Updates from பிப்ரவரி, 2011 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

  • சத்யராஜ்குமார் 6:41 pm on February 8, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    சிறுகதை. சிக்கல்கள். [3] 

    சிறுகதை ஒன்று எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் நூலகத்தில் புத்தகம் தேடுவதைப் போல நினைவடுக்குகளைப் புரட்டிப் போட்டு ஞாபக மிச்சங்களைத் தேடுவதே என் வழக்கம்.

    அடுத்து எழுதப் போகும் கதை காலையில் பார்த்த சுவாரஸ்யமான நிகழ்ச்சியாகவும் இருக்கலாம், அல்லது போன அத்தியாயத்தில் குறிப்பிட்ட நாய்க்குட்டி சம்பவம் போல முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் நடந்ததாகவும் இருக்கலாம்.

    சில விஷயங்களில் சுவாரஸ்யம் மட்டுமே இருக்கும். அதைச் சுற்றி கதையைப் பின்ன கொஞ்ச நேரம் தேவைப்படும்.

    ஆனால், வேறு சில சம்பவங்களோ அப்படியே சிறுகதையாகவே மனசுக்குள் ஒட்டிக் கொண்டிருக்கும். அப்படி ஒட்டிக் கொண்ட கதைகளுக்கு என்றுமே வீரியம் ஜாஸ்தி.

    குமுதத்தில் எழுதிய ‘காதல்’ என்ற சின்னஞ்சிறிய கதை என் மனசுக்குள் சிறுகதையாகவே போய் பதிந்து கொண்ட ஒன்றாகும்.

    ஒரு முறை வாகனத்துக்கு பெட்ரோல் போட்டு விட்டு காசு கொடுத்தபோது, பாக்கியாகக் கிடைத்த ரூபாய் நோட்டில் ‘சாந்தி ஐ லவ் யூ’ என்று கிறுக்கியிருந்தது.

    அந்தக் கிறுக்கலைப் பார்த்த கணமே ‘காதல்’ சிறுகதை மனதில் உதித்து, அப்படியே சிறுகதை வடிவிலேயே அந்த ரூபாய் நோட்டு என் மனசுக்குள் பதிவாகிக் கொண்டது.

    இது மாதிரி கதைகள் உடனே எழுதி விட வேண்டும் என்ற உந்துதலைத் தருபவை.

    அவசரமாய் யாராவது கதை கேட்டால் இப்படி சிறுகதையாகவே பதிந்த நிகழ்ச்சியைத் தேர்ந்தெடுத்து உடனே எழுதிக் கொடுத்து விடலாம். அவகாசம் நிறைய இருப்பின் சுவாரஸ்யம் என்று குறித்து வைக்கப்பட்ட சம்பவங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சாவகாசமாய் அதைச் சுற்றி கதை ஒன்று பின்னலாம்.

    மனசு வடிகட்டி வைத்திருக்கும் விஷயம் என்பதால் சந்தேகமில்லாமல் அது பிறரால் விரும்பிப் படிக்கப்படும்.

    போன பாராவுக்கு முந்தைய பாராவில் குறிப்பிட்ட ‘கதை பின்னுகிற’ சமாசாரம் பற்றி இனி சொல்கிறேன்.

    (தொடரும்)


    அனைத்து பகுதிகளையும் இங்கே படிக்கலாம்.


     
    • காஞ்சி ரகுராம் 12:19 முப on பிப்ரவரி 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      இந்தக் காதலை நான் முன்பே படித்திருந்தாலும், அதன் துருப்புச் சீட்டு இந்த நோட்டுச் சீட்டு என்பது சுவாரஸ்யம். (ஆமா, அந்த நோட்ட இன்னமும் பத்திரமா வெச்சிருக்கீங்களானா? 🙂

    • பத்மநாபன் 2:56 முப on பிப்ரவரி 9, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      அஹா சத்யா .. ருபாய் நோட்டில் உள்ளதை வைத்து கதைக்கு கரு பிடித்ததே சுவாரஸ்யம் … இந்த தொடர் முடிவதற்குள் நாங்களும் கதை எழுதிவிடுவோம் எனும் நம்பிக்கை வந்துள்ளது …

    • Navanithan 4:35 முப on மே 27, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      ungalin kadal sirukadai paditen. Miga miga arumai.

      anbudan
      Navani

    • திருவாரூர் பாபு 7:59 முப on திசெம்பர் 12, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      சத்யராஜ்குமார் வணக்கம். சரசுராம் தங்களைப் பற்றி சிலாகித்திருக்கிறார். இன்று அறிமுகமாகி இருக்கிறேன். இ நூல் முயற்சிக்கு வாழ்த்துக்கள். எனது சிறுகதை சுவர் பார்வைக்கு வைத்திருக்கிறீர்கள். நன்றி. இதைப் படிக்கும்போது அந்த கதையைநான் எழுதிய காலகட்டம் இனிமையாக மனதுக்குள் படர்கிறது. அநேகமாக 15 வருடங்கள் இருக்குமென்று நினைக்கிறேன். கல்கியில் பிரசுரமான சிறுகதை அது. கதை வெளியான சில நாட்களில் கல்கி இதழிலிருந்து எனக்கு ஒரு பிரம்மாண்ட கவர். பிரித்தால் உள்ளே கதையைப் பாராட்டி வாசக அன்பர்கள் எழுதியிருந்த விமர்சன கடிதங்கள் ஆசிரியர் திரு சீதா ரவி அவர்களின் வாழ்த்துக்களோடு. அன்று முழுவீச்சுடன் தொடங்கிய சிறுகதை போராட்டம் 960 சிறுகதைகள் – இன்று குங்குமத்தில் பிரசுரமாகி இருக்கும் அலை சிறுகதை 961 – கடந்து ஆயிரம் நோக்கி முழு வேகத்துடன் சென்று கொண்டிருக்கிறது. என்ன… அன்று வாரத்திற்கு பல்வேறு இதழ்களில் 50 சிறுகதைகள் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. இன்று அவை சுருங்கி ஐந்து அல்லது 6 என்கிற இலக்கத்துக்கு வந்து விட்டது வருந்தத்தக்கது. சிறுகதை என்று பார்த்தாலே மனசு பரபரக்கிறது. அந்த அற்புத வடிவம்தான் எனது கலை இலக்கியத்தை வளர்த்தது. என்னை நிருபராக்கியது. உதவி இயக்குநராக்கியது. விரைவில் வெளியாகவிருக்கும் கந்தா திரைப்படத்தின் இயக்குநராக்கியது. இந்தத் தலைமுறைக்கு சிறுகதை இலக்கியத்தின் வடிவத்தையும், சமுகத்தில் அதன் பங்களிப்பையும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 2012ல் ஆயிரம் சிறுகதை என்கிற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். நண்பர்களின் வாழ்த்துக்களோடும், உந்துதலோடும்.அடிக்கடி பகிர்கிறேன். நன்றி. 94440 67427

      • சத்யராஜ்குமார் 7:47 பிப on திசெம்பர் 12, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

        திருவாரூர் பாபு, வணக்கம். உங்களை இணையத்தில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் விரைவில் ஆயிரம் சிறுகதைகளை (மூச்சிறைக்கிறது எனக்கு!) தொட்டு சாதனை புரிய வாழ்த்துக்கள். உங்கள் திரைப்படம் கந்தா வெற்றி பெறவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறுகதைகள் பத்திரிகைகளில் குறைந்திருந்தாலும், எழுதுவதிலும், படிப்பதிலும் ஆர்வமுள்ள ஏராளமானோர் இணையத்தில் இருக்கவே செய்கிறார்கள். என்னுடைய எழுத்து அனுபவங்களை கடந்த எட்டு வருடங்களாக பல்வேறு ரூபங்களில் இணையத்தில் பகிர்ந்து வந்துள்ளேன்.

  • சத்யராஜ்குமார் 7:59 pm on January 28, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    சிறுகதை. சிக்கல்கள். [2] 

    ஒரு சிறுகதை எழுத பேனா, பேப்பரை விட எனக்கு முதலில் தேவைப்படுவது விஷயம்.

    அதாவது எதைப் பற்றி எழுதப் போகிறோம் என்கிற தெளிவு.

    கதை எழுத வழி காட்டும் புத்தகங்களாகட்டும், எழுத்தாளர்களாகட்டும் கண்ணில் படும் சிறுகதைக்கான விஷயங்களை ஒரு டயரியில் குறித்து வைக்கச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள்.

    இல்லா விட்டால் அவை மறந்து போகும் என்பதே அந்த அறிவுரைக்கான காரணம்.

    எனக்கு அந்தப் பழக்கமே இல்லை.

    நான் மறந்து போகும் விஷயங்கள் கதைக்கு உதவாத விஷயங்களாகத்தான் இருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. சுவாரஸ்யமான விஷயங்களை எத்தனை நாளானாலும் என்னால் மறக்க முடியாது.

    நான் மூன்றாங்கிளாஸ் படிக்கையில் பள்ளியின் வேலிக்கருகில் அநாதையாய் விடப்பட்டிருந்த நாய்க்குட்டியை வகுப்பறைக்கு எடுத்து வந்து விட்டேன்.

    பெஞ்ச்சில் அதை என் பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்ள பேபி டீச்சர் அனுமதித்ததும், திருதிருவென விழித்துக் கொண்டு அந்த நாய்க்குட்டி வகுப்பறையையும், நாங்கள் அந்த நாய்க்குட்டியையும் வேடிக்கை பார்த்த காட்சியை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை.

    அதில் ஒரு சிறுகதைக்கான சுவாரஸ்யம் நிச்சயம் இருக்கிறது.

    ஆகவே சிறுகதைக்கான விஷயத்தைத் தேடி நான் எங்கும் போவதில்லை. வருடக் கணக்காய் அவை மனதுக்குள் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

    (தொடரும்)


    அனைத்து பகுதிகளையும் இங்கே படிக்கலாம்.


     
    • செந்தில் 12:25 பிப on ஜனவரி 30, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      ஆழம்மான்ன கருத்து, அமர்க்கலமான ஆரம்பம்.

    • காஞ்சி ரகுராம் 12:13 முப on ஜனவரி 31, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      குறிப்பெடுக்கத் தேவையில்லை என்பது முற்றிலும் உண்மை. சுவாரஸ்ய நிகழ்ச்சியின் நீள அகல ஆழங்கள் மனதில் அப்படியே பதிந்துவிடும். அதிலும் ஒரு எழுதும் மனதிற்கு ப்ளூ-ப்ரிண்டாகவே பதிந்துவிடும். அவற்றை நெஞ்சம் ஒருகாலும் மறப்பதில்லை. ஆனால் இன்றைய அவசர வாழ்வில், அப்படிப் பதிந்திருப்பதையே நாம் மறக்கிறோம். அதற்காகவாவது, நிகழ்ச்சியின் தலைப்பையாவது குறிப்பெடுக்க வேண்டியிருக்கிறது என நான் நினைக்கிறேன்.

      • சத்யராஜ்குமார் 11:42 முப on ஜனவரி 31, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

        ரகுராம், ஏற்கெனவே குறிப்பிட்டபடி எழுத்தைப் பொறுத்தவரை என்னுடைய இயங்குமுறையைப் பற்றி எழுதுவதே நோக்கம். இது சரியா, தவறா என்பதல்ல. சம்பவங்களைப் பார்த்து நான் எழுத உட்காருவதில்லை. எழுத உட்காரும்போது சம்பவங்களை அசை போடுகிறேன். 🙂 

        • காஞ்சி ரகுராம் 12:23 முப on பிப்ரவரி 1, 2011 நிரந்தர பந்தம்

          ஹஹ்ஹா… நீங்கள் குறிப்பெடுக்காததையும், இதை எழுத அமர்ந்தபின்தான் அசை போட்டுக் குறிக்கிறீர்கள், இல்லையா? :). நல்ல சுவை. தொடருங்கள். நல்ல பின்னூட்டங்களும் தொடரும். அலசல்களும் வளரும். எழுதும் ஆசையும் ஊற்றெடுக்கும் 🙂

    • PADMANABAN 1:12 முப on ஜனவரி 31, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நிண்ட நாட்களாகி விட்டது …புத்தாண்டு தொடங்கி அனைத்து சிறப்பு நாட்களுக்கும் வாழ்த்துகள் சத்யா ….

      எவ்வளவு கதை படித்தாலும் ..ஓரு கதை எழுதுவது மிக கடினமான விஷயமாகவே இருக்கிறது …கரு தேர்ந்து எடுத்து , முன் வரி அமைத்து ..நடை கொடுத்து, முடித்து . தலைப்பிட்டு அனுப்புவது என்பது ஓரு பிரசவ உணர்வு ஆகிவிடுகிறது …. அதற்க்கெல்லாம் தனியாக ஓரு சுழி வேண்டும் என ஒதுங்கியாயிற்று…

      நீங்கள் எழுதப்போகும் அனுபவப்பாடம், கதை எழுதுவதற்கான மீண்டும் ஆவலைத் தூண்டுகிறது .. நன்றி …தொடருங்கள்…

      • சத்யராஜ்குமார் 11:43 முப on ஜனவரி 31, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

        நன்றி பத்மனாபன். உங்களூக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.

        //அதற்கெல்லாம் தனியாக ஓரு சுழி வேண்டும் என ஒதுங்கியாயிற்று…//

        அப்படியெல்லாம் இல்லைங்க. எல்லாமே பயிற்சிதான்.

    • ila 9:21 முப on ஜனவரி 31, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

      குறிப்பெடுத்துக்குறது நல்லதுன்னு நினைக்கிறேங்க. நிறைய சுவாரஸ்யமான விசயங்களை சிலவற்றை மறந்து போயிருவோம். மறந்து போறது மனுச இயல்புதானுங்களே. அப்படி மறந்து போனதிலேயிருந்தும் கூட நல்ல கதைகள் கிடைக்கலாமே 🙂

      • சத்யராஜ்குமார் 11:50 முப on ஜனவரி 31, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

        இளா, கருத்துக்கு நன்றி. உங்களுக்கும் ரகுராமிற்கு சொன்ன பதில்தான். இன்னொரு கோணத்தையும் பாருங்கள். மேலே நான் குறிப்பிட்ட மூணாங்கிளாஸ் நாய்க்குட்டி விஷயத்தை மனதைத்தவிர வேறு எங்கே குறித்து வைத்திருக்க முடியும்? ஆகவே நான் அதை செய்வதில்லை. இது போன்ற ஒப்பீடுகள் பின்னூட்டங்களில் எழ வேண்டும் என விரும்பினேன். எழுப்பியதற்கு நன்றி! 🙂

  • சத்யராஜ்குமார் 10:15 pm on January 23, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    சிறுகதை. சிக்கல்கள். [1] 

    சிறுகதைகள் எழுதுவது கஷ்டம் என்று எழுத்தாளர் சுஜாதா முதல் எழுத்தாளர் சாதா வரை எல்லோரும் சொல்லி விட்டார்கள். உண்மையில் கஷ்டமா என்றால் இல்லை, ஓரளவு சுலபம். நல்ல சிறுகதைகள் எழுதுவது மட்டுமே கஷ்டம்.

    எழுதுவது எப்படி என்று ஏராளமான கட்டுரைகள் வந்து விட்டன. வலைப்பதிவுகளிலும், வலைத்தளங்களிலும் பலரும் அவற்றைத் தொகுத்தும், சமைத்தும் போட்டு விட்டனர்.

    எல்லாம் படித்த பின்னும் குழப்பமாயிருக்கிறதென்று எனக்கு எப்போதாவது வரும் ஒரு சில மின்னஞ்சல்கள் சொல்கின்றன. எப்படி சிறுகதை எழுதுவதென்று அரைத்த மாவை அரைக்க இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கவில்லை.

    சென்ற வருடம் எழுத்தாளர் திரு. ஜெயமோகன் வாஷிங்டன் டி.சி வந்த போது அவர் கதை எழுதும் முறை குறித்து சுருக்கமாய் சில நிமிஷம் பேசி அறிந்து கொள்ள முடிந்தது.

    அதற்கும் நான் எழுதும் முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. அவருடைய தளம் வேறு, வீச்சு வேறு, பிராபல்யம் வேறு, இலக்குகள் வேறு என்பது வேறு விஷயம். ஆனால் அந்த சில நிமிஷ உரையாடல் இதை எழுதுவதற்கான யோசனையை அளித்தது.

    அதாவது பத்திருபது ஆண்டுகளுக்கு முன்னால் குமுதம், விகடன், கல்கி போன்ற பிரபல பத்திரிகைகளில் சுமார் இருநூறு சிறுகதைகள் எழுத நான் பயன்படுத்திய நுட்பங்கள், வழிமுறைகள். கதைகளுக்கான என்னுடைய இண்ட்டர்னல் பிராசசிங் ப்ளோ பற்றி விலாவாரியாக எழுத உத்தேசம்.

    இலக்கியத்தில் கரை கண்டவர்கள் நிரம்பி வழியும் இணையம் இது. அவர்களைப் போன்ற விற்பன்னர்களுக்கான கட்டுரை அல்ல. சிறுகதை என்னும் வடிவம் தமிழில் இறந்து விட்டதாக சொல்பவர்களும் உள்ளனர். அவர்களுக்கானதும் அல்ல.

    அவ்வப்போது இணையத்தில் சிறுகதைப் போட்டிகள் அறிவிக்கப்படும்போது ஒரு கூட்டம் உற்சாகத்தோடு கை தட்டி வரவேற்கிறது. எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடன் பங்கு பெறுகிறது. ஐம்பது, நூறு சிறுகதைகளை ஆவலுடன் படித்து விமர்சனம் எழுதவும் சிலரால் முடிகிறது.

    இந்த தமிழ் பாப் சிறுகதை வடிவம் உச்சந்தலையில் சுடப்பட்டும் எப்படியோ தப்பிப் பிழைத்து சற்றே சுவாசித்துக் கொண்டிருக்கிறது. இன்னமும் அதற்கு பிராணவாயு அளிப்பவர்களுக்காக இதை எழுதுகிறேன்.

    பல எழுத்தாளர்களின் சின்னச் சின்ன அனுபவங்களை பேட்டிகளாய், துணுக்குகளாய் படித்த போதுதான் எனக்குள் சில கற்பனை சுவிட்சுகள் தட்டி விடப்பட்டன.

    அதே மாதிரி இந்த மின்னல் குறிப்புகள் ஆர்வமுள்ள சொற்பம் பேரிடம் சில சுவிட்சுகளைத் தட்டி விடக் கூடும்.

    [ தொடரும் ]


    அனைத்து பகுதிகளையும் இங்கே படிக்கலாம்.


     
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி