ததாகவும் இருக்கலாம்.
சில விஷயங்களில் சுவாரஸ்யம் மட்டுமே இருக்கும். அதைச் சுற்றி கதையைப் பின்ன கொஞ்ச நேரம் தேவைப்படும்.
ஆனால், வேறு சில சம்பவங்களோ அப்படியே சிறுகதையாகவே மனசுக்குள் ஒட்டிக் கொண்டிருக்கும். அப்படி ஒட்டிக் கொண்ட கதைகளுக்கு என்றுமே வீரியம் ஜாஸ்தி.

குமுதத்தில் எழுதிய ‘காதல்’ என்ற சின்னஞ்சிறிய கதை என் மனசுக்குள் சிறுகதையாகவே போய் பதிந்து கொண்ட ஒன்றாகும்.
ஒரு முறை வாகனத்துக்கு பெட்ரோல் போட்டு விட்டு காசு கொடுத்தபோது, பாக்கியாகக் கிடைத்த ரூபாய் நோட்டில் ‘சாந்தி ஐ லவ் யூ’ என்று கிறுக்கியிருந்தது.
அந்தக் கிறுக்கலைப் பார்த்த கணமே ‘காதல்’ சிறுகதை மனதில் உதித்து, அப்படியே சிறுகதை வடிவிலேயே அந்த ரூபாய் நோட்டு என் மனசுக்குள் பதிவாகிக் கொண்டது.
இது மாதிரி கதைகள் உடனே எழுதி விட வேண்டும் என்ற உந்துதலைத் தருபவை.
அவசரமாய் யாராவது கதை கேட்டால் இப்படி சிறுகதையாகவே பதிந்த நிகழ்ச்சியைத் தேர்ந்தெடுத்து உடனே எழுதிக் கொடுத்து விடலாம். அவகாசம் நிறைய இருப்பின் சுவாரஸ்யம் என்று குறித்து வைக்கப்பட்ட சம்பவங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சாவகாசமாய் அதைச் சுற்றி கதை ஒன்று பின்னலாம்.
மனசு வடிகட்டி வைத்திருக்கும் விஷயம் என்பதால் சந்தேகமில்லாமல் அது பிறரால் விரும்பிப் படிக்கப்படும்.
போன பாராவுக்கு முந்தைய பாராவில் குறிப்பிட்ட ‘கதை பின்னுகிற’ சமாசாரம் பற்றி இனி சொல்கிறேன்.
(தொடரும்)
அனைத்து பகுதிகளையும் இங்கே படிக்கலாம்.
காஞ்சி ரகுராம் 12:19 முப on பிப்ரவரி 9, 2011 நிரந்தர பந்தம் |
இந்தக் காதலை நான் முன்பே படித்திருந்தாலும், அதன் துருப்புச் சீட்டு இந்த நோட்டுச் சீட்டு என்பது சுவாரஸ்யம். (ஆமா, அந்த நோட்ட இன்னமும் பத்திரமா வெச்சிருக்கீங்களானா? 🙂
சத்யராஜ்குமார் 8:10 முப on பிப்ரவரி 21, 2011 நிரந்தர பந்தம் |
ரகுராம், சாந்திக்கும் எனக்கும் என்ன சம்பந்தமிருக்கு. அதெல்லாம் அப்பவே மசால் தோசை வாங்கி சாப்பிட்டாச்சு. 🙂
பத்மநாபன் 2:56 முப on பிப்ரவரி 9, 2011 நிரந்தர பந்தம் |
அஹா சத்யா .. ருபாய் நோட்டில் உள்ளதை வைத்து கதைக்கு கரு பிடித்ததே சுவாரஸ்யம் … இந்த தொடர் முடிவதற்குள் நாங்களும் கதை எழுதிவிடுவோம் எனும் நம்பிக்கை வந்துள்ளது …
சத்யராஜ்குமார் 8:08 முப on பிப்ரவரி 21, 2011 நிரந்தர பந்தம் |
பத்மநாபன், உண்மை. நம்மைச் சுற்றி நிறைய கதைகள்!
Navanithan 4:35 முப on மே 27, 2011 நிரந்தர பந்தம் |
ungalin kadal sirukadai paditen. Miga miga arumai.
anbudan
Navani
திருவாரூர் பாபு 7:59 முப on திசெம்பர் 12, 2011 நிரந்தர பந்தம் |
சத்யராஜ்குமார் வணக்கம். சரசுராம் தங்களைப் பற்றி சிலாகித்திருக்கிறார். இன்று அறிமுகமாகி இருக்கிறேன். இ நூல் முயற்சிக்கு வாழ்த்துக்கள். எனது சிறுகதை சுவர் பார்வைக்கு வைத்திருக்கிறீர்கள். நன்றி. இதைப் படிக்கும்போது அந்த கதையைநான் எழுதிய காலகட்டம் இனிமையாக மனதுக்குள் படர்கிறது. அநேகமாக 15 வருடங்கள் இருக்குமென்று நினைக்கிறேன். கல்கியில் பிரசுரமான சிறுகதை அது. கதை வெளியான சில நாட்களில் கல்கி இதழிலிருந்து எனக்கு ஒரு பிரம்மாண்ட கவர். பிரித்தால் உள்ளே கதையைப் பாராட்டி வாசக அன்பர்கள் எழுதியிருந்த விமர்சன கடிதங்கள் ஆசிரியர் திரு சீதா ரவி அவர்களின் வாழ்த்துக்களோடு. அன்று முழுவீச்சுடன் தொடங்கிய சிறுகதை போராட்டம் 960 சிறுகதைகள் – இன்று குங்குமத்தில் பிரசுரமாகி இருக்கும் அலை சிறுகதை 961 – கடந்து ஆயிரம் நோக்கி முழு வேகத்துடன் சென்று கொண்டிருக்கிறது. என்ன… அன்று வாரத்திற்கு பல்வேறு இதழ்களில் 50 சிறுகதைகள் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. இன்று அவை சுருங்கி ஐந்து அல்லது 6 என்கிற இலக்கத்துக்கு வந்து விட்டது வருந்தத்தக்கது. சிறுகதை என்று பார்த்தாலே மனசு பரபரக்கிறது. அந்த அற்புத வடிவம்தான் எனது கலை இலக்கியத்தை வளர்த்தது. என்னை நிருபராக்கியது. உதவி இயக்குநராக்கியது. விரைவில் வெளியாகவிருக்கும் கந்தா திரைப்படத்தின் இயக்குநராக்கியது. இந்தத் தலைமுறைக்கு சிறுகதை இலக்கியத்தின் வடிவத்தையும், சமுகத்தில் அதன் பங்களிப்பையும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 2012ல் ஆயிரம் சிறுகதை என்கிற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். நண்பர்களின் வாழ்த்துக்களோடும், உந்துதலோடும்.அடிக்கடி பகிர்கிறேன். நன்றி. 94440 67427
சத்யராஜ்குமார் 7:47 பிப on திசெம்பர் 12, 2011 நிரந்தர பந்தம் |
திருவாரூர் பாபு, வணக்கம். உங்களை இணையத்தில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் விரைவில் ஆயிரம் சிறுகதைகளை (மூச்சிறைக்கிறது எனக்கு!) தொட்டு சாதனை புரிய வாழ்த்துக்கள். உங்கள் திரைப்படம் கந்தா வெற்றி பெறவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறுகதைகள் பத்திரிகைகளில் குறைந்திருந்தாலும், எழுதுவதிலும், படிப்பதிலும் ஆர்வமுள்ள ஏராளமானோர் இணையத்தில் இருக்கவே செய்கிறார்கள். என்னுடைய எழுத்து அனுபவங்களை கடந்த எட்டு வருடங்களாக பல்வேறு ரூபங்களில் இணையத்தில் பகிர்ந்து வந்துள்ளேன்.